Friday, January 2, 2026
Dharmendra Pradhan visits Meenakshi Amman Temple | Education Minister | ...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விவகாரம் - தலைமைச் செயலகத்தில் போராட்ட கூட்டமைப்புகளுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 02, 2026, மார்கழி 18, விசுவாவசு வருடம் 02:00 AM
சென்னை,
ஜனவரி 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று (வெள்ளி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது முழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறையின்செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு, ஜாக்டோ-ஜியோ, தலைமைச் செயலக சங்கம், ஆசிரியர்கள் சங்கம் உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கடந்த அக்டோபரில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ, போட்டோ ஜியோ உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை டிச.22-ம் தேதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் அழைத்துப் பேசினர்.
ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என சங்கங்கள் அறிவித்தன. பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் குழுசரிவர நடத்தவில்லை எனவும் சங்கங்கள் குற்றம்சாட்டின. இந்தச் சூழலில் ககன்தீப் சிங்பேடி குழு தனது இறுதி அறிக்கையை டிச.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கை தொடர்பாகஅமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அமைச்சர்கள் குழு, ஜாக்டோ-ஜியோ,போட்டோ-ஜியோ நிர்வாகிகளு டன் தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்காக அந்த சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக போட்டோ-ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவருமான டி.அமிர்தகுமார் கூறும்போது, ‘‘வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளையும், காலை 11.30 மணிக்கு எங்கள்கூட்டமைப்பின் நிர்வாகிகளையும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என்பதில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உறுதியாக உள்ளனர். எங்களை போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளாமல் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.
திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் உறுதி அளித்துள்ளன. தற்போது ஓய்வூதியம் குறித்து தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதால், அதை போராட்டம் அறிவித்துள்ள கூட்டமைப்புகளுக்கு தெரிவிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்த கூட்டமைப்புகளுக்கு பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு தரப்பில் இருந்து போன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும். அதை ஏற்றுக்கொள்வதா? அல்லது மறுப்பதா? என்பது குறித்து கூட்டமைப்புகள் முடிவெடுத்து அறிவிக்கும். 6-ந் தேதி நடத்துவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்பது அதன் பின்னர் தெரிய வரும்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, January 1, 2026
பிறந்தது 2026 - நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்! - Happy New Year 2026
பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 1, 2026, மார்கழி 17, விசுவாவசு வருடம் 02:00 AM
சென்னை,
புத்தாண்டையொட்டி சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புதிய ஆண்டை கொண்டாடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. முன்னதாக 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வந்தநிலையில், நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். முன்னதாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்திருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் மெரினா காமராஜர் சாலை, அண்ணாசாலை, வடபழனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 19,000 போலீஸார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர் உட்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் 425 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகனப் பந்தயங்களைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கிய இடங்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.
புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 'சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டதையொட்டி மாலை முதலே இந்த பகுதியில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. புத்தாண்டை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர்.
இந்நிலையில் சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகமாக குரல் எழுப்பியபடியும், கைகளை குலுக்கியும் புத்தாண்டை வரவேற்றனர். வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். இதேபோல, விதவிதமான வகைகளில் கேக்குகளை கொண்டுவந்து அதை வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர், அருகில் இருந்தவர்களுக்கும் கேக்குகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனால், மெரினா காமராஜர் சாலையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இதேபோல, மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் மெரினா காமராஜர் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம், சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே லேசான சாரல் மழை பொழிந்து, மக்களின் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டது. சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, புதுச்சேரி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி உள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, December 31, 2025
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பதிவு: புதன்கிழமை, டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம் 11:40 AM
சென்னை,
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!
புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு திராவிடப் பொங்கல் களைகட்டட்டும்!
உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
தூய்மைப் பணியாளர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு ‘மறுப்பது’ ஏன்?
பதிவு: புதன்கிழமை, டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம் 02:40 AM
சென்னை,
2026, ஜனவரி 20-ம் தேதி, ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கூடுகிறது. இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், சட்டம் - ஒழுங்கு விவகாரம் என்று தமிழக அரசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன பிரச்சினைகள்.
“தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சியை கவனிப்பதா? ஆட்சிக்கு ‘செக்’ வைக்கும் போராட்டங்களில் தலையிடுவதா என திண்டாடும் திமுக, மனசாட்சியோடு கவனிக்க வேண்டிய ஒன்று, கடைநிலை ஊழியர்களான தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம்” என்று பொதுவெளியில் கூட பரவலான பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன.
அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணிகளை நிர்வகிப்பது தனியார்மயம் ஆக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தால் அந்தப் பணிகள் நிரந்தரம் செய்யப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
வாக்குறுதி எண் 285
‘தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வுதியம் சம்பந்தமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்’ என வாக்குறுதி எண் 285-ல் திமுக தெரிவித்திருந்தது. அதனால் தான் ”சொன்னது என்னாச்சு?” என்று அரசுக்கு கேள்வி கேட்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக அரசியல் செய்யும் தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை குரல் கொடுக்கின்றனர்.
ஆகஸ்டில் அதிரவைத்த போராட்டம்
கடந்த ஆகஸ்ட் மாதம் ‘தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு 10 நாட்களுக்கும் மேலாக நடத்திய போராட்டம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 11 மண்டலங்களுக்கான திடக்கழிவு மேலாண்மை சார்ந்த பணிகள் கடந்த அதிமுக காலத்திலேயே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய இரண்டு மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ‘சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் லிமிடெட்’ என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்குத் தேவைப்படும் 3,809 தூய்மைப் பணியாளர்களில் ஏற்கெனவே தற்காலிகப் பணியாளர்களாக இருக்கும் 2,034 பேருக்கு முன்னுரிமை அளித்து எடுத்துக்கொள்வதாக அந்நிறுவனம் கூறியது.
எனினும், இந்தத் தொழிலாளர்கள் பெற்ற ஊதியமான ஏறக்குறைய ரூ.23,000 என்பது இனி ரூ.16,000 ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 12 நாள் தற்செயல் விடுப்பு, 12 நாள் ஈட்டிய விடுப்பு, தேசிய விடுமுறையின்போது வேலை செய்தால் இரண்டு மடங்கு ஊதியம், ரூ.11.52 லட்சம் மதிப்பில் விபத்துக் காப்பீடு போன்றவை அவர்களுக்கு முன்வைக்கப்பட்டாலும், ஊதியக் குறைப்பு என்பதை தூய்மைப் பணியாளர்கள் கடுமையாக எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ஆனால், அவர்களை நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது செய்தது காவல் துறை. நீதிமன்ற வழக்குகள் மூலம் அவர்களுக்கு ஊதியம் குறைக்கப்படக் கூடாது என்ற தீர்ப்பு வெளியாகி சிறு ஆறுதலாக அமைந்தது.
கேட்டது என்ன? கொடுக்கப்பட்டது என்ன? - ஆனாலும் கூட அரசு பணி நிரந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மாறாக, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு, தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால், நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவி, தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தினர் சுய தொழில் தொடங்கும்போது அத்தொழில் திட்ட மதிப்பீட்டில் 35% தொகை அதிகபட்சமாக ரூ.3,50,000 மானியம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக புதிய உயர்கல்வி உதவித் தொகை, தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் என 6 அறிவிப்புகளை வெளியிட்டது.
இவற்றில் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நவ.15-ம் தேதி தொடங்கி வைத்தார். டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
ஏற்கெனவே தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் பல மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு எதிர்ப்புக் குரல் வலுக்கவே, அத்தகைய நடவடிக்கை இப்போதைக்கு இல்லை என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும் கூட, பிப்ரவரியில் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட டெண்டரை புதுப்பித்து வெளியிடலாம் என்ற தகவல்களும் இருக்கின்றன.
கேள்விக்குள்ளாகும் அரசின் வாதம்
அரசுத் தரப்பில் இந்த தனியார்மயமாக்கலுக்கு கூறப்படும் காரணம் விவாதப் பொருளாகியுள்ளது. சென்னையில் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்தான், தனியார் நிறுவனங்களின் கீழும் அதே பணியை மேற்கொள்ளப் போகிறார்கள்.
அவ்வாறு இருக்கும்போது, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால்தான் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றால், அது தூய்மைப் பணியாளர்களின் தவறு இல்லை; மாறாக மாநகராட்சியின் நிர்வாகத் திறமையின்மைதான் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
எகிறும் விலைவாசி உயர்வுக்கு இடையே, நாம் குப்பைத் தொட்டியைக் கடக்கவே மூக்கை மூடிக் கொண்டு செல்லும் சூழலில் அதிலேயே உழன்று உழைக்கும் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தில் கைவைத்து, தனியார் நிறுவனங்களை சுரண்ட அனுமதிப்பது என்ன நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் வினவுகின்றனர்.
மீண்டும் எழும் குரல்
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இன்றைக்கு மட்டும் கருணாநிதி நினைவிடம், சென்னை அண்ணாசாலையில் உள்ள கருணாநிதி சிலை, தலைமைச் செயலகம் என 3 மூன்று இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராடி கைதாகியுள்ளனர்.
அண்மையில் செவிலியர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஒரு தற்காலிக தீர்வு கிடைத்தது. பொங்கல் பண்டிகைக்குள் 700+ செவிலியர்களுக்கு பணி நிலைப்புக் கடிதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. எல்லா போராட்டங்களுக்கும் ஏதேனும் ஒரு அடுத்த நகர்வு இருக்க, நம் கோரிக்கைகள் மட்டும் கிடப்பிலேயே இருக்கின்றதே என்று மீண்டும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர் தூய்மைப் பணியாளர்கள்.
இதற்கிடையில், உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் வழக்கறிஞர் K.பாரதி, அளித்த பேட்டியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், கோரிக்கைகள், அரசின் நிலைப்பாடு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதன் விவரம்:
“தூய்மைப் பணியாளர்கள் கடைநிலை ஊழியர்கள், சாமானியர்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் சொற்பம். பெரும்பாலும் பெண்கள் இப்பணியில் இருக்கிறார்கள். இவர்களில் பலர் கணவரால் கைவிடப்பட்டவர்கள், குடி நோயால் உயிரிழந்தவர்களின் மனைவி என்றுள்ளனர். அவர்களுக்கு இந்த 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் மிகவும் முக்கியம்.
ஏற்கெனவே தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் அது நினைத்தால் எந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்யலாம் என்ற அதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ளது. அப்படியிருக்க மாநகராட்சி ஊழியராக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்துவிட்டு, தூய்மைப் பணியை தனியாருக்கு அரசு தாரை வார்த்ததால் பணி நிலைப்பும் இல்லாமல், உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள் பணி செய்ய வேண்டும். அதுவும் புதிய பணியாளரைப் போல் பணி செய்ய வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்கள் அவர்கள் ப்ராஜக்ட் உள்ள எந்த இடத்துக்கும் வேண்டுமானால் இந்த தொழிலாளர்களை பணியிட மாற்றம் செய்ய முடியும். மேலும், ஊதியத்தையும் குறைக்க முடியும். இது எல்லாம் ஒரு கடைநிலை ஊழியருக்கு நேருமென்றால், அதை அரசு வேடிக்கை பார்க்கும் என்றால் அது அநியாயம் இல்லையா?
அரசாங்கம், சென்னையில் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு தூய்மைப் பணியை மேற்கொள்ளும் பட்சத்தில் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடும் பெருந்தொகையை விட சொற்பமான செலவே ஆகும். ஆனால் புயல், மழை, வெள்ளம், கரோனா என பல பேரிடர்களிலும் திறம்பட வேலை செய்து பணியாளர்களை தூக்கி எறியும் வகையில் தனியாருக்கு மாநகராட்சி மண்டலங்களை தாரை வார்க்கிறது.
எங்களுடைய பிரதான கோரிக்கை...
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் மாநகராட்சியில் பணி வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பிய தூய்மைப் பணியாளர்களைத் தாண்டியும் பணியில்லாமல் 1500-க்கும் அதிகமானோர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வழங்கும் அளவுக்கு சென்னை மாநகராட்சியில் காலிப் பணியிடங்களும் இருக்கின்றன. அது மட்டுமல்லாது தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும் கூட, அரசாங்கம் நினைத்தால் பணி நிலைப்பு செய்யலாம். இதை முந்தைய காலக்கட்டங்களில் எதிர்க்கட்சியிலிருந்த இப்போதைய முதல்வரே சொல்லியிருக்கிறார்.
செவிலியர்கள் போராடினால் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் ஆனால் தூய்மைப் பணியாளர்களை அழைத்து ஏன் இந்த அரசு பேச மறுக்கிறது? இவர்களைத்தான் பணிநீக்கம் செய்து தூக்கி எறிந்துவிட்டோமே; இனி எதற்கு ஆவார்கள் என்ற மனப்பான்மையா? இவர்களால், தேர்தல் நேரத்தில் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற ஏளனமா என்று தெரியவில்லை.
தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தம் செய்யப்படும் என்று கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்த இந்த அரசு, இந்தத் தேர்தலில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறது?!. தூய்மைப் பணியாளர்கள் பற்றி எதுவுமே பேசாமல் புறக்கணிக்கப் போகிறார்களா?
சென்னையில் நடக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும். இதை அரசும் உணர்ந்திருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்பட அரசே விரும்பினாலும் கூட யாரோ சில அமைச்சர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சினைகள் இருக்குமோ என்றளவுக்குக் கூட யோசிக்கத் தூண்டுகிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றை தன் பொறுப்புக்குள் வைத்திருக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும் இடையேயான ஈகோவும் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை இழுபறியாக இருக்கக் காரணம் என்று யோசிக்கத் தோன்றுகிறதி.
நான் கடந்த டிச.18 அன்று அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை மனுவை அளித்தேன். அவர் டிச.21-க்குப் பிறகு மீண்டும் சந்திப்பதாக சொன்னார். அதன் பின்னர் ஒரு வாரம் ஆகியும் கூட இதுவரை எந்தவித அசைவும் அந்தப் பக்கம் இருந்து இல்லை. இந்தச் சூழலில் நாங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளோம். ஒருவேளை ஈகோ பிரச்சினைதான் இழுபறிக்குக் காரணம் என்றால் இதை முதல்வரும், துணை முதல்வரும் தலையிட்டுத் தீர்க்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் தொடர்ச்சியாக 150-க்கும் மேற்பட்ட நாட்கள் போராட்டம் நடந்துள்ளது என்றால் அது தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தான். எங்களுக்கு அரசை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணமில்லை, நாங்கள் அரசு விரோதிகள் இல்லை. தூய்மைப் பணியாளர்கள் பரம ஏழைகள், பெரும்பாலும் பட்டியலின மக்களாக உள்ளனர். சமூகப், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு நாங்கள் நீதி கேட்கிறோம்” என்று அவர் கூறினார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, December 30, 2025
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் - டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 9 மணி நேரம் விசாரணை - ஆனந்த், ஆதவ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் ஆஜர்
சென்னை,
டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராக வந்த தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களிடம் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த, வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை தமிழக அரசு அமைத்தது.
பின்னர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ வழக்கு பதிவு செய்து, கரூரில் ஆய்வு செய்து தகவல்களை திரட்டியது. வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தவெக நிர்வாகிகளிடமும் நவ.24, 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது.
சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் டிச. 2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தவெக மாநில நிர்வாகிகளிடமும் சிபிஐ விசாரித்தது. இதற்கிடையே, உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
மேலும், அடுத்தகட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நேற்று ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதிய
ழகன் மற்றும் ஆட்சியர், எஸ்.பி.உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அனைவரும் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, விஜய் பிரச்சாரக் கூட்டத்துக்கு செய்திருந்த ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்த செயல்படுத்திய திட்டங்கள் குறித்த ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கினர்.
அதை படித்துப் பார்த்த அதிகாரிகள், ‘‘எத்தனை பேர் வருவதாக கூறி அனுமதி பெற்றீர்கள், எத்தனை பேர் வந்தனர், நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக பேரை திரட்டினீர்களா அல்லது அவர்களாகவே வந்தனரா, நெரிசல் ஏற்பட்ட உடனே மீட்பு பணிகளில் கவனம் செலுத்தினீர்களா?’’ என்பது உட்பட 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டுள்ளனர். சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளித்தவர்கள் ஒருசில கேள்விகளுக்கு சிறிது நேரம் அவகாசம் எடுத்து பதில் அளித்துள்ளனர். அனைத்தையும் எழுத்து மூலமாக பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
ஆட்சியர், எஸ்.பி.யும் ஆஜர்கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி.ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். அவர்களிடமும் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 9 மணி நேரம் நீடித்து,இரவு 7.30 மணி அளவில் முடிந்தது. விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் இன்றும் ஆஜராக உள்ளனர்.
விஜய்யிடம் விசாரிக்க திட்டம்
தேவைப்பட்டால் விஜய் உட்பட மேலும் சிலரிடமும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விசாரணை முடிந்து இரவு வெளியே வந்த நிர்மல் குமார், செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘சம்மன் பேரில், தவெகவை சேர்ந்த 4 பேரும் ஆஜரானோம். சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளோம். கரூரில் என்ன நடந்தது என்பது உலகத்துக்கே தெரியும். சிபிஐ அதிகாரிகளுக்கு தேவையான விளக்கத்தையும், முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளோம்’’ என்றார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Monday, December 29, 2025
சம வேலைக்கு சம ஊதியம் கோரி 3-வது நாளாக போராட்டம் - சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கைது
பதிவு: திங்கள்க்கிழமை, டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம் 05:30 AM
சென்னை,
சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஊதிய முரண்பாட்டை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டிபிஐ வளாகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட் டனர்.
அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலர் ப.சந்திரமோகன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் அமர்ந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராடிய ஆசிரியர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வாகனங்களில் ஏற்றி வெளியேகொண்டு சென்றனர். நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைதான நிலையில் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அனுப்பி வைத்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Featured post
8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...








