Wednesday, November 5, 2025

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவரையும் பிடித்தது எப்படி? - காவல் ஆணையர் விளக்கம்

 


பதிவு: புதன்கிழமை, நவம்பர் 05, 2025, ஐப்பசி 19, விசுவாவசு வருடம் 06-00: AM

கோவை,

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவி நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரித்து மூவரை கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாணவி வன்கொடுமை வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி, இவரது சகோதரர் கார்த்திக் (எ) காளீஸ்வரன் (21), இவர்களது தூரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா (எ) தவசி (20) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு முன்பு மூன்று பேரும் பிணையில் வந்துள்ளனர்.

இவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. க.க.சாவடி, துடியலூர் காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளன. இவர்கள் மரம் வெட்டுதல், லேத் ஒர்க் போன்ற கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர்.

இவர்கள் கோவில்பாளையம் பகுதியில் சாவியுடன் நின்றிருந்த மொபட்டை திருடி பயன்படுத்தி வந்தனர். சம்பவ நாளில் இருகூர் வீட்டில் மது அருந்திவிட்டு, சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காரில் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை அரிவாளால் தாக்கி, பெண்ணை இருட்டான பகுதிக்கு 3 பேரும் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். காயமடைந்த வாலிபர் இரவு 11.20 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். 10 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் தீவிரமாகத் தேடினர். அங்கு மிகவும் இருட்டாக இருந்ததால் 100 போலீஸார் தேடுதலுக்குப் பின் அதிகாலை நாலு மணி அளவில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் மாணவி மீட்கப்பட்டார்.

ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதி உட்பட பல இடங்களில் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டி குற்றவாளிகளை தேடியதில், மூவரும் துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் மறைந்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் மூவரையும் பிடிக்க முயன்றபோது அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் காவலர்களை தாக்கினர். அரிவாளால் வெட்டியதில் தலைமைக் காவலர் சந்திரசேகருக்கு (47) இடது கையில் வெட்டு விழுந்தது. போலீஸார் சுட்டதில் மூன்று பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது 296 (b), 118, 140, 309, 80 ஆகிய சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் மோதிரம் மற்றும் ஒரு மொபைல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற ஆபத்தான காலத்தில் போலீஸாரை தொடர்பு கொள்ள காவல் உதவி ஆப் செயல்பட்டு வருகிறது. இந்த ஆப்பில் sos பட்டனை அழுத்தினாலோ அல்லது 3 முறை அசைத்தாலோ காவல்துறைக்கு புகார் செல்லும். லொகேஷனை கண்டறிந்து யாரேனும் ஆபத்தில் சிக்கி இருந்தால் மீட்க முடியும். சம்பவ இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டாஸ்மாக் பார் மூடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த பகுதியில் தினமும் 5 பீட் ஆபிசர், இரண்டு ரோந்து வாகனங்கள் தினமும் ரோந்து சுற்றி வருகின்றனர். சம்பவத்துக்கு சற்று முன்பு பிருந்தாவன் நகர் மெயின் ரோட்டில் போலீஸார் ரோந்து சென்றுள்ளனர். மாணவிகளின் பாதுகாப்புக்கு ‘போலீஸ் அக்க’, மாணவர்களின் பாதுகாப்புக்கு ‘போலீஸ் புரோ’ திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன”.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, November 4, 2025

கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம் - 3 பேரையும் சுட்டுப்பிடித்த போலீசார்

 


பதிவு: செவ்வாய்க்கிழமை, நவம்பர் 04, 2025, ஐப்பசி 18, விசுவாவசு வருடம் 06-00: AM

கோவை,

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு வந்த 3 பேர் காரில் காதலர்கள் இருப்பதை அறிந்தனர். காரின் கதவை தட்டி திறக்குமாறு கூறி மிரட்டினர். இதனால் காரில் இருந்த காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பயத்தில் அவர்கள் கதவை திறக்கவில்லை.இதையடுத்து அந்த 3 பேரும் அரிவாளால் காரின் கண்ணாடியை உடைத்து, காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை வெளியே இழுத்தனர்.. அவரை விடாமல் காதலன் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் காதலனின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.இதையடுத்து, தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.

குணா தவசி , சதீஸ் , கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்னர் .

Monday, November 3, 2025

Anbil Mahesh Poyyamozhi Press Meet at Madurai | Karur Stampede: Emotiona...

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை வாக்காளர் பட்டியல் திருத்தம் துவக்கம்

 


பதிவு: திங்கள்கிழமை, நவம்பர் 03, 2025, ஐப்பசி 17, விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

மாநிலம் முழுதும், 234 சட்டசபை தொகுதி களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி நாளை துவங்கவுள்ளது.

இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்கள், தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வருகின்றன. பல வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ளன.

எனவே, தகுதியான வாக்காளர்களை மட்டுமே பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும்; போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள, இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து உள்ளது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை, வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகளுடன் இணைந்து, அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில், எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஒத்தி வைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலருடன் 12 ஏஜென்ட்கள் தமிழகத்தில் 70,000த்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 

இவற்றை, 1,200 வாக்காளர்களுக்கு ஒன்று என்ற அளவில் விரிவுபடுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

இதற்கான பணிகளும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் போது மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒவ்வொரு கட்சிக்கும் பூத் ஏஜென்ட்கள் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு, இப்பணியில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், 12 பூத் ஏஜென்ட்களும் வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லவுள்ளனர். கடந்த காலங்களில் ஒவ்வொரு பூத் ஏஜென்டும், 10 பேர் வரை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் வாயிலாக, 15 முதல் 20 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், தங்கள் வாயிலாகவே புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்; முகவரி மாற்றம் செய்தவர்களை இடம் பெற செய்ய வேண்டும் என, ஒவ்வொரு கட்சியின் பூத் ஏஜென்ட்களும் வலியுறுத்துவர் என்பதால், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடையே மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால், வாக்காளர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:

தமிழகத்தில் 2002 மற்றும் 2005ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் கணக்கெடுப்பு பணி நாளை துவங்கவுள்ளது. இந்த பட்டியல்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் உள்ளன.

இந்த பட்டியல்களுடன், அனைத்து வீடுகளுக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லப்போவது இல்லை. எந்தெந்த வீடுகளில் 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதோ, அந்த வீடுகளுக்கு மட்டுமே செல்வர்.

அந்த வீடுகளில் யாராவது இருந்தால், அவர்களின் விபரத்தை கேட்டு, வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவர். அந்த வீட்டில், 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால், அதற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தையும் வழங்குவர்.அவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தர வேண்டும் என்று அவசியம் இல்லை. அடுத்த முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும் போது, ஆவணங்களுடன் அவற்றை சமர்ப்பித்தால் போதும். இதற்காக, ஒரு வீட்டிற்கு மூன்று முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்வர். கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால், அதை தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களை காட்டி, டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம்.

முகவரி மாற்றம் எதுவும் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது. முகவரி மாறியவர்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும், அதற்கான ஆவணங்களை டிசம்பர் 9ம் தேதி முதல், ஜனவரி மாதம் 8ம் தேதிக்குள் சமர்ப்பித்து, தங்களது பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, November 2, 2025

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ‘எல்.வி.எம்.- எம்5’ ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

 


பதிவு: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 02, 2025, ஐப்பசி 16, விசுவாவசு வருடம் 04-30: AM

சென்னை,

செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் கொண்டு சேர்ப்பதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5.26 மணிக்கு தொடங்கியது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘பாகுபலி' என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம். - எம்5’ ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

இதில், 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்' என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03' என்ற கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புகளை வழங்கும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் கொண்டு சேர்ப்பதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5.26 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

24 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று மாலை ராக்கெட் விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Saturday, November 1, 2025

வெப் சீரிஸ் இயக்குனர் ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொன்றது ஏன்? மும்பை போலீஸ் கமிஷனர் விளக்கம்

 


பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 01, 2025, ஐப்பசி 15, விசுவாவசு வருடம் 04-30: AM

மும்பை,

இயக்குனரை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் ஏன் வந்தது என்பதற்கு மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

17 சிறுவர்களை சிறைப்பிடித்த இணைய தொடர் இயக்குனர் ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் ஏன் வந்தது என்பதற்கு மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை பவாய் பகுதியில் உள்ள ஏ.ஆர். ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இணைய தொடர் (வெப் சீரிஸ்) இயக்குனரான ரோகித் ஆர்யா (வயது 50) சிறுவர்- சிறுமிகள் 17 பேர் உள்பட 19 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இணைய தொடரின் குழந்தை நட்சத்திர தேர்வுக்காக அவர்களை அழைத்து இந்த துணிகர சம்பவத்தை அரங்கேற்றினார்.

இதனால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் ஸ்டூடியோவுக்குள் அதிரடியாக நுழைந்து ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொன்று, சிறுவர்- சிறுமிகள் உள்பட 19 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

பிரதமர் மோடியின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ், மராட்டிய கல்வித்துறையில் ‘எனது பள்ளி, அழகான பள்ளி’ என்ற திட்டத்தை செயல்படுத்தி, அதை கண்காணிக்கும் பணியில் ரோகித் ஆர்யா ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக அவருக்கு கல்வித்துறை பண பாக்கி கொடுக்க வேண்டி இருந்ததாகவும், இதற்காக பல முறை போராடி பலன் கிடைக்காததால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர், செய்வது அறியாமல் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

எம்.பி.ஏ. படித்துள்ள அவர் சமூக சிந்தனை உடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பல ஆவண படங்களை எடுத்துள்ளார். பிரேம் சோப்ரா உள்ளிட்ட நடிகர்களிடம் விழிப்புணர்வு வீடியோ எடுத்துள்ளார். இந்த நிலையில் ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் என்ன? என்ற கேள்வியும் எழுந்தது.



இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி கூறியதாவது:- ரோகித் ஆர்யாவிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். எதற்காக சிறுவர்களை சிறைபிடித்து வைத்திருந்தார் என்பதை அவர் தெளிவுப்படுத்தவில்லை. அவர் பிடித்து வைத்திருந்த குழந்தைகள் பதற்றத்தில் இருந்தனர். 

ஒரு குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு குழந்தைகளை விடுவிக்க முன்வரவிலலை. அவரின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், குழந்தைகளின் உயிருடன் விளையாட அனுமதிக்க முடியாது. ஏர்கன் துப்பாக்கியால் அவர் தான் போலீசாரை நோக்கி முதலில் சுட்டார். எனவே தற்காப்புகாக போலீசார் அவரை சுட்டனர். அந்த தருணத்தில் எங்களுக்கு வேறு வழியில்லை. குழந்தைகளை பாதுகாப்பாக மீட்க வேண்டியதும் எங்களது கடமை. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து கல்வித்துறைக்காக ரோகித் ஆர்யா செய்த பணி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு மந்திரி ததா புசே உத்தரவிட்டுள்ளார்.

Friday, October 31, 2025

அசோக் நகரில் நடந்த அரசு காண்டிராக்டர் கொலை வழக்கில் கள்ளக்காதலி - தோழி அதிரடி கைது...

 


பதிவு: வெள்ளிகிழமை, அக்டோபர் 31, 2025, ஐப்பசி 14, விசுவாவசு வருடம் 10-00: AM

சென்னை,

தப்பியோடிய கள்ளக்காதலி மற்றும் அவரது தோழியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அசோக் நகரில் நடந்த அரசு காண்டிராக்டர் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலி மற்றும் தோழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுச்சேரி முதலியார்பேட்டை பாப்பன்சாவடியை சேர்ந்தவர் பிரகாஷ் (38 வயது). இவர் புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இதற்காக தனியாக நிறுவனம் ஒன்றையும் நடத்தினார். புதுச்சேரியில் கழிவுநீரகற்றும் பணியிலும் ஈடுபட்டார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

குடும்பத்தகராறில் இவரது மனைவி 2 குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்த சுகன்யா (37 வயது) என்ற பெண்ணுடன் பிரகாசுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. சுகன்யா, பிரகாசின் காண்டிராக்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சுகன்யாவும் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார்.

இதனால் பிரகாசும், சுகன்யாவும் தங்களது திருமண பந்தங்கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை மீறி தனியாக உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தனர். பிரகாஷ் எங்கு சென்றாலும் சுகன்யாவை தன்னுடன் அழைத்து செல்வார். நேற்று முன்தினம் கழிவுநீரை அகற்றும் பணிக்காக வாடகைக்கு வாகனங்களை ஏற்பாடு செய்ய பிரகாஷ் தனது காரில் சென்னை வந்தார். அவருடன் சுகன்யாவும் வந்தார்.

சுகன்யாவின் கணவர் தனஞ்செழியன் சென்னை ஜாபர்கான்பேட்டையில் தனியாக வாழ்ந்தார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சுகன்யாவின் நெருங்கிய தோழியும், உறவுப்பெண்ணுமான குணசுந்தரி (27) ஜாபர்கான்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார்.

பிரிந்து வாழ்ந்தாலும் மனைவி சுகன்யாவை மறக்க முடியாமல் தனஞ்செழியன் தவித்து வந்தார். தனது மனைவி குறித்த தகவல்களை அவரது தோழியான குணசுந்தரியிடம் அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்வார். நேற்று முன்தினம் சுகன்யா தனது கள்ளக்காதலன் பிரகாசுடன் சென்னை வருவதை தனஞ்செழியனுக்கு குணசுந்தரி தெரிவித்தார்.

மேலும் சுகன்யாவுடன் தொடர்பு கொண்ட குணசுந்தரி நாம் ஒன்றாக ஓட்டலில் சாப்பிடலாம் என்று அழைத்தார். அதன்பேரில் சுகன்யா சென்னை வந்தவுடன் குணசுந்தரிக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சென்னை அசோக்நகர் 4-வது அவென்யூவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் சாப்பிட்டனர். இந்த தகவலை குணசுந்தரி, தனஞ்செழியனுக்கு தெரிவித்தார்.

மனைவியை மறக்க முடியாமல் தவித்த தனஞ்செழியன் குறிப்பிட்ட ஓட்டலுக்கு பைக்கில் வந்தார். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். பிரகாஷ், சுகன்யா, குணசுந்தரி ஆகியோர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். பிரகாசும், சுகன்யாவும் காரில் ஏறினார்கள். அப்போது கையில் கத்தியுடன் வந்த தனஞ்செழியன் திடீரென்று காரில் உட்கார்ந்திருந்த பிரகாசை தாக்கினார்.

‘சீட் பெல்ட்' அணிந்திருந்ததால் பிரகாசால் தப்பியோட முடியவில்லை. இந்த நிலையில் பிரகாசை சரமாரியாக கத்தியால் குத்திய தனஞ்செழியன் மனைவி சுகன்யாவையும் மிரட்டினார். சுகன்யாவையும் தீர்த்துக்கட்ட தனஞ்செழியன் முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் மனம்மாறி தனது பைக்கில் ஏற சொல்லி அழைத்து சென்றுவிட்டார்.

குணசுந்தரியும் மொபட்டில் தப்பி சென்றுவிட்டார். கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு போராடிய பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் அசோக்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தப்பிச்சென்ற தனஞ்செழியனை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில் அசோக்நகர் உதவி கமிஷனர் ஆல்ட்ரீன் தலைமையிலான தனிப்படை போலீசார் தனஞ்செழியனை தேடிவந்தனர். அவர் நேற்று முன்தினம் இரவோடு, இரவாக கைது செய்யப்பட்டார்.

தனஞ்செழியனின் மனைவி சுகன்யாவையும், அவரது தோழி குணசுந்தரியையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் பிரகாஷ் கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக போலீசார் கருதினார்கள். பிரகாசை தனஞ்செழியன் கத்தியால் குத்தியபோது அவரை காப்பாற்ற இருவரும் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக சுகன்யா தனது கணவரோடு பைக்கில் ஏறி சென்றுவிட்டார்.

குணசுந்தரி தனியாக தனது மொபட்டில் தப்பி சென்றுவிட்டார். பிரகாசை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்தது. அதை செய்யாமல் போலீசுக்கும் இந்த சம்பவம் பற்றி தகவல் கொடுக்காமல் தப்பிச்சென்றதால் சுகன்யாவையும், குணசுந்தரியையும் இந்த வழக்கில் போலீசார் குற்றவாளிகளாக சேர்த்தனர்.

அதையொட்டி அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். கைதான தனஞ்செழியன், சுகன்யா, குணசுந்தரி ஆகிய 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...