Monday, December 8, 2025

2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக ‘வந்தே மாதரம்’ ஊக்குவிக்கும் - மக்களவையில் 10 மணிநேர சிறப்பு விவாதத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 04-10: PM

புதுடெல்லி,

‘‘வரும் 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் ஊக்குவிக்கும்’’ என்று மக்களவையில் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

‘‘வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் பெருமிதத்தோடு கூறினார்.

இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை தூண்டும் விதத்தில் வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை இயற்றினார். 1870களில் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு ஜாது நாத் பட்டாச்சார்யா இசை அமைத்தார். இது 1905ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக ஆனதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி தேசிய பாடலாக இது அங்கீகரிக்கப்பட்டது. இந்த பாடலின் 150-வது ஆண்டு விழா கடந்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, வந்தே மாதரம் பற்றிய சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு பேசினார்.

இந்த நிலையில் வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் வந்தே மாதரம் குறித்து இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் 10 மணி நேர சிறப்பு விவாதத்தை இன்று பகல் 12 மணிக்கு பிரதமர் மோடி தொடக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

‘‘வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பது அனைவருக்கும் பெருமை. 150 ஆண்டுகளுக்கு முன்பு வந்தே மாதரம் என்று கூறியவர்களை சிறையில் அடைத்தனர். வருங்கால சந்ததிகளுக்கும் வந்தே மாதரம் வழிகாட்டியாக அமைந்துள்ளது.சர்தார் வல்லபாய் படேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது ஆண்டு விழாவையும் நாம் கொண்டாடுகிறோம். வந்தே மாதம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இன்று விவாதம் நடைபெறுகிறது. தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாகத் திகழ்ந்தது வந்தே மாதரம்.

ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் இல்லை...

2047ம் ஆண்டில், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் நம்மை ஊக்குவக்கும். வந்தே மாதரம் வெறும் அரசியல் முழக்கம் மட்டுமல்ல, அது தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக உயிரையும் துச்சமாக மதித்து தூய்மையாகப் போராடியவர்களின் உணர்வு.

இங்கு ஆளுங்கட்சிகளோ எதிர்க்கட்சிகளோ என்று இல்லை. வந்தே மாதரத்தின் பெருமையை கூட்டாகப் பாராட்டவும் ஏற்றுக்கொள்ளவும்தான் நாம் இங்கு இருக்கிறோம். இந்தப் பாடலால்தான் நாம் அனைவரும் இங்கே ஒன்றாக இருக்கிறோம்.

சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம்...

வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்டத்திற்கான முழக்கம் அல்ல. சுதந்திர தாய்க்கான பாடல். அனைத்து இந்தியர்களின் நம்பிக்கை.

வந்தே மாதரம் பல கட்டங்களை கடந்து வந்துள்ளது. வந்தே மாதரத்தை பிரிட்டன் மகாராணி வாழ்க என்று பாட வைக்க ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பலம் வாய்ந்த பிரிட்டனை எதிர்க்க 1875ம் ஆண்டு பங்கிம் சாட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை கொடுத்தார்.

வந்தே மாதம் சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தது. வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது, நாடு அடிமைச்சங்கிலியில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வந்தே மாதரத்தின் பெருமையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள இது ஒரு புனிதமான சந்தர்ப்பம். இந்த பாடல்தான், வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் நாட்டை ஒன்றிணைத்தது. மீண்டும் ஒன்றிணைந்து அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டிய நேரம் மீண்டும் வந்துவிட்டது. இந்தப் பாடல் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற நம்மை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் வேண்டும்.

2047க்குள் நமது நாட்டை தன்னிறைவு பெற்ற, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

ராஜ்ய சபாவில் நாளை அமித்ஷா துவக்குகிறார்

மாநிலங்களவையில் நாளை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ‘வந்தே மாதரம்’ விவாதத்தை தொடங்கி வைக்கிறார்.

100 ஆண்டு நிறைவின்போது அவசரநிலை

வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ​​நாடு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது, அதே நேரத்தில் அதன் 100 வது ஆண்டு விழாவின்போதோ, நாடு அவசரநிலையின் கீழ் சிக்கியிருந்தது. அந்த நேரத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. நாட்டின் விடுதலைக்காக வாழ்ந்தவர்களும் உயிரை இழந்தவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். நமது நாட்டின் வரலாற்றில், அவசரநிலை என்பது ஒரு இருண்டப் பக்கம். ஆனால் இன்றோ வந்தே மாதரத்தின் புகழை பறைசாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...