Sunday, January 18, 2026
சி.பி.ஐ. விசாரணை - டெல்லி புறப்பட்டார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
சென்னை,
இன்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்கிறார்.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதனை தொடர்ந்து கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதில் 12-ந்தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதனையடுத்து த.வெ.க. தலைவர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா?, நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்?, கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா?, கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா?, தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?’ என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர்.
அனைத்து கேள்விகளுக்கும் விஜய் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் அவர் சென்னை திரும்பினார். அவர் அடுத்தகட்ட விசாரணைக்காக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு நாளை (ஜன.19-ம் தேதி) டெல்லியில் மீண்டும் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2-வது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் இன்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இதற்காக விஜய் தற்போது தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-நியூசிலாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
இந்தூர்,
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் வதோதராவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான, ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
கடந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 285 ரன்கள் இலக்கை 47.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி எட்டிப்பிடித்தது. இந்திய அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (112 ரன்கள்), கேப்டன் சுப்மன் கில் (56 ரன்கள்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. அதேபோல் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி எடுபடவில்லை. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் கடைசி வரை களத்தில் நின்று 131 ரன்கள் குவித்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு வில் யங் (87 ரன்கள்), கிளென் பிலிப்ஸ் (32 ரன்கள்) பக்கபலமாக இருந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா முந்தைய இரு ஆட்டங்களிலும் நல்ல தொடக்கம் கண்டாலும் (26, 24 ரன்கள்) அதனை பெரிய இன்னிங்சாக மாற்றவில்லை. எனவே அவர் நிலைத்து நின்று ஆடினால் பேட்டிங் மேலும் வலுப்பெறும். அத்துடன் முந்தைய ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக துவம்சம் செய்தனர். இதனால் பந்து வீச்சில் மாற்றம் இருக்கலாம். அர்ஷ்தீப் சிங் அல்லது புதுமுக வீரர் ஆயுஷ் பதோனி ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்புள்ளது.
கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் கூடுதல் நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணி களம் இறங்கும். அந்த அணியில் பேட்டிங்கில் டேரில் மிட்செல் (215 ரன்கள்), வில் யங், டிவான் கான்வே, ஹென்றி நிகோல்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கைல் ஜாமிசன், கிறிஸ்டியன் கிளார்க் வலுசேர்க்கின்றனர்.
2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு இந்திய அணி உள்ளூரில் இருநாடுகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது கிடையாது. இதனால் இந்திய அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எல்லா வகையிலும் வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் - எடப்பாடி அதிரடி அறிவிப்பு
சென்னை,
* ஆண்களுக்கும் கட்டணமில்லா பஸ் வசதி
* 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
* வீடு இல்லாதவர்களுக்கு புது வீடு
* ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்
அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்தார்.
ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பஸ் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்; 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் என எடப்பாடி பழனிசாமி முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைமை கழகத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி பெரிய ரோஜா மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் அண்ணா தி.மு.க. கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பின்னர் தலைமை கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 109 கிலோ ராட்சத கேக் வெட்டி அனைவருக்கும் தன் கைப்பட வழங்கினார்.
5 தேர்தல் வாக்குறுதிகள்
இதன் பின்னர் தலைமை கழகத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது முதல் கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அவர் அதிரடியாக அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் 17–வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அண்ணா தி.மு.க.வின் சார்பில் அளிக்கப்படும் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்
மகளிருக்கு ரூ.2000
1. மகளிர் நலன் : (குல விளக்குத் திட்டம்) சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் : நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
அனைவருக்கும் வீடு
3. அனைவருக்கும் வீடு : (அம்மா இல்லம் திட்டம்) ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
பெண்களுக்கு ஸ்கூட்டர்
4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் : 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் : மகளிருக்கு ரூ. 25,000 - மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஏற்கனவே அரசுக்கு அதிக அளவில் கடன் சுமை உள்ளது. இந்த நிலையில் இந்த வாக்குறுதிகள் சாத்தியப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர்.
எங்களிடம் நிர்வாகத் திறமை உள்ளது
அவர்களுக்கு (தி.மு.க.) நிர்வாக திறமை இல்லை. எங்களுக்கு நிர்வாகத் திறமை இருக்கிறது. எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கொரோனா காலத்திலேயே அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு இருந்தது. அப்போதே நாங்கள் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தோம். நிதி நிலைமையை உருவாக்கி தந்தோம். தி.மு.க. ஆட்சியில் நிதி மேலாண்மை குழு அமைத்தார்கள். ஆனாலும் கடன் குறையவில்லை. தி.மு.க. ஆட்சியின் முடிவில் கடன் சுமை 5.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடன் சுமை அதிகமாக உள்ள நிலையில் ஆண்களுக்கும் அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணம் சாத்தியப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு நிர்வாகத் திறமை இருந்தால் எல்லாம் சரி செய்ய முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அண்ணா தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மண்டல வாரியாக மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு மனுக்களை பெற்று அறிக்கை தயார் செய்து அளிப்பார்கள். அதில் மக்கள் நினைப்பது தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Featured post
8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...




