சனிக்கிழமை, ஏப்ரல் 04, 2026, பங்குனி 21, விசுவாவசு வருடம் 04:50 AM
சென்னை,
வரும் சட்டசபை தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது பாஜகவில் அவரது ஆதரவாளர்களை அப்செட் ஆக்கியுள்ளது. அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரது தீவிர ஆதரவாளர்களான பலருக்கும் சீட் வழங்கப்படவில்லை. இதனால், அண்ணாமலையின் கை சறுக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளை பெற்ற பாஜக, இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டின்போதே பாஜகவுக்கு, அதிமுக வெற்றி வாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதன் காரணமாக, அதிமுகவிடம் சில தொகுதிகளை மாற்றி வாங்க பாஜக முயற்சித்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு உடனடியாக வேட்பாளர்களையும் அறிவித்து ஒரு வாரமாக தொடர்ந்து பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. இது பாஜகவில் சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது. பாஜகவில் வேட்பாளர் தேர்வில் சிக்கல்கள் நிலவி வந்தன. சில முக்கிய தலைவர்கள் ஒரே தொகுதியை குறிவைத்து கேட்டதும், வேட்பாளர் அறிவிப்பு தாமதமானதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில், இன்றுதான் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. கடந்த முறை நெல்லை தொகுதியில் வென்ற நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூரிலும், கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் வென்ற வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கிலும் போட்டியிடுகின்றனர்.
நாகர்கோவில் தொகுதி மீண்டும் எம்.ஆர்.காந்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சியில் கடந்தமுறை வென்ற சி.சரஸ்வதிக்கு பதிலாக அவரது மருமகளான கிருத்திகா சிவக்குமாருக்கு இம்முறை சீட் வழங்கப்பட்டுள்ளது. அவிநாசி (தனி) தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் களமிறங்குகிறார்.
மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், மதுரை தெற்கு தொகுதியில் பேராசிரியர் ராம சீனிவாசனும், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தமும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். காங்கிரஸில் இருந்து எல்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்திருந்த விஜயதாரணிக்கு இந்த முறை விளவங்கோட்டில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5 பெண்கள் இம்முறை பாஜக சார்பில் சீட் பெற்றுள்ளனர்.
பாஜக வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய ஷாக், அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது தான். இந்த முறை தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலைக்கு சாதகமான தொகுதிகளை அதிமுகவில் கேட்டுப் பெறாமல் இருந்துவிட்டனர் என்று அவரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த முறை அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, இந்த முறை கோவையின் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளை கேட்டு வந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் மொடக்குறிச்சியில் அண்ணாமலையை போட்டியிட சொல்லி தலைமை கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், தனக்கு சாதகமான தொகுதி எதுவும் இல்லாததால் இம்முறை போட்டியிடுவதில்லை என்று அண்ணாமலை உறுதியாக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
சீட் அதிருப்தி காரணமாக சென்னையில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்திலும் அண்ணமலை பங்கேற்கவில்லை. அண்மையில் பிரதமர் மோடி கோவை வந்தபோது அவரை வரவேற்கவும் அண்ணாமலை செல்லவில்லை.
2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் மூன்றாவது அணியமைத்து களம் கண்ட பாஜக, பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. பாஜகவின் எழுச்சிக்கு காரணமாக அக்கட்சியின் இளைய தலைமுறையால் கொண்டாடப்பட்ட அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது, அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களான அமர்பிரசாத் ரெட்டி, அஸ்வத்தாமன், எஸ்.ஜி.சூர்யா, வினோஜ்.பி.செல்வம், ஏபி முருகானந்தம் ஆகியோருக்கும் இந்த முறை சீட் கிடைக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு சீட் கிடைக்காத வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வேளச்சேரி தொகுதியில் நீண்ட நாட்களாக போட்டியிட தீவிரம் காட்டி வந்தார் பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர். அண்ணாமலை இவருக்கு பரிந்துரை செய்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எஸ்.ஜி.சூர்யா போட்டியிட விரும்பிய வேளச்சேரி தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு அசோக் என்பவர் போட்டியிடுகிறார். பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வந்தார்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்தார்.
வினோஜ் பி செல்வம் தனக்கு இந்த முறை துறைமுகம் தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்தத் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. அங்கு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார்.
அதேபோல, பாஜகவின் மாநில பொறுப்பாளராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, தளி தொகுதியில் போட்டியிட விரும்பி, சீட் பெற முயற்சித்து வந்தார். அவருக்கும் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏபி முருகானந்தம், அஸ்வத்தாமன் ஆகியோரும் சீட் பெற முயற்சித்தனர். அவர்களுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது மட்டுமல்ல, அவரது ஆதரவாளர்களும் மொத்தமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ஒருகாலத்தில் தமிழக பாஜகவின் முகமாக பார்க்கப்பட்ட அண்ணாமலை தற்போது முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

No comments:
Post a Comment