Sunday, April 5, 2026

48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM

வாஷிங்டன்,

‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள்.

இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கேற்ப, அமெரிக்க வீரர்களும் தாக்குதலுக்கு தயாராகி வருவதால் மேற்கு ஆசியாவில் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவுகிறது

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

ட்ரம்ப் 15 அம்ச திட்டம்

ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டத்தை கடந்த 25-ம் தேதி வெளியிட்டார். ‘ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் வழங்க வேண்டும். தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்தார். ஆனால், ஈரான் ராணுவம் இதை ஏற்கவில்லை.

இந்த சூழலில், கடந்த மாதம் அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஈரானின் மின் நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்தப்படாது’ என்று தெரிவித்தார்.

கடந்த மாத இறுதியில் ட்ரம்ப் கூறும் போது, “ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்கிறது. எனவே அடுத்த 10 நாட்களுக்கு ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது’’ என்று தெரிவித்தார்.

தீவிரமடையும் போர்: எனினும் கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவின் 2 போர் விமானங்களை ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தியது. மேலும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர தாக்குதல்களை நடத்தின. எனினும், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள். இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும். இவ்வாறு ட்ரம்ப் அதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: 

அதிபர் ட்ரம்ப் விதித்த 10 நாள் கெடு ஏப்ரல் 6-ம் தேதி இரவு 8 மணியுடன் (இந்திய நேரப்படி 7-ம் தேதி அதிகாலை) நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஈரான் ஆட்சியாளர்கள், அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஈரான் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

போர்க் கப்பல்கள் முகாம்

அமெரிக்க கடற்படையின் 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதியில் முகாமிட்டு உள்ளன. குறிப்பாக ட்ரிபொலி போர்க்கப்பலை சேர்ந்த வீரர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிதீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தரைவழி தாக்குதல்களுக்கு தயாராக உள்ளனர்.

அமெரிக்காவின் பி-2 ஸ்பிரிட், எப்-35, எப்-22, எப்-15இ, ஏ-10 உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அதிதீவிர தாக்குதல்களுக்கு தயாராக உள்ளன. பிஆர்எஸ்எம், டோமாஹாக், பேட்ரியாட், தாட், ஹிமார்ஸ், ஜிஎம்எல்ஆர்எஸ் உள்ளிட்ட அதிநவீன ஏவுகணைகள் மற்றும் எம்கியூ-9 ரக ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் 48 மணி நேர இறுதி கெடுவை விதித்துள்ளார். இந்த கெடு முடிந்த பிறகு அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தும். ஈரான் நரகமாக மாறும் வரை தாக்குதல்கள் தொடரும். இவ்வாறு அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்ல மறுப்பா? - ஈரான் வெளியுறவு அமைச்சர் விளக்கம்

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதியை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சியில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ‘‘இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை’’ என்று ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு

ஈரானின் நிலைப்பாட்டை அமெரிக்க ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்கின்றன. பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு எனது நன்றி. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் செல்ல நாங்கள் ஒருபோதும் மறுத்தது இல்லை. எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோதப் போருக்கு ஒரு உறுதியான மற்றும் நிரந்தரமான முடிவைக் கொண்டு வருவதற்கான விதிமுறைகளையே நாங்கள் முக்கியமாக கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஈரான் பதில் அளிக்காததால் அமைதிப் பேச்சுவார்த்தை மந்தம் அடைந்துள்ளதாக அமெரிக்காவின் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', பாகிஸ்தானின் 'டான்' ஆகிய இதழ்கள் செய்தி வெளியிட்டன. இந்த செய்திகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபியும் மறுத்துள்ளார். இத்தகைய செய்திகள் அடிப்படையற்றவை, கற்பனையானவை என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Featured post

48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM வாஷிங்டன், ‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு...