Saturday, December 13, 2025

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM

புதுடெல்லி,

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏதோ தவறு நடக்கிறது' என குறிப்பிட்டு, வழக்கில் உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்த்து பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமிபுரத்தில், செப்டம்பர் 27ல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க, தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.மனு தாக்கல் இதற்கிடையே, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தனி நீதிபதி செந்தில் குமார், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார்.

இது, சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு மாறாக இருந்தது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு, ஒரு நபர் கமிஷனை ரத்து செய்து அக்டோபரில் உத்தரவிட்டது.

மேலும், கரூர் சம்பவத்தை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டதோடு, அதை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டது.

இந்நிலையில், ஒரு நபர் கமிஷன், சிறப்பு புலனாய்வு குழு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடுகையில், ''ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். இது, சி.பி.ஐ., விசாரணையில் தலையிடாது.

''கூட்ட நெரிசல் சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க விதிமுறைகளை வகுக்கவும், பரிந்துரைகளை வழங்கவுமே ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது,'' என்றார்.

இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், எல்லாமே நியாயமாகவும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

நோட்டீஸ் பொதுக்கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எப்படி குற்றவியல் ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம்.

அங்கு ஏதோ தவறு நடக்கிறது. உயர் நீதிமன்றத்தில் நடப்பது எதுவும் சரியாக இல்லை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்க்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

திட்டவட்டம் 

அங்கு வழக்குகளை பட்டியலிடுவது, விசாரிப்பதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்வோம். அதன்பின், மற்ற விஷயங்களை பற்றி விசாரிக் கலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்தி வைத்தனர்.

அதே சமயம், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய இடைக்கால உத்தரவில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என, நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.

விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம் 

கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, சி.பி.ஐ., -- எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீசார் வழங்கிய ஆவணங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் த.வெ.க., தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக, விஜய்க்கு டில்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, December 12, 2025

‘ஜெயிலர் – 2’ படப்பிடிப்பில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

 

பதிவு:  வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12, 2025, கார்த்திகை 26,  விசுவாவசு வருடம் 04-10: PM

சென்னை, 

‘ஜெயிலர்–2’ படப்பிடிப்பு தளத்தில் இன்று தனது 75–வது பிறந்த நாளை நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார்.

வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் ரஜினிகாந்த். அவருடன் இயக்குநர் நெல்சன் உள்பட ஜெயிலர் 2 படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டினர்.

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படையப்பா இன்று ரீ– ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. படையப்பா படத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்த ரஜினியின் ரசிகர்கள், கட்–அவுட்டுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

சென்னை ரோகினி திரையரங்கில் படையப்பா ரீ–ரிலீஸை லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் பார்த்தனர். சென்னை காசி திரையரங்கில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பார்த்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த வீட்டின் முன் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்ததால், அவரை காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின் ரசிகர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், “ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். படையப்பா படம் ரீ-ரிலிஸ் செய்யப்படுவதற்கு வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களை பாதுகாப்பாக வீடு திரும்ப லதா ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

சென்னையில் சாலையில் படுத்து மறியல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: கைது குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றிய போலீசார்

 

பதிவு:  வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12, 2025, கார்த்திகை 26,  விசுவாவசு வருடம் 04-00: PM

சென்னை, 

சென்னை மெரீனா கடற்கரை கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மண்டலங்களிலும் தனியார் மயமாக்கப்பட்டதை கைவிட்டு விட்டு பழைய முறைப்படியே குப்பை அள்ளும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதனால் அம்பத்தூர் மண்டலத்தில் குப்பை அள்ளும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வெளி மண்டலத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை வரவழைத்து பணிகள் செய்யப்பட்டன. இதற்கிடையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அண்ணா தி.மு.க., த.வெ.க. நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த போராட்டம் 13வது நாளை கடந்த நிலையில் சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் கட்டிடத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வரும் துப்புரவுத் தொழிலாளர்களை வெளியேற்றுமாறு சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் 100 நாட்களையும் கடந்து நீடித்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் அருகே ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் குவிந்தனர். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு குவிந்திருந்த போலீசார் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்த செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டமாக குண்டுகட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது பரபரப்பாக காணப்பட்டது. மேலும் போராட்டத்தால் காமராஜர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைமைச் செயலகம் முன்பு போராட்டம்

இதற்கிடையில், சென்னை தலைமையகம் முன்வு 30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தப்படுத்த முயன்றனர். ஆனால் போரட்டக்காரர்கள் தரையில் படுத்துக் கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Thursday, December 11, 2025

திமுகவில் இணைந்தது ஏன்? - பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி

 

பதிவு: புதன்கிழமை,  டிசம்பர் 11, 2025, கார்த்திகை 25,  விசுவாவசு வருடம் 02-00: PM

சென்னை,

நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என்று பி.டி.செல்வகுமார் கூறினார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பி.டி.செல்வக்குமார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

அதன்பின்னர் பி.டி.செல்வக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விஜய் மக்கள் இயக்கத்துக்கு தூணாக செயல்பட்டேன்; விஜயின் கட்சிக்கு புதிதாக வந்தவர்களால் எங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தவெகவில் விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு முக்கியத்துவம் இல்லை. திமுகவின் கட்டமைப்பு என்னை ஈர்த்ததால் அக்கட்சியில் சேர்ந்தேன்; நான் உருவாக்கிய கலப்பை மக்கள் இயக்கத்தை திமுகவில் இணைத்துவிட்டேன்.

நிலவு ஒருநாள் அமாவாசையாகும்... நட்சத்திரம் 15 நாட்களுக்குள் இல்லாமல் போகும்.. அதுபோல அவரும் ஒரு நாள்... எனக்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார். நிர்மல் குமார், ஆனந்த், ஆதவ் எல்லாம் எப்போது ரசிகர் மன்றத்தில் இருந்தார்கள்.

மக்களையும், ரசிகர்களையும் விஜய் சரியாக வழிநடத்த வேண்டும். மக்களுக்கு முறையாக விஜய் சேவை செய்வாரா என தெரியவில்லை. ஆனால் எனக்கு மக்கள் பணி செய்யவேண்டும். என் உயிர் உள்ளவரை மக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவில் இணைந்த கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் விவரம்:-

கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் தோப்பூர் வி.அனிதா, மாவட்ட பொருளாளர் விஸ்வை கே.சந்திரன், கலப்பை மக்கள் இயக்க கௌரவ ஆலோசகர் விஜயன், மாநில துணைத் தலைவர் நந்தகுமார், மாநிலச் செயலாளர் எம்.ராஜ்குமார், மாநில இளைஞர் அணிச் யெலாளர் ஜே.ரவிமுருகன், மாநிலப் பொறுப்பாளர் நாகர்கோவில் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணித் த்லைவர் ஜி.சுபின்ஆனந்த், மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் வி.செல்வன்.

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஏசுதாசன், ஒன்றியச் செயலாளர் டி.ஜெகன், மாவட்ட ஐடி விங் பொறுப்பாளர் ஜி.செந்தில், மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர் கௌதம், சமூக சேவகர் சொர்ணப்பன், திரைப்படத் தயாரிப்பாளர் - இயக்குநர் விஷ்ணுஹாசன், நடிகர் விஜயபாலாஜி, மகளிர் அணி பொறுப்பாளர் லெட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

DMK 100 times more powerful than Amit Shah DMK will remain in power with...

Wednesday, December 10, 2025

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: இந்திய அணி அபார வெற்றி

 

பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 10, 2025, கார்த்திகை 24,  விசுவாவசு வருடம் 06-00: AM

கட்டாக் ,

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும் (28 பந்துகள்), ஜிதேஷ் சர்மா 10 ரன்களுடனும் (5 பந்துகள்) களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், லுதோ சிபாம்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரது 2-வது ஓவரில் ஸ்டப்ஸ் 14 ரன்களில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரம் (14 ரன்) சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் போல்டானார். தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் கைப்பற்றி கடும் நெருக்கடி கொடுத்தனர். பின்னர் வந்த டேவிட் மில்லர் (1 ரன்), டோனோவன் பெரீரா (5 ரன்கள்), மார்கோ ஜான்சன் (12 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் 74 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அசத்தலாக பந்துவீசிய இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக், துபே மற்றும் அக்சர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Tuesday, December 9, 2025

“திமுகவை நம்பாதீர்கள் - அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்” - புதுச்சேரியில் விஜய் பேச்சு

 

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 09, 2025, கார்த்திகை 23,  விசுவாவசு வருடம் 01-00: PM 

 புதுச்சேரி,

விஜய் வருகை தந்த நிலையில் கூட்டம் இல்லாததால், பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பிரசார வாகனத்தில் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானதற்கு பிறகு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழகம் போல் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில், புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் வாகனத்தில் நின்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க. இந்த ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி மாநிலம், புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என்று இருப்பார்கள். நாம் வேறு வேறு கிடையாது. நாம் ஒன்றுதான். எல்லோரும் சொந்தம்தான். நாம் பார்க்கும்போது பாச உணர்வு, அதுமட்டும் இருந்தால் போதும். உலகில் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் நம் உயிர்தான். பாரதியார் இருந்த மண். பாரதிதாசன் பிறந்த மண்.

1977-ல் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சி அமைத்தார். 1974-ல் புதுச்சேரியில் அவரது ஆட்சி அமைந்தது. அவர்கள்தான் அலெட் செய்தனர். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க முடியுமா?.

புதுச்சேரி மக்கள் 30 ஆண்டுகளாக தாங்கி பிடிக்கிறீர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன்.

அது எனது கடமையும்கூட.

புதுச்சேரி அரசாங்கம் தமிழகத்தில் உள்ள திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியாக வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு நடந்து கொள்கிறது. புதுச்சேரி முதல்வருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள். வரப் போகின்ற தேர்தலில் அவர்கள் 100% கற்றுக் கொள்வார்கள். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

புதுவை அரசு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எந்த விஷயத்திலும் கண்டு கொள்ளவில்லை என்பது மக்களுக்கே தெரியும். மாநில அரசு கோரிக்கை மட்டுமா அவர்கள் கண்டு கொள்ளவில்லை? இங்கு வளர்ச்சி ஏற்பட அவர்கள் துணை நிற்கவில்லை என கேள்விப்படுகிறோம். புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பலமுறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள், பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அவர்கள் எதையுமே செய்யவில்லை. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது. இது குறித்து யார் பேசினாலும் அவர்களின் காதுகளில் விழவே இல்லை. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடாது. இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத இடம் புதுச்சேரிதான். ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்.

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டில் ஒரு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் 200 நாட்களாகியும் இன்னும் அந்த பதவிக்கு யாரும் அமர்த்தப்படவில்லை. இந்த செயல் சிறுபான்மை மக்களை அவமதிப்பதாக அம்மக்களே சொல்கிறார்கள்.

புதுச்சேரியின் முக்கிய அங்கமாக உள்ள காரைக்கால், ஏனாம் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என அப்பகுதி மக்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். காரைக்கால் பகுதிகள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி கிடையாது. இவை அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி-கடலூர் மார்க்கத்தில் ரயில் திட்டத்தை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால் புதுச்சேரி, மத்திய நிதி குழுவில் இடம் பெறவில்லை, அதனால் மாநிலங்களுக்கான நிதி பகிர்கள் அடிப்படையிலும், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி பகிர்வு அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு தோராயமாக மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. இந்த நிதியும் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய தொகை உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்கே சென்று விடுகிறது.

மற்ற தேவைகளுக்கு வெளி சந்தையில் கடன் பத்திரங்களை கடன் வாங்குகிறது புதுச்சேரி. இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும். புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாத காரணத்தினால் வெளியே கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. புதுச்சேரியின் கடனை குறைத்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது, தொழில் வளர்ச்சியும் தேவை. புதுச்சேரியை தென்னிந்தியாவின் முன்னணி இண்டஸ்ட்ரியல் ஹப்பாக மாற்ற எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

மீன் பிடிக்க செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்கிறது. அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது.

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் குரல் கொடுப்பான். வரவிருக்கும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்... வெற்றி நிச்சயம் ”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...