Thursday, November 20, 2025

கோவையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

 


பதிவு: வியாழக்கிழமை,   நவம்பர் 20, 2025, கார்த்திகை 04,  விசுவாவசு வருடம் 06-00: AM

கோவை,

தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்களும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

  

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா அரங்கில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க  நேற்று மதியம் கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து விமான நிலையம் முதல் கொடிசியா கண்காட்சி அரங்கம் வரை சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்களை நோக்கி கையசைத்தபடியே பிரதமர் காரில் சென்றார்.

பின்னர், கொடிசியா வளாகத்தில் இயற்கை விவசாயிகள் மாாடு 2025-ஐ பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களை பார்வையிட்ட பிரதமர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.


Wednesday, November 19, 2025

1,008 sangabhishekam performed at Arulmigu Immaiyilum Nanmai Tharuvar Te...

JACTO-GEO holds protest across Tamil Nadu pressing long-pending demands

சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம் - ஸ்ரீதர்ம சாஸ்தாவை (அய்யப்பன்) தரிசிக்காமல் திரும்பிய பக்தர்கள்

 

பதிவு: புதன்கிழமை,   நவம்பர் 19, 2025, கார்த்திகை 03,  விசுவாவசு வருடம் 07-00: AM

சபரிமலை,

கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசும், தேவசம் போர்டு நிர்வாகமும் தடுமாறுகிறது.

பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுவதால் பெரும் சிரமப் படுகின்றனர். சேலத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சபரிமலை வர முடியாமல் பந்தளத்தில் தங்கள் பயணத்தை முடித்துள்ளனர்.

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நேற்று முன் தினம் காலை துவங்கியது. இதற்காக நவம்பர் 16 மாலை நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங்கில் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்பதிவு துவங்கிய சில நாட்களிலேயே நவ., மாதத்தின் அனைத்து நாட்களிலும் முன்பதிவு நிறைவு பெற்றது. தற்போது டிச.,10 வரையிலும் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

கார்த்திகை 1ம் தேதியான நேற்று முன்தினமே, பம்பையிலும், சன்னிதானத்திலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய திட்டமிடல்கள் இல்லாததால், எருமேலியில் இருந்து சென்ற பக்தர்கள் சன்னிதானம் வர முடியாமல், பாதி வழியில் நிறுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, நிலக்கல்லிலும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. பம்பையில் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். இந்நிலை நேற்றும் நீடித்தது. எட்டு மணி நேரம் வரிசையில் நிற்கும் பகுதியில் தண்ணீர் இல்லை, உணவு இல்லை என, பக்தர்கள் குமுறுகின்றனர்.

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசும், தேவசம் போர்டும் பக்தர்கள் குறித்து கவலைப்படவில்லை; பக்தர்கள் செலுத்தும் காணிக்கை வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கின்றனர். எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை. வாகனங்களை, பக்தர்களை ஒழுங்குப்படுத்த போதிய போலீசார் இல்லை' என, பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

தமிழகத்தில், சேலத்தில் இருந்து மூன்று பஸ்களில் வந்த பக்தர்கள், பம்பையில் இருந்து சன்னிதானம் வர முடியாமல், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், பந்தளத்துக்கு சென்று அங்குள்ள கோவிலில் தங்கள் பயணத்தை முடித்து ஊர் திரும்பினர். இதுபோல ஏராளமான பக்தர்கள் ஊர் திரும்புவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதுகுறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.ஜெயக்குமார் கூறியதாவது:

பம்பையில் பக்தர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் மலையேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பம்பையில் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நிலக்கல்லில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும்.

மரக்கூட்டம் முதல் சரங்குத்தி வரை, 20 கியூ காம்ப்ளக்ஸ்கள் உள்ளன. இங்கு பக்தர்கள் ஓய்வெடுக்க வசதி செய்யப்பட்டு, அங்கு தண்ணீர், பிஸ்கட் வழங்கப்படும். குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்குவதில் 200 ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பாட் புக்கிங் செய்வதற்காக பம்பையில் அதிக பக்தர்கள் வருவதை கட்டுப்படுத்துவதற்கு, நிலக்கல்லில் உடனடியாக ஏழு கவுன்டர்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலையில் நவம்பர் 16- மாலை 5:00 மணி முதல் நேற்று மதியம், 12:00 மணிவரை, ஒரு லட்சத்து 96,594 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் அமைச்சருக்கு மனமில்லை

வழக்கமாக சீசன் துவங்க ஒரு மாதம் முன், தேவசம்போர்டு அமைச்சர் உள்ளிட்ட பல்துறை அமைச்சர்கள், பம்பையில் கூடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஏற்பாடுகளை முடுக்கி விடுவது வழக்கம். இந்த ஆண்டு அதுபோன்ற முன்னேற்பாடு கூட்டம் ஏதும் நடைபெறவில்லை.

கார்த்திகை முதல் தேதி நடை திறந்த போது, தேவசம்போர்டு அமைச்சர் சன்னிதானம் வந்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, ஆலோசனைகளை வழங்குவார். இந்தாண்டு, மார்க்சிஸ்ட் கட்சி அமைச்சர் வாசவன் சன்னிதானத்துக்கு வரவில்லை. அவர் தரிசனம் செய்யாவிட்டாலும், பக்தர்களுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வந்திருக்க வேண்டும்.

தேவசம்போர்டின் பதவி காலம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நவ.,15ல் நிறைவு பெறுகிறது. இதனால், இந்தாண்டு பதவி விலகி செல்லும் தலைவர், உறுப்பினர்கள், சீசன் முன்னேற்பாடுகளில் போதிய கவனம் செலுத்தவில்லை. புதிதாக பொறுப்பு ஏற்பவர்களுக்கு, இரண்டு நாட்களுக்குள் நடை திறக்கும் போது, இங்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் எந்த திட்டமிடலும் இருக்காது. இந்தாண்டு குழப்பத்திற்கு இதுவும் காரணம்.

மத்திய படை என்னாச்சு?

மண்டல, மகர விளக்கு சீசனில் மத்திய அதிவிரைவு படை போலீசாரும், தேசிய பேரிடர் நிவாரண படை வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால் நேற்று வரை இவர்கள் வரவில்லை.

கேரள அரசு தரப்பில் இருந்து கடிதம் தாமதமாக சென்றதாலும், பீஹார் தேர்தல் மற்றும் டில்லி குண்டு வெடிப்பை தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாலும் வருவது தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டது.

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

 

பதிவு: புதன்கிழமை,   நவம்பர் 19, 2025, கார்த்திகை 03,  விசுவாவசு வருடம் 06-30: AM

கோவை,

மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை விமான நிலையத்திற்கு மோடி வருகிறார். அங்கு அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு மதியம் 1.30 மணிக்கு செல்கிறார். அங்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதையடுத்து பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்கி பேசுகிறார்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடைகின்றனர். இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 837 பேர் பயன்பெறுவார்கள்.

மேலும் அவர், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.அதைத்தொடர்ந்து அவர், இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை பார்வையிடுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 3.30 மணிக்கு கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர மாநாடு நடைபெறும் பகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை-அவினாசி ரோட்டில் இருந்து கொடிசியா வளாகம் வரை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tuesday, November 18, 2025

AIADMK's RB Udayakumar slams, "TTV Dhinakaran cannot succeed in politica...

அதிமுக, தேமுதிக கூட்டணி மலருமா? - பிரேமலதா - உதயகுமார் சந்திப்பு

 

பதிவு: செவ்வாய்கிழமை,   நவம்பர் 18, 2025, கார்த்திகை 02,  விசுவாவசு வருடம் 06-30: AM

மதுரை,

மதுரையில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை, ஒரு மணி நேரம் காத்திருந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் சந்தித்து பேசினார்.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தனித்தனி அணிகளாக போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், வரும் சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளன. ஏழு மாதங்களாகியும் கூட்டணிக்குள் எந்த கட்சியும் இதுவரை வந்து சேரவில்லை.

லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியில் இருந்த தினகரனின் அ.ம.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் உறவை முறித்துக் கொண்டனர்.

மேலும், பா.ஜ., கூட்டணியில் இருந்த பா.ம.க., தற்போது ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என இரு பிரிவாக உள்ளது. இரு பிரிவுமே, இதுவரை கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. இதுபோல, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இருந்த தே.மு.தி.க.,வும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பீஹார் போலவே, தமிழகத்திலும் வியூகம் அமைத்து, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை வலிமையாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்புகிறார். அதற்கான பணிகளை விரைவில் துவங்குவார் என பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பீஹார் வெற்றிக்கு பின், அ.தி.மு.க., முகாம் சுறுசுறுப்படைந்துள்ளது. நேற்று சேலம் சென்ற த.மா.கா., தலைவர் வாசன், அங்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பின் பேட்டியளித்த வாசன், ''பீஹார் தேர்தல் முடிவுகளுக்கு பின், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி வலுப்பெற்றுள்ளது. பழனிசாமியுடன் அரசியல் பேசினேன்,'' என்றார்.

இந்த சூழலில், மதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தே.மு.தி.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா பங்கேற்றார்.

அப்போது அங்கு வந்த, சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவரும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான உதயகுமார், ஒரு மணி நேரம் காத்திருந்து, பிரேமலதாவை சந்தித்துப் பேசினார்.

சந்திப்புக்கு பின் பேட்டியளித்த உதயகுமார், ''பிரேமலதாவின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவே அவரை சந்தித்தேன். அ.தி.மு.க., -- தே.மு.தி.க., கூட்டணி குறித்து பழனிசாமி தான் முடிவெடுப்பார்,'' என்றார்.

ஆனாலும், சட்டசபை தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக, பழனிசாமி சார்பில் பிரேமலதாவுடன், உதயகுமார் பேசியதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...