பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 20, 2026, பங்குனி 06, விசுவாவசு வருடம் 03:40 AM
சென்னை,
அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்:
தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்
சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாம். அதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும்.
தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்
தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும்.
பெண்களுக்குத் தனித்தொகுதி
உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.
மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7-வது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.
இவை தவிர, ஒன்றிய அரசும் மாநில அசுகளும் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்றிருக்கிறது. ஆக ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பையும் உறுதி செய்கிறது.
எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர பாடுபடுவோம்.
தமிழர்களுக்கு முன்னுரிமை
தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும்.
தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை
தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை
தன்னலம் சார்ந்த கொடுமையான ஆட்சி முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது ஆட்சிமுறை தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையாக இருக்கும்.
மணல் கொள்ளைத் தடுப்பு
அங்குலம் ஆற்றுமணல் உருவாக நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நாளைக்கே முப்படி ஆழத்துக்கு மேலாக ஆற்று மணலை சுரண்டி மணல் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. எனவே, நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முழுமையாக தடுக்கும்.
பனை தமிழ் தேசிய மரமாக அறிவிக்கப்படும். இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பது, புதிய பனை மரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் உருவாக்கப்படும். ஊர்தோறும் இரக்கும் நீர் நிலைகளைச் சுற்றி பனைமரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.
வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம்
குண்டூசி முதல் ஏவுகணை வரை எல்லாவற்றையும் உருவாக்குபவர்களே விலையை முடிவு செய்ய இயலுகிறது. ஆனால், வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கிற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும்.
ஆடு, மாடு வளர்த்தல் அரசுப் பணி
ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்று நாதக வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, March 20, 2026
5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை - நாதக சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM வாஷிங்டன், ‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...
