Sunday, December 14, 2025

புதிய கட்சி தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்?

 


பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 07-00: PM

சென்னை,

அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் ஓபிஎஸ் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை கழகமாக மாற்றி இருக்கிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வரும் அவர், அதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை துவங்கி செயல்பட்டு வந்தார்.

எப்படியும் அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டு விடுவது என்ற முனைப்பில் இருந்த ஓபிஎஸ், அதில் எவ்வித முன்னேற்றத்தையும் அடையாத நிலையில் இருந்தார். தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த அவர், டிசம்பர் 15ல் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து புதிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்து இருந்தார்.

பின்னர் அந்த கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்து, டிசம்பர் 24ல் எம்ஜிஆர் நினைவு தினத்தில் தமது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்கி உள்ளார். தான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருக்கிறார்.

ஆனால் தமது அமைப்பை கட்சியாக மாற்றி உள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மாறாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் ஊழியர்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இதுநாள் வரையில், அமைப்பின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வந்த அவர், முதல் முறையாக அமைப்பை கழகமாக மாற்றி அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிக்கையில் கட்சி தலைவர், பொதுச் செயலாளர் யார் என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை.

எப்போதும் போல கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் என்று தமது பொறுப்புகளை குறிப்பிட்டு கையெழுத்தை மட்டும் ஓபிஎஸ் இட்டுள்ளார். தமது கட்சியை அவர் முறைப்படி தேர்தல் கமிஷனில் பதிவு செய்துவிட்டாரா என்பது குறித்தும் எவ்வித தகவல்களும் இல்லை.

இதற்கு முன்னர் கடந்த 14ம் தேதி தான் நடத்தி வரும் அமைப்பின் பெயரில் கடைசியாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் தலைமைக் கழகம், 154, பசுமை வழிச்சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,சென்னை-600028 என்ற முகவரி இடம்பெற்று இருந்தது.

தற்போது அமைப்பை கழகமாக மாற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் முகவரி மாறி இருக்கிறது. இதில் தலைமைக்கழகம், 38/31, 38/2, சேமியர்ஸ் ரோடு, நந்தனம், சென்னை- 600035 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், இரண்டு அறிக்கையிலும் 93423 14327 என்ற செல்போன் எண் மட்டும் மாறாமல் இடம்பெற்றுள்ளது.

ஜனவரி 13–ந் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் - விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாடுகிறார் - 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

 

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 05-00: PM

புதுடெல்லி,

பிரதமர் மோடி தமிழக விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் இந்த கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையும் அதிமுக கூட்டணியில் இணையுமாறு பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

3 நாட்கள்

இந்நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை மையமாக கொண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் அவர் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார். 

அதன்படி, ஜனவரி 13ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி ராமேசுவரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ என்ற முழக்க சுற்றுப்பயணத்தின் நிறைவாக புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், 14ம் தேதி பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் பிரதமர் மோடி கொண்டாட உள்ளார்.

கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை

இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தேர்தல் பணிகள், வியூகங்கள் தொடர்பாகவும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

 

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 05-00: AM

சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் டிச.4-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படிவம் விநியோகம், பூர்த்தி செய்து திரும்ப பெறுவது போன்றவற்றில் சிக்கல்கள் எழுந்தது மற்றும் பருவமழை உள்ளிட்ட காரணங்களால், அவகாசத்தை நீட்டிக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று, எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கும் அவகாசம் டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

டிசம்பர் 16-ல் வரைவு வாக்காளர் பட்டியலும், பிப்ரவரி 14-ல் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டது. படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியும் தொடர்ந்து நடந்தது.

கடந்த 11-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் விநியோகிக்கும் பணி, பூர்த்தி செய்து பெற்ற படிவங்களை பதிவேற்றும் பணி 100 சதவீதம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படிவம் விநியோகம், திரும்பப் பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகளுக்கான அவகாசத்தை டிசம்பர் 14 வரை மேலும் 3 நாட்கள் நீட்டித்து தேர்தல் ஆணையம் 11-ம் தேதி மாலை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, படிவத்தை பூர்த்தி செய்துசமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம் தேதி வெளியாகும். அன்று முதல், ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லதுஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அதன்பின், அவற்றின் மீது பரிசீலனை நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கணக்கீட்டுப் படிவத்துக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதிவாக்காளர் பட்டியல் பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றுமட்டுமே தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது. சரியான தேதி குறிப்பிடப்படவில்லை.

Saturday, December 13, 2025

"The dargah management has not any objection to lighting lamps on the pi...

5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டம்... கடப்பாரையால் கதவை உடைத்து... சவுக்கு சங்கர் கைது

 

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 05-00: PM

சென்னை,

அவதூறாக பேசி தன்னிடம் ரூ 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் அளித்த புகாரின் பேரில் போலீஸார் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. காலை முதலே அவரது வீட்டிற்கு இரு வேன்களில் வந்த போலீஸார் அவரது வீட்டுக் கதவை கடப்பாரையால் உடைத்து கைது செய்ததாக தெரிகிறது. 

இதுகுறித்து சவுக்கு சங்கர் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "நானும் மாலதி, மொத்த சவுக்கு மீடியா டீமும் கைது செய்யப்பட இருக்கிறோம். கீழே இரண்டு போலீஸார் வேன்களில் 20 பேர் காத்திருக்கிறார்கள். 

சம்மனை கொடுங்கள் என எனது வழக்கறிஞர் கேட்டால் கொடுக்க மறுத்து கதவை திறக்க வேண்டும் என தொடர்ந்து சென்னை மாநகர போலீஸார் தன்னை மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் சவுக்கு சங்கரை கைது செய்ய போலீஸார் அதிகாலையிலேயே அவரது வீடு முன்பு குவிந்ததாக தெரிகிறது. 

அவர்கள் வந்ததை அறிந்த சவுக்கு சங்கர் கதவை திறக்க மறுத்துவிட்டாராம். இதை காவல் துறை அதிகாரி ஒருவர் தனது உயர் அதிகாரிக்கு போனில் தகவல் கொடுத்தார். "சார் தனது அட்வகேட் வந்தால் மட்டுமே கதவை திறப்பேன் என்று கூறுகிறார்" என்று அந்த காவல் துறை அதிகாரி தெரிவிக்கிறார். 

அவர் மேலும் இன்னொருவரிடம் கூறுகையில், 3 வழக்கறிஞர்கள் வந்தும் எங்களை வீடியோதான் எடுக்கிறார்கள். சம்மனை ஏற்கெனவே அவருக்கு அனுப்பிவிட்டோம். ஆனால் எங்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறீர்கள், எவ்வளவு நேரம் காத்திருப்பது, அதனால் கைது செய்கிறோம் என அந்த போலீஸ் அதிகாரி கூறுகிறார். 

சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: "சென்னை மாநகர காவல் துறை என்னை கைது செய்ய வந்திருக்கிறது. நான் இன்நும் கதவை திறக்கவில்லை, வழக்கறிஞர் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். போலீஸாரோ உடனே கதவை திறங்கள் என்கிறார்கள். 

அக்டோபர் இறுதியில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து ஒரு சம்மன் வந்தது. என்ன வழக்கு என பார்த்தால், ரெட்டன் ஃபாலோ என்ற ஒரு படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன் என்பவர் கடந்த ஜூன் 30ஆம் தேதி என் அலுவலகத்திற்கு வந்து என்ன பத்தி அந்த வீடியோவில் தப்பா பேசிட்டீங்க, அந்த வீடியோவை நீக்குங்கள் என சொன்னதாகவும் நான் , மாலதி உள்ளிட்டோர் சேர்ந்து அவரை அடித்து ரூ 10 லட்சம் கொடுத்தால்தான் வீடியோவை நீக்குவோம் என சொன்னதாகவும் அப்போது அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு விட்டதாகவும் அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

"இதற்கு பதிலளிக்கும் விதமாக இது முழுக்க பொய் வழக்கு. இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் என யாரும் என் அலுவலகத்திற்கு வரவில்லை. இதை என்னுடைய விளக்கமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நவம்பர் 1ம் தேதியே பதில் கடிதம் அனுப்பி விட்டேன். இதுவரை காவல்துறை தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. 

நேற்று இரவு ஒரு முறைகேடு குறித்து விவரங்களை வெளியிட்டதும் அதிகாலையில் இதே வழக்கில் கைது செய்ய போலீஸார் வந்துள்ளனர். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க வழக்கறிஞர் வந்த பிறகு தான் கதவு திறக்கப்படும் என்று கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

தற்போது சவுக்கு சங்கரின் வீட்டுக் கதவை உடைக்க கடப்பாரையுடன் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் லிப்டில் கடப்பாரையுடன் செல்லும் காட்சி, வீட்டுக் கதவை இடிக்க முயலும் காட்சிகளையும் சவுக்கு சங்கர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

தனது சமூகவலைதள பக்கத்தில் அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்ட சவுக்கு சங்கர், தனது வீட்டுக் கதவை உடைக்க கடப்பாரையுடன் தீயணைப்புத் துறையினர் வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். 

மேலும் அவர்கள் அவரது வீட்டு ஃலிப்டில் செல்வது போலவும், சவுக்கு சங்கரின் வீட்டு கதவை திறப்பது போன்றும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். 

சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த போராட்டத்தில் தற்போது சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM

புதுடெல்லி,

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏதோ தவறு நடக்கிறது' என குறிப்பிட்டு, வழக்கில் உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்த்து பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமிபுரத்தில், செப்டம்பர் 27ல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க, தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.மனு தாக்கல் இதற்கிடையே, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தனி நீதிபதி செந்தில் குமார், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார்.

இது, சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு மாறாக இருந்தது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு, ஒரு நபர் கமிஷனை ரத்து செய்து அக்டோபரில் உத்தரவிட்டது.

மேலும், கரூர் சம்பவத்தை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டதோடு, அதை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டது.

இந்நிலையில், ஒரு நபர் கமிஷன், சிறப்பு புலனாய்வு குழு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடுகையில், ''ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். இது, சி.பி.ஐ., விசாரணையில் தலையிடாது.

''கூட்ட நெரிசல் சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க விதிமுறைகளை வகுக்கவும், பரிந்துரைகளை வழங்கவுமே ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது,'' என்றார்.

இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், எல்லாமே நியாயமாகவும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

நோட்டீஸ் பொதுக்கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எப்படி குற்றவியல் ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம்.

அங்கு ஏதோ தவறு நடக்கிறது. உயர் நீதிமன்றத்தில் நடப்பது எதுவும் சரியாக இல்லை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்க்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

திட்டவட்டம் 

அங்கு வழக்குகளை பட்டியலிடுவது, விசாரிப்பதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்வோம். அதன்பின், மற்ற விஷயங்களை பற்றி விசாரிக் கலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்தி வைத்தனர்.

அதே சமயம், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய இடைக்கால உத்தரவில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என, நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.

விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம் 

கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, சி.பி.ஐ., -- எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீசார் வழங்கிய ஆவணங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் த.வெ.க., தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக, விஜய்க்கு டில்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, December 12, 2025

‘ஜெயிலர் – 2’ படப்பிடிப்பில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

 

பதிவு:  வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12, 2025, கார்த்திகை 26,  விசுவாவசு வருடம் 04-10: PM

சென்னை, 

‘ஜெயிலர்–2’ படப்பிடிப்பு தளத்தில் இன்று தனது 75–வது பிறந்த நாளை நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார்.

வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் ரஜினிகாந்த். அவருடன் இயக்குநர் நெல்சன் உள்பட ஜெயிலர் 2 படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டினர்.

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படையப்பா இன்று ரீ– ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. படையப்பா படத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்த ரஜினியின் ரசிகர்கள், கட்–அவுட்டுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

சென்னை ரோகினி திரையரங்கில் படையப்பா ரீ–ரிலீஸை லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் பார்த்தனர். சென்னை காசி திரையரங்கில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பார்த்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த வீட்டின் முன் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்ததால், அவரை காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின் ரசிகர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், “ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். படையப்பா படம் ரீ-ரிலிஸ் செய்யப்படுவதற்கு வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களை பாதுகாப்பாக வீடு திரும்ப லதா ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...