Tuesday, January 20, 2026

கவர்னர் ஆர்.என்.ரவி 4-வது ஆண்டாக தமிழக சட்டசபை உரையை புறக்கணித்து வெளியேறினார்

பதிவு: திங்கட்கிழமை,  ஜனவரி 19, 2026, தை 04, விசுவாவசு வருடம் 11:00 AM

சென்னை,

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து சென்றனர்.

சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு சென்றார். அங்கு நின்றபடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள், அனைத்து உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அவருக்கு வலதுபுறம் போடப்பட்டிருந்த இருக்கையில் சபாநாயகர் மு.அப்பாவுவும், இடது புறம் போடப்பட்டிருந்த இருக்கையில் கவர்னரின் செயலாளர் ஆர்.கிர்லோஷ் குமாரும் அமர்ந்தனர்.

சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்கினார். பொதுவாக, கவர்னர் உரை நேரலையாக வழங்கப்படும். ஆனால், இன்று நேரலை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், சட்டசபையில் பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து, 4-வது ஆண்டாக அவர் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி, 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2022-ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார். அதன் பிறகு, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை.

2023-ம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், கவர்னர் பாதியிலேயே வெளியேறினார்.

2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

கடந்த ஆண்டு (2025) ஜனவரி 6-ந் தேதி கூடிய தமிழக சட்டசபை முதல் கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இந்த நிலையில், இந்த ஆண்டும் அவர் உரையை புறக்கணித்து வெளியேறி இருக்கிறார்.

Monday, January 19, 2026

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது - கவர்னர் உரை நிகழ்த்துவாரா?


 பதிவு: திங்கட்கிழமை,  ஜனவரி 19, 2026, தை 04, விசுவாவசு வருடம் 06:30 PM

சென்னை,

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை நாளை கூடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. இதில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.

கவர்னர் உரை

அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து செல்கிறார். சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு செல்வார். அவருடைய வலதுபுறம் சபாநாயகரும், இடது புறம் கவர்னரின் செயலாளரும் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டு இருக்கும். 

சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்குவார். அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும்.

முறையாக நிகழ்த்துவாரா?


கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடையும். தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். அனேகமாக, வரும் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. 

அதே நேரத்தில், நாளைய கூட்டத்தில் கவர்னர் தனது உரையை முறையாக நிகழ்த்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

உறவில் விரிசல்

அவர் 2022-ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார். அதன் பிறகு, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை. 

2023-ம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், கவர்னர் பாதியிலேயே வெளியேறினார்.

கேள்விக்குறி

2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

கடந்த ஆண்டு (2025) ஜனவரி 6-ந் தேதி கூடிய தமிழக சட்டசபை முதல் கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 

இப்படி கவர்னர் உரையை தொடர்ந்து புறக்கணித்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி, நாளைய சட்டசபை கூட்டத்தில் முறையாக வாசிப்பாரா? என்பது கேள்விக்குறிதான்.

அமெரிக்க வரி விதிப்பால் மூலப்பொருள் விலை உயர்வு - கோவையில் வேலை இழப்பு அதிகரிக்கும் அபாயம்

பதிவு: திங்கட்கிழமை,  ஜனவரி 19, 2026, தை 04, விசுவாவசு வருடம் 05:30 AM

கோவை,

கோவை, திருப்பூர் பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டாலர் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால் கோவை, திருப்பூரில் ஜவுளித்தொழில் துறையினர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஜவுளி, வார்ப்படம், மோட்டார் பம்ப் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைந்து உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இது குறித்து ஜவுளி தொழில் துறையினர் கூறியதாவது:-

கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டாலர் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்ததால் அது ஒரு பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் அமெரிக்க சந்தைக்கான இந்திய ஜவுளி ஏற்றுமதி பூஜ்ஜியமாகி விடும். 50 சதவீத வரிக்கு கூடுதலாக, சாத்தியமான பிற நிலையான வரிகளும் உள்ளன.

இதனால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். இதற்கிடையே அமெரிக்கா 500 சதவீத வரி விதிக்கப்போவதாக கூறுகிறார்கள். அப்படியானால் ஜவுளி ஏற்றுமதி சரிவை சந்திக்கும். எனவே மாற்று வழியாக ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாட்டு சந்தைகளை இந்தியா வலுப்படுத்த வேண்டும் ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய சந்தைகள் போன்ற பிற சந்தைகள் உள்ளன, அவற்றில் சில வரம்புகள் உள்ளன.

ஆப்பிரிக்க சந்தைகள் நம்பகத்தன்மையற்றதால் சவாலாக இருக்கும். ஆசிய சந்தைகள் சிறியவை. அவற்றை மேம்படுத்தி அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வார்ப்படம் மற்றும் வால்வுகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி மீதான தாக்கம் குறித்து தொழில்முனைவோர் கூறியதாவது:-

வார்ப்புத்தொழில் துறை இதுவரை வெளிப்படையான பாதிப்பை சந்திக்க வில்லை. ஆனாலும் அடுத்த சில மாதங்களில் 50 ஆயிரம் வேலை இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முதலில் பாதிப்பு இருக்கும். வார்ப்பட தொழிலை பொறுத்தவரை, ஒவ்வொரு நிறுவனமும் முதலில் தேவையை புரிந்துகொண்டு உற்பத்தி பிரிவை வடிவமைக்க வேண்டும். தொடர் ஆய்வுக்கு பிறகு உற்பத்தியை தொடங்கி நடைமுறைக்கு கொண்டு வர 7 மாதங்களுக்கு மேல் ஆகும்.

கோவையில் பம்புகள், மோட்டார்கள், ஆட்டோமொபைல், ஜவுளி எந்திரங்கள், சுரங்கம் மற்றும் கட்டுமானம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, எந்திர கருவிகள், காற்றாலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 1.2 மெட்ரிக் டன் இரும்பு வார்ப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவையில் இருந்து சராசரியாக 0.75 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 40 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பம்ப் தொழில் முனைவோர் கூறுகையில், அமெரிக்க வரிவிதிப்பு பம்ப் உற்பத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. இது பெரும்பாலும் உள்நாட்டு சந்தையை சார்ந்து உள்ளது. ஆனாலும், அமெரிக்க வர்த்தகத்தை நம்பி உள்ள கோவையை சேர்ந்த மிக சில பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றனர்.

வால்வு உற்பத்தியாளர்கள் கூறும்போது, வால்வு உற்பத்தி துறையில் பெரிய வேலை இழப்பு ஏற்படாது. ஆனால் நிறுவனங்களை மேலும் விரிவாக்கம் செய்ய முடியவில்லை. ஐரோப்பா மற்றும் உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்தி அமெரிக்க தாக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.தற்போது கோவையில் மூலப்பொருள் விலை உயர்வு, அமெரிக்க வரி உயர்வு தாக்கம் காரணமாக வேலை இழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Sunday, January 18, 2026

சி.பி.ஐ. விசாரணை - டெல்லி புறப்பட்டார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜனவரி 18, 2026, தை 03, விசுவாவசு வருடம் 04:00 PM

சென்னை,

இன்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்கிறார்.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதனை தொடர்ந்து கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதில் 12-ந்தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதனையடுத்து த.வெ.க. தலைவர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா?, நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்?, கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா?, கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா?, தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?’ என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர்.

அனைத்து கேள்விகளுக்கும் விஜய் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்​திய முதல்​கட்ட விசா​ரணை முடிந்த நிலை​யில் அவர் சென்னை திரும்​பி​னார். அவர் அடுத்​தகட்ட விசா​ரணைக்​காக பொங்​கல் பண்டிகை முடிந்த பிறகு நாளை (ஜன.19-ம் தேதி) டெல்லியில் மீண்​டும் ஆஜராக வேண்டும் என ​சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2-வது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் இன்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இதற்காக விஜய் தற்போது தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-நியூசிலாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜனவரி 18, 2026, தை 03, விசுவாவசு வருடம் 06:00 AM

இந்தூர்,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் வதோதராவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான, ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

கடந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 285 ரன்கள் இலக்கை 47.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி எட்டிப்பிடித்தது. இந்திய அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (112 ரன்கள்), கேப்டன் சுப்மன் கில் (56 ரன்கள்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. அதேபோல் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி எடுபடவில்லை. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் கடைசி வரை களத்தில் நின்று 131 ரன்கள் குவித்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு வில் யங் (87 ரன்கள்), கிளென் பிலிப்ஸ் (32 ரன்கள்) பக்கபலமாக இருந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா முந்தைய இரு ஆட்டங்களிலும் நல்ல தொடக்கம் கண்டாலும் (26, 24 ரன்கள்) அதனை பெரிய இன்னிங்சாக மாற்றவில்லை. எனவே அவர் நிலைத்து நின்று ஆடினால் பேட்டிங் மேலும் வலுப்பெறும். அத்துடன் முந்தைய ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக துவம்சம் செய்தனர். இதனால் பந்து வீச்சில் மாற்றம் இருக்கலாம். அர்ஷ்தீப் சிங் அல்லது புதுமுக வீரர் ஆயுஷ் பதோனி ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்புள்ளது.

கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் கூடுதல் நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணி களம் இறங்கும். அந்த அணியில் பேட்டிங்கில் டேரில் மிட்செல் (215 ரன்கள்), வில் யங், டிவான் கான்வே, ஹென்றி நிகோல்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கைல் ஜாமிசன், கிறிஸ்டியன் கிளார்க் வலுசேர்க்கின்றனர்.

நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரை ஒருநாள் தொடரை வென்றதில்லை. 2024-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது போல் இந்த தடவை ஒருநாள் போட்டி தொடரை முதல்முறையாக வென்று சாதிக்க தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு இந்திய அணி உள்ளூரில் இருநாடுகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது கிடையாது. இதனால் இந்திய அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எல்லா வகையிலும் வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் - எடப்பாடி அதிரடி அறிவிப்பு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜனவரி 18, 2026, தை 03, விசுவாவசு வருடம் 02:00 AM

சென்னை,

* ஆண்களுக்கும் கட்டணமில்லா பஸ் வசதி

* 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்

* வீடு இல்லாதவர்களுக்கு புது வீடு

* ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்

அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்தார்.

ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பஸ் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்; 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் என எடப்பாடி பழனிசாமி முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைமை கழகத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி பெரிய ரோஜா மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் அண்ணா தி.மு.க. கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

பின்னர் தலைமை கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 109 கிலோ ராட்சத கேக் வெட்டி அனைவருக்கும் தன் கைப்பட வழங்கினார்.

5 தேர்தல் வாக்குறுதிகள்

இதன் பின்னர் தலைமை கழகத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது முதல் கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அவர் அதிரடியாக அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் 17–வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அண்ணா தி.மு.க.வின் சார்பில் அளிக்கப்படும் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

மகளிருக்கு ரூ.2000

1. மகளிர் நலன் : (குல விளக்குத் திட்டம்) சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் : நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

அனைவருக்கும் வீடு

3. அனைவருக்கும் வீடு : (அம்மா இல்லம் திட்டம்) ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

பெண்களுக்கு ஸ்கூட்டர்

4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் : 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் : மகளிருக்கு ரூ. 25,000 - மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஏற்கனவே அரசுக்கு அதிக அளவில் கடன் சுமை உள்ளது. இந்த நிலையில் இந்த வாக்குறுதிகள் சாத்தியப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர்.

எங்களிடம் நிர்வாகத் திறமை உள்ளது

அவர்களுக்கு (தி.மு.க.) நிர்வாக திறமை இல்லை. எங்களுக்கு நிர்வாகத் திறமை இருக்கிறது. எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கொரோனா காலத்திலேயே அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு இருந்தது. அப்போதே நாங்கள் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தோம். நிதி நிலைமையை உருவாக்கி தந்தோம். தி.மு.க. ஆட்சியில் நிதி மேலாண்மை குழு அமைத்தார்கள். ஆனாலும் கடன் குறையவில்லை. தி.மு.க. ஆட்சியின் முடிவில் கடன் சுமை 5.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கடன் சுமை அதிகமாக உள்ள நிலையில் ஆண்களுக்கும் அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணம் சாத்தியப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு நிர்வாகத் திறமை இருந்தால் எல்லாம் சரி செய்ய முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அண்ணா தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மண்டல வாரியாக மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு மனுக்களை பெற்று அறிக்கை தயார் செய்து அளிப்பார்கள். அதில் மக்கள் நினைப்பது தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Saturday, January 17, 2026

இன்று காணும் பொங்கல் - தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு - மெரினாவில் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்ப்பு

பதிவு: சனிக்கிழமை,  ஜனவரி 17, 2026, தை 02, விசுவாவசு வருடம் 05:00 AM

சென்னை,

காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை முதல் பட்டினப்பாக்கம் வரை கடலில் பொதுமக்கள் இறங்காமல் இருக்க, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரள்வார்கள் என்பதால், சென்னையில் 16 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொங்கல் பண்​டிகை​யின் ஒரு பகு​தி​யாக காணும் பொங்கல் இன்று உற்சாகமாக கொண்​டாடப்​படுகிறது. இன்றைய தினம் பொது​மக்​கள் கடற்​கரை, பூங்கா உள்ளிட்ட பொழுது​போக்கு மையங்​களுக்கு குடும்பம், குடும்பமாக சென்று உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். எனவே மக்​கள் அதி​கள​வில் கூடும் இடங்​களில் எவ்​வித அசம்​பா​வித​மும் நிகழாமல் இருக்க விரி​வான பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை முழு​வதும் 16 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு, கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்டுள்ளனர். இவர்​களு​டன் 1,500 ஊர்க்​காவல் படை​யினர் ஒருங்​கிணைந்து பணி​யாற்றுகின்றனர். மெரினா கடற்​கரை​யில் மட்​டும் சுமார் 3 லட்​சம் பேர் திரள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனவே உழைப்​பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்​காலிக காவல் கட்​டுப்​பாட்டு அறை​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

அவசர மருத்​துவ உதவிக்​காக மருத்​து​வக் குழு​வினருடன் 8 ஆம்​புலன்ஸ் வாக​னங்​கள் மற்​றும் மீட்​புப்பணிக்​காக தீயணைப்பு வீரர்​கள் அடங்​கிய 2 தீயணைப்பு வாக​னங்​கள் தயார் நிலை​யில் நிறுத்தி வைக்​கப்பட்டுள்ளன. மீட்​புப் பணிக்​காக மோட்​டார் படகு​கள் மற்​றும் 200-க்​கும் மேற்​பட்ட நீச்​சல் தெரிந்த தன்​னார்வலர்​கள் தயார் நிலை​யில் உள்ளனர். காணும் பொங்கலன்று மெரி​னா​வில் குளிக்​கத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. பொது​மக்​கள் கடலில் இறங்​கு​வதைத் தடுக்க கடற்​கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. கூட்ட நெரிசலில் குழந்​தைகள் காணா​மல் போனால் அவர்​களை உடனடி​யாக மீட்​ப​தற்​காக குழந்​தைகள், சிறு​வர்​கள் மற்​றும் சிறுமிகளின் கைகளில் பிரத்​யேக அடை​யாளப் பட்டை (பேண்ட்) கட்​டி​விடப்படுகிறது.

மெரினா கடற்​கரை மணற்​பரப்​பில் 4 ட்ரோன் கேம​ராக்​கள் மற்​றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்​கரை மணற்​பரப்​பில் 4 ட்ரோன் கேம​ராக்​கள் என மொத்​தம் 8 கேம​ராக்​கள் பயன்​படுத்​தப்​பட்​டு, தீவிர​மாக கண்​காணிக்​கப்​படுகிறது. மேலும் அதிக திறன் கொண்ட ‘ஏஐ’ ட்ரோன் கேம​ராக்​கள் பயன்​படுத்​தப்​பட்டு அவை மூலம் கடலோர மணற்​பகு​தி​களில் உள்ள பொது​மக்​களுக்கு காவல் துறை​யின் எச்​சரிக்​கைத் தகவல்​களை ஒலிபரப்​பி வருகின்றனர்.

கிண்டி சிறு​வர் பூங்​கா, தீவுத்​திடலில் உள்ள சுற்​றுலா பொருட்​காட்​சி,செம்​மொழி பூங்கா உள்​ளிட்ட இடங்​களி​லும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே​போல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா, பொழுதுபோக்கு தலங்கள், பூங்காக்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...