Wednesday, November 12, 2025

பவளவிழா பாப்பா.. நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா.. விஜய் கடும் தாக்கு

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 12, 2025, ஐப்பசி 25, விசுவாவசு வருடம் 05-30: PM

சென்னை,

அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி என திமுகவை விஜய் மறைமுகமாக சாடியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது.

அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?

ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம்.

நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்கிற அதிகார மயக்க முழக்கம்.

தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர்.

போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?

யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?

ஆட்சியில் இல்லாதபோது ‘தமிழ் தமிழ்’ என்பதும், ‘தமிழர் தமிழர்’ என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?

அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?

பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?

53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?

பவளவிழா பாப்பா - நீ

பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா

நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து

நாடே சிரிக்கிறது பாப்பா.

நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.

எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் - தமிழக அரசு அறிவிப்பு

 


பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 12, 2025, ஐப்பசி 26, விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை,

2026ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமைச்செயலர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 2026ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அரசு துறைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும், சில விடுமுறைகள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கே தனிப்பட்டவையாக பொருந்தும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொது விடுமுறை பட்டியல்

$ ஆங்கில புத்தாண்டு- ஜனவரி 01 (வியாழன்)

$ பொங்கல் - ஜனவரி 15 (வியாழன்)

$ திருவள்ளுவர் நாள்- ஜனவரி 16 (வெள்ளி)

$ உழவர் திருநாள்- ஜனவரி 17 (சனி)

$ குடியரசு நாள் - ஜனவரி 26 (திங்கள்)

$ தைப்பூசம்- பிப்ரவரி 01 (ஞாயிறு)

$ தெலுங்கு வருட பிறப்பு - மார்ச் 19 ( வியாழன்)

$ ரம்ஜான் - மார்ச் 21 (சனி)

$ மகாவீரர் ஜெயந்தி - மார்ச் 31 (செவ்வாய்)

$ வங்கிகள் ஆண்டு கணக்கு - ஏப்ரல் 01 (புதன்)

$ புனித வெள்ளி - ஏப்ரல் 03 (வெள்ளி)

$ தமிழ்புத்தாண்டு - ஏப்ரல் 14 (செவ்வாய்)

$ மே நாள் - மே 01(வெள்ளி)

$ பக்ரீத் - மே 28 (வியாழன்)

$ மொகரம் - ஜூன் 26 (வெள்ளி)

$ சுதந்திர தினம் - ஆகஸ்ட்15 (சனி)

$ மிலாதுநபி - ஆகஸ்ட் 26 (புதன்)

$ கிருஷ்ண ஜெயந்தி - செப்டம்பர் 04 (வெள்ளி)

$ விநாயகர் சதுர்த்தி - செப்டம்பர்14 (திங்கள்)

$ காந்தி ஜெயந்தி - அக்டோபர் 02 (வெள்ளி)

$ ஆயுத பூஜை - அக்டோபர் 19 (திங்கள்)

$ விஜயதசமி - அக்டோபர் 20 (செவ்வாய்)

$ தீபாவளி - நவம்பர் 08 (ஞாயிற்றுக்கிமை)

$ கிருஸ்துமஸ் - டிசம்பர் 25 (வெள்ளி)

தைப்பூசம் மற்றும் தீபாவளி பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

பிஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது யார்? கருத்துக்கணிப்பு விவரம் வெளியீடு

 


பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 12, 2025, ஐப்பசி 26, விசுவாவசு வருடம் 06-00: AM

புதுடெல்லி,

பிஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் அல்லது கூட்டணி யார்? என்ற கருத்துக்கணிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

பிஹார் சட்டசபையின் பதவி காலம் முடிவடைய உள்ள சூழலில், அந்த மாநிலத்தில் நவம்பரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில், பீகாரில் இந்த ஆண்டு சிறப்பு வாக்காளர் திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இது அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) இதனை வரவேற்ற போதிலும், ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணியானது இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. எனினும், நேர்மையுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இந்த சூழலில், 243 தொகுதிகளை கொண்ட பிஹார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற முடிவானது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. இதன் பின்னர், முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு சாவடிகளை கைப்பற்றுதல், சூறையாடுதல் போன்ற பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் நேற்று  காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடந்தது. இதில், நேற்று  மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. டோக்கன் பெற்ற வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் உள்பட இறுதி வாக்கு பதிவு நிலவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், வெற்றி பெறும் கட்சிகளின் நிலவரம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். எனினும், 14-ந்தேதி வெளிவரும் முடிவே இறுதியானது. 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்.

இதில், போல்ஸ்டர் பீப்பிள்ஸ் பல்ஸ்-என்.டி.டி.வி. இந்தியா வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 133-159 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 75-101 இடங்களையும், ஜன சுராஜ் 0-5 இடங்களையும் மற்ற கட்சிகள் 2-8 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

பீப்பிள்ஸ் இன்சைட் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 133-148 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 87-102, ஜன சுராஜ் 0-2, மற்ற கட்சிகள் 3-6 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

மேட்ரிஸ் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 147-167 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 70-90 இடங்களையும், ஜன சுராஜ் 0-5 மற்ற கட்சிகள் 2-8 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

தைனிக் பாஸ்கர் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 145-160 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 73-91 இடங்களையும், ஜன சுராஜ் 0-3 மற்ற கட்சிகள் 5-7 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

பி-மார்க் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 142-162 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 80-98 இடங்களையும், ஜன சுராஜ் 1-4 மற்ற கட்சிகள் 0-3 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

ஜே.வி.சி.-எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 135-150 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 88-103 இடங்களையும், மற்ற கட்சிகள் 3-7 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜன சுராஜ் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

மும்பை மார்க்கெட் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 135-140 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 100-115 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

டெல்லி சட்டா பஜார் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 142-145 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 88-91 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

இதனால், என்.டி.ஏ. கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என்ற வகையில் பரவலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

முதல்-மந்திரி யார்?

இதேபோன்று பீகாருக்கான முதல்-மந்திரியாக விருப்ப தேர்வு செய்யப்பட்டவர்களின் சதவீதமும் வெளிவந்துள்ளது.

இதன்படி, பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்ட முடிவில்,

தேஜஸ்வி யாதவ்: 32%

நிதிஷ் குமார்: 30%

பிரசாந்த் கிஷோர்: 8%

சிராக் பாஸ்வான்: 8%

சாம்ராட் சவுத்ரி: 6%

ராஜேஷ் குமார்: 2%

மற்றவர்கள்: 14%

எந்தெந்த கட்சிகள், எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என கட்சி வாரியாக, பீப்பிள்ஸ் இன்சைட் விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதில்,

என்.டி.ஏ. கூட்டணி:

பா.ஜ.க. 68-72 இடங்கள்

ஐக்கிய ஜனதா தளம் 55-60 இடங்கள்

லோக் ஜனசக்தி - 9-12 இடங்கள்

எச்.ஏ.எம் 1-2 இடங்கள்

ஆர்.எல்.எம். 0-2 இடங்கள்

மகாகத்பந்தன் கூட்டணி:

ராஷ்டீரிய ஜனதா தளம் 65-72 இடங்கள்

காங்கிரஸ் கட்சி 9-13 இடங்கள்

இடதுசாரிகள்- 11-14 இடங்கள்

வி.ஐ.பி. 2-3 இடங்கள்

ஐ.ஐ.பி. 0-0 இடங்கள்

Tuesday, November 11, 2025

‘Evidence’ Kathir Press Meet at Madurai | 7,500 SC/ST atrocities cases a...

BJP Cadres Protest: H.Raja condemns Coimbatore woman’s abduction | S.I.R...

பிஹார் 2-ம் கட்ட தேர்தல் - 122 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 11, 2025, ஐப்பசி 25, விசுவாவசு வருடம் 06-30: AM

பாட்னா,

122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. 20 மாவட்டங்களில் அடங்கி உள்ள இத்தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து பீகார் போலீஸ் டி.ஜி.பி. வினய்குமார் ஒரு பேட்டியில் கூறியதாவது:-

தேர்தல் கமிஷன், மாநில அரசு, போலீ்ஸ் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகளால் முதல்கட்ட தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகின. எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை. தற்போது 2-வதுகட்ட தேர்தலுக்கு முற்றிலும் தயாராகி விட்டோம். போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

நேபாளத்தை ஒட்டிய மாவட்டங்களில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டத்தை யாரும் கையில் எடுக்கவிட மாட்டோம். எந்த அவசரநிலையையும் சமாளிக்க பயங்கரவாத தடுப்பு படை, சிறப்பு அதிரடிப்படை கமாண்டோக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, 14-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும்.

இடைத்தேர்தல்கள்

பீகார் சட்டசபை தேர்தலுடன், ஒடிசா மாநிலம் நுவபடா சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது. பிஜு ஜனதாதளம் எம்.எல்.ஏ. ராஜேந்திர டோலகியா மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது.தெலுங்கானா மாநிலம் ஜூபிளி ஹில்ஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம் காட்சிலா சட்டசபை தொகுதி, காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள நக்ரோடா சட்டசபை தொகுதி ஆகியவற்றிற்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

டில்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்றபோது பயங்கரவாத தாக்குதல் - நடந்தது என்ன? - முழு விவரம்

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 11, 2025, ஐப்பசி 25, விசுவாவசு வருடம் 06-10: AM

புதுடெல்லி,

தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், 2,900 கிலோ வெடிபொருட்கள் சிக்கிய அதே நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் வகையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, சதித் திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் உளவுத் துறை எச்சரித்திருந்தது.

அதே வேளையில் கடந்த அக்டோபர் 19ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பன்போரா, நவ்காம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் மற்றும் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு போஸ்டர்களை ஒட்டியிருந்தது.

அம்மோனியம் நைட்ரேட்

அப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஜம்மு - காஷ்மீர் போலீசார் ஆராய்ந்ததில், 'ஒயிட் காலர்' பயங்கரவாத முறைக்கு பயங்கரவாதிகள் மாறி இருக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

அந்த போஸ்டர்களை ஒட்டியவர் டாக்டர் அடில் அகமது என்பது தெரிந்தது. உத்தர பிரதேசத்திற்கு தப்பிச் சென்ற அவரை, பின் தொடர்ந்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், ஷஹாரன்பூரில் உள்ள மருத்துவமனையில் வைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரையும் கைது செய்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், தாவுஜ் கிராமத்தில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும், 'அம்மோனியம் நைட்ரேட்' என்ற மூலப்பொருள், 350 கிலோ வரை இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.

இது தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின.

டாக்டர் ஷகீலுக்கு கார் கொடுத்து உதவிய பெண் டாக்டர் ஷகீன் என்பவரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதுவரை மூன்று டாக்டர்கள் உள்பட எட்டு பேர் கைதாகியுள்ளனர்.

டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததை அடுத்து, மும்பை, சென்னை உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுகொண்டு இருந்தன. அப்போது, சிக்னலில் நின்ற கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், அருகே நின்றிருந்த சிலகார்களிலும் தீப்பிடித்தது. இதில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா கூறும்போது, 

“மாலை 6.52 மணி அளவில் செங்கோட்டை பகுதியின் கவுரி சங்கர், ஜெயின் கோயில்களுக்கு அருகே மெதுவாக சென்ற  ஹுண்டாய் ஐ20 ரக கார் ஒன்று மெதுவாக வந்து போக்குவரத்து சிக்னல் பகுதியில் நின்றது. இதன் பின்னர் அது வெடித்து உள்ளது.  அரியானா நம்பர் பிளேட் கொண்ட அந்த காரில் 3 பேர் இருந்துள்ளனர்.

கார் ஒன்று சிக்னலில் நின்றுள்ளது. அப்போது அந்த கார் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் அருகே இருந்த கார்கள் 150 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. டெல்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி அமைப்புகள் ஒன்றிணைந்து விசாரணை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, டெல்லி போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகேகடை நடத்தி வரும் ஒருவர் கூறும்போது, ‘‘பயங்கர சத்தத்துடன் கார்கள் வெடித்துச் சிதறி தூக்கிவீசப்பட்டன. பல கி.மீ. தூரம் சத்தம் கேட்டது. கடையில் இருந்த நான் அதிர்வு காரணமாக கீழே விழுந்துவிட்டேன்’’ என்றார்.

நேரில் பார்த்தவர்கள் மிரட்சி!

 சம்பவத்தை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் கூறும்போது, 'என் ஆட்டோவுக்கு முன்பாக, ஒரு கார் நின்று இருந்தது. அந்த காரில் இருந்து ஏதோ ஒரு பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது' என்றார். கார் வெடித்து சிதறிய இடத்திற்கு அருகே கடை நடத்தி வரும் சாந்தினி சவுக் வர்த்தக சங்கத் தலைவர் சஞ்சய் பார்கவ் கூறும்போது, ''வெடி சத்தம் கேட்டதும் ஒட்டுமொத்த கட்டடமும் சில நிமிடங்கள் வரை அதிர்ந்தது. மார்க்கெட் பகுதியில் இருந்த மக்கள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியவில்லை,'' என்றார்.

அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ராஜ்தர் பாண்டே கூறும்போது, “எனது வீடு வரைவெடிப்பின் அதிர்வை உணர முடிந்தது. அந்த பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது’’ என்று தெரிவித்தார். டெல்லி போலீஸார் கூறும்போது, ‘‘காரில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே கார்கள் வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியவரும்’’ என்று தெரிவித்தனர்.

எனினும், சதிச் செயலாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தால் டெல்லி முழுவதும் உச்சபட்ச உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மோடி, அமித் ஷா ஆலோசனை

இந்நிலையில், டெல்லியில் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி,முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். பின்னர், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியஅவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரித்தார். டெல்லிகாவல் ஆணையர் சதீஷ் கோல்சாவையும் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அமித் ஷா கூறும்போது, “டெல்லி செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சிக்னல் அருகே கார் வெடித்துச் சிதறி உள்ளது. இதில் அருகே காரில் சென்றவர்கள், நடைபாதையில் நடந்து சென்றவர்கள் உயிரிழந்துள்ளனர். 10 நிமிடங்களுக்குள் டெல்லி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றுவிட்டனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

பிரதமர், முதல்வர் இரங்கல்

பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘டெல்லி வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ‘டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். டெல்லியில் இருந்து வரும் காட்சிகள் இதயத்தை நொறுக்குகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உஷார்

டெல்லியின் அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், ஹரியானா மட்டுமின்றி, மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மண்டல ஐ.ஜி.க்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை, கோவை, திருச்சி,மதுரை, சேலம், நெல்லை உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடல் வழி பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பல பகுதிகளிலும் நேற்று இரவு தீவிர வாகனசோதனை நடைபெற்றது.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...