Sunday, March 15, 2026

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ல் ஒரே கட்டமாக தேர்தல் - மே.4ல் வாக்கு எண்ணிக்கை


 பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மார்ச் 15, 2026, பங்குனி 01, விசுவாவசு வருடம் 05:30 AM

சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாள். புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழகத்தில் 75,032 வாக்குச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவைக்கான பதவிகாலம் முடிவடைகிறது. வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் என ஞானேஷ்குமார் தெரிவித்தார்.

தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், அசாம், புதுச்​சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்​களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்குமார் தலை​மையி​லான தேர்​தல் ஆணை​யர்​கள் இன்று புது டெல்லியில் அறிவித்தனர்.

இதன்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலுக்கு தயாராகும் கூட்டணிகள்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் சில கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுக - பாஜக கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளார்.

எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 இந்திய சரக்குக் கப்பல்கள்


 பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மார்ச் 15, 2026, பங்குனி 01, விசுவாவசு வருடம் 07:30 AM

புதுடெல்லி,

இந்திய கொடி ஏந்திய இரண்டு சரக்கு கப்பல்கள் வளைகுடா நாட்டில் இருந்து எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என அறியப்படும் இந்த சரக்கு கப்பல்கள் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டுள்ளன. அந்த மாநிலத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களுக்கு இந்த கப்பல்கள் வந்து கொண்டுள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சரக்கு கப்பல்களிலும் சுமார் 92700 டன் எல்பிஜி உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின. அதையடுத்து ஈரானும் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வரும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முடங்கியது. இந்த ஜலசந்தியில் ஈரான் முடக்கவில்லை என தெரிவித்தது. இருப்பினும் தாக்குதல் சார்ந்த பதற்றம் காரணமாக போக்குவரத்து முடங்கியது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் முடங்கியிருந்த 30+ சரக்கு கப்பலிகளில் தற்போது எல்பிஜி உடன் குஜராத் வந்து கொண்டிருக்கும் இரு கப்பல்களும் அடங்கும்.

இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் மற்​றும் எல்பிஜி தேவை​யில் 80 சதவீதத்​துக்​கும் மேலாக இறக்​குமதியைச் சார்ந்தே உள்​ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழித்​தடத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டால் இந்​தி​யப் பொருளா​தா​ரம் கடுமையாகப் பாதிக்​கப்​படும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்​னணி​யில்​தான், இந்​தி​யக் கப்​பல்​களுக்கு மட்டும் ஈரான் தற்போது விலக்கு அளித்துள்ளதாக தகவல். இது இந்தியாவில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீராக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

முன்னதாக, மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்​சங்​கர், ஈரானிய வெளி​யுறவு அமைச்சர் அப்​பாஸ் அரக்ச்​சி​யுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோ​சனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Featured post

48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM வாஷிங்டன், ‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு...