Wednesday, November 19, 2025

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

 

பதிவு: புதன்கிழமை,   நவம்பர் 19, 2025, கார்த்திகை 03,  விசுவாவசு வருடம் 06-30: AM

கோவை,

மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை விமான நிலையத்திற்கு மோடி வருகிறார். அங்கு அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு மதியம் 1.30 மணிக்கு செல்கிறார். அங்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதையடுத்து பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்கி பேசுகிறார்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடைகின்றனர். இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 837 பேர் பயன்பெறுவார்கள்.

மேலும் அவர், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.அதைத்தொடர்ந்து அவர், இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை பார்வையிடுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 3.30 மணிக்கு கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர மாநாடு நடைபெறும் பகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை-அவினாசி ரோட்டில் இருந்து கொடிசியா வளாகம் வரை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tuesday, November 18, 2025

AIADMK's RB Udayakumar slams, "TTV Dhinakaran cannot succeed in politica...

அதிமுக, தேமுதிக கூட்டணி மலருமா? - பிரேமலதா - உதயகுமார் சந்திப்பு

 

பதிவு: செவ்வாய்கிழமை,   நவம்பர் 18, 2025, கார்த்திகை 02,  விசுவாவசு வருடம் 06-30: AM

மதுரை,

மதுரையில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை, ஒரு மணி நேரம் காத்திருந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் சந்தித்து பேசினார்.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தனித்தனி அணிகளாக போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், வரும் சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளன. ஏழு மாதங்களாகியும் கூட்டணிக்குள் எந்த கட்சியும் இதுவரை வந்து சேரவில்லை.

லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியில் இருந்த தினகரனின் அ.ம.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் உறவை முறித்துக் கொண்டனர்.

மேலும், பா.ஜ., கூட்டணியில் இருந்த பா.ம.க., தற்போது ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என இரு பிரிவாக உள்ளது. இரு பிரிவுமே, இதுவரை கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. இதுபோல, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இருந்த தே.மு.தி.க.,வும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பீஹார் போலவே, தமிழகத்திலும் வியூகம் அமைத்து, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை வலிமையாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்புகிறார். அதற்கான பணிகளை விரைவில் துவங்குவார் என பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பீஹார் வெற்றிக்கு பின், அ.தி.மு.க., முகாம் சுறுசுறுப்படைந்துள்ளது. நேற்று சேலம் சென்ற த.மா.கா., தலைவர் வாசன், அங்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பின் பேட்டியளித்த வாசன், ''பீஹார் தேர்தல் முடிவுகளுக்கு பின், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி வலுப்பெற்றுள்ளது. பழனிசாமியுடன் அரசியல் பேசினேன்,'' என்றார்.

இந்த சூழலில், மதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தே.மு.தி.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா பங்கேற்றார்.

அப்போது அங்கு வந்த, சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவரும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான உதயகுமார், ஒரு மணி நேரம் காத்திருந்து, பிரேமலதாவை சந்தித்துப் பேசினார்.

சந்திப்புக்கு பின் பேட்டியளித்த உதயகுமார், ''பிரேமலதாவின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவே அவரை சந்தித்தேன். அ.தி.மு.க., -- தே.மு.தி.க., கூட்டணி குறித்து பழனிசாமி தான் முடிவெடுப்பார்,'' என்றார்.

ஆனாலும், சட்டசபை தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக, பழனிசாமி சார்பில் பிரேமலதாவுடன், உதயகுமார் பேசியதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள்: இன்று முதல் 25-ந்தேதி வரை செயல்படும்

 

பதிவு: செவ்வாய்கிழமை,   நவம்பர் 18, 2025, கார்த்திகை 02,  விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

வாக்காளர் உதவி மையங்களில் சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம்.

சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண சென்னையில் இன்று முதல் 25-ந்தேதி வரையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2026 பொதுத்தேர்தலுக்கான சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் சென்னை மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை பெற்று வருகின்றனர். 

கணக்கீட்டுப்படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணவும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 25-ந்தேதி வரை 8 நாட்களுக்கு 947 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளது. 

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும்.

வாக்காளர் உதவி மையங்களில் சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுடன் ஒருவர் துணையாக வரலாம். இந்த உதவி மையங்களில் கணக்கீட்டு படிவங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள், வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்படும்.

இப்பணிகளை வெற்றிகரமாக செய்துமுடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கு இன்றியமையாதது. இந்திய தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதலின்படி, அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பெற்று வழங்க அனுமதித்துள்ளது.

அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும்போது அதற்கான உறுதிமொழியை இணைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, November 17, 2025

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள்

 


பதிவு: திங்கள்கிழமை,   நவம்பர் 17, 2025, கார்த்திகை 01,  விசுவாவசு வருடம் 03-30: PM

சென்னை,

தகவல் மையங்கள் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (அய்யப்பன்) திருக்கோவிலில் மண்டல பூஜை 17.11.2025 முதல் 27.12.2025 வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா 30.12.2025 முதல் 19.01.2026 வரையும் நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் மையங்கள் 20.01.2026 வரை செயல்படும்.

சென்னை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தினை 94880 73779, 94862 70443, 94428 72911 ஆகிய எண்களிலும், சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை கீழ்க்காணும் அலுவலர்களின் கைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

சபரிமலை தகவல் மையம்:

17.11.2025 முதல் 02.12.2025 வரை

வி. சிவக்குமார் - 94439 94342, ஆர். பிரேம்குமார் - 63858 06900, சி. சந்தீப்குமார் - 85310 70571

03.12.2025 முதல் 17.12.2025 வரை

எம்.சேர்மராஜா- 83440 21828, எல்.லால்கிருஷ்ணன்- 70949 06442, எஸ்.சதீஷ்குமார்- 75588 39969

18.12.2025 முதல் 02.01.2026 வரை

எம்.சுந்தர் - 89219 37043, ஆர்.சிவசங்கர் - 90806 50431, கே.சஜ்ஜீவன் - 99405 76898

03.01.2026 முதல் 20.01.2026 வரை

எச்.வெங்கடேஷ் - 98433 70229, சுதாகர் - 99425 05466, வி.ரமேஷ் - 84384 44770

இத்தகவல் மையங்களின் சேவையினை தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

 


பதிவு: திங்கள்கிழமை,   நவம்பர் 17, 2025, கார்த்திகை 01,  விசுவாவசு வருடம் 03-00: PM

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுத்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை:

நேற்று (16-11-2025) இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (17-11-2025) காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.

வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

17-11-2025

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

18-11-2025

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

19-11-2025

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

20-11-2025

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21-11-2025

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22-11-2025

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23-11-2025

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை/ மிக கன மழை, பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (18-11-2025)

வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை - தமிழக கடலோரப்பகுதிகள்

17-11-2025

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18-11-2025

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sabarimala Ayyappa devotees begin their viratham (fasting and austerity)...

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...