Sunday, March 1, 2026
“ஈரான் உச்ச தலைவர் கமேனி இறந்து விட்டார்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 01, 2026, மாசி 17, விசுவாவசு வருடம் 08:20 AM
டெஹ்ரான்,
ஈரானின் ஆன்மீக தலைவரான அயோதுல்லா அலி கமேனி , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் விமானங்கள் 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில் தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலில் கமேனியின் இருப்பிடம் முற்றிலும் தரைமட்டமானதாகவும், நவீனத் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவர் இருந்த இடத்தை உறுதி செய்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கமேனியின் மரணம் குறித்து ஈரான் அரசு ஊடகங்கள் இதுவரை அதிகார்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம், இது உளவியல் போர் என்று மட்டும் கூறி கமேனி உயிருடன் இருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்து வருகிறது.
ஆனால், இஸ்ரேலிய உளவு அமைப்புகள் கமேனியின் உடல் மீட்கப்பட்டதாகத் தகவல்களை வெளியிட்டுள்ளன. கமேனி உயிரிழந்த செய்தி பரவியதை அடுத்து, டெஹ்ரானின் சில பகுதிகளில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாகவும், அதே நேரத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனது ட்ரூத் சோஷியல் பதிவில் மேலும் தெரிவித்துள்ள ட்ரம்ப், “வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான கமேனி இன்று இறந்துவிட்டார். இது ஈரானிய மக்களுக்குக் கிடைத்த நீதி மட்டுமல்ல, கமேனியாலும் அவரது ரத்தவெறி பிடித்த குண்டர் கும்பலாலும் கொல்லப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும், சிறந்த அமெரிக்கர்களுக்கும் கிடைத்த நீதியாகும்.
எங்களுடைய உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. இஸ்ரேலுடன் இணைந்து நாங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் சேர்ந்து கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ தற்காத்துக் கொள்ள எதுவுமே செய்ய முடியவில்லை. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கான ஒற்றைப் பெரும் வாய்ப்பு இதுவாகும்.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பலர் இனிப் போரிட விரும்பவில்லை என்றும், எங்களிடமிருந்து பாதுகாப்பை எதிர்பார்ப்பதாகவும் எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. நான் ஏற்கெனவே சொன்னது போல, இப்போது சரணடைந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு, காலம் கடந்தால் அவர்களுக்கு மரணம் மட்டுமே மிஞ்சும்!
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் காவல்துறையும் அமைதியான முறையில் ஈரான் தேசப்பற்றாளர்களுடன் இணைந்து, இந்த நாடு தகுதியுள்ள அந்தப் பெருமையை மீண்டும் அடைய ஒரு பிரிவாகச் செயல்படும் என்று நம்புகிறேன். கமேனியின் மரணம் மட்டுமல்லாமல், ஒரே நாளில் அந்த நாடு பெருமளவில் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் விரைவில் தொடங்கும்.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் எங்களது இலக்கை அடையும் வரை, இந்தத் தீவிரமான மற்றும் துல்லியமான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இந்த வாரம் முழுவதும் தடையின்றித் தொடரும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM வாஷிங்டன், ‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...

No comments:
Post a Comment