Tuesday, November 25, 2025

எஸ்ஐஆர் - வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால்..? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 06-40: AM

சென்னை,

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால், அதற்கான காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதிக்கு பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்ற வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 68,470 பிஎல்ஓக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட 83,256 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் சார்பில் பிஎல்ஏக்கள் 2,45,340 பேர் நியமிக்கப்பட்டு, எஸ்ஐஆர் பணிக்கு உதவி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இவ்வளவு பிஎல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 33,000 தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர்.

இதுவரை 6.16 கோடி படிவங்கள் (96 சதவீதம்) வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீத படிவங்கள், பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன. அதில் 2.59 கோடி படிவங்கள் (40%) கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன.

327 பிஎல்ஓக்கள் தங்கள் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்துள்ளனர். சென்னையில் 96 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டு, 50 சதவீத படிவங்கள் திரும்ப பெற்று, 30 சதவீத வடிவங்கள் கணினியில் ஏற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

வாக்காளர்கள் தங்களால் முடிந்த விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். மீதம் உள்ளவற்றை பூர்த்தி செய்ய பிஎல்ஓக்கள், தன்னார்வலர்கள் உதவுவார்கள். பிஎல்ஓக்களுக்கு அதற்கான செயலிகள் வழங்கப்பட்டுள்ளன.

உரிய விவரங்கள் இல்லை என படிவத்தை கொடுக்காமல் இருந்து விடக்கூடாது. உரிய காரணமின்றி தகுதியான வாக்காளர்கள் ஒருவரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டால், அதற்கான சரியான காரணம், அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஒட்டப்படும். தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இறப்பு, வீடுகளில் இல்லாதவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியவர்கள், இரட்டை வாக்குரிமை வைத்திருப்பவர்கள், படிவத்தை பெற்றுச் செல்லாதவர்கள் அல்லது பூர்த்தி செய்து திருப்பி தராதவர்கள் ஆகிய 5 காரணங்களில் ஏதேனும் ஒரு காரணம் இருந்தால் மட்டுமே பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தெளிவான அறிவுறுத்தல்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4-ம் தேதி வரை மட்டுமே பூர்த்தி செய்த படிவங்களை பெற அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது.

ஒரே தொகுதிக்குள் இருந்தால் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். வேறு தொகுதியில் குடியேறி இருந்தால், அவர்கள் முகவரி மாற்றுவதற்காக படிவம் 8-ஐ தான் கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி - நவம்பர் 27-ல் 'சென்யார்' புயல் உருவாக வாய்ப்பு

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை,

அந்தமான் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி 27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா கூறியதாவது: மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மலேசியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (நவம்பர் 25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவம்பர் 25) குமரிக்கடல், இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதுதவிர, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த 3 சுழற்சிகளும் ஒன்றாக இணைந்து நகர வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை நீடிக்கும். குறிப்பாக, நவம்பர் 25 (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 26, 27-ம் தேதிகளில் தூத்துக்குடி,ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

29-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

30-ம் தேதி திருவள்ளூரில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

23 செ.மீ. மழை கொட்டியது

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 23 செ.மீ., நாலுமுக்கில் 22 செ.மீ., காக்காச்சி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் 21 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 19 செ.மீ., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், புவனகிரி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Monday, November 24, 2025

வங்கக்கடலில் 'சென்யார்' புயல் உருவாக வாய்ப்பு - 11 மாவட்டத்தில் இன்று மழை

 

பதிவு:  திங்கள்கிழமை,  நவம்பர் 24, 2025, கார்த்திகை 08,  விசுவாவசு வருடம் 06-45: AM

சென்னை,

'அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 26 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, அதே மாவட்டம் ஊத்து 25; காக்காச்சி 23; மாஞ்சோலை 21; துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார், குலசேகரன்பட்டினத்தில் தலா 13; துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு 11; காயல்பட்டினம் 10; அதே மாவட்டம் சாத்தான்குளம், தென்காசி மாவட்டம் ஆய்க்குடி மற்றும் செங்கோட்டையில், தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்று காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

இன்று, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம். தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து, நாளை மறுநாளான 26ம் தேதி, புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது.

குமரிக்கடல் மற்றும் நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் இலங்கை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், இன்று பலத்த தரைக்காற்று வீசக்கூடும். தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், வரும் 29 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் இன்று ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு அந்தமான் கடல், வடக்கு அந்தமான் கடல், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று கரைக்கு திரும்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'சென்யார்' என்றால் சிங்கம்

வங்கக்கடலில் அந்தமான் பகுதியில், தற்போது நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, படிப்படியாக வலுவடைந்து, வரும் 26ல் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு உருவாகும் புயலுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் பரிந்துரைப்படி, 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது. அரபு மொழியில், 'சென்யார்' என்றால் சிங்கம் என்று பொருள். எனினும், குமரிக்கடல் பகுதியில் நாளை புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையின் நகரும் திசை, தன்மையை பொறுத்தே புதிய புயல் அமையும்.

மாவட்ட நிர்வாகங்கள் உஷாராக இருக்க 'அட்வைஸ்' தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

'தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் கடலுார், அரியலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், மிதமானது முதல் கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அறிவுத்தப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் துாத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணியினர் திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

“தவெகவினர் தற்குறிகள் அல்ல.. அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி..” - மக்கள் சந்திப்பில் விஜய் பரபரப்பு

 

பதிவு:  திங்கள்கிழமை,  நவம்பர் 24, 2025, கார்த்திகை 08,  விசுவாவசு வருடம் 06-30: AM

காஞ்சிபுரம்,

நான் சும்மா எதையும் சொல்ல மாட்டேன்.. ஒன்னு சொன்னா அதை செய்யாம விட மாட்டேன் என்று மக்கள் சந்திப்பில் விஜய் கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் இன்று தொடங்கி இருக்கிறார்.

முன்னதாக சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்தார். ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:-

நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே நாள் முழுவதும் கண்ணாய் இருந்தார் என்ற எம்.ஜி.ஆர். பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட தலைவரான அறிஞர் அண்ணா பிறந்த இடம்தான் இந்த காஞ்சிபுரம் மாவட்டம். தன்னுடைய வழிகாட்டி என்பதால், தனது கட்சியின் கொடியில் அறிஞர் அண்ணாவை வைத்தார் எம்.ஜி.ஆர்.

ஆனால் அறிஞர் அண்ணா ஆரம்பித்த அந்த கட்சியை, அதன் பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்கள் வேண்டுமானால் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம், ஆனால் நாம் அப்படி இல்லை.

காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணலை கொள்ளையடித்திருக்கின்றனர். இதன் மூலம் சுமார் ரூ.4,730 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

நம்மிடம் பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல் நடிப்பவர்கள் நாம் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? இதை காஞ்சி மண்ணில் இருந்து நான் சொல்வதற்கு காரணம், நமது முதல் களப்பயணம் தொடங்கியதே பரந்தூரில் இருந்துதான். அந்த மக்களுக்காக நாம் கேள்விகளை கேட்டதும் இதே மண்ணில் இருந்துதான். இன்று ஒரு பெரிய மனவேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்சிக்கு நான் வந்திருக்கும் இடமும் அதே காஞ்சிபுரம் மாவட்டம்தான்.

60 வருடத்துக்கு முன்பு கட்டியது தான் காஞ்சிபுரம் பேருந்து நிலையம். இன்னும் அதை புதுப்பிக்கவில்லை. கேட்டால் அந்த இடத்தில் வழக்கு உள்ளது என்பார்கள். அரசாங்கத்தால் வேறு இடத்தில் பேருந்து நிலையம் அமைத்து தர முடியாதா? அவர்களுக்கு மக்கள் குறித்து சிந்திக்க நேரமில்லை. வாலாஜா பாத் அருகில் அவளூர் ஏரி உள்ளது. அங்கு தடுப்பணை கட்ட வேண்டும்.

இதே காஞ்சிபுரத்தில் தான் பரந்தூர் விமான நிலையம் கட்டும் பிரச்சினை உள்ளது. இதில் நாங்கள் விவசாயிகள் உடன் நிற்போம். அதில் சந்தேகம் இல்லை. அரசு இதிலிருந்து தப்பிக்க முடியாது. சட்டசபை தொடங்கி சாதாரண நிகழ்ச்சி வரை தவெகவை தான் ஆட்சியாளர்கள் குறிவைக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்தால்.. வருவோம்.. மக்கள் நம்மை வரவேற்பார்கள்.

நமக்கு எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்காக நாம் எல்லா நல்லதையும் செய்ய வேண்டும், அதையும் சட்டப்பூர்வமாக, மனப்பூர்வமாக, அங்கீகாரத்துடன், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தில்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதனால் தான் மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை கையில் எடுத்தோம்.

நமக்கு கொள்கை இல்லை என்று தமிழக முதல்-அமைச்சர் சொல்கிறார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தத்துவத்தை நமது கட்சியின் அடிப்படை கோட்பாடாக அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? சி.ஏ.ஏ. அறிவிப்பை எதிர்த்த நமக்கு, வக்பு சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா? வக்பு சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா? கல்வியை மாநில பட்டியலுக்கு சேர்க்க கூறியும், அதற்கு இடைக்கால தீர்வு கூறிய நமக்கு கொள்கை இல்லையா? சமத்துவம் சம வாய்ப்பு வழங்க கோரிய நமக்கு கொள்கை இல்லையா?

நீட்டை ஒழித்துவிடுவோம் என்று கதை விடாமல், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொன்னதோடு, அதற்கு ஒரு இடைக்கால தீர்வையும் சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? இவர்கள் மட்டும்தான் எல்லா கொள்கையையும் குத்தகைக்கு எடுத்தது போல் பேசுகிறார்கள். தி.மு.க.வின் கொள்கையே கொள்ளைதான். இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டார்களா?

கட்சி ஒன்றும் சங்கரமடம் இல்லை என சொன்னது யார்? அதை யார் சொன்னார்? எதற்கு சொன்னார்? இப்போது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். அதனால் பவள ​விழா பாப்பா. நீ பாசாங்கு காட்​டாதே பாப்​பா. நீ நல்​ல​வர் போல நடிப்​ப​தைப் பார்த்து நாடே.. (வாய் மூடி சைகை காட்டி சிரிக்கிறார்) .. பாப்​பானு ஆசையா, பாசமா, சாப்ட்டா தான் சொன்னோம். ஆனா அதையே விமர்சனமா எடுத்துக்கிடா எப்படி.. நாங்க இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவே இல்லையே. அதுக்குள்ள அலறுனா எப்படி? அதனால் உங்களின் அரசவை புலவர்கள் இருந்தால், கர்சீப் கொண்டு அவர்கள் கண்ணீரை துடைத்துவிடுங்கள்.

ஆட்சிக்கு வந்தால்... விஜய் வாக்குறுதிகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. வந்தால் என்ன.. கண்டிப்பாக வருவோம்.. தவெக ஆட்சிக்கு வந்தால் பல சீர்திருத்தம் அமலுக்கு வரும். தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை. அனைவருக்கும் நிரந்தரமான வீடு, இருசக்கர வாகனம், வீட்டுக்கொரு பட்டதாரி இருக்கும் வகையில் கல்வி சீரமைப்பு. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு நிரந்தர வருமானம், உண்மையான பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும். சட்டம் - ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்படும்.

மீனவர்கள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கருத்து கேட்டு அதனை செயல்படுத்துவோம். அண்ணா பல்கலைகழகம், கோவை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். இதை செயல்படுத்துவது குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

நாங்கள் கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்று அறிவித்து விட்டு தான் வந்திருக்கிறோம். கரூர் விவகாரம் பத்தி பேசுவோம்னு நினைச்சிருப்பாங்க. அத நான் அப்புறம் பேசுறேன்.

தவெக தொண்டர்களை தற்குறி என்கிறார்கள்.. தவெகவினர் தற்குறிகள் கிடையாது.. தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள்.. அரசியல் மாற்றத்திற்கன அறிகுறி.. இந்த தற்குறிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்துதான் வாழ்நாள் முழுக்க, விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்க அரசியலையே கேள்விக்குறியாக்கப் போறாங்க.. விஜய் எதையும் சொல்ல மாட்டான்.. ஒன்னு சொன்னா அதை செய்யாம விட மாட்டான். ஏன்டா இந்த விஜயை தொட்டோம். ஏன்டா விஜய்கூட இருக்குற இந்த மக்களை தொட்டோம் என நினைச்சு நினைச்சு பீல் பண்ணப் போறீங்க..

இவ்வாறு அவர் பேசினார்.

பதிவேற்றப்பட்ட வாக்காளர்கள் விபரம் இணையத்தில் வெளியீடு

 

பதிவு:  திங்கள்கிழமை,  நவம்பர் 24, 2025, கார்த்திகை 08,  விசுவாவசு வருடம் 05-45: AM

சென்னை,

கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றப்பட்ட வாக்காளர்களின் விபரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, கடந்த 4ம் தேதி முதல் வரும், 4ம் தேதி வரை, வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

இப்பணியில், 68,470 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 6.15 கோடி பேருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு உள்ளது. இது, 95.6 சதவீதம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள், நேற்று வரை 2.59 கோடி பேரிடம் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இது, 40.4 சதவீதம்.

வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கிய கணக்கீட்டு படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டதா என்ற விவரத்தை, தேர்தல் ஆணையத்தின், https://voters.eci.gov.in/login இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதை கிளிக் செய்து, மாநிலத்தை தேர்வு செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டால், கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

Sunday, November 23, 2025

Arjun Sampath says, Vijay - DMK's "Tool Kit" for 2026 elections

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 

பதிவு: ஞாயிறுக்கிழமை,  நவம்பர் 23, 2025, கார்த்திகை 07,  விசுவாவசு வருடம் 05-45: AM

சென்னை,

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் ஒருசில இடங்களிலும், 25 முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவற்றில் ஓரிரு இடங்களிலும், 24-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும், 25-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 12 செமீ, நாலுமுக்கில் 11 செமீ, காக்காச்சி, மாஞ்சோலையில் தலா 9 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 7 செமீ, சிற்றாறு, கன்னியாகுமரி, சிவகங்கையில் தலா 6 செமீ, கடலூர் மாவட்டம் லால்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...