பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 11, 2026, மார்கழி 27, விசுவாவசு வருடம் 02:40 AM
சென்னை,
இதுவரை ஆற்றியிருக்கும் பணிகளைப் பார்த்தால் ‘200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயமாக’ வெற்றி பெறுவோம் என்று பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
‘‘கொளத்தூர் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால், அதில் ஒரு வேகமும், ஒரு எனர்ஜியும் எனக்கு வந்துவிடுகிறது. அந்த எனர்ஜியுடன் தான் நான் உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன்.
பொங்கல் விழாவை இன்றைக்கு நாம் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலத்தில் என்னென்ன திட்டங்களையெல்லாம் செய்திருக்கிறது, என்னென்ன சாதனைகளையெல்லாம் புரிந்திருக்கிறது என்பது உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த பொங்கல் விழாவை இப்படி எழுச்சியோடு கூட்டி உங்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதற்காக, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நீங்கள் தேர்தல் களத்தில் ஆற்றவேண்டிய பணிகளில் 50 சதவிகிதம் முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவிகிதம் தான் மீதம் இருக்கிறது.
சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு...
இன்றைக்கு பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள். ஏன், பா.ஜ.க.வில் இருக்கக்கூடியவர்கள் கூட என்ன சொல்கிறார்கள் என்றால், தி.மு.க.-காரர்கள் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 1967-இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது அன்றைக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த பெரியவர் பக்தவச்சலம் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தபோது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
“திமுக-காரன் ஒரு சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான். அதற்கு நாமெல்லாம் ஈடாக முடியாது” என்று வெளிப்படையாகவே சென்னவர் அவர். அதே உணர்வோடு இன்றைக்கும் நான் பார்க்கிறேன். நீங்கள் ஆற்றக்கூடிய பணிகள், ஏதோ கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் நம்முடைய செயல் வீரர்கள் ஆற்றும் அந்தப் பணிகளையெல்லாம் பார்க்கின்றபோது - 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று, நம்முடைய கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.
சபதமெடுப்போம்
ஆனால், நாம் இப்போது ஆற்றியிருக்கும் பணிகளையெல்லாம் பார்க்கின்றபோது 200 தொகுதிகளையும் தாண்டி வரும் என்ற நம்பிக்கைஎனக்கு வந்திருக்கிறது. அந்த நம்பிக்கையோடு பொங்கல் விழாவை நாம் கொண்டாடுகிறோம். பொங்கல் விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வரவிருக்கும் தேர்தலில் ஒரு மாபெரும் வெற்றி பெறுவதற்கு உறுதியெடுப்போம் சபதம் எடுப்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, முனைவர் பர்வீன் சுல்தானா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், வாரியத் தலைவர் ரங்கநாதன், பகுதிக் கழக செயலாளர்கள் முரளி, நாகராஜன், கொளத்தூர் பகுதியைச் சார்ந்த கிளைக் கழகத்தின் செயலாளர்கள், சார்பு மன்ற நிருவாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவில் துர்கா ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று காலை "திராவிட பொங்கல் விழா" மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் இன்று காலை வருகை தந்த போது முதலமைச்சருக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அங்கு திரண்டிருந்த பெண்கள் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றனர். பொங்கல் விழா நடைபெறும் இடம் கரும்பு மற்றும் வாழைத் தோரணங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மிகப்பெரிய பொங்கல் பானை அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பசு மற்றும் கன்று ஆகியவையும் நின்று கொண்டு இருந்தது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகிய இருவரும் பசுவுக்கும், கன்றுக்கும் வாழைப்பழம் ஊட்டினார்கள். பின்னர் அங்கு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் பொங்கல் வைத்தனர். பொங்கல் வைத்து முடித்ததும் அங்கிருந்தவர்களுக்கு பொங்கல் வழங்கினார்கள்.அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
8,456 பேருக்கு பொங்கல் பொருட்கள்
விழாவில் பங்கேற்ற 8,456 பேருக்கு பொங்கல் பொருட்கள், புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விழாவில் பங்கேற்ற பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.






