Thursday, December 25, 2025

கிறிஸ்துமஸ் பண்டிகை - தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

 

பதிவு:  புதன்கிழமை,  டிசம்பர் 25, 2025, மார்கழி 10, விசுவாவசு வருடம்,  04-00: PM

சென்னை,

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. ஸ்டார்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றதால் அதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கரைபுரண்டது. மக்கள் ஒருவொருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு முழுக்க கூடுதல் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட உள்ளனர்.

சென்னை சாந்தோமில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க புனித தோமையார் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கனக்கான கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்று உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.மேலும், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் குறிப்பாக சென்னை சாந்தோம் புனித தோமையார் தேசிய தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 25 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது.

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பகிர்ந்தளிக்கப்பட்டது .சமய வேறுபாடுகளைக் கடந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தெரிவித்தார்

இதே போல் சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பேராலயத்தில் அருட்தந்தை தீபக் அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

வேளாங்கண்ணி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று விடியற்காலை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வேளாங்கண்ணி விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார். அதனைத்தொடர்ந்து பங்கு தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்கு தந்தைகள் திருபூஜகளை நடத்தினர். அந்த திருப்பலிகள் நிறைவில் ஏசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை ஏசு சொரூபத்தை பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு, குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.

இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Tuesday, December 23, 2025

பாகுபலி ராக்கெட்டுக்கான 24 மணிநேர கவுண்ட்டவுன் - இன்று தொடங்குகிறது

 

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 23, 2025, மார்கழி 8, விசுவாவசு வருடம்,  06-00: AM

சென்னை,

ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் , ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் ஏவுகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட‘புளூபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்குகிறது.

Monday, December 15, 2025

“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ் என்று எதிரிகள் புலம்புகிறார்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

                                       

பதிவு:  திங்கட்கிழமை, டிசம்பர் 15, 2025, கார்த்திகை 29,  விசுவாவசு வருடம் 04-00: AM

திருவண்ணாமலை,

“உதயநிதி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார். கொள்கை எதிரிகள், “உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று புலம்புகிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு திமுக இளைஞரணி தலைவரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இம்மாநாட்டில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 1.30 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “எதிரில் இருக்கும் உங்களைப் பார்க்கும்போது, ஒரு ஐம்பது ஆண்டுகள் டைம்-டிராவல் செய்து பின்னால் சென்றது போன்று எனக்கு இருக்கிறது. உங்களைப் போன்ற இளைஞனாக கிராமம் கிராமமாகத் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, இந்த இளைஞரணியை வளர்த்தெடுத்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது. எத்தனை ஞாபகங்கள்? இரவு பகல் பார்க்காமல், தூக்கம் இல்லாமல், கிராமங்கள்தோறும் கொடி ஏற்றம், திண்ணை பிரச்சாரம், நாடகம், பொதுக்கூட்டம் எனக் கழக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். அப்படி உழைத்து, வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட கழகத்திற்கு, புது இரத்தமாக வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது - புது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பிறக்கிறது! அதுமட்டுமல்ல, உங்களுடைய எனர்ஜி எனக்கும் ‘டிரான்ஸ்பர்’ ஆகியிருக்கிறது. இந்த மாபெரும் இயக்கத்தைப் பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது, அவருக்கு வயது, 40. கலைஞருக்கு 25 வயதுதான். பேராசிரியர், நாவலர் என்று பலரும் அவர்களின் இருபதுகளில்தான் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் எப்படி ஃபயராக இருந்தார்கள் என்பதற்கு, ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்.

1941-இல் கலைஞர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவுக்கு, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனிடம் இருந்து, ஒரு வாழ்த்துப்பா வந்தது. அந்த வாழ்த்துப்பாவில் புரட்சிக்கவிஞர் எழுதிய வரிகள்தான் “கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக்கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை!” இந்த வரிகளைக் கேட்கும்போதே, அந்த இளைஞர்கள் எப்படி ஃபயராக இருந்திருப்பார்கள் என்று உங்களுக்குப் புரியும்! அந்த ஃபயர்பிராண்ட்-தான், நம்முடைய திமுக.

எது எதெல்லாம் இந்த தமிழ்ச் சமுதாயத்தைப் பின்னுக்கு இழுக்குமோ. எது எதெல்லாம் தமிழ்நாட்டை இருட்டிற்குள் தள்ளுமோ அது எல்லாவற்றையும் எதிர்த்து, தோற்கடித்து, புது வரலாறு படைத்தோம். சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இங்கு எதையும் செய்துவிடவில்லை. தெருத்தெருவாக வீடு வீடாக சென்று பேசி, டீக்கடையையும் சலூனையுமே, அரசியல் மேடைகளாக மாற்றி, மக்களை எஜுகேட் செய்தோம். உலக வரலாற்றையெல்லாம் சொல்லி, நாம் ஏன் இன்னும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்று எடுத்துச் சொல்லி, மக்களுக்குள் நல்ல மாற்றத்திற்கான விதையை, சிந்தனையாக விதைத்தார்கள்.

அண்ணா பேசுகிறார்… கலைஞர் பேசுகிறார்… நாவலர் பேசுகிறார்… பேராசிரியர் பேசுகிறார் என்று சொன்னால், மக்களும் குடும்பம் குடும்பமாக வந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார்கள். அவர்கள் பேச்சில் சொன்னதையெல்லாம், மக்கள் அவரவர்களின் ஊரில் எடுத்துச் சொன்னார்கள். திராவிட இன உணர்வை வளர்த்தார்கள். தமிழை நசுக்க வந்த இந்தி ஆதிக்கத்தை விரட்டினார்கள்.

இப்போது அந்த பணியைத் தம்பி உதயநிதியிடமும், உங்களிடமும் ஒப்படைத்திருக்கிறோம். அவரும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார். கொள்கை எதிரிகள், “உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று புலம்புகிறார்கள்.

அந்த அளவிற்குக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார். கழகத்திற்கு எது தேவை என்று, உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி. முதலில், அணியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று லட்சக்கணக்கான இளைஞர்களைக் கழகத்தில் சேர்த்தார். அடுத்து, அவர்களை கொள்கை ரீதியாக ஸ்டாராங் ஆக்க வேண்டும் என்று பாசறைக் கூட்டங்கள் நடத்தினார். அடுத்து, நம்முடைய கொள்கைகளை இன்றைக்கு இருக்கும் தலைமுறையினரும் புரிந்துகொள்ள, புது பேச்சாளர்கள் அவசியம் என்று உணர்ந்து, ஃபர்ஸ்ட் செட்டில் இருநூறு பேரை உருவாக்கியிருக்கிறார். அவர்களின் பேச்சையெல்லாம், கழக மேடைகளில் கேட்கும்போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்போது நம்முடைய தோளில், தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும் காக்க வேண்டிய கடமை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவையும் நாட்டின் பன்மைத்துவத்தையும் காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிராக கருத்தியல் போர் செய்துகொண்டு இருக்கும் ஒரே மாநிலக் கட்சி, திமுகதான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது, நம் தமிழ்நாட்டை மட்டும்தான். அதனால்தான் அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல். அண்மையில் கூட, என்ன பேசினார்? பீகாரை ஜெயித்துவிட்டோம், “அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார்!

அமித்ஷா அவர்களே. நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. இது தமிழ்நாடு! எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே. அன்புடன் வந்தால், அரவணைப்போம். ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம். எதிர்த்து நிற்போம். உங்களை ஜெயித்துக் காண்பிப்போம்.

அரசியலில் சொகுசு எதிர்பார்க்காதீர்கள். இங்கு கடுமையாக உழைப்பவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும். அந்த இடம், கட்சிப் பொறுப்பில் மட்டுமல்ல; மக்கள் மனதிலும் நிரந்தரமாக இருக்கும். பேரறிஞர் அண்ணா , கலைஞரின் உழைப்பை பாராட்டினார். கலைஞர் என்னைப் பற்றி சொல்லும்போது “உழைப்பு… உழைப்பு… உழைப்பு” என்றுதான் சொல்வார். இப்போது நானும் தம்பி உதயநிதி அவர்களின் உழைப்பைப் பார்க்கிறேன். அதே உழைப்பைத்தான் உங்களிடமும் எதிர்பார்க்கிறேன். அந்த உழைப்புக்கு இளைஞரணிப் படை தயாரா?

கடந்தகால ஆட்சியாளர்கள், செய்த தவறுகளை, குற்றங்களை, துரோகங்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்கள் மீண்டும் வந்தால், தமிழ்நாடு என்னென்ன ஆபத்துகளைச் சந்திக்கும் என்று மக்களிடம் சொல்லுங்கள். நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்குத் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கும், நம்முடைய திட்டங்களைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள். நான் உறுதியோடு சொல்கிறேன், நாட்டில், ஏன் உலகத்திலேயே எந்த ஆட்சியும் நாம் செய்திருக்கும் அளவிற்கு முத்திரைத் திட்டங்களைச் செய்திருக்க மாட்டார்கள்.

நீங்களே பார்த்திருப்பீர்கள்… நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடைபவர்களின் பேட்டிகளை, பல்வேறு ஊடகங்கள் வெளியிடுகிறார்கள். அப்படி, பேட்டி அளித்த ஒரு தாய் பேசினார்கள். தன்னுடைய பிள்ளைகள் பணம் அனுப்பவில்லை என்றாலும், தனக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்க, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உதவியாக இருக்கிறது என்று சுயமரியாதை உணர்வுடன் பேசினார்கள்.

2026 தேர்தலில், மக்கள் முன்னால் இருக்கும் கேள்வி என்ன என்றால், “இன்னும் ஐம்பது ஆண்டுகள் முன்னோக்கி நடைபோட போகிறோமா? இல்லை. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா?” அந்தக் கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகும் விடை: “திராவிட மாடல் ஆட்சி 2.0” அதற்கு நீங்கள் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஏன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழினத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. அந்த எதிர்காலம், வளம் நிறைந்ததாக, ஒளி நிறைந்ததாக தமிழ்நாடு நம்பர் ஒன் என்று சிங்கநடை போடுவதாக அமைய வேண்டும். நீங்கள்தான் திராவிட மாடல் 2.0 அடித்தளமாக, இருக்க வேண்டும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

 

பதிவு:  திங்கட்கிழமை, டிசம்பர் 15, 2025, கார்த்திகை 29,  விசுவாவசு வருடம் 02-30: AM

தர்மசாலா,

முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அபிஷேக் சர்மா அதிரடியாக தொடங்கினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 117 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மார்கரம் 61 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அபிஷேக் சர்மா அதிரடியாக தொடங்கினார். மறுமுனையில் சுப்மன் கில் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

வெறும் 4.1 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களை கடந்து அசத்தியது. முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்களில் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அபிஷேக் சர்மா 35 ரன்களில் (18 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மா களமிறங்கினார்.

முந்தைய போட்டிகளில் சொதப்பிய சுப்மன் கில் இந்த ஆட்டத்தில் பொறுப்பாக ஆடினார். திலக் வர்மா , கில் இணைந்து நிலைத்து விளையாடினர்.கில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் அடித்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Sunday, December 14, 2025

புதிய கட்சி தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்?

 


பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 07-00: PM

சென்னை,

அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் ஓபிஎஸ் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை கழகமாக மாற்றி இருக்கிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வரும் அவர், அதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை துவங்கி செயல்பட்டு வந்தார்.

எப்படியும் அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டு விடுவது என்ற முனைப்பில் இருந்த ஓபிஎஸ், அதில் எவ்வித முன்னேற்றத்தையும் அடையாத நிலையில் இருந்தார். தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த அவர், டிசம்பர் 15ல் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து புதிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்து இருந்தார்.

பின்னர் அந்த கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்து, டிசம்பர் 24ல் எம்ஜிஆர் நினைவு தினத்தில் தமது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்கி உள்ளார். தான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருக்கிறார்.

ஆனால் தமது அமைப்பை கட்சியாக மாற்றி உள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மாறாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் ஊழியர்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இதுநாள் வரையில், அமைப்பின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வந்த அவர், முதல் முறையாக அமைப்பை கழகமாக மாற்றி அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிக்கையில் கட்சி தலைவர், பொதுச் செயலாளர் யார் என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை.

எப்போதும் போல கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் என்று தமது பொறுப்புகளை குறிப்பிட்டு கையெழுத்தை மட்டும் ஓபிஎஸ் இட்டுள்ளார். தமது கட்சியை அவர் முறைப்படி தேர்தல் கமிஷனில் பதிவு செய்துவிட்டாரா என்பது குறித்தும் எவ்வித தகவல்களும் இல்லை.

இதற்கு முன்னர் கடந்த 14ம் தேதி தான் நடத்தி வரும் அமைப்பின் பெயரில் கடைசியாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் தலைமைக் கழகம், 154, பசுமை வழிச்சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,சென்னை-600028 என்ற முகவரி இடம்பெற்று இருந்தது.

தற்போது அமைப்பை கழகமாக மாற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் முகவரி மாறி இருக்கிறது. இதில் தலைமைக்கழகம், 38/31, 38/2, சேமியர்ஸ் ரோடு, நந்தனம், சென்னை- 600035 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், இரண்டு அறிக்கையிலும் 93423 14327 என்ற செல்போன் எண் மட்டும் மாறாமல் இடம்பெற்றுள்ளது.

ஜனவரி 13–ந் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் - விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாடுகிறார் - 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

 

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 05-00: PM

புதுடெல்லி,

பிரதமர் மோடி தமிழக விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் இந்த கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையும் அதிமுக கூட்டணியில் இணையுமாறு பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

3 நாட்கள்

இந்நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை மையமாக கொண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் அவர் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார். 

அதன்படி, ஜனவரி 13ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி ராமேசுவரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ என்ற முழக்க சுற்றுப்பயணத்தின் நிறைவாக புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், 14ம் தேதி பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் பிரதமர் மோடி கொண்டாட உள்ளார்.

கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை

இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தேர்தல் பணிகள், வியூகங்கள் தொடர்பாகவும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

 

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 05-00: AM

சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் டிச.4-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படிவம் விநியோகம், பூர்த்தி செய்து திரும்ப பெறுவது போன்றவற்றில் சிக்கல்கள் எழுந்தது மற்றும் பருவமழை உள்ளிட்ட காரணங்களால், அவகாசத்தை நீட்டிக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று, எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கும் அவகாசம் டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

டிசம்பர் 16-ல் வரைவு வாக்காளர் பட்டியலும், பிப்ரவரி 14-ல் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டது. படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியும் தொடர்ந்து நடந்தது.

கடந்த 11-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் விநியோகிக்கும் பணி, பூர்த்தி செய்து பெற்ற படிவங்களை பதிவேற்றும் பணி 100 சதவீதம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படிவம் விநியோகம், திரும்பப் பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகளுக்கான அவகாசத்தை டிசம்பர் 14 வரை மேலும் 3 நாட்கள் நீட்டித்து தேர்தல் ஆணையம் 11-ம் தேதி மாலை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, படிவத்தை பூர்த்தி செய்துசமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம் தேதி வெளியாகும். அன்று முதல், ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லதுஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அதன்பின், அவற்றின் மீது பரிசீலனை நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கணக்கீட்டுப் படிவத்துக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதிவாக்காளர் பட்டியல் பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றுமட்டுமே தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது. சரியான தேதி குறிப்பிடப்படவில்லை.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...