பதிவு: புதன்கிழமை, டிசம்பர் 03, 2025, கார்த்திகை 17, விசுவாவசு வருடம் 04-30: AM
புதுடெல்லி,
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக நீண்ட காலமாக உள்ளது. உலகின் உச்ச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா வந்தார்.
இதனிடையே உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக, புதின் மீது சர்வதேச கோர்ட்டு பிடிவாராண்டு பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்தது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள கடந்த ஆகஸ்டு மாதம் புதின், அலாஸ்கா சென்றார்.
இந்தநிலையில் டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா-ரஷியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷியா அதிபர் புதின், நாளை (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார். 2 நாள் பயணமாக டெல்லி வரும் புதின், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின்னர் பாரம்பரிய விருந்தில் கலந்து கொள்கிறார்.
ரஷிய-இந்திய மாநாட்டின்போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வணிகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த முக்கிய ஆலோசனைகளும் நடைபெற உள்ளன. புதினின் வருகையையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவரது பயணத்தின் போது ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து அதிநவீன எஸ் 500 ஏவுகணைகளை தயாரிப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்திய - ரஷ்ய 23-வது வருடாந்திர உச்சி மாநாடு டிசம்பர் 4, 5-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை டெல்லிக்கு வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புதினும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, அணுசக்தி, தொழில்நுட்பம் குறித்து தலைவர்கள் இருவரும் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணைகளை வாங்க கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரை 3 எஸ் 400 ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியிருக்கிறது. மீதமுள்ள 2 தொகுப்புகள் அடுத்த ஆண்டில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது. அப்போது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது எஸ்-400 ஏவுகணைகள் மிக முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக இந்திய எல்லையில் இருந்து 300 கி.மீ. தொலைவில் பாகிஸ்தான் வான்பரப்பில் பறந்த அந்த நாட்டின் அதிநவீன உளவு விமானம் எஸ் 400 ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக எஸ் 400 ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் டெல்லியில் நேற்று கூறும்போது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது எஸ் 400 ஏவுகணை முக்கிய இடம்பிடிக்கும்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய கூடாது என்று அமெரிக்கா நிர்பந்தம் செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இந்தியா அடிபணியாது. ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்படும். ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணை மூலம் சுமார் 400 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். அதிபர் புதினின் வருகையின் போது இந்த ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
அடுத்தகட்டமாக ரஷ்யாவின் எஸ் 500 ஏவுகணைகளை இந்திய விமானப் படையில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து எஸ் 500 ஏவுகணைகளை தயாரிப்பது குறித்து அதிபர் புதினுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஏவுகணை மூலம் 600 கி.மீ. தொலைவு வரையிலான தரை, வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
ரஷ்யாவிடம் இருந்து எஸ்யு-57 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த போர் விமானங்களுக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்திருக்கிறது. இதன்படி எஸ்யு - 57 போர் விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.
மேலும் ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் விசா இல்லாமல் அந்த நாட்டுக்கு செல்வது குறித்தும் அதிபர் புதினும் பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



