Friday, January 9, 2026

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத் துறை அனுப்பிய முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை தொடக்கம்

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  ஜனவரி 09, 2026, மார்கழி 25, விசுவாவசு வருடம் 02:00 AM

சென்னை,

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத் துறை அனுப்பிய முறைகேடு புகார் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு அதிகாரிகள், ஊழியர்களை நியமித்ததில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், பணியின் தன்மையைப் பொருத்து, ஒவ்வொருவரிடமும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சப் பணம் கைமாறியதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை அடுத்தடுத்து 2 புகார் கடிதங்களையும் அனுப்பியது. குறிப்பாக அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். தன் மீதானகுற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர் நேரு, இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதங்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், அமலாக்கத் துறை அனுப்பிய 2 புகார் கடிதங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து கேட்டபோது லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: யார் புகார் கொடுத்தாலும் விசாரணை நடத்துவோம். அந்த வகையில், அமலாக்கத் துறையினர் அனுப்பிய 2 கடிதங்களும் எங்களுக்கு வந்தன. அதுதொடர்பாக தனிப்படை அமைத்து ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கிஉள்ளோம். புகாரில் முகாந்திரம் இருந்தால், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, வழக்கு பதிவு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thursday, January 8, 2026

Anganwadi workers seek minimum special pension | Anganwadi workers stagi...

By standing united, Devendrakula Vellalars can become a politically dete...

Vijayendra Bidari takes charge as new Inspector General of Police (South...

அண்ணா தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி - எடப்பாடி பழனிசாமி – அன்புமணி ராமதாஸ் கூட்டாக பேட்டி

 

பதிவு: வியாழக்கிழமை,  ஜனவரி 08, 2026, மார்கழி 24, விசுவாவசு வருடம் 02:00 AM

சென்னை,

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை சந்தித்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர். இதையடுத்து கூட்டணி தொடர்பாக அண்ணா தி.மு.க. – பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தசந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் சில கட்சிகள் வரும்

இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு எடப்பாடி மற்றும் அன்புமணி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:–

“வருகிற சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பா.ம.க. கூட்டணியில் இணைந்துள்ளது. விரைவில் மேலும் சில கட்சிகள் சேருவார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி.

அண்ணா தி.மு.க. தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில், வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கான திட்டங்களை கொடுக்க, 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். தேனீக்கள் போல செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டோம். மற்றதை பின்னர் அறிவிப்போம்.” என்று கூறினார்.

தி.மு.க. மீது மக்கள் ஆத்திரம்

இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைந்துள்ளது. எங்களுக்கு இது மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். இது வலுவான கூட்டணி.

எங்கள் நோக்கம் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சி, ஊழல் செய்கின்ற திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான தி.மு.க. ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான தி.மு.க. ஆட்சி, அரசு ஊழியர்கள், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அத்தனை உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கவிருக்கிறோம்.

காரணம், சமீபத்தில்கூட நான் 100 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டபோது மக்களைச் சந்தித்தேன். அப்போது, தி.மு.க. மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. கோபம் என்றுகூட சொல்ல முடியாது. மிகுந்த ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என்று அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அண்ணா தி.மு.க. ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து சென்றுள்ள நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ம.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அண்ணா தி.மு.க.வுடன் அன்புமணி கூட்டணி அமைத்ததால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் தொடர்கிறார். ராமதாஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. உள்ள நிலையில், கூட்டணிக்குள் தே.மு.தி.க.வை கொண்டு வர அண்ணா தி.மு.க. விரும்புகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின்போது பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட்டை அண்ணா தி.மு.க. ஒதுக்கியது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை அண்ணா தி.மு.க. ஒதுக்கியது. இதில் 5 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றது. 2021-ல் வடக்கு, வடமேற்கு மாவட்டங்களில் அண்ணா தி.மு.க. வெற்றிக்கு கணிசமாக உதவி இருந்தது குறிப்பிடத்தக்கது

தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல்அல்லது மே மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அண்ணா தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை என 4 முனைப் போட்டி நிலவுகிறது.


Tuesday, January 6, 2026

திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று தீர்ப்பு

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 06, 2026, மார்கழி 22, விசுவாவசு வருடம் 06:50 AM

மதுரை,

திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.


மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், சட்டம். ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்து தீபம் ஏற்றப்படவில்லை.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விரிவாக விசாரித்தனர்.

இதில் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் சார்பில் வக்கீல்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அங்கு ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை விலங்குகளை பலியிடுவதோ, அசைவ உணவுகளை பரிமாறுவதோ, இறைச்சியை மலைக்கு எடுத்துச் செல்வதோ கூடாது என்று தர்கா நிர்வாகத்திற்கு கடந்த 2-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று (அதாவது நேற்று) அவசர வழக்காக எடுத்து விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு தர்கா நிர்வாகம் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.

இதைக்கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை (அதாவது இன்று) வழங்கப்பட உள்ளது. அந்த தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி, தர்கா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர்.

எனவே சந்தனக்கூடு திருவிழாவில் அசைவ உணவு பரிமாறுவது கூடாது, கந்தூரி விழா நடத்தக்கூடாது என்று நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, January 3, 2026

Arudra Darshan 2026 | Karur Kalyana Pasupatheeswarar Temple at Karur

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...