Tuesday, November 11, 2025

பிஹார் 2-ம் கட்ட தேர்தல் - 122 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 11, 2025, ஐப்பசி 25, விசுவாவசு வருடம் 06-30: AM

பாட்னா,

122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. 20 மாவட்டங்களில் அடங்கி உள்ள இத்தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து பீகார் போலீஸ் டி.ஜி.பி. வினய்குமார் ஒரு பேட்டியில் கூறியதாவது:-

தேர்தல் கமிஷன், மாநில அரசு, போலீ்ஸ் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகளால் முதல்கட்ட தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகின. எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை. தற்போது 2-வதுகட்ட தேர்தலுக்கு முற்றிலும் தயாராகி விட்டோம். போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

நேபாளத்தை ஒட்டிய மாவட்டங்களில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டத்தை யாரும் கையில் எடுக்கவிட மாட்டோம். எந்த அவசரநிலையையும் சமாளிக்க பயங்கரவாத தடுப்பு படை, சிறப்பு அதிரடிப்படை கமாண்டோக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, 14-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும்.

இடைத்தேர்தல்கள்

பீகார் சட்டசபை தேர்தலுடன், ஒடிசா மாநிலம் நுவபடா சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது. பிஜு ஜனதாதளம் எம்.எல்.ஏ. ராஜேந்திர டோலகியா மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது.தெலுங்கானா மாநிலம் ஜூபிளி ஹில்ஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம் காட்சிலா சட்டசபை தொகுதி, காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள நக்ரோடா சட்டசபை தொகுதி ஆகியவற்றிற்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

டில்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்றபோது பயங்கரவாத தாக்குதல் - நடந்தது என்ன? - முழு விவரம்

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 11, 2025, ஐப்பசி 25, விசுவாவசு வருடம் 06-10: AM

புதுடெல்லி,

தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், 2,900 கிலோ வெடிபொருட்கள் சிக்கிய அதே நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் வகையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, சதித் திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் உளவுத் துறை எச்சரித்திருந்தது.

அதே வேளையில் கடந்த அக்டோபர் 19ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பன்போரா, நவ்காம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் மற்றும் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு போஸ்டர்களை ஒட்டியிருந்தது.

அம்மோனியம் நைட்ரேட்

அப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஜம்மு - காஷ்மீர் போலீசார் ஆராய்ந்ததில், 'ஒயிட் காலர்' பயங்கரவாத முறைக்கு பயங்கரவாதிகள் மாறி இருக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

அந்த போஸ்டர்களை ஒட்டியவர் டாக்டர் அடில் அகமது என்பது தெரிந்தது. உத்தர பிரதேசத்திற்கு தப்பிச் சென்ற அவரை, பின் தொடர்ந்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், ஷஹாரன்பூரில் உள்ள மருத்துவமனையில் வைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரையும் கைது செய்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், தாவுஜ் கிராமத்தில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும், 'அம்மோனியம் நைட்ரேட்' என்ற மூலப்பொருள், 350 கிலோ வரை இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.

இது தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின.

டாக்டர் ஷகீலுக்கு கார் கொடுத்து உதவிய பெண் டாக்டர் ஷகீன் என்பவரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதுவரை மூன்று டாக்டர்கள் உள்பட எட்டு பேர் கைதாகியுள்ளனர்.

டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததை அடுத்து, மும்பை, சென்னை உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுகொண்டு இருந்தன. அப்போது, சிக்னலில் நின்ற கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், அருகே நின்றிருந்த சிலகார்களிலும் தீப்பிடித்தது. இதில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா கூறும்போது, 

“மாலை 6.52 மணி அளவில் செங்கோட்டை பகுதியின் கவுரி சங்கர், ஜெயின் கோயில்களுக்கு அருகே மெதுவாக சென்ற  ஹுண்டாய் ஐ20 ரக கார் ஒன்று மெதுவாக வந்து போக்குவரத்து சிக்னல் பகுதியில் நின்றது. இதன் பின்னர் அது வெடித்து உள்ளது.  அரியானா நம்பர் பிளேட் கொண்ட அந்த காரில் 3 பேர் இருந்துள்ளனர்.

கார் ஒன்று சிக்னலில் நின்றுள்ளது. அப்போது அந்த கார் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் அருகே இருந்த கார்கள் 150 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. டெல்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி அமைப்புகள் ஒன்றிணைந்து விசாரணை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, டெல்லி போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகேகடை நடத்தி வரும் ஒருவர் கூறும்போது, ‘‘பயங்கர சத்தத்துடன் கார்கள் வெடித்துச் சிதறி தூக்கிவீசப்பட்டன. பல கி.மீ. தூரம் சத்தம் கேட்டது. கடையில் இருந்த நான் அதிர்வு காரணமாக கீழே விழுந்துவிட்டேன்’’ என்றார்.

நேரில் பார்த்தவர்கள் மிரட்சி!

 சம்பவத்தை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் கூறும்போது, 'என் ஆட்டோவுக்கு முன்பாக, ஒரு கார் நின்று இருந்தது. அந்த காரில் இருந்து ஏதோ ஒரு பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது' என்றார். கார் வெடித்து சிதறிய இடத்திற்கு அருகே கடை நடத்தி வரும் சாந்தினி சவுக் வர்த்தக சங்கத் தலைவர் சஞ்சய் பார்கவ் கூறும்போது, ''வெடி சத்தம் கேட்டதும் ஒட்டுமொத்த கட்டடமும் சில நிமிடங்கள் வரை அதிர்ந்தது. மார்க்கெட் பகுதியில் இருந்த மக்கள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியவில்லை,'' என்றார்.

அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ராஜ்தர் பாண்டே கூறும்போது, “எனது வீடு வரைவெடிப்பின் அதிர்வை உணர முடிந்தது. அந்த பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது’’ என்று தெரிவித்தார். டெல்லி போலீஸார் கூறும்போது, ‘‘காரில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே கார்கள் வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியவரும்’’ என்று தெரிவித்தனர்.

எனினும், சதிச் செயலாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தால் டெல்லி முழுவதும் உச்சபட்ச உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மோடி, அமித் ஷா ஆலோசனை

இந்நிலையில், டெல்லியில் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி,முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். பின்னர், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியஅவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரித்தார். டெல்லிகாவல் ஆணையர் சதீஷ் கோல்சாவையும் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அமித் ஷா கூறும்போது, “டெல்லி செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சிக்னல் அருகே கார் வெடித்துச் சிதறி உள்ளது. இதில் அருகே காரில் சென்றவர்கள், நடைபாதையில் நடந்து சென்றவர்கள் உயிரிழந்துள்ளனர். 10 நிமிடங்களுக்குள் டெல்லி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றுவிட்டனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

பிரதமர், முதல்வர் இரங்கல்

பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘டெல்லி வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ‘டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். டெல்லியில் இருந்து வரும் காட்சிகள் இதயத்தை நொறுக்குகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உஷார்

டெல்லியின் அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், ஹரியானா மட்டுமின்றி, மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மண்டல ஐ.ஜி.க்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை, கோவை, திருச்சி,மதுரை, சேலம், நெல்லை உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடல் வழி பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பல பகுதிகளிலும் நேற்று இரவு தீவிர வாகனசோதனை நடைபெற்றது.

Monday, November 10, 2025

வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இன்று முதல் இயக்கப்படாது - உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

 


பதிவு: திங்கள்கிழமை, நவம்பர் 10, 2025, ஐப்பசி 24, விசுவாவசு வருடம் 06-50: AM

சென்னை,

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளது.

ஆம்னி பஸ்கள் பல்வேறு மாநில விதிமுறைகள் மற்றும் வரி சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனை கண்டித்து லக்சரி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் ஏ.ஜெ.ரிஜாஸ், தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள், ஆபரேட்டர்கள் சங்க தலைவர் ஜெயம் பாண்டியன், சேலம் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் சுரேஷ், கோவை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிராவல்ஸ் சங்க தலைவர் திருமூர்த்தி, புதுச்சேரி பஸ் ஆபரேட்டர்கள் சங்க தலைவர் மதன், கர்நாடகா ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் ஷகீல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பஸ் இயக்க சங்க தலைவர் கிரண் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு சென்ற 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில் தமிழ்நாட்டை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைப்பிடிக்கப்பட்டு ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கடந்த 7 நாட்களாக கர்நாடக போக்குவரத்து துறையும் தமிழக பதிவெண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை தடுத்து ஒவ்வொரு பஸ்சுக்கும் ரூ.2.20 லட்சம் வரை அபராதம் விதித்து மொத்தம் ரூ.1.15 கோடி அபராதம் வசூலித்துள்ளது.

இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் ‘2021-ல் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்'டின்படி தமிழ்நாட்டில் இன்று (நேற்று) வரை அண்டை மாநில பஸ்களுக்கு சாலைவரி வசூலிக்கிறார்கள், எனவே நாங்களும் வசூலிக்கிறோம்’ என தெரிவிக்கிறார்கள். இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக ஆபரேட்டர்கள் இரட்டை வரியும், அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இந்த நிகழ்வை தொடர்ந்து 7-ந் தேதி இரவு 8 மணி முதல் தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறோம்.

இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்பு அடைந்து மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு காலாண்டுக்கு (90 நாட்கள்) தமிழக சாலைவரி ரூபாய் ரூ.1,50,000, ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் சாலை வரி ரூ.90,000 மற்றும் கேரளா, கர்நாடகா சாலை வரி சுமார் ரூ.2 லட்சம் என மொத்தம் காலாண்டுக்கு ரூ.4.50 லட்சம் செலுத்தி பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த பிரச்சினையால் 10-ந் தேதி (இன்று) மாலை 5 மணி முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியாவில் எல்லா விஷயங்களிலும் முன்னோடியாக செயல்படும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவுடன் பேசி அந்த மாநில பஸ்களுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராக பஸ்கள் இயக்க வழிவகையை ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையே ஓடக்கூடிய 600 பஸ்கள் இன்று (திங்கட்கிழமை) மாலை முதல் ஓடாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தமிழகத்திற்குள் ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் இயங்கும்.

பிஹார் 2-ம் கட்ட தேர்தல் - 122 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு - நாளை வாக்குப்பதிவு

 


பதிவு: திங்கள்கிழமை, நவம்பர் 10, 2025, ஐப்பசி 24, விசுவாவசு வருடம் 06-10: AM

பாட்னா,

பிஹாரில் இரண்​டாம் கட்​ட​மாக 122 தொகு​தி​களில் நாளை சட்டப்பேரவை தேர்​தல் நடைபெறுகிறது. இந்த தொகு​தி​களில் நேற்று மாலை​யுடன் பிரச்​சா​ரம் நிறைவடைந்​தது.

பிஹாரில் மொத்​தம் 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. அங்கு இரண்டு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடத்​தப்​படும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. இதன்​படி கடந்த 6-ம் தேதி 121 தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இதில் 65.08 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

இரண்​டாம் கட்​ட​மாக நாளை 122 தொகு​தி​களில் தேர்​தல் நடக்​கிறது. இந்த தொகு​தி​களில் நேற்று மாலை 5 மணி​யுடன் பிரச்​சா​ரம் ஓய்ந்தது. நிறைவு நாளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் முதல்​வர் நிதிஷ் குமார், மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங், உத்தரபிரதேச முதல்​வர் யோகி ஆதித்ய நாத் உள்​ளிட்​டோர் தீவிர வாக்​கு சேகரிப்​பில் ஈடு​பட்​டனர். மெகாகூட்​டணி சார்​பில் ஆர்​ஜேடி மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ், காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் வாக்கு சேகரித்​தனர்.

இரண்​டாம் கட்ட தேர்​தலில் 136 பெண்​கள் உட்பட 1,302 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். வாக்​குப்​ப​திவு ஏற்​பாடு​கள் குறித்து தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் கூறிய​தாவது: 20 மாவட்​டங்​களை சேர்ந்த 122 சட்​டப்​பேர​வை தொகு​தி​களில் நவ.11-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. இந்த தொகு​தி​களில் 3.7 கோடி வாக்​காளர்​கள் உள்​ளனர். இதில் 1.95 கோடி பேர் ஆண்​கள். 1.74 கோடி பேர் பெண்​கள் ஆவர். மூன்​றாம் பாலினத்​தவர்​கள் 943 பேர் உள்​ளனர்.

45,399 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்டுள்​ளன. வாக்​குச்சாவடிகளில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டுள்​ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்​குப்​ப​திவு நடை​பெறும். பதற்​ற​மான வாக்குச்​சாவடிகளில் மட்​டும் மாலை 4 மணிக்கே வாக்​குப்​ப​திவு நிறைவடை​யும். இந்த வாக்​குச் சாவடிகளில் துப்​பாக்கி ஏந்​திய துணை ராணுவ வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக நேபாள எல்லை மூடப்​பட்டுள்​ளது. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

இரண்​டாம் கட்ட தேர்​தல் குறித்து அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: கடந்த 2020-ம் ஆண்டு தேர்​தலின் ​போது 122 தொகு​திகளில் மிக அதி​கபட்​ச​மாக பாஜக 42 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. அதன் கூட்​டணி கட்​சி​யான ஐக்​கிய ஜனதா தளத்​துக்கு 20 தொகு​தி​கள் மட்டுமே கிடைத்​தன. ஆர்​ஜேடி-க்கு 33, அதன் கூட்​டணி கட்​சி​யான காங்​கிரஸுக்கு 11, கம்​யூனிஸ்ட் கட்​சிகளுக்கு 5 இடங்​கள் கிடைத்​தன. ஏற்​கெனவே வெற்றி பெற்ற தொகு​தி​களை தக்க வைக்​க​வும், கூடு​தல்தொகு​தி​களில் வெற்றி பெற​வும் தேசிய ஜனநாயக கூட்​டணி, மெகா கூட்​டணி தலை​வர்​கள் தீவிர பிரச்​சா​ரம் செய்​துள்​ளனர்.

பிஹாரின் சீமாஞ்​சல் பகுதி மக்​கள்தொகை​யில் சுமார் 17 சதவீதம் பேர் முஸ்​லிம்​கள் ஆவர். இவர்​களது வாக்​கு​களைப் பெற மெகா கூட்​ட​ணி - ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் இடையே கடும் போட்டி நில​வு​கிறது. இவ்​வாறு அவர்கள் தெரிவித்​தனர்.

பாதுகாப்பு பணியில் 4 லட்சம் பேர்: இரண்டாம் கட்ட தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிஹார் டிஜிபி வினய் குமார் கூறியதாவது: பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள 7 மாவட்டங்கள் நேபாள எல்லையில் உள்ளன. இதனால், 726 கி.மீ. தூர எல்லை மூடப்பட்டுள்ளது. நேபாளத்தில் இருந்து வரும் வாகனங்கள் பிஹாரில் நுழைய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநில போலீஸார், துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படை உட்பட சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாட்னாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து 122 தொகுதிகளின் வாக்குப்பதிவும் முழுமையாக கண்காணிக்கப்படும்.

முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, November 9, 2025

முகத்தை சிதைத்து கொடூரம் - காரைக்குடி பெண் கொலையில் டிரைவர் கைது

பதிவு: ஞாயிறுக்கிழமை, நவம்பர் 09, 2025, ஐப்பசி 23, விசுவாவசு வருடம் 07-00: AM

காரைக்குடி,

முகம் சிதைந்த நிலையில் காருக்குள் பெண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டிக்குமார். இவருடைய மனைவி மகேசுவரி (வயது 38). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மகேசுவரி நிலம் வாங்கி விற்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகவும், தனக்கு தெரிந்தவர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை ஆர்.எஸ்.பதி காட்டுப்பகுதியில் அவரது காருக்குள் மகேசுவரி கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மகேசுவரியின் காரை அவ்வப்போது, காரைக்குடி இலுப்பைக்குடி லட்சுமிநகரை சேர்ந்த சசிக்குமார் (33) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்றும் அவர்தான் மகேசுவரியை காரில் அழைத்துச்சென்றுள்ளார்.

தலைமறைவாக இருந்த அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மகேசுவரியை கொன்றது அவர்தான் என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்த மகேசுவரிக்கு பணத்தேவை இருந்ததால், அதுபற்றி தன் டிரைவர் சசிக்குமாரிடம் கூறி இருக்கிறார். அதற்கு அவர், தனக்கு தெரிந்த நபரிடம் பெரும் தொகையை வாங்கி மகேசுவரியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் அவர் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே பணம் கொடுத்தவர், அதை திரும்ப கேட்டு சசிக்குமாருக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் சசிகுமார், மகேசுவரியிடம் பணத்தை திருப்பி தருமாறு தெரிவித்து வந்துள்ளார். இந்தநிலையில் காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை காட்டுப்பகுதியில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி விற்பது தொடர்பாக, அந்த இடத்தை பார்ப்பதற்காக காரில் சசிக்குமாரும், மகேசுவரியும் சென்றுள்ளனர். அங்கு வைத்து சசிக்குமார், மகேசுவரியிடம் பணத்தை கேட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த சசிக்குமார், கல்லால் மகேசுவரியின் முகத்தில் அடித்து முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அணிந்து இருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரியவருகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சசிக்குமாரை போலீசார், கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் முதற்கட்டமாக மீட்டனர். மீதம் உள்ள நகையை ஒரு கடையில் அவர் அடகு வைத்தது தெரியவந்தது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக கூறி அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி மகேசுவரியின் உறவினர்கள் நேற்று மதியம் காரைக்குடி பகுதியில், திருச்சி-ராமேசுவரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது - உலகம் முழுவதும் உடனடி அமல்

 


பதிவு: ஞாயிறுக்கிழமை, நவம்பர் 09, 2025, ஐப்பசி 23, விசுவாவசு வருடம் 06-00: AM

வாஷிங்டன்,

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

மேலும், அமெரிக்க விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எச்1பி விசா கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொறியாளர்கள் சேருவதை தடுக்க மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சுற்றுலா விசா, மாணவர் விசா, வணிக விசாவைப் பெற்று அமெரிக்காவில் நுழையும் வெளிநாட்டினர் உடல்நிலையைக் காரணம் காட்டி அமெரிக்காவில் நீண்டகாலம் தங்குகின்றனர். அமெரிக்க அரசின் சுகாதார திட்டப் பலன்களை வெளிநாட்டினரும் பெறுகின்றனர். இதனால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணாகிறது.

இதை தடுக்க, தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து தூதரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், விசா விண்ணப்பதாரர்களின் வயது, நிதி நிலைமை குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன்படி, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் இனிமேல் விசா விண்ணப்பதாரர்களின் உடல்நலப் பாதிப்புகள் குறித்தும், தொற்று நோய் அபாயம் குறித்தும், நிதி நிலைமை குறித்தும் விரிவாக விசாரணை நடத்தும். அமெரிக்காவுக்கு சென்ற பிறகு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டால், அவர்களின் சொந்த செலவிலேயே மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு தரப்பில் எவ்வித உதவியும் வழங்கப்படாது என்பது தெளிவாக எடுத்துரைக்கப்படும். இது தொடர்பாக விசா விண்ணப்பதாரர்களிடம் உறுதிமொழியும் பெறப்படும்.

மருத்துவர்கள் நியமனம்

தற்போதைய சூழலில் பல்வேறு நாடுகளில் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை. எனவே, விசா அதிகாரிகளே, விண்ணப்பதாரர்களின் உடல்நலம் குறித்து விசாரணை நடத்துவார்கள். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அமெரிக்க தூதரகங்களில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

முந்தைய நடைமுறைகளின்படி விசா விண்ணப்பதாரர்களிடம் காச நோய், எச்ஐவி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. இனி அனைத்து நோய்கள் குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வாறு அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய விசா கட்டுப்பாடு குறித்து இந்திய வம்சாவளியினர் கூறியதாவது: அமெரிக்காவில் ஆண்டுதோறும் கிரீன் கார்டு கோரி ஒரு லட்சம் இந்தியர்கள் விண்ணப்பம் செய்கின்றனர். முந்தைய காலத்தில் பலருக்கு கிரீன் கார்டு கிடைத்தது. டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு கிரீன் கார்டு கனவு கலைந்துவிட்டது.

அமெரிக்க அரசின் எச்1பி விசா பெறுவோரில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள். இதை தடுக்க எச்1 பி விசா கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பாதிப்பு இருந்தால் விசா விண்ணப்பத்தை நிராகரிக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டு இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இனி நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள இந்திய மென்பொறியாளருக்கு எச்1 பி விசா கிடைக்காது.அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் மென்பொறியாளர்களில் 3 பேரில் ஒருவர் இந்தியராக உள்ளார். அவர்களை சந்திக்க இந்தியாவில் இருந்து பெற்றோர், மனைவி, பிள்ளைகள் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வந்து செல்வது வழக்கம். இனிமேல் அவர்களுக்கும் அமெரிக்க விசா கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும். அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு இந்திய வம்சாவளியினர் தெரிவித்துள்ளனர்.

வழக்குத் தொடர திட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசின் புதிய விசா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தன்னார்வ தொண்டு அமைப்புகள் திட்டமிட்டு உள்ளன.

Saturday, November 8, 2025

அமைச்சர் நேரு அமைதிக்கு காரணம் என்ன? அமலாக்கத் துறையா?

 


பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 08, 2025, ஐப்பசி 22, விசுவாவசு வருடம் 06-00: AM

தஞ்சாவூர்,

நகராட்சி நிர்வாக துறையில், அலுவலர் மட்ட பணி நியமனத்தில், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யுமாறும் தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

இதனால், அத்துறை அமைச்சரான நேருவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை இந்த விவகாரம் பூதாகரமாகி, பதவிக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காக, சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு சென்று அமைச்சர் நேரு வழிபட்டார்.

இந்நிலையில், தஞ்சாவூரில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், நேற்று நடந்த வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், “பா.ஜ., வெற்றி பெற முடியாது என்ற நிலையில், கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் ஓட்டு திருட்டு.

''அடிமைகளை கையில் வைத்துக் கொண்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் நம்மை வீழ்த்த நினைக்கின்றனர்.

''இந்தியாவில் பிரதமரையே எதிர்க்கும் துணிவு, வேறு எந்த மாநில முதல்வருக்கும் இல்லை.

வெற்றிக்கனி ''பல அரசியல் கட்சிகளும் பா.ஜ.,வுக்கு அடிபணிந்த நிலையில், 'மாநில உரிமையை கட்டிக் காப்போம்' என பிரதமரையே எதிர்த்து வெற்றிக்கனி பறிப்பவர், முதல்வர் ஸ்டாலின்,” என்றார்.

பா.ஜ., மோடி, அமித் ஷா என அமைச்சர் செழியன் வெளுத்து வாங்கிய நிலையில், பா.ஜ., மற்றும் மோடிக்கு எதிராக அமைச்சர் நேரு, எதுவும் பேசவில்லை.

நேரு பேசும்போது, “வாக்காளர் பட்டியலில், சிறுபான்மையினர் ஓட்டுகளை விடுபடாமல் சேர்க்க வேண்டும். சிறுபான்மையினர் ஓட்டு அனைத்தும், தி.மு.,க.,வுக்கான ஓட்டுகள்.

''ஆவணங்கள் இல்லாமல் பிற மாநில வாக்காளர்களை சேர்க்க அனுமதிக்கக்கூடாது. கட்சியினர், கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, தி.மு.க.,வை இரண்டாவது முறையாக வெற்றி பெற செய்ய வேண்டும்,” என்றார்.

'அமலாக்கத் துறையின் நெருக்கடியால், அமைச்சர் நேரு அமைதியாகி விட்டார்' என, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் கூறினர்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...