Tuesday, November 11, 2025

‘Evidence’ Kathir Press Meet at Madurai | 7,500 SC/ST atrocities cases a...

BJP Cadres Protest: H.Raja condemns Coimbatore woman’s abduction | S.I.R...

பிஹார் 2-ம் கட்ட தேர்தல் - 122 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 11, 2025, ஐப்பசி 25, விசுவாவசு வருடம் 06-30: AM

பாட்னா,

122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. 20 மாவட்டங்களில் அடங்கி உள்ள இத்தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து பீகார் போலீஸ் டி.ஜி.பி. வினய்குமார் ஒரு பேட்டியில் கூறியதாவது:-

தேர்தல் கமிஷன், மாநில அரசு, போலீ்ஸ் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகளால் முதல்கட்ட தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகின. எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை. தற்போது 2-வதுகட்ட தேர்தலுக்கு முற்றிலும் தயாராகி விட்டோம். போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

நேபாளத்தை ஒட்டிய மாவட்டங்களில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டத்தை யாரும் கையில் எடுக்கவிட மாட்டோம். எந்த அவசரநிலையையும் சமாளிக்க பயங்கரவாத தடுப்பு படை, சிறப்பு அதிரடிப்படை கமாண்டோக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, 14-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும்.

இடைத்தேர்தல்கள்

பீகார் சட்டசபை தேர்தலுடன், ஒடிசா மாநிலம் நுவபடா சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது. பிஜு ஜனதாதளம் எம்.எல்.ஏ. ராஜேந்திர டோலகியா மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது.தெலுங்கானா மாநிலம் ஜூபிளி ஹில்ஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம் காட்சிலா சட்டசபை தொகுதி, காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள நக்ரோடா சட்டசபை தொகுதி ஆகியவற்றிற்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

டில்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்றபோது பயங்கரவாத தாக்குதல் - நடந்தது என்ன? - முழு விவரம்

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 11, 2025, ஐப்பசி 25, விசுவாவசு வருடம் 06-10: AM

புதுடெல்லி,

தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், 2,900 கிலோ வெடிபொருட்கள் சிக்கிய அதே நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் வகையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, சதித் திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் உளவுத் துறை எச்சரித்திருந்தது.

அதே வேளையில் கடந்த அக்டோபர் 19ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பன்போரா, நவ்காம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் மற்றும் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு போஸ்டர்களை ஒட்டியிருந்தது.

அம்மோனியம் நைட்ரேட்

அப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஜம்மு - காஷ்மீர் போலீசார் ஆராய்ந்ததில், 'ஒயிட் காலர்' பயங்கரவாத முறைக்கு பயங்கரவாதிகள் மாறி இருக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

அந்த போஸ்டர்களை ஒட்டியவர் டாக்டர் அடில் அகமது என்பது தெரிந்தது. உத்தர பிரதேசத்திற்கு தப்பிச் சென்ற அவரை, பின் தொடர்ந்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், ஷஹாரன்பூரில் உள்ள மருத்துவமனையில் வைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரையும் கைது செய்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், தாவுஜ் கிராமத்தில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும், 'அம்மோனியம் நைட்ரேட்' என்ற மூலப்பொருள், 350 கிலோ வரை இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.

இது தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின.

டாக்டர் ஷகீலுக்கு கார் கொடுத்து உதவிய பெண் டாக்டர் ஷகீன் என்பவரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதுவரை மூன்று டாக்டர்கள் உள்பட எட்டு பேர் கைதாகியுள்ளனர்.

டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததை அடுத்து, மும்பை, சென்னை உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுகொண்டு இருந்தன. அப்போது, சிக்னலில் நின்ற கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், அருகே நின்றிருந்த சிலகார்களிலும் தீப்பிடித்தது. இதில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா கூறும்போது, 

“மாலை 6.52 மணி அளவில் செங்கோட்டை பகுதியின் கவுரி சங்கர், ஜெயின் கோயில்களுக்கு அருகே மெதுவாக சென்ற  ஹுண்டாய் ஐ20 ரக கார் ஒன்று மெதுவாக வந்து போக்குவரத்து சிக்னல் பகுதியில் நின்றது. இதன் பின்னர் அது வெடித்து உள்ளது.  அரியானா நம்பர் பிளேட் கொண்ட அந்த காரில் 3 பேர் இருந்துள்ளனர்.

கார் ஒன்று சிக்னலில் நின்றுள்ளது. அப்போது அந்த கார் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் அருகே இருந்த கார்கள் 150 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. டெல்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி அமைப்புகள் ஒன்றிணைந்து விசாரணை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, டெல்லி போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகேகடை நடத்தி வரும் ஒருவர் கூறும்போது, ‘‘பயங்கர சத்தத்துடன் கார்கள் வெடித்துச் சிதறி தூக்கிவீசப்பட்டன. பல கி.மீ. தூரம் சத்தம் கேட்டது. கடையில் இருந்த நான் அதிர்வு காரணமாக கீழே விழுந்துவிட்டேன்’’ என்றார்.

நேரில் பார்த்தவர்கள் மிரட்சி!

 சம்பவத்தை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் கூறும்போது, 'என் ஆட்டோவுக்கு முன்பாக, ஒரு கார் நின்று இருந்தது. அந்த காரில் இருந்து ஏதோ ஒரு பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது' என்றார். கார் வெடித்து சிதறிய இடத்திற்கு அருகே கடை நடத்தி வரும் சாந்தினி சவுக் வர்த்தக சங்கத் தலைவர் சஞ்சய் பார்கவ் கூறும்போது, ''வெடி சத்தம் கேட்டதும் ஒட்டுமொத்த கட்டடமும் சில நிமிடங்கள் வரை அதிர்ந்தது. மார்க்கெட் பகுதியில் இருந்த மக்கள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியவில்லை,'' என்றார்.

அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ராஜ்தர் பாண்டே கூறும்போது, “எனது வீடு வரைவெடிப்பின் அதிர்வை உணர முடிந்தது. அந்த பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது’’ என்று தெரிவித்தார். டெல்லி போலீஸார் கூறும்போது, ‘‘காரில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே கார்கள் வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியவரும்’’ என்று தெரிவித்தனர்.

எனினும், சதிச் செயலாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தால் டெல்லி முழுவதும் உச்சபட்ச உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மோடி, அமித் ஷா ஆலோசனை

இந்நிலையில், டெல்லியில் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி,முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். பின்னர், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியஅவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரித்தார். டெல்லிகாவல் ஆணையர் சதீஷ் கோல்சாவையும் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அமித் ஷா கூறும்போது, “டெல்லி செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சிக்னல் அருகே கார் வெடித்துச் சிதறி உள்ளது. இதில் அருகே காரில் சென்றவர்கள், நடைபாதையில் நடந்து சென்றவர்கள் உயிரிழந்துள்ளனர். 10 நிமிடங்களுக்குள் டெல்லி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றுவிட்டனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

பிரதமர், முதல்வர் இரங்கல்

பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘டெல்லி வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ‘டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். டெல்லியில் இருந்து வரும் காட்சிகள் இதயத்தை நொறுக்குகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உஷார்

டெல்லியின் அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், ஹரியானா மட்டுமின்றி, மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மண்டல ஐ.ஜி.க்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை, கோவை, திருச்சி,மதுரை, சேலம், நெல்லை உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடல் வழி பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பல பகுதிகளிலும் நேற்று இரவு தீவிர வாகனசோதனை நடைபெற்றது.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...