Wednesday, December 31, 2025

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

 




பதிவு: புதன்கிழமை, டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம் 11:40 AM


சென்னை,

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!

புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு திராவிடப் பொங்கல் களைகட்டட்டும்!

உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு ‘மறுப்பது’ ஏன்?

 

பதிவு: புதன்கிழமை, டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம் 02:40 AM

சென்னை,

2026, ஜனவரி 20-ம் தேதி, ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கூடுகிறது. இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், சட்டம் - ஒழுங்கு விவகாரம் என்று தமிழக அரசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன பிரச்சினைகள்.

“தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சியை கவனிப்பதா? ஆட்சிக்கு ‘செக்’ வைக்கும் போராட்டங்களில் தலையிடுவதா என திண்டாடும் திமுக, மனசாட்சியோடு கவனிக்க வேண்டிய ஒன்று, கடைநிலை ஊழியர்களான தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம்” என்று பொதுவெளியில் கூட பரவலான பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன.

அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணிகளை நிர்வகிப்பது தனியார்மயம் ஆக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தால் அந்தப் பணிகள் நிரந்தரம் செய்யப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

வாக்குறுதி எண் 285

‘தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வுதியம் சம்பந்தமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்’ என வாக்குறுதி எண் 285-ல் திமுக தெரிவித்திருந்தது. அதனால் தான் ”சொன்னது என்னாச்சு?” என்று அரசுக்கு கேள்வி கேட்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக அரசியல் செய்யும் தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை குரல் கொடுக்கின்றனர்.

ஆகஸ்டில் அதிரவைத்த போராட்டம்

கடந்த ஆகஸ்ட் மாதம் ‘தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு 10 நாட்களுக்கும் மேலாக நடத்திய போராட்டம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 11 மண்டலங்களுக்கான திடக்கழிவு மேலாண்மை சார்ந்த பணிகள் கடந்த அதிமுக காலத்திலேயே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய இரண்டு மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ‘சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் லிமிடெட்’ என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்குத் தேவைப்படும் 3,809 தூய்மைப் பணியாளர்களில் ஏற்கெனவே தற்காலிகப் பணியாளர்களாக இருக்கும் 2,034 பேருக்கு முன்னுரிமை அளித்து எடுத்துக்கொள்வதாக அந்நிறுவனம் கூறியது.

எனினும், இந்தத் தொழிலாளர்கள் பெற்ற ஊதியமான ஏறக்குறைய ரூ.23,000 என்பது இனி ரூ.16,000 ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 12 நாள் தற்செயல் விடுப்பு, 12 நாள் ஈட்டிய விடுப்பு, தேசிய விடுமுறையின்போது வேலை செய்தால் இரண்டு மடங்கு ஊதியம், ரூ.11.52 லட்சம் மதிப்பில் விபத்துக் காப்பீடு போன்றவை அவர்களுக்கு முன்வைக்கப்பட்டாலும், ஊதியக் குறைப்பு என்பதை தூய்மைப் பணியாளர்கள் கடுமையாக எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஆனால், அவர்களை நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது செய்தது காவல் துறை. நீதிமன்ற வழக்குகள் மூலம் அவர்களுக்கு ஊதியம் குறைக்கப்படக் கூடாது என்ற தீர்ப்பு வெளியாகி சிறு ஆறுதலாக அமைந்தது.

கேட்டது என்ன? கொடுக்கப்பட்டது என்ன? - ஆனாலும் கூட அரசு பணி நிரந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மாறாக, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு, தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால், நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவி, தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தினர் சுய தொழில் தொடங்கும்போது அத்தொழில் திட்ட மதிப்பீட்டில் 35% தொகை அதிகபட்சமாக ரூ.3,50,000 மானியம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக புதிய உயர்கல்வி உதவித் தொகை, தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் என 6 அறிவிப்புகளை வெளியிட்டது.

இவற்றில் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நவ.15-ம் தேதி தொடங்கி வைத்தார். டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

ஏற்கெனவே தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் பல மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு எதிர்ப்புக் குரல் வலுக்கவே, அத்தகைய நடவடிக்கை இப்போதைக்கு இல்லை என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும் கூட, பிப்ரவரியில் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட டெண்டரை புதுப்பித்து வெளியிடலாம் என்ற தகவல்களும் இருக்கின்றன.

கேள்விக்குள்ளாகும் அரசின் வாதம்

அரசுத் தரப்பில் இந்த தனியார்மயமாக்கலுக்கு கூறப்படும் காரணம் விவாதப் பொருளாகியுள்ளது. சென்னையில் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்தான், தனியார் நிறுவனங்களின் கீழும் அதே பணியை மேற்கொள்ளப் போகிறார்கள்.

அவ்வாறு இருக்கும்போது, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால்தான் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றால், அது தூய்மைப் பணியாளர்களின் தவறு இல்லை; மாறாக மாநகராட்சியின் நிர்வாகத் திறமையின்மைதான் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

எகிறும் விலைவாசி உயர்வுக்கு இடையே, நாம் குப்பைத் தொட்டியைக் கடக்கவே மூக்கை மூடிக் கொண்டு செல்லும் சூழலில் அதிலேயே உழன்று உழைக்கும் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தில் கைவைத்து, தனியார் நிறுவனங்களை சுரண்ட அனுமதிப்பது என்ன நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் வினவுகின்றனர்.

மீண்டும் எழும் குரல்

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இன்றைக்கு மட்டும் கருணாநிதி நினைவிடம், சென்னை அண்ணாசாலையில் உள்ள கருணாநிதி சிலை, தலைமைச் செயலகம் என 3 மூன்று இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராடி கைதாகியுள்ளனர்.

அண்மையில் செவிலியர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஒரு தற்காலிக தீர்வு கிடைத்தது. பொங்கல் பண்டிகைக்குள் 700+ செவிலியர்களுக்கு பணி நிலைப்புக் கடிதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. எல்லா போராட்டங்களுக்கும் ஏதேனும் ஒரு அடுத்த நகர்வு இருக்க, நம் கோரிக்கைகள் மட்டும் கிடப்பிலேயே இருக்கின்றதே என்று மீண்டும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர் தூய்மைப் பணியாளர்கள்.

இதற்கிடையில், உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் வழக்கறிஞர் K.பாரதி, அளித்த பேட்டியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், கோரிக்கைகள், அரசின் நிலைப்பாடு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதன் விவரம்:

“தூய்மைப் பணியாளர்கள் கடைநிலை ஊழியர்கள், சாமானியர்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் சொற்பம். பெரும்பாலும் பெண்கள் இப்பணியில் இருக்கிறார்கள். இவர்களில் பலர் கணவரால் கைவிடப்பட்டவர்கள், குடி நோயால் உயிரிழந்தவர்களின் மனைவி என்றுள்ளனர். அவர்களுக்கு இந்த 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் மிகவும் முக்கியம்.

ஏற்கெனவே தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் அது நினைத்தால் எந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்யலாம் என்ற அதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ளது. அப்படியிருக்க மாநகராட்சி ஊழியராக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்துவிட்டு, தூய்மைப் பணியை தனியாருக்கு அரசு தாரை வார்த்ததால் பணி நிலைப்பும் இல்லாமல், உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள் பணி செய்ய வேண்டும். அதுவும் புதிய பணியாளரைப் போல் பணி செய்ய வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்கள் அவர்கள் ப்ராஜக்ட் உள்ள எந்த இடத்துக்கும் வேண்டுமானால் இந்த தொழிலாளர்களை பணியிட மாற்றம் செய்ய முடியும். மேலும், ஊதியத்தையும் குறைக்க முடியும். இது எல்லாம் ஒரு கடைநிலை ஊழியருக்கு நேருமென்றால், அதை அரசு வேடிக்கை பார்க்கும் என்றால் அது அநியாயம் இல்லையா?

அரசாங்கம், சென்னையில் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு தூய்மைப் பணியை மேற்கொள்ளும் பட்சத்தில் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடும் பெருந்தொகையை விட சொற்பமான செலவே ஆகும். ஆனால் புயல், மழை, வெள்ளம், கரோனா என பல பேரிடர்களிலும் திறம்பட வேலை செய்து பணியாளர்களை தூக்கி எறியும் வகையில் தனியாருக்கு மாநகராட்சி மண்டலங்களை தாரை வார்க்கிறது.

எங்களுடைய பிரதான கோரிக்கை... 

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் மாநகராட்சியில் பணி வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பிய தூய்மைப் பணியாளர்களைத் தாண்டியும் பணியில்லாமல் 1500-க்கும் அதிகமானோர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வழங்கும் அளவுக்கு சென்னை மாநகராட்சியில் காலிப் பணியிடங்களும் இருக்கின்றன. அது மட்டுமல்லாது தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும் கூட, அரசாங்கம் நினைத்தால் பணி நிலைப்பு செய்யலாம். இதை முந்தைய காலக்கட்டங்களில் எதிர்க்கட்சியிலிருந்த இப்போதைய முதல்வரே சொல்லியிருக்கிறார்.

செவிலியர்கள் போராடினால் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் ஆனால் தூய்மைப் பணியாளர்களை அழைத்து ஏன் இந்த அரசு பேச மறுக்கிறது? இவர்களைத்தான் பணிநீக்கம் செய்து தூக்கி எறிந்துவிட்டோமே; இனி எதற்கு ஆவார்கள் என்ற மனப்பான்மையா? இவர்களால், தேர்தல் நேரத்தில் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற ஏளனமா என்று தெரியவில்லை.

தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தம் செய்யப்படும் என்று கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்த இந்த அரசு, இந்தத் தேர்தலில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறது?!. தூய்மைப் பணியாளர்கள் பற்றி எதுவுமே பேசாமல் புறக்கணிக்கப் போகிறார்களா?

சென்னையில் நடக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும். இதை அரசும் உணர்ந்திருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்பட அரசே விரும்பினாலும் கூட யாரோ சில அமைச்சர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சினைகள் இருக்குமோ என்றளவுக்குக் கூட யோசிக்கத் தூண்டுகிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றை தன் பொறுப்புக்குள் வைத்திருக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும் இடையேயான ஈகோவும் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை இழுபறியாக இருக்கக் காரணம் என்று யோசிக்கத் தோன்றுகிறதி.

நான் கடந்த டிச.18 அன்று அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை மனுவை அளித்தேன். அவர் டிச.21-க்குப் பிறகு மீண்டும் சந்திப்பதாக சொன்னார். அதன் பின்னர் ஒரு வாரம் ஆகியும் கூட இதுவரை எந்தவித அசைவும் அந்தப் பக்கம் இருந்து இல்லை. இந்தச் சூழலில் நாங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளோம். ஒருவேளை ஈகோ பிரச்சினைதான் இழுபறிக்குக் காரணம் என்றால் இதை முதல்வரும், துணை முதல்வரும் தலையிட்டுத் தீர்க்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் தொடர்ச்சியாக 150-க்கும் மேற்பட்ட நாட்கள் போராட்டம் நடந்துள்ளது என்றால் அது தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தான். எங்களுக்கு அரசை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணமில்லை, நாங்கள் அரசு விரோதிகள் இல்லை. தூய்மைப் பணியாளர்கள் பரம ஏழைகள், பெரும்பாலும் பட்டியலின மக்களாக உள்ளனர். சமூகப், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு நாங்கள் நீதி கேட்கிறோம்” என்று அவர் கூறினார்.

Tuesday, December 30, 2025

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் - டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 9 மணி நேரம் விசாரணை - ஆனந்த், ஆதவ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் ஆஜர்

பதிவு: செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம் 02:20 AM


சென்னை,


 டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராக வந்த தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார்.


கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களிடம் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த, வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

பின்னர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ வழக்கு பதிவு செய்து, கரூரில் ஆய்வு செய்து தகவல்களை திரட்டியது. வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தவெக நிர்வாகிகளிடமும் நவ.24, 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது.

சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் டிச. 2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தவெக மாநில நிர்வாகிகளிடமும் சிபிஐ விசாரித்தது. இதற்கிடையே, உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

மேலும், அடுத்தகட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நேற்று ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதிய

ழகன் மற்றும் ஆட்சியர், எஸ்.பி.உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அனைவரும் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, விஜய் பிரச்சாரக் கூட்டத்துக்கு செய்திருந்த ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்த செயல்படுத்திய திட்டங்கள் குறித்த ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கினர்.

அதை படித்துப் பார்த்த அதிகாரிகள், ‘‘எத்தனை பேர் வருவதாக கூறி அனுமதி பெற்றீர்கள், எத்தனை பேர் வந்தனர், நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக பேரை திரட்டினீர்களா அல்லது அவர்களாகவே வந்தனரா, நெரிசல் ஏற்பட்ட உடனே மீட்பு பணிகளில் கவனம் செலுத்தினீர்களா?’’ என்பது உட்பட 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டுள்ளனர். சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளித்தவர்கள் ஒருசில கேள்விகளுக்கு சிறிது நேரம் அவகாசம் எடுத்து பதில் அளித்துள்ளனர். அனைத்தையும் எழுத்து மூலமாக பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

ஆட்சியர், எஸ்.பி.யும் ஆஜர்கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி.ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். அவர்களிடமும் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 9 மணி நேரம் நீடித்து,இரவு 7.30 மணி அளவில் முடிந்தது. விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் இன்றும் ஆஜராக உள்ளனர்.

விஜய்யிடம் விசாரிக்க திட்டம்

தேவைப்பட்டால் விஜய் உட்பட மேலும் சிலரிடமும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விசாரணை முடிந்து இரவு வெளியே வந்த நிர்மல் குமார், செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘சம்மன் பேரில், தவெகவை சேர்ந்த 4 பேரும் ஆஜரானோம். சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளோம். கரூரில் என்ன நடந்தது என்பது உலகத்துக்கே தெரியும். சிபிஐ அதிகாரிகளுக்கு தேவையான விளக்கத்தையும், முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளோம்’’ என்றார்.

Monday, December 29, 2025

சம வேலைக்கு சம ஊதியம் கோரி 3-வது நாளாக போராட்டம் - சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கைது

 

பதிவு: திங்கள்க்கிழமை, டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம் 05:30 AM

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டிபிஐ வளாகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட் டனர்.

அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலர் ப.சந்திரமோகன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் அமர்ந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராடிய ஆசிரியர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வாகனங்களில் ஏற்றி வெளியேகொண்டு சென்றனர். நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைதான நிலையில் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அனுப்பி வைத்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Sunday, December 28, 2025

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்தது: டிசம்பர் 30-ல் மீண்டும் நடைதிறப்பு

  

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 28, 2025 மார்கழி 13, விசுவாவசு வருடம் 03-45: AM

குமுளி, 

சபரிமலை​யில் 41 நாள் தொடர் வழி​பாட்​டுக்​குப் பிறகு நேற்று மண்டல பூஜை நடை​பெற்​றது. முன்னதாக, ஆரன்​முலா பார்த்​த​சா​ரதி கோயி​லில் இருந்து கொண்​டு​வரப்​பட்ட தங்க அங்​கியை தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு, மேல்​சாந்தி ஆகியோர் ஐயப்​பனுக்கு நேற்று முன்தினம் அணி​வித்​தனர்.

உச்ச நிகழ்​வாக நேற்று நடைபெற்ற மண்டல பூஜையை யொட்​டி அதி​காலை 3 மணிக்கு நடை திறக்​கப்​பட்டு நிர்​மால்ய பூஜை, நெய் அபிஷேகம் உள்​ளிட்ட வழி​பாடு​கள் நடை​பெற்​றன. காலை 10.30 மணிக்கு ஐயப்​பனுக்கு தங்​கக் கவசம் அணிவிக்​கப்​பட்டு மகா தீபா​ராதனை நடை​பெற்​றது. தொடர்ந்​து, பக்​தர்​கள் சுவாமியை வழிபட்​டனர்.

மீண்டும் 30-ம் தேதி... இரவு 10.45 மணி வரை பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​பட்​டனர். பின்​னர் கோயில் நடை சாத்​தப்​பட்​டது. ஜன. 14-ம்

தேதி மகரபூஜை நடை​பெற உள்​ளது. இந்த வழி​பாட்​டுக்​காக வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்​டும் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது. வரு​வாய் அதி​கரிப்பு திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு தலை​வர் கே.ஜெயக்​கு​மார் கூறும்​போது, “இந்த மண்டல காலத்​தில் கோயிலுக்கு ரூ.332.77 கோடி வரு​மானம் கிடைத்துள்ளது. கடந்த சீசனை​விட இம்​முறை வரு​வாய் அதி​கம். மகர​விளக்​குக்கு நடை​திறக்​கும் போது 12 லட்​சம் டின் அரவணை இருப்பு வைக்​கப்​படும்.

ஜன. 20-க்​குப் பிறகு தபால் மூலம் அரவணை​யைப் பெற்​றுக்​கொள்ள ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. பக்​தர்​களுக்கு கூடு​தல் வசதி செய்​வது தொடர்​பாக வரும் 29-ம் தேதி திரு​வனந்​த​புரத்​தில் ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தப்​படும். புல்​மேடு வனப்​பாதை​யில் உள்ள பிரச்​சினை​கள் தீர்க்​கப்​படும்” என்​றார்.

Saturday, December 27, 2025

சபரிமலையில் இன்று மண்டல பூஜை.. அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை

 

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 27, 2025 மார்கழி 12, விசுவாவசு வருடம் 05-45: AM

சபரிமலை,

தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ந்தேதி) முதல் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்து வருகிறது.

மண்டல சீசனின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. பொதுவாக மண்டல பூஜையையொட்டி, திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தங்க அங்கி, பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மண்டல பூஜைக்காக கடந்த 23-ந்தேதி இந்த கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.

இந்த தங்க அங்கி நேற்று மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேர்ந்தது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வந்தனர். மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்த தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தங்க அங்கியை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து 18-ம் படி வழியாக எடுத்து செல்லப்பட்டு மாலை 6.15 மணிக்கு அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அலங்கார தீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜையை தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் தங்க அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் அய்யப்பனுக்கு காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரை மண்டல சிறப்பு பூஜை நடைபெறுகிறது

Thursday, December 25, 2025

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை

 

பதிவு:  புதன்கிழமை,  டிசம்பர் 25, 2025, மார்கழி 10, விசுவாவசு வருடம்,  04-10: PM

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அங்கு மாட்டு கொட்டகையில், கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில் குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். அரசியல் தலைவர்கள் பலரும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் மக்களுடன் கலந்து கொண்டார். பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கான பிரார்த்தனை நடைபெற்றது. அதன் பிறகு பாதிரியார்களிடம் கலந்துரை யாடினார். மேலும் அங்குள்ள அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லியில் உள்ள பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்துகொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணை என காலத்தால் அழியாத செய்திகளை இந்த கூட்டம் பிரதிபலித்தது. கிறிஸ்துமசின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்கு விக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை - தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

 

பதிவு:  புதன்கிழமை,  டிசம்பர் 25, 2025, மார்கழி 10, விசுவாவசு வருடம்,  04-00: PM

சென்னை,

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. ஸ்டார்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றதால் அதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கரைபுரண்டது. மக்கள் ஒருவொருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு முழுக்க கூடுதல் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட உள்ளனர்.

சென்னை சாந்தோமில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க புனித தோமையார் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கனக்கான கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்று உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.மேலும், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் குறிப்பாக சென்னை சாந்தோம் புனித தோமையார் தேசிய தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 25 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது.

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பகிர்ந்தளிக்கப்பட்டது .சமய வேறுபாடுகளைக் கடந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தெரிவித்தார்

இதே போல் சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பேராலயத்தில் அருட்தந்தை தீபக் அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

வேளாங்கண்ணி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று விடியற்காலை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வேளாங்கண்ணி விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார். அதனைத்தொடர்ந்து பங்கு தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்கு தந்தைகள் திருபூஜகளை நடத்தினர். அந்த திருப்பலிகள் நிறைவில் ஏசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை ஏசு சொரூபத்தை பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு, குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.

இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Tuesday, December 23, 2025

பாகுபலி ராக்கெட்டுக்கான 24 மணிநேர கவுண்ட்டவுன் - இன்று தொடங்குகிறது

 

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 23, 2025, மார்கழி 8, விசுவாவசு வருடம்,  06-00: AM

சென்னை,

ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் , ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் ஏவுகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட‘புளூபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்குகிறது.

Monday, December 15, 2025

“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ் என்று எதிரிகள் புலம்புகிறார்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

                                       

பதிவு:  திங்கட்கிழமை, டிசம்பர் 15, 2025, கார்த்திகை 29,  விசுவாவசு வருடம் 04-00: AM

திருவண்ணாமலை,

“உதயநிதி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார். கொள்கை எதிரிகள், “உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று புலம்புகிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு திமுக இளைஞரணி தலைவரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இம்மாநாட்டில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 1.30 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “எதிரில் இருக்கும் உங்களைப் பார்க்கும்போது, ஒரு ஐம்பது ஆண்டுகள் டைம்-டிராவல் செய்து பின்னால் சென்றது போன்று எனக்கு இருக்கிறது. உங்களைப் போன்ற இளைஞனாக கிராமம் கிராமமாகத் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, இந்த இளைஞரணியை வளர்த்தெடுத்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது. எத்தனை ஞாபகங்கள்? இரவு பகல் பார்க்காமல், தூக்கம் இல்லாமல், கிராமங்கள்தோறும் கொடி ஏற்றம், திண்ணை பிரச்சாரம், நாடகம், பொதுக்கூட்டம் எனக் கழக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். அப்படி உழைத்து, வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட கழகத்திற்கு, புது இரத்தமாக வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது - புது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பிறக்கிறது! அதுமட்டுமல்ல, உங்களுடைய எனர்ஜி எனக்கும் ‘டிரான்ஸ்பர்’ ஆகியிருக்கிறது. இந்த மாபெரும் இயக்கத்தைப் பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது, அவருக்கு வயது, 40. கலைஞருக்கு 25 வயதுதான். பேராசிரியர், நாவலர் என்று பலரும் அவர்களின் இருபதுகளில்தான் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் எப்படி ஃபயராக இருந்தார்கள் என்பதற்கு, ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்.

1941-இல் கலைஞர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவுக்கு, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனிடம் இருந்து, ஒரு வாழ்த்துப்பா வந்தது. அந்த வாழ்த்துப்பாவில் புரட்சிக்கவிஞர் எழுதிய வரிகள்தான் “கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக்கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை!” இந்த வரிகளைக் கேட்கும்போதே, அந்த இளைஞர்கள் எப்படி ஃபயராக இருந்திருப்பார்கள் என்று உங்களுக்குப் புரியும்! அந்த ஃபயர்பிராண்ட்-தான், நம்முடைய திமுக.

எது எதெல்லாம் இந்த தமிழ்ச் சமுதாயத்தைப் பின்னுக்கு இழுக்குமோ. எது எதெல்லாம் தமிழ்நாட்டை இருட்டிற்குள் தள்ளுமோ அது எல்லாவற்றையும் எதிர்த்து, தோற்கடித்து, புது வரலாறு படைத்தோம். சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இங்கு எதையும் செய்துவிடவில்லை. தெருத்தெருவாக வீடு வீடாக சென்று பேசி, டீக்கடையையும் சலூனையுமே, அரசியல் மேடைகளாக மாற்றி, மக்களை எஜுகேட் செய்தோம். உலக வரலாற்றையெல்லாம் சொல்லி, நாம் ஏன் இன்னும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்று எடுத்துச் சொல்லி, மக்களுக்குள் நல்ல மாற்றத்திற்கான விதையை, சிந்தனையாக விதைத்தார்கள்.

அண்ணா பேசுகிறார்… கலைஞர் பேசுகிறார்… நாவலர் பேசுகிறார்… பேராசிரியர் பேசுகிறார் என்று சொன்னால், மக்களும் குடும்பம் குடும்பமாக வந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார்கள். அவர்கள் பேச்சில் சொன்னதையெல்லாம், மக்கள் அவரவர்களின் ஊரில் எடுத்துச் சொன்னார்கள். திராவிட இன உணர்வை வளர்த்தார்கள். தமிழை நசுக்க வந்த இந்தி ஆதிக்கத்தை விரட்டினார்கள்.

இப்போது அந்த பணியைத் தம்பி உதயநிதியிடமும், உங்களிடமும் ஒப்படைத்திருக்கிறோம். அவரும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார். கொள்கை எதிரிகள், “உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று புலம்புகிறார்கள்.

அந்த அளவிற்குக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார். கழகத்திற்கு எது தேவை என்று, உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி. முதலில், அணியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று லட்சக்கணக்கான இளைஞர்களைக் கழகத்தில் சேர்த்தார். அடுத்து, அவர்களை கொள்கை ரீதியாக ஸ்டாராங் ஆக்க வேண்டும் என்று பாசறைக் கூட்டங்கள் நடத்தினார். அடுத்து, நம்முடைய கொள்கைகளை இன்றைக்கு இருக்கும் தலைமுறையினரும் புரிந்துகொள்ள, புது பேச்சாளர்கள் அவசியம் என்று உணர்ந்து, ஃபர்ஸ்ட் செட்டில் இருநூறு பேரை உருவாக்கியிருக்கிறார். அவர்களின் பேச்சையெல்லாம், கழக மேடைகளில் கேட்கும்போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்போது நம்முடைய தோளில், தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும் காக்க வேண்டிய கடமை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவையும் நாட்டின் பன்மைத்துவத்தையும் காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிராக கருத்தியல் போர் செய்துகொண்டு இருக்கும் ஒரே மாநிலக் கட்சி, திமுகதான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது, நம் தமிழ்நாட்டை மட்டும்தான். அதனால்தான் அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல். அண்மையில் கூட, என்ன பேசினார்? பீகாரை ஜெயித்துவிட்டோம், “அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார்!

அமித்ஷா அவர்களே. நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. இது தமிழ்நாடு! எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே. அன்புடன் வந்தால், அரவணைப்போம். ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம். எதிர்த்து நிற்போம். உங்களை ஜெயித்துக் காண்பிப்போம்.

அரசியலில் சொகுசு எதிர்பார்க்காதீர்கள். இங்கு கடுமையாக உழைப்பவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும். அந்த இடம், கட்சிப் பொறுப்பில் மட்டுமல்ல; மக்கள் மனதிலும் நிரந்தரமாக இருக்கும். பேரறிஞர் அண்ணா , கலைஞரின் உழைப்பை பாராட்டினார். கலைஞர் என்னைப் பற்றி சொல்லும்போது “உழைப்பு… உழைப்பு… உழைப்பு” என்றுதான் சொல்வார். இப்போது நானும் தம்பி உதயநிதி அவர்களின் உழைப்பைப் பார்க்கிறேன். அதே உழைப்பைத்தான் உங்களிடமும் எதிர்பார்க்கிறேன். அந்த உழைப்புக்கு இளைஞரணிப் படை தயாரா?

கடந்தகால ஆட்சியாளர்கள், செய்த தவறுகளை, குற்றங்களை, துரோகங்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்கள் மீண்டும் வந்தால், தமிழ்நாடு என்னென்ன ஆபத்துகளைச் சந்திக்கும் என்று மக்களிடம் சொல்லுங்கள். நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்குத் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கும், நம்முடைய திட்டங்களைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள். நான் உறுதியோடு சொல்கிறேன், நாட்டில், ஏன் உலகத்திலேயே எந்த ஆட்சியும் நாம் செய்திருக்கும் அளவிற்கு முத்திரைத் திட்டங்களைச் செய்திருக்க மாட்டார்கள்.

நீங்களே பார்த்திருப்பீர்கள்… நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடைபவர்களின் பேட்டிகளை, பல்வேறு ஊடகங்கள் வெளியிடுகிறார்கள். அப்படி, பேட்டி அளித்த ஒரு தாய் பேசினார்கள். தன்னுடைய பிள்ளைகள் பணம் அனுப்பவில்லை என்றாலும், தனக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்க, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உதவியாக இருக்கிறது என்று சுயமரியாதை உணர்வுடன் பேசினார்கள்.

2026 தேர்தலில், மக்கள் முன்னால் இருக்கும் கேள்வி என்ன என்றால், “இன்னும் ஐம்பது ஆண்டுகள் முன்னோக்கி நடைபோட போகிறோமா? இல்லை. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா?” அந்தக் கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகும் விடை: “திராவிட மாடல் ஆட்சி 2.0” அதற்கு நீங்கள் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஏன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழினத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. அந்த எதிர்காலம், வளம் நிறைந்ததாக, ஒளி நிறைந்ததாக தமிழ்நாடு நம்பர் ஒன் என்று சிங்கநடை போடுவதாக அமைய வேண்டும். நீங்கள்தான் திராவிட மாடல் 2.0 அடித்தளமாக, இருக்க வேண்டும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

 

பதிவு:  திங்கட்கிழமை, டிசம்பர் 15, 2025, கார்த்திகை 29,  விசுவாவசு வருடம் 02-30: AM

தர்மசாலா,

முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அபிஷேக் சர்மா அதிரடியாக தொடங்கினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 117 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மார்கரம் 61 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அபிஷேக் சர்மா அதிரடியாக தொடங்கினார். மறுமுனையில் சுப்மன் கில் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

வெறும் 4.1 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களை கடந்து அசத்தியது. முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்களில் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அபிஷேக் சர்மா 35 ரன்களில் (18 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மா களமிறங்கினார்.

முந்தைய போட்டிகளில் சொதப்பிய சுப்மன் கில் இந்த ஆட்டத்தில் பொறுப்பாக ஆடினார். திலக் வர்மா , கில் இணைந்து நிலைத்து விளையாடினர்.கில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் அடித்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Sunday, December 14, 2025

புதிய கட்சி தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்?

 


பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 07-00: PM

சென்னை,

அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் ஓபிஎஸ் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை கழகமாக மாற்றி இருக்கிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வரும் அவர், அதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை துவங்கி செயல்பட்டு வந்தார்.

எப்படியும் அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டு விடுவது என்ற முனைப்பில் இருந்த ஓபிஎஸ், அதில் எவ்வித முன்னேற்றத்தையும் அடையாத நிலையில் இருந்தார். தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த அவர், டிசம்பர் 15ல் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து புதிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்து இருந்தார்.

பின்னர் அந்த கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்து, டிசம்பர் 24ல் எம்ஜிஆர் நினைவு தினத்தில் தமது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்கி உள்ளார். தான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருக்கிறார்.

ஆனால் தமது அமைப்பை கட்சியாக மாற்றி உள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மாறாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் ஊழியர்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இதுநாள் வரையில், அமைப்பின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வந்த அவர், முதல் முறையாக அமைப்பை கழகமாக மாற்றி அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிக்கையில் கட்சி தலைவர், பொதுச் செயலாளர் யார் என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை.

எப்போதும் போல கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் என்று தமது பொறுப்புகளை குறிப்பிட்டு கையெழுத்தை மட்டும் ஓபிஎஸ் இட்டுள்ளார். தமது கட்சியை அவர் முறைப்படி தேர்தல் கமிஷனில் பதிவு செய்துவிட்டாரா என்பது குறித்தும் எவ்வித தகவல்களும் இல்லை.

இதற்கு முன்னர் கடந்த 14ம் தேதி தான் நடத்தி வரும் அமைப்பின் பெயரில் கடைசியாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் தலைமைக் கழகம், 154, பசுமை வழிச்சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,சென்னை-600028 என்ற முகவரி இடம்பெற்று இருந்தது.

தற்போது அமைப்பை கழகமாக மாற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் முகவரி மாறி இருக்கிறது. இதில் தலைமைக்கழகம், 38/31, 38/2, சேமியர்ஸ் ரோடு, நந்தனம், சென்னை- 600035 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், இரண்டு அறிக்கையிலும் 93423 14327 என்ற செல்போன் எண் மட்டும் மாறாமல் இடம்பெற்றுள்ளது.

ஜனவரி 13–ந் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் - விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாடுகிறார் - 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

 

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 05-00: PM

புதுடெல்லி,

பிரதமர் மோடி தமிழக விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் இந்த கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையும் அதிமுக கூட்டணியில் இணையுமாறு பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

3 நாட்கள்

இந்நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை மையமாக கொண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் அவர் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார். 

அதன்படி, ஜனவரி 13ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி ராமேசுவரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ என்ற முழக்க சுற்றுப்பயணத்தின் நிறைவாக புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், 14ம் தேதி பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் பிரதமர் மோடி கொண்டாட உள்ளார்.

கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை

இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தேர்தல் பணிகள், வியூகங்கள் தொடர்பாகவும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

 

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14, 2025, கார்த்திகை 28,  விசுவாவசு வருடம் 05-00: AM

சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் டிச.4-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படிவம் விநியோகம், பூர்த்தி செய்து திரும்ப பெறுவது போன்றவற்றில் சிக்கல்கள் எழுந்தது மற்றும் பருவமழை உள்ளிட்ட காரணங்களால், அவகாசத்தை நீட்டிக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று, எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கும் அவகாசம் டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

டிசம்பர் 16-ல் வரைவு வாக்காளர் பட்டியலும், பிப்ரவரி 14-ல் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டது. படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியும் தொடர்ந்து நடந்தது.

கடந்த 11-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் விநியோகிக்கும் பணி, பூர்த்தி செய்து பெற்ற படிவங்களை பதிவேற்றும் பணி 100 சதவீதம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படிவம் விநியோகம், திரும்பப் பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகளுக்கான அவகாசத்தை டிசம்பர் 14 வரை மேலும் 3 நாட்கள் நீட்டித்து தேர்தல் ஆணையம் 11-ம் தேதி மாலை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, படிவத்தை பூர்த்தி செய்துசமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம் தேதி வெளியாகும். அன்று முதல், ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லதுஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அதன்பின், அவற்றின் மீது பரிசீலனை நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கணக்கீட்டுப் படிவத்துக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதிவாக்காளர் பட்டியல் பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றுமட்டுமே தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது. சரியான தேதி குறிப்பிடப்படவில்லை.

Saturday, December 13, 2025

"The dargah management has not any objection to lighting lamps on the pi...

5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டம்... கடப்பாரையால் கதவை உடைத்து... சவுக்கு சங்கர் கைது

 

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 05-00: PM

சென்னை,

அவதூறாக பேசி தன்னிடம் ரூ 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் அளித்த புகாரின் பேரில் போலீஸார் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. காலை முதலே அவரது வீட்டிற்கு இரு வேன்களில் வந்த போலீஸார் அவரது வீட்டுக் கதவை கடப்பாரையால் உடைத்து கைது செய்ததாக தெரிகிறது. 

இதுகுறித்து சவுக்கு சங்கர் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "நானும் மாலதி, மொத்த சவுக்கு மீடியா டீமும் கைது செய்யப்பட இருக்கிறோம். கீழே இரண்டு போலீஸார் வேன்களில் 20 பேர் காத்திருக்கிறார்கள். 

சம்மனை கொடுங்கள் என எனது வழக்கறிஞர் கேட்டால் கொடுக்க மறுத்து கதவை திறக்க வேண்டும் என தொடர்ந்து சென்னை மாநகர போலீஸார் தன்னை மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் சவுக்கு சங்கரை கைது செய்ய போலீஸார் அதிகாலையிலேயே அவரது வீடு முன்பு குவிந்ததாக தெரிகிறது. 

அவர்கள் வந்ததை அறிந்த சவுக்கு சங்கர் கதவை திறக்க மறுத்துவிட்டாராம். இதை காவல் துறை அதிகாரி ஒருவர் தனது உயர் அதிகாரிக்கு போனில் தகவல் கொடுத்தார். "சார் தனது அட்வகேட் வந்தால் மட்டுமே கதவை திறப்பேன் என்று கூறுகிறார்" என்று அந்த காவல் துறை அதிகாரி தெரிவிக்கிறார். 

அவர் மேலும் இன்னொருவரிடம் கூறுகையில், 3 வழக்கறிஞர்கள் வந்தும் எங்களை வீடியோதான் எடுக்கிறார்கள். சம்மனை ஏற்கெனவே அவருக்கு அனுப்பிவிட்டோம். ஆனால் எங்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறீர்கள், எவ்வளவு நேரம் காத்திருப்பது, அதனால் கைது செய்கிறோம் என அந்த போலீஸ் அதிகாரி கூறுகிறார். 

சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: "சென்னை மாநகர காவல் துறை என்னை கைது செய்ய வந்திருக்கிறது. நான் இன்நும் கதவை திறக்கவில்லை, வழக்கறிஞர் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். போலீஸாரோ உடனே கதவை திறங்கள் என்கிறார்கள். 

அக்டோபர் இறுதியில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து ஒரு சம்மன் வந்தது. என்ன வழக்கு என பார்த்தால், ரெட்டன் ஃபாலோ என்ற ஒரு படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன் என்பவர் கடந்த ஜூன் 30ஆம் தேதி என் அலுவலகத்திற்கு வந்து என்ன பத்தி அந்த வீடியோவில் தப்பா பேசிட்டீங்க, அந்த வீடியோவை நீக்குங்கள் என சொன்னதாகவும் நான் , மாலதி உள்ளிட்டோர் சேர்ந்து அவரை அடித்து ரூ 10 லட்சம் கொடுத்தால்தான் வீடியோவை நீக்குவோம் என சொன்னதாகவும் அப்போது அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு விட்டதாகவும் அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

"இதற்கு பதிலளிக்கும் விதமாக இது முழுக்க பொய் வழக்கு. இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் என யாரும் என் அலுவலகத்திற்கு வரவில்லை. இதை என்னுடைய விளக்கமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நவம்பர் 1ம் தேதியே பதில் கடிதம் அனுப்பி விட்டேன். இதுவரை காவல்துறை தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. 

நேற்று இரவு ஒரு முறைகேடு குறித்து விவரங்களை வெளியிட்டதும் அதிகாலையில் இதே வழக்கில் கைது செய்ய போலீஸார் வந்துள்ளனர். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க வழக்கறிஞர் வந்த பிறகு தான் கதவு திறக்கப்படும் என்று கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

தற்போது சவுக்கு சங்கரின் வீட்டுக் கதவை உடைக்க கடப்பாரையுடன் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் லிப்டில் கடப்பாரையுடன் செல்லும் காட்சி, வீட்டுக் கதவை இடிக்க முயலும் காட்சிகளையும் சவுக்கு சங்கர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

தனது சமூகவலைதள பக்கத்தில் அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்ட சவுக்கு சங்கர், தனது வீட்டுக் கதவை உடைக்க கடப்பாரையுடன் தீயணைப்புத் துறையினர் வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். 

மேலும் அவர்கள் அவரது வீட்டு ஃலிப்டில் செல்வது போலவும், சவுக்கு சங்கரின் வீட்டு கதவை திறப்பது போன்றும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். 

சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த போராட்டத்தில் தற்போது சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM

புதுடெல்லி,

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏதோ தவறு நடக்கிறது' என குறிப்பிட்டு, வழக்கில் உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்த்து பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமிபுரத்தில், செப்டம்பர் 27ல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க, தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.மனு தாக்கல் இதற்கிடையே, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தனி நீதிபதி செந்தில் குமார், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார்.

இது, சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு மாறாக இருந்தது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு, ஒரு நபர் கமிஷனை ரத்து செய்து அக்டோபரில் உத்தரவிட்டது.

மேலும், கரூர் சம்பவத்தை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டதோடு, அதை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டது.

இந்நிலையில், ஒரு நபர் கமிஷன், சிறப்பு புலனாய்வு குழு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடுகையில், ''ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். இது, சி.பி.ஐ., விசாரணையில் தலையிடாது.

''கூட்ட நெரிசல் சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க விதிமுறைகளை வகுக்கவும், பரிந்துரைகளை வழங்கவுமே ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது,'' என்றார்.

இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், எல்லாமே நியாயமாகவும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

நோட்டீஸ் பொதுக்கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எப்படி குற்றவியல் ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம்.

அங்கு ஏதோ தவறு நடக்கிறது. உயர் நீதிமன்றத்தில் நடப்பது எதுவும் சரியாக இல்லை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்க்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

திட்டவட்டம் 

அங்கு வழக்குகளை பட்டியலிடுவது, விசாரிப்பதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்வோம். அதன்பின், மற்ற விஷயங்களை பற்றி விசாரிக் கலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்தி வைத்தனர்.

அதே சமயம், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய இடைக்கால உத்தரவில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என, நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.

விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம் 

கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, சி.பி.ஐ., -- எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீசார் வழங்கிய ஆவணங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் த.வெ.க., தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக, விஜய்க்கு டில்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, December 12, 2025

‘ஜெயிலர் – 2’ படப்பிடிப்பில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

 

பதிவு:  வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12, 2025, கார்த்திகை 26,  விசுவாவசு வருடம் 04-10: PM

சென்னை, 

‘ஜெயிலர்–2’ படப்பிடிப்பு தளத்தில் இன்று தனது 75–வது பிறந்த நாளை நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார்.

வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் ரஜினிகாந்த். அவருடன் இயக்குநர் நெல்சன் உள்பட ஜெயிலர் 2 படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டினர்.

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படையப்பா இன்று ரீ– ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. படையப்பா படத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்த ரஜினியின் ரசிகர்கள், கட்–அவுட்டுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

சென்னை ரோகினி திரையரங்கில் படையப்பா ரீ–ரிலீஸை லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் பார்த்தனர். சென்னை காசி திரையரங்கில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பார்த்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த வீட்டின் முன் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்ததால், அவரை காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின் ரசிகர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், “ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். படையப்பா படம் ரீ-ரிலிஸ் செய்யப்படுவதற்கு வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களை பாதுகாப்பாக வீடு திரும்ப லதா ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

சென்னையில் சாலையில் படுத்து மறியல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: கைது குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றிய போலீசார்

 

பதிவு:  வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12, 2025, கார்த்திகை 26,  விசுவாவசு வருடம் 04-00: PM

சென்னை, 

சென்னை மெரீனா கடற்கரை கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மண்டலங்களிலும் தனியார் மயமாக்கப்பட்டதை கைவிட்டு விட்டு பழைய முறைப்படியே குப்பை அள்ளும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதனால் அம்பத்தூர் மண்டலத்தில் குப்பை அள்ளும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வெளி மண்டலத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை வரவழைத்து பணிகள் செய்யப்பட்டன. இதற்கிடையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அண்ணா தி.மு.க., த.வெ.க. நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த போராட்டம் 13வது நாளை கடந்த நிலையில் சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் கட்டிடத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வரும் துப்புரவுத் தொழிலாளர்களை வெளியேற்றுமாறு சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் 100 நாட்களையும் கடந்து நீடித்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் அருகே ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் குவிந்தனர். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு குவிந்திருந்த போலீசார் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்த செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டமாக குண்டுகட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது பரபரப்பாக காணப்பட்டது. மேலும் போராட்டத்தால் காமராஜர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைமைச் செயலகம் முன்பு போராட்டம்

இதற்கிடையில், சென்னை தலைமையகம் முன்வு 30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தப்படுத்த முயன்றனர். ஆனால் போரட்டக்காரர்கள் தரையில் படுத்துக் கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Thursday, December 11, 2025

திமுகவில் இணைந்தது ஏன்? - பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி

 

பதிவு: புதன்கிழமை,  டிசம்பர் 11, 2025, கார்த்திகை 25,  விசுவாவசு வருடம் 02-00: PM

சென்னை,

நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என்று பி.டி.செல்வகுமார் கூறினார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பி.டி.செல்வக்குமார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

அதன்பின்னர் பி.டி.செல்வக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விஜய் மக்கள் இயக்கத்துக்கு தூணாக செயல்பட்டேன்; விஜயின் கட்சிக்கு புதிதாக வந்தவர்களால் எங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தவெகவில் விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு முக்கியத்துவம் இல்லை. திமுகவின் கட்டமைப்பு என்னை ஈர்த்ததால் அக்கட்சியில் சேர்ந்தேன்; நான் உருவாக்கிய கலப்பை மக்கள் இயக்கத்தை திமுகவில் இணைத்துவிட்டேன்.

நிலவு ஒருநாள் அமாவாசையாகும்... நட்சத்திரம் 15 நாட்களுக்குள் இல்லாமல் போகும்.. அதுபோல அவரும் ஒரு நாள்... எனக்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார். நிர்மல் குமார், ஆனந்த், ஆதவ் எல்லாம் எப்போது ரசிகர் மன்றத்தில் இருந்தார்கள்.

மக்களையும், ரசிகர்களையும் விஜய் சரியாக வழிநடத்த வேண்டும். மக்களுக்கு முறையாக விஜய் சேவை செய்வாரா என தெரியவில்லை. ஆனால் எனக்கு மக்கள் பணி செய்யவேண்டும். என் உயிர் உள்ளவரை மக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவில் இணைந்த கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் விவரம்:-

கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் தோப்பூர் வி.அனிதா, மாவட்ட பொருளாளர் விஸ்வை கே.சந்திரன், கலப்பை மக்கள் இயக்க கௌரவ ஆலோசகர் விஜயன், மாநில துணைத் தலைவர் நந்தகுமார், மாநிலச் செயலாளர் எம்.ராஜ்குமார், மாநில இளைஞர் அணிச் யெலாளர் ஜே.ரவிமுருகன், மாநிலப் பொறுப்பாளர் நாகர்கோவில் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணித் த்லைவர் ஜி.சுபின்ஆனந்த், மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் வி.செல்வன்.

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஏசுதாசன், ஒன்றியச் செயலாளர் டி.ஜெகன், மாவட்ட ஐடி விங் பொறுப்பாளர் ஜி.செந்தில், மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர் கௌதம், சமூக சேவகர் சொர்ணப்பன், திரைப்படத் தயாரிப்பாளர் - இயக்குநர் விஷ்ணுஹாசன், நடிகர் விஜயபாலாஜி, மகளிர் அணி பொறுப்பாளர் லெட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

DMK 100 times more powerful than Amit Shah DMK will remain in power with...

Wednesday, December 10, 2025

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: இந்திய அணி அபார வெற்றி

 

பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 10, 2025, கார்த்திகை 24,  விசுவாவசு வருடம் 06-00: AM

கட்டாக் ,

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும் (28 பந்துகள்), ஜிதேஷ் சர்மா 10 ரன்களுடனும் (5 பந்துகள்) களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், லுதோ சிபாம்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரது 2-வது ஓவரில் ஸ்டப்ஸ் 14 ரன்களில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரம் (14 ரன்) சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் போல்டானார். தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் கைப்பற்றி கடும் நெருக்கடி கொடுத்தனர். பின்னர் வந்த டேவிட் மில்லர் (1 ரன்), டோனோவன் பெரீரா (5 ரன்கள்), மார்கோ ஜான்சன் (12 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் 74 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அசத்தலாக பந்துவீசிய இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக், துபே மற்றும் அக்சர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Tuesday, December 9, 2025

“திமுகவை நம்பாதீர்கள் - அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்” - புதுச்சேரியில் விஜய் பேச்சு

 

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 09, 2025, கார்த்திகை 23,  விசுவாவசு வருடம் 01-00: PM 

 புதுச்சேரி,

விஜய் வருகை தந்த நிலையில் கூட்டம் இல்லாததால், பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பிரசார வாகனத்தில் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானதற்கு பிறகு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழகம் போல் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில், புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் வாகனத்தில் நின்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க. இந்த ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி மாநிலம், புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என்று இருப்பார்கள். நாம் வேறு வேறு கிடையாது. நாம் ஒன்றுதான். எல்லோரும் சொந்தம்தான். நாம் பார்க்கும்போது பாச உணர்வு, அதுமட்டும் இருந்தால் போதும். உலகில் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் நம் உயிர்தான். பாரதியார் இருந்த மண். பாரதிதாசன் பிறந்த மண்.

1977-ல் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சி அமைத்தார். 1974-ல் புதுச்சேரியில் அவரது ஆட்சி அமைந்தது. அவர்கள்தான் அலெட் செய்தனர். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க முடியுமா?.

புதுச்சேரி மக்கள் 30 ஆண்டுகளாக தாங்கி பிடிக்கிறீர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன்.

அது எனது கடமையும்கூட.

புதுச்சேரி அரசாங்கம் தமிழகத்தில் உள்ள திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியாக வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு நடந்து கொள்கிறது. புதுச்சேரி முதல்வருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள். வரப் போகின்ற தேர்தலில் அவர்கள் 100% கற்றுக் கொள்வார்கள். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

புதுவை அரசு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எந்த விஷயத்திலும் கண்டு கொள்ளவில்லை என்பது மக்களுக்கே தெரியும். மாநில அரசு கோரிக்கை மட்டுமா அவர்கள் கண்டு கொள்ளவில்லை? இங்கு வளர்ச்சி ஏற்பட அவர்கள் துணை நிற்கவில்லை என கேள்விப்படுகிறோம். புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பலமுறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள், பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அவர்கள் எதையுமே செய்யவில்லை. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது. இது குறித்து யார் பேசினாலும் அவர்களின் காதுகளில் விழவே இல்லை. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடாது. இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத இடம் புதுச்சேரிதான். ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்.

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டில் ஒரு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் 200 நாட்களாகியும் இன்னும் அந்த பதவிக்கு யாரும் அமர்த்தப்படவில்லை. இந்த செயல் சிறுபான்மை மக்களை அவமதிப்பதாக அம்மக்களே சொல்கிறார்கள்.

புதுச்சேரியின் முக்கிய அங்கமாக உள்ள காரைக்கால், ஏனாம் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என அப்பகுதி மக்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். காரைக்கால் பகுதிகள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி கிடையாது. இவை அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி-கடலூர் மார்க்கத்தில் ரயில் திட்டத்தை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால் புதுச்சேரி, மத்திய நிதி குழுவில் இடம் பெறவில்லை, அதனால் மாநிலங்களுக்கான நிதி பகிர்கள் அடிப்படையிலும், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி பகிர்வு அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு தோராயமாக மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. இந்த நிதியும் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய தொகை உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்கே சென்று விடுகிறது.

மற்ற தேவைகளுக்கு வெளி சந்தையில் கடன் பத்திரங்களை கடன் வாங்குகிறது புதுச்சேரி. இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும். புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாத காரணத்தினால் வெளியே கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. புதுச்சேரியின் கடனை குறைத்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது, தொழில் வளர்ச்சியும் தேவை. புதுச்சேரியை தென்னிந்தியாவின் முன்னணி இண்டஸ்ட்ரியல் ஹப்பாக மாற்ற எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

மீன் பிடிக்க செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்கிறது. அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது.

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் குரல் கொடுப்பான். வரவிருக்கும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்... வெற்றி நிச்சயம் ”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Monday, December 8, 2025

புதுச்சேரியில் விஜய் – மக்கள் சந்திப்பு - 5000 பேருக்கு மட்டுமே அனுமதி

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 06-10: PM

சென்னை,

பிளக்ஸ் பேனர், அலங்கார வளைவுகள் வைக்கக்கூடாது - புதுச்சேரியில் விஜய் – மக்கள் சந்திப்பு - 5000 பேருக்கு மட்டுமே அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் புஸ்சி ஆனந்த்

புதுச்சேரியில் நாளை (9–ந் தேதி) நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என கட்சித் தொண்டர்களைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. ‘தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைதி இல்லை, ஃபிக்ஸ் பேனர், அலங்கார வளைவுகள் வைக்க கூடாது என்று கண்டிப்புடன் தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளது.

தலைவரின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்து கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நாளை (9–ந்தேதி செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ‘புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி' நடைபெற உள்ளது. காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நம் வெற்றித் தலைவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவரின் இந்தப் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கட்சித் தலைவரின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

கர்ப்பிணிகள், முதியவர்கள்: கண்டிப்பாய் அனுமதி இல்லை

கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் தலைவரின் வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை.

வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள பாண்டி மெரினா பார்க்கிங், பழைய துறைமுகம் மற்றும் இந்திராகாந்தி ஸ்டேடியம் பின்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

கண்ணியத்துடன் நடக்க...

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

எளிதில் அடையாளம் காணும் வகையில் கட்சி நிர்வாகிகள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை, இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

காம்பவுண்ட் சுவர்களில் ஏறக்கூடாது

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக ‘வந்தே மாதரம்’ ஊக்குவிக்கும் - மக்களவையில் 10 மணிநேர சிறப்பு விவாதத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 04-10: PM

புதுடெல்லி,

‘‘வரும் 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் ஊக்குவிக்கும்’’ என்று மக்களவையில் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

‘‘வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் பெருமிதத்தோடு கூறினார்.

இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை தூண்டும் விதத்தில் வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை இயற்றினார். 1870களில் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு ஜாது நாத் பட்டாச்சார்யா இசை அமைத்தார். இது 1905ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக ஆனதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி தேசிய பாடலாக இது அங்கீகரிக்கப்பட்டது. இந்த பாடலின் 150-வது ஆண்டு விழா கடந்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, வந்தே மாதரம் பற்றிய சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு பேசினார்.

இந்த நிலையில் வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் வந்தே மாதரம் குறித்து இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் 10 மணி நேர சிறப்பு விவாதத்தை இன்று பகல் 12 மணிக்கு பிரதமர் மோடி தொடக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

‘‘வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பது அனைவருக்கும் பெருமை. 150 ஆண்டுகளுக்கு முன்பு வந்தே மாதரம் என்று கூறியவர்களை சிறையில் அடைத்தனர். வருங்கால சந்ததிகளுக்கும் வந்தே மாதரம் வழிகாட்டியாக அமைந்துள்ளது.சர்தார் வல்லபாய் படேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது ஆண்டு விழாவையும் நாம் கொண்டாடுகிறோம். வந்தே மாதம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இன்று விவாதம் நடைபெறுகிறது. தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாகத் திகழ்ந்தது வந்தே மாதரம்.

ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் இல்லை...

2047ம் ஆண்டில், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் நம்மை ஊக்குவக்கும். வந்தே மாதரம் வெறும் அரசியல் முழக்கம் மட்டுமல்ல, அது தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக உயிரையும் துச்சமாக மதித்து தூய்மையாகப் போராடியவர்களின் உணர்வு.

இங்கு ஆளுங்கட்சிகளோ எதிர்க்கட்சிகளோ என்று இல்லை. வந்தே மாதரத்தின் பெருமையை கூட்டாகப் பாராட்டவும் ஏற்றுக்கொள்ளவும்தான் நாம் இங்கு இருக்கிறோம். இந்தப் பாடலால்தான் நாம் அனைவரும் இங்கே ஒன்றாக இருக்கிறோம்.

சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம்...

வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்டத்திற்கான முழக்கம் அல்ல. சுதந்திர தாய்க்கான பாடல். அனைத்து இந்தியர்களின் நம்பிக்கை.

வந்தே மாதரம் பல கட்டங்களை கடந்து வந்துள்ளது. வந்தே மாதரத்தை பிரிட்டன் மகாராணி வாழ்க என்று பாட வைக்க ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பலம் வாய்ந்த பிரிட்டனை எதிர்க்க 1875ம் ஆண்டு பங்கிம் சாட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை கொடுத்தார்.

வந்தே மாதம் சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தது. வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது, நாடு அடிமைச்சங்கிலியில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வந்தே மாதரத்தின் பெருமையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள இது ஒரு புனிதமான சந்தர்ப்பம். இந்த பாடல்தான், வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் நாட்டை ஒன்றிணைத்தது. மீண்டும் ஒன்றிணைந்து அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டிய நேரம் மீண்டும் வந்துவிட்டது. இந்தப் பாடல் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற நம்மை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் வேண்டும்.

2047க்குள் நமது நாட்டை தன்னிறைவு பெற்ற, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

ராஜ்ய சபாவில் நாளை அமித்ஷா துவக்குகிறார்

மாநிலங்களவையில் நாளை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ‘வந்தே மாதரம்’ விவாதத்தை தொடங்கி வைக்கிறார்.

100 ஆண்டு நிறைவின்போது அவசரநிலை

வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ​​நாடு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது, அதே நேரத்தில் அதன் 100 வது ஆண்டு விழாவின்போதோ, நாடு அவசரநிலையின் கீழ் சிக்கியிருந்தது. அந்த நேரத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. நாட்டின் விடுதலைக்காக வாழ்ந்தவர்களும் உயிரை இழந்தவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். நமது நாட்டின் வரலாற்றில், அவசரநிலை என்பது ஒரு இருண்டப் பக்கம். ஆனால் இன்றோ வந்தே மாதரத்தின் புகழை பறைசாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நடிகை பாலியல் பலாத்கார வழக்கு - மலையாள நடிகர் திலீப் விடுதலை

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 03-40: PM

திருவனந்தபுரம்,

ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்த கேரள நடிகை பலாத்கார வழக்கில் முன்னணி நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உள்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் சுனில் என்ற நபர் நடிகையைப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்டது.

மேலும், இதை வீடியோவாக எடுத்து பிளாக்மெயில் செய்யவும் பல்சர் சுனில் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. காரில் கடத்தப்பட்ட அந்த நடிகை, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டார். அன்றைய தினமே அந்த நடிகை போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். இந்த சம்பவம் மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்தது.

நடிகர் திலீப் கைது

அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்தது. வழக்கில் திடீர் திருப்பமாக அந்த நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனில் தானாகவே முன்வந்து சரணடைந்து முக்கியக் குற்றவாளியானார். செல்போன் பதிவுகள் அடிப்படையில் நடந்த விசாரணையில் மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் அவர் 8வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

1600 ஆவணங்கள், 280 சாட்சிகள்

இந்த வழக்கு தொடர்பாக 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், ஜாமீனில் வெளியே வந்தார். எனினும், சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நீதிபதி ஹனி வர்கீஸ்-ஐ வழக்கின் தனி நீதிபதியாக நியமித்து கேரள அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கைதான விஷ்ணு உள்ளிட்ட இருவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறி வாக்குமூலம் அளித்தனர்.

வழக்கின் விசாரணை 2018ம் ஆண்டு தொடங்கிய நிலையில், அதன் பிறகு கொரோனா காரணமாக இரு ஆண்டுகள் வழக்கு விசாரணை முடங்கியது. அதன் பிறகும் கூட பல்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை தாமதமாகிக் கொண்டே வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை 1600 ஆவணங்கள், 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம் வர்கீஸ், நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில் நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

8 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திலீப் உள்ளிட்ட 10 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் இறுதி தீர்ப்பை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹனி வர்கீஸ் இன்று வெளியிட்டார். இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், குற்றம் நிரூபிக்கப்படாததாலும் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திலீப்பின் நண்பர் சரத் மீதும் போதிய ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டார். ஏ1 முதல் ஏ 6 வரையிலான குற்றவாளிகளான சுனில் மற்றும் மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீ, பிரதீப் ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 12-ந்தேதி அறிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் கோர்ட் அளித்த தீர்ப்பையடுத்து, நடிகர் திலீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கை வைத்து எனது தொழில் வாழ்க்கையை அழிக்க சதி நடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி என்று கூறினார்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...