பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 03, 2026, பங்குனி 20, விசுவாவசு வருடம் 02:30 AM
சென்னை,
தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார். தாம்பரம், மதுரை காவல் ஆணையர்கள், தூத்துக்குடி, சேலம் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பறக்கும் படைகள், நிலைக்கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 250 கம்பெனி துணை ராணுவப் படையினரை தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவப் படையினர் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, தேர்தல் அறிவிக்கை கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தையும் தொடங்கினர்.
அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு, சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், அங்கு பிரச்சாரத்தையும் தொடங்கினார். அனுமதி பெறப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்தார். மற்ற இடங்களில் காவல் துறையினர் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பிரச்சாரத்தை ரத்து செய்தார். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே, அக்கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் பங்கேற்ற கூட்டத்தில் மதுபாட்டில் வீசப்பட்டது. இது தொடர்பாகவும் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் பாதுகாப்பு தொடர்பாக டிஜிபிக்கு கடிதம் எழுதிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைவருக்கும் போதிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன், நடந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கையும் கோரினார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கோரி தவெக சார்பில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் நேற்று பிறப்பித்தது. அதன்படி, தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதில், காவல் உயர்பயிற்சியக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த ஜெ.லோகநாதனுக்கு பதிலாக அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சரவண சுந்தர் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ரம்யா பாரதிநியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவிக்கு பதிலாக அருண் தம்புராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்துக்கு பதிலாக விசு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. புதிய டிஜிபி உடனடியாக பதவி ஏற்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், நேற்று இரவே அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேர்தல் தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்கள் ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், விரைவில் மேலும் பல ஐஏஎஸ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
சந்தீப் ராய் ரத்தோர் யார்?
டெல்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர் 1992-ம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். தமிழக காவல் துறையில் பல முக்கிய பொறுப்புகள், குறிப்பாக சிபிசிஐடி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கியப் பங்காற்றினார்.
ஆவடி காவல் ஆணையரகத்தின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர், சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றியவர், 2024 ஜூலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு, காவல் உயர் பயிற்சியகத்துக்கு மாற்றப்பட்டார். சிறந்த பணிக்கான மத்திய, மாநில அரசுகளின் பதக்கங்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, April 3, 2026
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி மாற்றம் - புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM வாஷிங்டன், ‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...

No comments:
Post a Comment