Sunday, December 14, 2025

புதிய கட்சி தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்?

 


பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 07-00: PM

சென்னை,

அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் ஓபிஎஸ் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை கழகமாக மாற்றி இருக்கிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வரும் அவர், அதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை துவங்கி செயல்பட்டு வந்தார்.

எப்படியும் அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டு விடுவது என்ற முனைப்பில் இருந்த ஓபிஎஸ், அதில் எவ்வித முன்னேற்றத்தையும் அடையாத நிலையில் இருந்தார். தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த அவர், டிசம்பர் 15ல் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து புதிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்து இருந்தார்.

பின்னர் அந்த கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்து, டிசம்பர் 24ல் எம்ஜிஆர் நினைவு தினத்தில் தமது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்கி உள்ளார். தான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருக்கிறார்.

ஆனால் தமது அமைப்பை கட்சியாக மாற்றி உள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மாறாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் ஊழியர்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இதுநாள் வரையில், அமைப்பின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வந்த அவர், முதல் முறையாக அமைப்பை கழகமாக மாற்றி அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிக்கையில் கட்சி தலைவர், பொதுச் செயலாளர் யார் என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை.

எப்போதும் போல கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் என்று தமது பொறுப்புகளை குறிப்பிட்டு கையெழுத்தை மட்டும் ஓபிஎஸ் இட்டுள்ளார். தமது கட்சியை அவர் முறைப்படி தேர்தல் கமிஷனில் பதிவு செய்துவிட்டாரா என்பது குறித்தும் எவ்வித தகவல்களும் இல்லை.

இதற்கு முன்னர் கடந்த 14ம் தேதி தான் நடத்தி வரும் அமைப்பின் பெயரில் கடைசியாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் தலைமைக் கழகம், 154, பசுமை வழிச்சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,சென்னை-600028 என்ற முகவரி இடம்பெற்று இருந்தது.

தற்போது அமைப்பை கழகமாக மாற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் முகவரி மாறி இருக்கிறது. இதில் தலைமைக்கழகம், 38/31, 38/2, சேமியர்ஸ் ரோடு, நந்தனம், சென்னை- 600035 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், இரண்டு அறிக்கையிலும் 93423 14327 என்ற செல்போன் எண் மட்டும் மாறாமல் இடம்பெற்றுள்ளது.

ஜனவரி 13–ந் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் - விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாடுகிறார் - 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

 

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 05-00: PM

புதுடெல்லி,

பிரதமர் மோடி தமிழக விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் இந்த கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையும் அதிமுக கூட்டணியில் இணையுமாறு பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

3 நாட்கள்

இந்நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை மையமாக கொண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் அவர் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார். 

அதன்படி, ஜனவரி 13ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி ராமேசுவரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ என்ற முழக்க சுற்றுப்பயணத்தின் நிறைவாக புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், 14ம் தேதி பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் பிரதமர் மோடி கொண்டாட உள்ளார்.

கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை

இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தேர்தல் பணிகள், வியூகங்கள் தொடர்பாகவும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

 

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 05-00: AM

சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் டிச.4-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படிவம் விநியோகம், பூர்த்தி செய்து திரும்ப பெறுவது போன்றவற்றில் சிக்கல்கள் எழுந்தது மற்றும் பருவமழை உள்ளிட்ட காரணங்களால், அவகாசத்தை நீட்டிக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று, எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கும் அவகாசம் டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

டிசம்பர் 16-ல் வரைவு வாக்காளர் பட்டியலும், பிப்ரவரி 14-ல் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டது. படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியும் தொடர்ந்து நடந்தது.

கடந்த 11-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் விநியோகிக்கும் பணி, பூர்த்தி செய்து பெற்ற படிவங்களை பதிவேற்றும் பணி 100 சதவீதம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படிவம் விநியோகம், திரும்பப் பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகளுக்கான அவகாசத்தை டிசம்பர் 14 வரை மேலும் 3 நாட்கள் நீட்டித்து தேர்தல் ஆணையம் 11-ம் தேதி மாலை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, படிவத்தை பூர்த்தி செய்துசமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம் தேதி வெளியாகும். அன்று முதல், ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லதுஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அதன்பின், அவற்றின் மீது பரிசீலனை நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கணக்கீட்டுப் படிவத்துக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதிவாக்காளர் பட்டியல் பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றுமட்டுமே தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது. சரியான தேதி குறிப்பிடப்படவில்லை.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...