பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 02, 2026, பங்குனி 19, விசுவாவசு வருடம் 02:10 AM
புதுடெல்லி,
ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் பதற்றம் தொடரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு பாதுகாப்புக்கான அமைச்சரவை கவுன்சில் (சிசிஎஸ்) ஆலோசனை நடத்தியது. ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போரைத் தொடங்கின. இந்தப் போரில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஈரான் கடும் பதிலடியை கொடுக்கத் தொடங்கியது. வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை நடத்தியது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்துவதால் கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு அனுப்புவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றிலும் முடக்கியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெற்றது.
டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளைக் கையாளும் பல மூத்த அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேற்காசியாவில் தொடரும் போர், அதனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், நாடு சந்தித்து வரும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினார்.
மேலும், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக நாட்டில் எரிபொருள் மற்றும் எல்பிஜி, பிஎன்ஜி விநியோகத்தின் தொடர்ச்சியை மதிப்பிட வேண்டும் என்றும், உணவு மற்றும் உரங்களில் பதுக்கல் மற்றும் செயற்கையான விலை உயர்வுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதே பிரச்சினை தொடர்பாக, இதற்கு முன்பு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த மார்ச் 22-ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. இதில், மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சூழல் குறித்தும், இந்திய அரசின் தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இதுவரை எடுத்துள்ள தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைச் செயலாளர் விரிவாக விளக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரவு 7 மணிக்கு தொடங்கிய கூட்டம் 9.15 மணிக்கு நிறைவடைந்தது. மத்திய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கவுன்சில் கூட்டத்தில் நடந்த ஆலோசனை தொடர்பாக செய்தியாளர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் விளக்கினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மேற்காசியாவில் நடந்து வரும் போரின் காரணமாக பல்வேறு தாக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதை இந்தியா ராஜதந்திர ரீதியாக அணுகி வருகிறது. இந்த விவகாரத்தில் ராஜதந்திர ரீதியாக நாங்கள் பரந்த சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம்.
மேற்காசிய போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து 2 நாட்டு தலைவர்களும் நீண்ட ஆலோசனையை நடத்தினர்.
அதே நேரத்தில், மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், மேலும் அப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் 2 நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், போர்ச்சுகல் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பாலோ ரங்கலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது, மேற்காசியாவில் நடந்து வரும் மோதல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தியர்கள் பாதுகாப்பு
இதுவரை, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள நமது தூதரகம் 1,171 இந்தியர்களை தொடர்பு கொண்டு அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புதவற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதில், 818 இந்திய மாணவர்கள் தரைவழி எல்லை வழியாக ஈரானை விட்டு ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக வெளியேறுவதும் அடங்கும். இவ்வாறு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
Thursday, April 2, 2026
நாடு முழுவதும் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யுங்கள் - டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM வாஷிங்டன், ‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...

No comments:
Post a Comment