Thursday, November 13, 2025

சி.எஸ்.ஐ., டயோசீஸ் தேர்தலில் மோதல் - பாதிரியாரை மிரட்டிய கும்பலால் பரபரப்பு

 


பதிவு: புதன்கிழமை,   நவம்பர் 13, 2025, ஐப்பசி 25, விசுவாவசு வருடம் 06-00: AM

துாத்துக்குடி,

துாத்துக்குடி சி.எஸ்.ஐ., டயோசீஸ் திருமண்டல தேர்தலில் தோல்வியடைந்த கும்பல், பாதிரியார் வீட்டுக்குள் புகுந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விடுவதாக மிரட்டியும், ஒருவரை கத்தியால் குத்தியும் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துாத்துக்குடி, -நாசரேத் திருமண்டல சி.எஸ்.ஐ., டயோசீஸ் கிறிஸ்துவ அமைப்பை நிர்வகிக்கும் பிஷப், லே செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

கடந்த, 2021ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2024 வரை பொறுப்பில் இருந்தனர்.

அதன் பிறகு தேர்தல் தள்ளிப்போனது. உயர் நீதிமன்ற உத்தரவில், ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் தற்போது புதிய பெருமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

செயலர் பதவிக்கு எஸ்.டி.கே.ராஜன் தலைமையில் ஒரு அணியினரும், டி.எஸ்.எப்.நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் இன்னொரு அணியினரும் போட்டியிடுகின்றனர்.

நவம்பர் 9ம் தேதி அந்தந்த சர்ச்களில் தேர்தல் நடந்தது. துாத்துக்குடி அருகே நடுவக்குறிச்சியில் பலருக்கு ஓட்டு இல்லை என சர்ச்சை ஏற்பட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டது. செய்துங்கநல்லுாரில் பாஸ்டர் ஜோஸ்வா தலைமையில் நடந்த தேர்தலில், இரு அணியினரும் போட்டியிட்டனர்.

இதில், குறைவான ஓட்டுகள் பெற்ற துாத்துக்குடி மாவட்ட தி.மு.க., துணை செயலர் ஜெயகுமார் ரூபன் தலைமையில் மூன்று பேர் கும்பல், நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி அருகே வி.எம்.சத்திரத்தில் பாஸ்டர் ஜோஸ்வாவின் வீட்டிற்குள் புகுந்து, தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தகராறு செய்துள்ளது.

பெட்ரோல் சிதறி, பாஸ்டர் ஜோஸ்வாவின் மகன் மீதும் பட்டது. இதில் பதற்றமடைந்த பாஸ்டரின் மனைவி, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வருவதற்குள், ஜெயகுமார் ரூபன் உட்பட மூன்று பேர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அவர்கள், செய்துங்கநல்லுார் அருகே நாட்டார்குளத்தில் வசிக்கும் தங்கராஜ் என்பவரை கத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இவர், சி.எஸ்.ஐ., தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அணிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும், செய்துங்கநல்லுார் மற்றும் பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Wednesday, November 12, 2025

டெல்லி கார் வெடிப்பு: காயமடைந்த நபர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 12, 2025, ஐப்பசி 25, விசுவாவசு வருடம் 06-00: PM

புதுடெல்லி,

பிரதமர் மோடி வருவது தெரிந்ததும் ஊடக துறையினர் குவிந்து விடாமல் இருப்பதற்காக, தனியாக மருத்துவமனையின் பின்வாசல் வழியே உள்ளே சென்றார்.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த ஹுண்டாய் ரக கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பான பலத்த சத்தம், பல மீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் கேட்டது. புகை வான்வரை பரவியது.

சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. கார் வெடித்ததும், அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும், வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன. கார் பாகங்களும், மனித உடல்களும் பரவி கிடந்தன.

இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதவிர 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பூடானில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி காயமடைந்த நபர்களை சந்திப்பதற்காக, லோக் நாயக் மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்றார். அவர் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனை அவருடைய எக்ஸ் வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார்.

சதி திட்டத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்படுவார்கள் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் நேராக மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்து உள்ளார். அதன்பின்னர், அவர்களுடன் உரையாடியதுடன், விரைவில் குணமடைந்து வரும்படி வாழ்த்தினார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் வருவது தெரிந்ததும் ஊடக துறையினர் குவிந்து விடாமல் இருப்பதற்காக, தனியாக மருத்துவமனையின் பின்வாசல் வழியே உள்ளே சென்றுள்ளார். அவர், மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து விரிவான விவரங்களையும் கேட்டறிந்து உள்ளார்.

பவளவிழா பாப்பா.. நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா.. விஜய் கடும் தாக்கு

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 12, 2025, ஐப்பசி 25, விசுவாவசு வருடம் 05-30: PM

சென்னை,

அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி என திமுகவை விஜய் மறைமுகமாக சாடியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது.

அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?

ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம்.

நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்கிற அதிகார மயக்க முழக்கம்.

தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர்.

போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?

யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?

ஆட்சியில் இல்லாதபோது ‘தமிழ் தமிழ்’ என்பதும், ‘தமிழர் தமிழர்’ என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?

அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?

பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?

53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?

பவளவிழா பாப்பா - நீ

பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா

நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து

நாடே சிரிக்கிறது பாப்பா.

நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.

எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் - தமிழக அரசு அறிவிப்பு

 


பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 12, 2025, ஐப்பசி 26, விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை,

2026ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமைச்செயலர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 2026ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அரசு துறைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும், சில விடுமுறைகள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கே தனிப்பட்டவையாக பொருந்தும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொது விடுமுறை பட்டியல்

$ ஆங்கில புத்தாண்டு- ஜனவரி 01 (வியாழன்)

$ பொங்கல் - ஜனவரி 15 (வியாழன்)

$ திருவள்ளுவர் நாள்- ஜனவரி 16 (வெள்ளி)

$ உழவர் திருநாள்- ஜனவரி 17 (சனி)

$ குடியரசு நாள் - ஜனவரி 26 (திங்கள்)

$ தைப்பூசம்- பிப்ரவரி 01 (ஞாயிறு)

$ தெலுங்கு வருட பிறப்பு - மார்ச் 19 ( வியாழன்)

$ ரம்ஜான் - மார்ச் 21 (சனி)

$ மகாவீரர் ஜெயந்தி - மார்ச் 31 (செவ்வாய்)

$ வங்கிகள் ஆண்டு கணக்கு - ஏப்ரல் 01 (புதன்)

$ புனித வெள்ளி - ஏப்ரல் 03 (வெள்ளி)

$ தமிழ்புத்தாண்டு - ஏப்ரல் 14 (செவ்வாய்)

$ மே நாள் - மே 01(வெள்ளி)

$ பக்ரீத் - மே 28 (வியாழன்)

$ மொகரம் - ஜூன் 26 (வெள்ளி)

$ சுதந்திர தினம் - ஆகஸ்ட்15 (சனி)

$ மிலாதுநபி - ஆகஸ்ட் 26 (புதன்)

$ கிருஷ்ண ஜெயந்தி - செப்டம்பர் 04 (வெள்ளி)

$ விநாயகர் சதுர்த்தி - செப்டம்பர்14 (திங்கள்)

$ காந்தி ஜெயந்தி - அக்டோபர் 02 (வெள்ளி)

$ ஆயுத பூஜை - அக்டோபர் 19 (திங்கள்)

$ விஜயதசமி - அக்டோபர் 20 (செவ்வாய்)

$ தீபாவளி - நவம்பர் 08 (ஞாயிற்றுக்கிமை)

$ கிருஸ்துமஸ் - டிசம்பர் 25 (வெள்ளி)

தைப்பூசம் மற்றும் தீபாவளி பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

பிஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது யார்? கருத்துக்கணிப்பு விவரம் வெளியீடு

 


பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 12, 2025, ஐப்பசி 26, விசுவாவசு வருடம் 06-00: AM

புதுடெல்லி,

பிஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் அல்லது கூட்டணி யார்? என்ற கருத்துக்கணிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

பிஹார் சட்டசபையின் பதவி காலம் முடிவடைய உள்ள சூழலில், அந்த மாநிலத்தில் நவம்பரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில், பீகாரில் இந்த ஆண்டு சிறப்பு வாக்காளர் திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இது அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) இதனை வரவேற்ற போதிலும், ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணியானது இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. எனினும், நேர்மையுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இந்த சூழலில், 243 தொகுதிகளை கொண்ட பிஹார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற முடிவானது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. இதன் பின்னர், முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு சாவடிகளை கைப்பற்றுதல், சூறையாடுதல் போன்ற பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் நேற்று  காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடந்தது. இதில், நேற்று  மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. டோக்கன் பெற்ற வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் உள்பட இறுதி வாக்கு பதிவு நிலவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், வெற்றி பெறும் கட்சிகளின் நிலவரம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். எனினும், 14-ந்தேதி வெளிவரும் முடிவே இறுதியானது. 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்.

இதில், போல்ஸ்டர் பீப்பிள்ஸ் பல்ஸ்-என்.டி.டி.வி. இந்தியா வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 133-159 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 75-101 இடங்களையும், ஜன சுராஜ் 0-5 இடங்களையும் மற்ற கட்சிகள் 2-8 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

பீப்பிள்ஸ் இன்சைட் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 133-148 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 87-102, ஜன சுராஜ் 0-2, மற்ற கட்சிகள் 3-6 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

மேட்ரிஸ் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 147-167 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 70-90 இடங்களையும், ஜன சுராஜ் 0-5 மற்ற கட்சிகள் 2-8 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

தைனிக் பாஸ்கர் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 145-160 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 73-91 இடங்களையும், ஜன சுராஜ் 0-3 மற்ற கட்சிகள் 5-7 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

பி-மார்க் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 142-162 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 80-98 இடங்களையும், ஜன சுராஜ் 1-4 மற்ற கட்சிகள் 0-3 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

ஜே.வி.சி.-எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 135-150 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 88-103 இடங்களையும், மற்ற கட்சிகள் 3-7 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜன சுராஜ் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

மும்பை மார்க்கெட் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 135-140 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 100-115 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

டெல்லி சட்டா பஜார் வெளியிட்டு உள்ள முடிவில், என்.டி.ஏ. 142-145 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 88-91 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முடிவு என்.டி.ஏ.வுக்கு சாதகம்.

இதனால், என்.டி.ஏ. கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என்ற வகையில் பரவலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

முதல்-மந்திரி யார்?

இதேபோன்று பீகாருக்கான முதல்-மந்திரியாக விருப்ப தேர்வு செய்யப்பட்டவர்களின் சதவீதமும் வெளிவந்துள்ளது.

இதன்படி, பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்ட முடிவில்,

தேஜஸ்வி யாதவ்: 32%

நிதிஷ் குமார்: 30%

பிரசாந்த் கிஷோர்: 8%

சிராக் பாஸ்வான்: 8%

சாம்ராட் சவுத்ரி: 6%

ராஜேஷ் குமார்: 2%

மற்றவர்கள்: 14%

எந்தெந்த கட்சிகள், எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என கட்சி வாரியாக, பீப்பிள்ஸ் இன்சைட் விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதில்,

என்.டி.ஏ. கூட்டணி:

பா.ஜ.க. 68-72 இடங்கள்

ஐக்கிய ஜனதா தளம் 55-60 இடங்கள்

லோக் ஜனசக்தி - 9-12 இடங்கள்

எச்.ஏ.எம் 1-2 இடங்கள்

ஆர்.எல்.எம். 0-2 இடங்கள்

மகாகத்பந்தன் கூட்டணி:

ராஷ்டீரிய ஜனதா தளம் 65-72 இடங்கள்

காங்கிரஸ் கட்சி 9-13 இடங்கள்

இடதுசாரிகள்- 11-14 இடங்கள்

வி.ஐ.பி. 2-3 இடங்கள்

ஐ.ஐ.பி. 0-0 இடங்கள்

Tuesday, November 11, 2025

‘Evidence’ Kathir Press Meet at Madurai | 7,500 SC/ST atrocities cases a...

BJP Cadres Protest: H.Raja condemns Coimbatore woman’s abduction | S.I.R...

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...