Sunday, March 8, 2026
மாதம் ரூ.2.500, திருமணத்துக்கு ஒரு பவுன்... ‘அண்ணன் சீர்’ முதல் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வரை - மகளிருக்கான தவெக தலைவர் விஜய்யின் வாக்குறுதி பட்டியல்
சென்னை,
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும், பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார்.
சென்னையில் தவெக சார்பில் கொண்டாடப்பட்ட மகளிர் தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட வாக்குறுதிகள் விவரம்:
* “பெண்கள், குழந்தைகள், முதியோர் நலனில் அக்கறை செலுத்துவதே தவெகவின் அடிப்படை முக்கிய நிலைப்பாடு. அதன்படி அதற்கென தனி இலாகா ஏற்படுத்தப்படும். அந்த இலாகா எனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.
* மாதம் ரூ.2,500: தமிழகத்தை இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் என தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகையாக வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்குகிறது. எனவே, தவெக அரசில் 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும். இதில் மாநில, ஒன்றிய அரசின் ஊழியர்களாக இருக்கும் குடும்பங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
* ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும். இது தாய்மார்கள் வயிற்றில் பால் வார்க்கும் திட்டமாக இருக்கும்.
* அண்ணன் சீர் திட்டம் மூலம், பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், தரமான பட்டு சேலையும் அளிக்கப்படும்.
* ரூ.15 ஆயிரம் உதவி: காமராஜர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இடைநிற்றலே இல்லாமல் குழந்தைகள் கல்வி கற்க, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.15 ஆயிரம் பொருளாதார உதவி வழங்கப்படும்.
* இப்போது பிங்க் நிற பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் உள்ளது. தவெக அரசு அமைந்தால் வெற்றிப் பயணம் திட்டத்தின் படி, அரசுப் போக்குவரத்து கழகத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
* பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலுநாச்சியார் படை அமைக்கப்படும். சாதாரண உடையில் 500 படைகள் மாநிலம் முழுவதும் கண்காணிப்பில் இருப்பார்கள்.
* பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க அஞ்சலையம்மாள் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எச்சரிக்கை பொத்தான்கள் அமைக்கப்படும்.
* சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடமே இல்லை என்ற வகையில் ஜீரோ டார்க் ஸ்பாட்டுகள் அமைக்கப்படும்.
* பொதுவிநியோக கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும்.
* சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் நிலுவையிலுள்ள கடன்களை திரும்ப செலுத்துவதன் மூலமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இவர்கள் தொழில் தொடங்கினால் 5 லட்சம் ரூபாய் 100% மானியத்தில் வழங்கப்படும்.
* தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், குழந்தைகளுக்கான வரவேற்பு கிட் வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை விஜய் வெளியிட்டார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, March 7, 2026
தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் ஸ்டாலின் உறுதி
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 07, 2026, மாசி 23, விசுவாவசு வருடம் 05:30 AM
சென்னை,
தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் - சென்னையில் நேற்று நடைபெற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் 2030-ம் ஆண்டை இலக்காக கொண்டு பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தொழில் துறையில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட் வகுப்பறை’, விவசாய சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு என்பது உட்பட பல்வேறு திட்டங்கள் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
தமிழக அரசின் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக ‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அரசின் திட்டங்களால் பயனடையாத குடும்பங்களே தமிழகத்தில் இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு தரப்புக்கும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம்.
அரசியல் ரீதியாக எழுந்த சில நெருக்கடிகளை சமாளித்துதான் பல திட்டங்களை செயல்படுத்தினோம். இந்த ஆட்சியின் சாதனைகளை நம்பி உறுதியாக கூறுகிறேன். அடுத்தும் திமுக ஆட்சிதான். நமது சாதனைகளின் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என ஒரு ‘ப்ளூ பிரின்ட்’ தயாரிக்க திட்டமிட்டோம். அதற்காக, தமிழகத்தின் 1.80 கோடி குடும்பங்களிடம் நேரடியாகசென்று, அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தோம். அதில் முன்னுரிமை அடிப்படையில் ‘தமிழ்நாடு 2030’ எனும் 14 முக்கிய அம்சங்களை அறிவிக்கிறேன்.
2030-ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் 5 லட்சம் வீடுகள், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
‘நலமுடன் தமிழ்நாடு 2030’ திட்டத்தில் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்க வழிசெய்யப்படும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோயைக் கண்டறிய சிறப்பு முகாம்கள், மாவட்டம்தோறும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
விவசாய சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும். 43 லட்சம் உழவர்களுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு, இயற்கை விவசாயம் 17 ஆயிரம் ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மை ஒரு லட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும். நுண்ணீர்ப் பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்பட்டு, மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் 1,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். உணவு உற்பத்தி 1.25 கோடி டன்னாக உயர்த்தப்படும். 1.25 லட்சம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும்.
அனைத்து அரசு, அரசு உதவிப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ அமைக்கப்படும். ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ மூலம் 1,000 மாதிரிப் பள்ளிகள் விரிவுபடுத்தப்படும்.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 90 சதவீதத்தை எட்டும் வகையில் கட்டமைப்பு விரிவாக்கப்படும். ‘நான் முதல்வன் 2.0’ மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும். ஆராய்ச்சியை அதிகரிக்க தொழிற்கல்வி சிறப்பு மையங்கள் நிறுவப்படும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஏஐ ஆய்வகம் உருவாக்கப்படும்.
ஜவுளி, தோல் ஆடை, கைவினை, கணினி தொழிற்பயிற்சி உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
வீட்டு மனையற்ற ஆதிதிராவிட, பழங்குடியின குடும்பத்துக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
கிராம சந்தைகள், விளையாட்டு, நல்வாழ்வு கட்டமைப்புகள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்ட உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் அமல்படுத்தப்படும். முதல்கட்டமாக 10 ஊராட்சிகளில் இப்போதே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
தொழில் துறையில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்வு ஆகியவை எங்கள் இலக்கு. இதற்காக மாவட்டம்தோறும் நவீன தொழிற்பூங்கா அமைக்கப்படும். ஐடி ஏற்றுமதி ரூ.6 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு, அத்துறையில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளித் தொழில் நவீனமயமாக்கப்பட்டு, திருப்பூர், கரூரில் 35 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும்.
உள்நாட்டு மீன் உற்பத்தி 4.50 லட்சம் டன், பால் உற்பத்தி 4.50 கோடி லிட்டர், கால்நடை எண்ணிக்கை 3 கோடியாக உயர்த்தப்படும். ஒரு லட்சம் ஏக்கரில் தீவனப் பயிர் சாகுபடி செய்யப்படும்.
நகர்ப் பகுதிகளில் 20 சதவீத பசுமைப் பகுதிகள், பூங்காக்கள் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீரை முழுமையாக சேகரித்து, சுத்திகரித்து 30 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும்.
வெளிநாட்டு வர்த்தக கண்காட்சிகளில், நமது சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க வழிசெய்யப்படும்.
நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் பாலங்கள், சாலைகளின் ஆயுள்காலம் நீட்டிக்கப்பட்டு, விபத்துகள் குறைக்கப்படும்.
நெசவுத் தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து, உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற வேண்டும்.
நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் எனது மாபெரும் கனவு. நான் அறிவித்த திட்டங்கள் செயல்வடிவம் பெற மாவட்ட வாரியாக தனித்தனி செயல் திட்டங்கள் வகுக்கப்படும். இதையெல்லாம் நனவாக்கி, 2030-ல் தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
‘திராவிட மாடல் 2.0’-க்கு அடிக்கல்: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: மார்ச் 6 - அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள். 1967-ல் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழகத்தின் எழுச்சிக்கும், தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய நாள்.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான ‘ஸ்டாலின் ஸ்டேட்மென்ட்’- ஐ இந்த நாளில் அறிவிக்கிறேன். திராவிட ஆட்சி இந்த மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே ‘திராவிட மாடல் 2.0’-க்கு அடிக்கல் நாட்டுகிறேன்.. உங்கள் அனைவரின் ஆதரவோடும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, March 6, 2026
மாநிலங்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் 6 பேர் வேட்புமனு தாக்கல்
சென்னை,
ராஜ்யசபா தேர்தலையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அண்ணா திமுக சார்பில் தம்பிதுரை, அதன் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங் களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அண்ணா தி.மு.க.வின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடையவுள்ளது.
மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6-ம் தேதி நடைபெறுகிறது. மார்ச்-9 ஆம் தேதி வரை மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால் -16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 20 ஆம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.
6 இடங்களுக்கு போட்டி
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் தி.மு.க.வுக்கும் 2 இடங்கள் அண்ணா தி.மு.க.வுக்கும் கிடைக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எஞ்சியுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திமுக கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில், மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக்கை கட்சியில் மேலிடம் அறிவித்துள்ளது. தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தம்பிதுரை, அன்புமணி வேட்புமனு தாக்கல்
இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அண்ணா திமுக சார்பில் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று காலை தலைமை செயலகம் வந்தார். அங்கு, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனுவை தம்பிதுரை தாக்கல் செய்தார்.
தம்பிதுரை 6 ஆவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகிறார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
அண்ணா தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை பதவிக்கு பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தல் அதிகாரியான தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள், சவுமியா அன்புமணி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
இதைத் தொடர்ந்து திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ஆகியோரும் முதலமைச்சர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது தே.மு.திக. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 9-ம் தேதி ஆகும். மார்ச் 16-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்சிகள் சார்பில் 7 பேர், சுயேச்சைகள் 4 பேர் என மொத்தம் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராமதாஸ் பரிந்துரைத்த சுவாமிநாதன் மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வாய்ப்பு இல்லை என்பதால் இவர்களது மனுக்கள் நிராகரிக்கப்படும்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, March 5, 2026
28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக உட்பட தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் முஸ்லீம் லீக், மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் வரை ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதேபோல், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதர கட்சிகளுக்கான பங்கீடு ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், காங்கிரஸ் 40 தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினர் கேட்டதால், தொகு திப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த சூழலில் நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைமையிடமும் அவர் பேசி சூழலை சுமூகமாக்கியதாகவும், திமுக தரப்பில் கனிமொழியும் காங்கிரஸ் தலைவர்களிடம் பேசியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, திமுக - காங்கிரஸ் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த தொகுதி பங்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக நேற்று காலை தகவல்கள் வெளியாகின.
அதன்படி, கோவாவில் இருந்து விமானம் மூலம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னைக்கு நேற்று மாலை வந்தார். அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார்.
சிறிது நேரத்தில் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை ஆகியோர் தி.நகரில் உள்ள ஓட்டலுக்கு சென்றனர். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த தகவல் கிடைத்ததும், இருவரும் அறிவாலயத்துக்கு சென்றனர்.
அப்போது, திமுக வழங்கிய 28 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.
திமுக தரப்பில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, பூச்சி எஸ்.முருகன் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய செயலாளர் நிவேதித் ஆல்வா, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் எஸ்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி கட்சிகள்
இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடனும் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு நேற்று பேச்சு வார்த்தை நடத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்தப்பட்ட 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
கடந்த 2021 தேர்தலை போல் 6 இடங்கள் வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதாலும், புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள திமுக வலியுறுத்தியதாலும் முடிவு எட்டப்படவில்லை. மக்கள் நீதி மய்யம் 3 தொகுதி கேட்ட நிலையில், ஒரு இடம் மட்டும் வழங்கப்படும். அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று திமுக குழு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மியும் 2 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, March 4, 2026
விளிம்பு நிலையில் இருக்கும் 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி ரூ.2,000 - வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்த திருநங்கையர்கள் என 37.79 லட்சம் பயனாளிகளுக்கு சிறப்பு நிதியாக தலா ரூ.2,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது. தேர்தலுக்கான முழு ஏற்பாடுகளையும் தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழக அரசு ஏற்கெனவே 1.31 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வீதம் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. இந்த திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு 1.06 கோடி மகளிரை பயனாளிகளாக கொண்டு தொடங்கப்பட்டு, பல்வேறு முகாம்கள் மூலம் பயனாளிகள் எண்ணிக்கை 1.13 கோடியாக உயர்த்தப்பட்டது.
சமீபத்தில் இந்த எண் ணிக்கை 1.31 கோடியாக உயர்ந்தது. மாதந்தோறும் 15-ம் தேதி இந்தத் தொகை பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த பிப்.13-ம் தேதி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் கோடைகால தொகுப்பு ரூ.2,000 என ரூ.5,000 தொகை 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஒரே தவணையாக செலுத்தப்பட்டது.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இத்திட்டத்துக்கு இந்த நிதியாண்டின் இறுதி துணை பட்ஜெட்டில் ரூ.3,913.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்ப தாவது:
கோரிக்கை நிறைவேற்றம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெண்களுக்குக் கோடை கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதிய உதவித்தொகை பெற்று வரும் முதியோர்கள், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன. நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
நலிவு நிலையைப் போக்கும் சிறப்பு நிதியாக ரூ.2,000 மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம். பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர்கள், கைம்பெண்கள் என மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.3.200, 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3,500, பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 இன்று (நேற்று) காலை வழங்கி இருக்கிறோம்.
அது மட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்துக்கு மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.8,000 வீதம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.2 ஆதார விலை என ரூ.8.53 கோடி நிதி வழங்கப்படுகிறது.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒரு முறை சூளுரைக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது முதியோர்கள் மற்றும் கைம்பெண் களுக்கு மாதம் ரூ.1,200-ம், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500-ம், 75 சதவீதத்துக்கு மேல் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.2,000-ம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வரவேற்பு
முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் தோ.வில்சன்,‘‘மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ.2,000 சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேவேளையில், புதிய அரசு பதவியேற்றவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, March 3, 2026
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு - 5 பேர் குழுவை பூஜை செய்ய அனுமதிக்கலாமா?
பதிவு: திங்கள்க்கிழமை, மார்ச் 03, 2026, மாசி 19, விசுவாவசு வருடம் 06:40 AM
மதுரை,
‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் பூஜை செய்ய 5 பேருக்கு அனுமதி வழங்கினால், நீதிமன்ற அவமதிப்பு மனு முடிக்கப்படும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மார்ச் 4-ல் பதிலளிக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதான வழக்கின் மனுதாரர் ராமரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.
மற்றொரு மனுதாரரான அரசபாண்டி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இந்திய ஆட்சிப் பணி விதிகள் அடிப்படையில் துறைரீதியாகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதியை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கக்கோரி பரமசிவம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் ஆஜரானார். அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மதுரை ஒரு மத உணர்வுள்ள நகரம். சமீப காலங்களில் மதரீதியான வன்முறை நிகழ்ந்துள்ளது. மதுரையில் மதரீதியான வன்முறை வெடிக்கும் அச்சம் எப்போதும் உள்ளது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அங்கு ஒரே நேரத்தில் பல்வேறு குழுக்கள் திரண்டதாலும், அங்கு கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டும், வன்முறை அதிகரிப்பதை தடுக்கும் வகையிலும், பொது அமைதி மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதை தடுத்தல், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டியதானது.
கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து முன்னணி மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் இடையே ஏற்பட்ட பதட்டங்களை சுட்டிக்காட்டி மாநகர் காவல் ஆணையர் கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் அடிப்படையிலும், பிற காரணிகளை கருத்தில் கொண்டும் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு சரியான நேரத்தில் பிறப்பிக்கப்பட்டதால் பெரிய மதரீதியான மோதல் தடுக்கப்பட்டது.
சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் நோக்கத்தில் மட்டுமே தடையாணை பிறப்பிக்கப்பட்டது. வேறு எந்த காரணமும் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் எண்ணம் எனக்கு இல்லை. சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறேன். நீதிமன்ற உத்தரவுகள் சட்டத்தின் உத்தரவுகள் என்பதை அறிவேன். அதை மீறும் எண்ணம் இல்லை.
நீதிமன்றத்தின் உத்தரவு மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும் என்பதை உணர்ந்துள்ளேன். நீதிமன்றத்தின் அதிகாரம் அரசியலமைப்பு நிர்வாகத்தின் அடித்தளமாக உள்ளது. எந்த நிர்வாக அதிகாரமும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்பட முடியாது. செயல்படவும் கூடாது. நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். இதையேற்று நீதிமன்ற அவமதிப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
பின்னர் நீதிபதி, ‘நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஏற்கெனவே ஏற்றிய இடத்தில் தீபம் ஏற்ற கூறவில்லை. இந்துக்களுக்கு சொந்தமான பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் உத்தரவிடப்பட்டது’ என்றார்.
அரசு தரப்பில், ‘சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை. அதை கருத்தில் கொண்டு அரசு நிர்வாகம் செயல்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை வேண்டும் என்றே நிறைவேற்றாமல் இருக்க நினைக்கவில்லை. அடுத்த கார்த்திகை தீப தினத்துக்கு முன்பு உரிய முடிவெடுக்கப்படும்’ எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி, ‘நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் குழு கோயில் மலை உச்சிக்கு சென்று தீபத்தூண் அருகே 15 நிமிடங்கள் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் (மார்ச் 4) தெரிவிக்க வேண்டும். அடுத்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர் ஆஜராக வேண்டாம். மாநகர் காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டார்.
முன்னதாக, அமைச்சர் ரகுபதி கருத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நீதிபதி கருத்து கேட்டார். அதற்கு ஆட்சியர், அமைச்சரின் கருத்து தவறானது என்றார். இதைப் பதிவு செய்து கொண்டு, அமைச்சர் ரகுபதிக்கு எதிரான மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, March 1, 2026
“ஈரான் உச்ச தலைவர் கமேனி இறந்து விட்டார்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 01, 2026, மாசி 17, விசுவாவசு வருடம் 08:20 AM
டெஹ்ரான்,
ஈரானின் ஆன்மீக தலைவரான அயோதுல்லா அலி கமேனி , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் விமானங்கள் 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில் தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலில் கமேனியின் இருப்பிடம் முற்றிலும் தரைமட்டமானதாகவும், நவீனத் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவர் இருந்த இடத்தை உறுதி செய்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கமேனியின் மரணம் குறித்து ஈரான் அரசு ஊடகங்கள் இதுவரை அதிகார்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம், இது உளவியல் போர் என்று மட்டும் கூறி கமேனி உயிருடன் இருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்து வருகிறது.
ஆனால், இஸ்ரேலிய உளவு அமைப்புகள் கமேனியின் உடல் மீட்கப்பட்டதாகத் தகவல்களை வெளியிட்டுள்ளன. கமேனி உயிரிழந்த செய்தி பரவியதை அடுத்து, டெஹ்ரானின் சில பகுதிகளில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாகவும், அதே நேரத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனது ட்ரூத் சோஷியல் பதிவில் மேலும் தெரிவித்துள்ள ட்ரம்ப், “வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான கமேனி இன்று இறந்துவிட்டார். இது ஈரானிய மக்களுக்குக் கிடைத்த நீதி மட்டுமல்ல, கமேனியாலும் அவரது ரத்தவெறி பிடித்த குண்டர் கும்பலாலும் கொல்லப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும், சிறந்த அமெரிக்கர்களுக்கும் கிடைத்த நீதியாகும்.
எங்களுடைய உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. இஸ்ரேலுடன் இணைந்து நாங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் சேர்ந்து கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ தற்காத்துக் கொள்ள எதுவுமே செய்ய முடியவில்லை. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கான ஒற்றைப் பெரும் வாய்ப்பு இதுவாகும்.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பலர் இனிப் போரிட விரும்பவில்லை என்றும், எங்களிடமிருந்து பாதுகாப்பை எதிர்பார்ப்பதாகவும் எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. நான் ஏற்கெனவே சொன்னது போல, இப்போது சரணடைந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு, காலம் கடந்தால் அவர்களுக்கு மரணம் மட்டுமே மிஞ்சும்!
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் காவல்துறையும் அமைதியான முறையில் ஈரான் தேசப்பற்றாளர்களுடன் இணைந்து, இந்த நாடு தகுதியுள்ள அந்தப் பெருமையை மீண்டும் அடைய ஒரு பிரிவாகச் செயல்படும் என்று நம்புகிறேன். கமேனியின் மரணம் மட்டுமல்லாமல், ஒரே நாளில் அந்த நாடு பெருமளவில் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் விரைவில் தொடங்கும்.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் எங்களது இலக்கை அடையும் வரை, இந்தத் தீவிரமான மற்றும் துல்லியமான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இந்த வாரம் முழுவதும் தடையின்றித் தொடரும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Featured post
48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM வாஷிங்டன், ‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...



-+





