Monday, October 27, 2025

Kandha Sashti 2025 | Arulmigu Subramaniya Swamy Temple | Thiruparankundram

Vaiko's criticisms of Vijay and Tamilaga Vettri Kazhagam (TVK) | Vaiko P...

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா' புயல்: “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்”

 


பதிவு: திங்கள்கிழமை, அக்டோபர் 27, 2025, ஐப்பசி 10, விசுவாவசு வருடம் 04-15: AM

சென்னை,

'வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ( அக்டோபர் 27) 'மோந்தா' புயலாக உருமாறி வலுவடைந்தது. 

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் உஷார் நிலை 

வங்கக்கடலில்  'மோந்தா' புயல் காரணமாக, ஆந்திராவின் காக்கிநாடா, கோனாசீமா, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, பாபட்லா, பிரகாசம், ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு, நெல்லுார் மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சித்துார், திருப்பதி உட்பட 16 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யலாம் என்பதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கர்னுால், அனந்த புரம், ஸ்ரீசத்யசாய் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, மாநிலம் முழுதும் அனைத்து அரசு துறைகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. மீட்புப் பணிக்கு துணை ராணுவமும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் உள்ளன.



வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோந்தா' என பெயரிடப்பட்டு இருக்கிறது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வட கிழக்கு திசையில் மோந்தா புயல் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு 640 கி.மீ. தொலைவில் மோந்தா புயல் மையம் நிலை கொண்டுள்ளது. இது நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயல் ஆகும்.

பசிபிக் உயர் அழுத்த பிடியால் மேற்கு - வடமேற்கு திசையில் இன்று இரவு புயல் நகரத்தொடங்கும். பின்னர், இமயமலையில் இருக்கக்கூடிய மேற்கத்திய தாழ்வு நிலை புயலை தன்பக்கமாக இழுக்கும்.

இந்த இருவேறு வானிலை நிகழ்வுகளால், வளிமண்டலத்தில் காற்று முறிவு ஏற்பட்டு வடக்கு - வடமேற்கு திசையில் ஆந்திராவின் காக்கிநாடாவை நோக்கி தீவிர புயலாக நகரும். ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



கரையை நெருங்கும்போது புயல் வலுவிழக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வளிமண்டலத்தில் காற்று முறிவு ஏற்படுவதால் ஆந்திராவில் காற்று பாதிப்பு இருக்காது என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஆந்திராவின் ஓங்கோல் முதல் நெல்லூர் வரையிலான தெற்கு ஆந்திர பகுதியில் மிக கனமழையும், குறுகிய நேரத்தில் அதி கனமழையும் பதிவாகக்கூடும்.

ஆந்திராவுக்கு புயல் செல்வதால், தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு இருக்காதோ? என்ற பேச்சு இருக்கிறது. ஆனால் வட மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூரில் கனமழை

குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும். புயல் சென்னைக்கு நேராக அதாவது கிழக்கு பகுதியில் அதன் மேகக்கூட்டங்கள் வந்து நின்று, பின்னர் மேல் நோக்கி ஆந்திராவை நோக்கி நகரப்போகிறது. இதனால் இந்த புயல் காரணமாக மழை இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணியில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, விட்டு விட்டு கனமழையும், சென்னை, திருவள்ளூரில் அனேக இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை வரையிலும் பதிவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

மழை இருக்கும் அதே நேரத்தில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தரைக்காற்று வடக்கு - வடமேற்கு நோக்கி 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை வரை சூறாவளி காற்று மணிக்கு 80 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலும், ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்று இன்று முதல் நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை வரை 80 கி.மீ. முதல் 110 கி.மீ. வரையிலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயல் காரணமாக வட மாவட்டங்களில் மழை கிடைக்க இருக்கிறது. இதுதவிர பிற பகுதிகளில் வெப்பசலனம், பருவமழை காரணமாக இரவு அல்லது அதிகாலையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவாகிய ‘நிவர்’ புயல், மாமல்லபுரத்துக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் தீவிர புயலாக கரையை கடந்தது. அந்த நேரத்தில் கடலூர் - விழுப்புரம் இடையே 6 மணி நேரத்தில் 33 செ.மீ. மழையை கொட்டியது.

அதேபோல்தான், வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவை நோக்கி செல்லும் ‘மோந்தா’ புயலும் ஓங்கோல்-நெல்லூர் இடையே குறுகிய நேரத்தில் அதி கனமழை பெய்ய இருக்கிறது. ‘மோந்தா’ புயலில் நடக்கும் காற்று முறிவு நிகழ்வும் நிவர் புயலின்போது நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த குறுகிய நேரத்தில் அதி கனமழை கடைசி நேரத்தில் இடம் மாறவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி மாறும்பட்சத்தில் தமிழகத்தில் வடமாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மழை கொட்டவும் ஒரு வாய்ப்புள்ளது. இது புயல் வடமாவட்டங்களை நெருங்கிவரும் நேரத்தில்தான் கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Saturday, October 25, 2025

வங்கக்கடலில் அக்டோபர் 27ல் உருவாகிறது 'மோந்தா' புயல்: “சென்னையில் மழை தொடரும்.. தமிழகம் முழுவதும் இன்று கனமழைக்கு வாய்ப்பு”

 


பதிவு: சனிக்கிழமை, அக்டோபர் 25, 2025, ஐப்பசி 08, விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை,

'மோந்தா' புயல் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, 27ம் தேதி புயலாக உருவாகும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்படி புயல் உருவாகும்பட்சத்தில், அதற்கு, 'மோந்தா' என பெயர் சூட்டப்படும். இந்த பெயரை, தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது.

வங்கக்கடலில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) புயல் உருவாகிறது. இதற்கு ‘மோன்தா' என பெயரிடப்பட உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு வங்கக்கடலில் உருவாகி, வடமாவட்டங்களில் சில இடங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை ஏமாற்றியது. இந்த நிகழ்வு புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட சூழலில், தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. இது அதே பகுதிகளில் நிலவுகிறது. அது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (சனிக்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனவும், அதனையடுத்து அது 27-ந்தேதி (திங்கட்கிழமை) புயலாகவும் வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு மழையை கொடுக்குமா?

வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல், தமிழகத்துக்கு அருகில் வந்து நகருமா? அல்லது ஆந்திராவுக்கு சென்றுவிடுமா? என்பது இப்போது வரை உறுதியாகவில்லை. இந்த புயல் வடதமிழகத்தை நோக்கி வராமல் அப்படியே திறந்த கடல் பகுதி வழியாக ஆந்திரா நோக்கி சென்றால், பலத்த மழையை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு தவறவிட்டுவிடும். மாறாக மிதமான மழையே இருக்கும்.

அதுவே, புயல் வடதமிழகத்தையொட்டி நகர்ந்து, பின்னர் ஆந்திரா சென்றால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இந்த புயல் மழையை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்புக்கு ஓரிரு நாட்களில் விடை தெரிந்துவிடும். இந்த புயலால் வடமாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

‘மோன்தா’ புயல்

பொதுவாக புயல் உருவாகும்போது, அதனை அடையாளப்படுத்துவதற்காக பெயர் சூட்டப்படுகிறது. அந்தவகையில் வங்கக்கடலில் உருவாக இருக்கும் இந்த புயலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பெயர் வரிசைப்படி, ‘மோன்தா' என பெயரிடப்பட உள்ளது. வானிலை ஆய்வு மையம் புயல் உருவான பிறகே அந்த பெயரை அறிவிக்கும். ‘மோன்தா' என்ற பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்தது ஆகும். இந்த பெயருக்கு ‘அழகான மலர்' அல்லது ‘மணம் வீசும் மலர்' என்று அர்த்தம் ஆகும்.

ஒருவேளை புயல் தமிழகத்துக்கு சாதகமாக இருந்தால், நாளை (26-10-2025) விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும், நாளை மறுதினம் (27-10-2025) திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூரில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இந்த புயல் காரணமாக, சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Monday, October 6, 2025

UCPI (UNITED COMMUNIST PARTY OF INDIA) C.Baskaran Press Meet at Madurai

TTV Dhinakaran Press Meet | Vijay should have owned moral responsibility...

Wednesday, October 1, 2025

Sellur Raju Says, "NTK Seeman talks like he's mentally ill" | Tamilmani ...

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...