Friday, November 21, 2025

10வது முறையாக பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார் - பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா நேரில் வாழ்த்து

 






பதிவு: வியாழக்கிழமை,   நவம்பர் 20, 2025, கார்த்திகை 04,  விசுவாவசு வருடம் 07-00: AM


பாட்னா,

பிஹார் முதல்வராக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக நேற்று பதவியேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர் .

பிஹாரில் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 11ல் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்த கூட்டணி, 202 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ., 89 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கூட்டணி கட்சிகளான லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் பஸ்வான் 19; ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5; ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 4 தொகுதி களிலும் வென்றன.

இதையடுத்து, பிஹார் முதல்வராக, 10வது முறையாக நிதிஷ் குமார் நேற்று பதவி ஏற்றார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு, கவர்னர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிதிஷ் உடன், பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முந்தைய ஆட்சியில் துணை முதல்வர்களாக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கும், லோக் ஜனசக்தியைச் சேர்ந்த இருவருக்கும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா,

பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வடகிழக்கு மாநிலமான அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், டில்லி முதல்வர் ரேகா குப்தா, தே.ஜ., கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரலாறு காணாத வெற்றியை தந்த பீஹார் மக்களுக்கு, பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தே.ஜ., கூட்டணி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.

நிதிஷ் குமார் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றதை அடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய்குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர். முதல்வர் நிதிஷ் உட்பட பதவியேற்ற அனைவருக்கும், பிரதமர் மோடி தன் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மவுனம் கலைத்த தேஜஸ்வி 

பிஹாரில் புதிய அரசு பதவியேற்றதற்கு, முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், இதுவரை வாய் திறக்காமல் இருந்த அவர் நேற்று மவுனம் கலைத்தார். 

அவர் தன் சமூக வலைதளத்தில், 'முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ் குமார் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள். 

புதிய அரசு, மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளையும், அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என நம்புகிறேன். அதேசமயம், பிஹார் மக்களின் வாழ்க்கையில், நேர்மறையான மற்றும் தரமான மாற்றங்களை கொண்டு வரும் என்றும் நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் சாதனையை முறியடித்த நிதிஷ் குமார் 

கடந்த 2000 மார்ச் துவங்கி இதுவரை பல்வேறு ஆட்சிக் காலங்களில், 19 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமையை நிதிஷ் பெற்றுள்ளார். இதன் வாயிலாக, நாட்டில் நீண்ட காலம் முதல்வர்களாக இருந்த முதல் 10 பேர் அடங்கிய பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, பல்வேறு ஆட்சிக் காலத்தின் வாயிலாக, 18 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த நிலையில், அவரின் சாதனையை நிதிஷ் முறியடித்துள்ளார்.

அரசு நிலத்தை அரசுக்கே விற்று மோசடி - ரூ.18.10 கோடி சொத்துக்கள் முடக்கம்

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  நவம்பர் 21, 2025, கார்த்திகை 05,  விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை,

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் 'சிப்காட்' விரிவாக்கத்திற்கு, அரசு நிலத்தை அரசுக்கே விற்று இழப்பீடு பெற்றதில் நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, 15 இடங்களில் சோதனை நடத்தி, 18.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, பீமந்தாங்கல் கிராமத்தில், அரசு அனாதீன நிலங்களுக்கு முறைகேடாக பட்டா பெற்று, அவற்றை அரசுக்கே விற்று, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெறப்பட்டு உள்ளது.

இழப்பீடு நெமிலி கிராமத்தில், 2.24 லட்சம் சதுரடி உடைய ஓ.எஸ்.ஆர்., எனப்படும், அரசு நிலங்களுக்கு பத்திரம் பதிவு செய்தும், வல்லம், வடகால் கிராமங்களில், 'சிப்காட்' தொழிற்சாலை பகுதியில் உள்ள ஓ.எஸ்.ஆர்., எனப்படும் அரசு நிலங்களுக்கு, போலி பத்திரம் தயாரித்தும், 21 கோடி ரூபாய் மோசடியாக இழப்பீடு பெறப் பட்டுள்ளது.

வடகால் கிராமத்தில், 'வி.ஜி.பி., ஹவுசிங் டெவலப் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைப்பிரிவில் அமைந்துள்ள, சாலை, பூங்கா பரப்பான, 7.25 லட்சம் சதுரடி இடத்தை அரசுக்கு விற்று, 21.08 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், நில எடுப்பின் போது, மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ராஜேந்திரன், தாசில்தார் எழில்வளவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தனி நபர்கள் என, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக, சென்னை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும், ரியல் எஸ்டேட் அதிபர் கலைச்செல்வன் வீடு உட்பட, 15 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

ஆய்வு அப்போது சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிப்கார்ட் விரிவாக்கம் நடப்பதை முன் கூட்டியே அறிந்து, போலி ஆவணங்கள் வாயிலாக, நிலத்தின் சந்தை மதிப்பை உயர்த்தி காட்டி, அரசிடம் இருந்து கோடிக்கணக்கில் இழப்பீடு பெற்று மோசடி செய்திருப்பது,உறுதி செய்யப்பட்டது.

இதில், வி.ஜி.பி., குழுமத்தைச் சேர்ந்த ராஜேஷ், முக்கிய பங்கு வகித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சோதனையில் சிக்கிய, 1.56 கோடி ரூபாய், 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், 8.40 கோடி ரூபாய் வங்கி இருப்பு, 7.40 கோடி ரூபாய்க்கான பங்கு பத்திரங்கள் என, 18.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் விளக்கம் - முழு விவரம்

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  நவம்பர் 21, 2025, கார்த்திகை 05,  விசுவாவசு வருடம் 06-00: AM

புதுடெல்லி,

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக் கெடு விதிக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. அதேநேரம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. கருத்து வேறுபாடுகள் இருந்தால் மாநில அரசுடன் பேசித் தீர்க்க வேண்டும். முடிவெடுக்காமல் மசோதாக்களை நீண்டகாலம் நிறுத்தி வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விளக்கம் அளித்துள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் 10 நாட்கள் விசாரித்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆகியோர் வாதிட்டனர்.

அனைத்துத் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் கேள்விகள் மீதான விளக்கத்தை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று விளக்கம்அளித்துள்ளது.

அதன் விவரம்: மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் அல்லது மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துசட்டப்பேரவைக்கு கருத்துகளுடன் திருப்பி அனுப்ப வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் இந்த 3 வாய்ப்புகள் மட்டுமே ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளன.ஆளுநர் பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். இருப்பினும், அவர் தன் விருப்புரிமை அடிப்படையில் செயல்படவும் அரசமைப்புச் சட்டம் அதிகாரம் தந்துள்ளது. இதன்படி, மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம் அல்லது கருத்துகளுடன் பேரவைக்கு திருப்பி அனுப்பலாம்.

விசாரணைக்கு உட்பட்டவர்தான்மசோதாக்கள் மீது ஆளுநர் எடுக்கும் முடிவுகளை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு உட்படுத்த முடியாது. உரிமையியல் வழக்கு தொடர விலக்கு அளித்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவை, மசோதா விவகாரத்தில் ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு முகாந்திரமாகக் கொள்ள முடியாது.

ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர அரசமைப்புச் சட்டம் விலக்குரிமை அளித்திருந்தாலும், அவர் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவர்தான். ஆளுநரை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்பது, குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர, அரசமைப்புச் சட்டத்தில்காலக் கெடு விதிக்காதபோது, தமிழ்நாடு வழக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநர்களுக்கு காலக் கெடு விதித்தது பொருத்தமாக இல்லை.இதுபோல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்க அரசமைப்புச் சட்டத்தில் இடம் தரப்படவில்லை.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் குடியரசுத் தலைவரின் விருப்பமே போதுமானது. இருப்பினும், மசோதா குறித்த தெளிவற்ற நிலை இருந்தாலோ, உச்ச நீதிமன்ற ஆலோசனை தேவை என்ற பட்சத்திலோ விளக்கம் கேட்டுப் பெறலாம்.

மசோதா சட்டமாகும் முன்னரே, அதுகுறித்த ஆளுநர்களின் அல்லது குடியரசுத் தலைவரின் முடிவுகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாது. மசோதா சட்டமாகும் முன்பு, அதன் சாராம்சங்களை நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது.

‘ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காத மசோதாக்கள், உச்ச நீதிமன்றம் சிறப்புஅதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்ததாக கருதப்படும்’ என்று உத்தரவிட முடியாது. இவ்வாறு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்று அளிக்கப்படும் தீர்ப்பு, நிர்வாகப் பணிகளை நீதித்துறை எடுத்துக் கொள்வதாகிவிடும் என்பதால் அனுமதிக்க முடியாது.

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசின் மசோதா சட்டமாகாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ஆளுநரின் பணியை வேறு எந்த ஒரு அமைப்பும் பறிக்க முடியாது. அரசமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுதான் விசாரிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்கவில்லை.

அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட முடியுமா என்ற கேள்விக்கு, ‘உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் பரந்துபட்டது. இதற்கான பதில் 10-வது கேள்வியில் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகள் இடையிலான பிரச்சினையை மூல வழக்கின்றி வேறு வகையில் தீர்க்க உச்ச நீதிமன்றத்தை அரசமைப்புச் சட்டம் தடுக்கிறது என்ற கேள்வி பொருத்தமற்றது என்பதால் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Thursday, November 20, 2025

பிஹார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு

 


பதிவு: வியாழக்கிழமை,   நவம்பர் 20, 2025, கார்த்திகை 04,  விசுவாவசு வருடம் 07-00: AM

பாட்னா,

பிஹாரில் ஐக்கிய ஜனதாதளத்தின் சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். மாநில முதல்-மந்திரியாக இன்று (வியாழக்கிழமை) அவர் பதவியேற்கிறார்.

243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜனதா 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடந்தது. இதில் 22 எம்.எல்.சி.க்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை விஜய் சவுத்ரி மற்றும் உமேஷ் குஷ்வாகா ஆகியோர் முன் மொழிந்தனர். பிஜேந்திர யாதவ் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். பின்னர் பேசிய நிதிஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்குமாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்களை கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய ஜனதாதளத்தின் சட்டசபைக்குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபைக்குழு தலைவராக (முதல்-மந்திரி) நிதிஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. மாநிலத்தின் முதல்-மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கிறார். தலைநகர் பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

                                        
இதற்கிடையே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் நேற்று நடந்தது. இதில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக விஜய் குமார் சின்கா தேர்வானார்.

பா.ஜனதா சட்டசபைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்கான மேலிட பார்வையாளராக உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நியமிக்கப்பட்டு இருந்தார்.

மேலும் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் இணை பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பா.ஜனதா சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாம்ராட் சவுத்ரி, முந்தைய ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, நிதிஷ் குமார் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று கவர்னர் ஆரிப் முகமது கானை நேற்று மாலை சந்தித்தார்.

ராஜினாமா அப்போது வெளியேறும் அரசின் தலைவரான நிதிஷ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கவர்னரிடம் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஆரிப், புதிய அரசு பதவியேற்கும் வரை இடைக்கால முதல்வராக நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, பிஹார் முதல்வராக, 10வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்கிறார். காந்தி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கினார் பிரதமர் - விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி விடுவிப்பு

 

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று தொடங்கிய தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை, கொங்கு மண்டல மக்களின் சார்பில் வரவேற்ற உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து. அருகில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இயற்கை விவசாயிகள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், வாழை கருப்பையா, கு.ராமசாமி.


பதிவு: வியாழக்கிழமை,   நவம்பர் 20, 2025, கார்த்திகை 04,  விசுவாவசு வருடம் 06-30: AM

கோவை,

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்தார். மேலும், விவசாயத்தில் பல்லடுக்கு வேளாண்மையை ஊக்குவிக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கவுரவிப்பு நிதி திட்டத்தின் கீழ் (பிஎம் - கிஸான்) ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவித் தொகை விடுவிக்கும் நிகழ்வு, தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர்கள் கூட்டுக் குழு சார்பில் 3 நாள் இயற்கை விவசாயிகள் மாநாட்டு தொடக்க விழா ஆகியவை கோவை கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை தொடங்கிவைக்க பிரதமர் மோடி நேற்று கோவை வந்தார்.

அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார். மேலும், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், 21-வது தவணையாக நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்தார். தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் சிறப்பாக பணியாற்றிய 7 விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார்.



அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: எனக்கு வரவேற்பு கொடுக்கும் போது, விவசாயிகள் தங்களது மேல் துண்டை சுழற்றினர். அதைப் பார்த்த போது பிஹாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் அளவளாவியது. கோவை என்பது கலாச்சாரம், கனிவு ஆகியவற்றை சொந்த மாக்கிக் கொண்ட பூமி. தென் இந்தியாவின் தொழில் முனைவோர் ஆற்றலின் சக்தி பீடம். இங்கு இருக்கும் ஜவுளித் துறை தேசத்தின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு அளிக்கிறது. இங்கு எம்.பி. ஆக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகி அனைவருக்கும் வழிகாட்டி வருகிறார்.

இயற்கை விவசாயம் மிகவும் சிறப்பானது. இந்த மாநாட்டில் உள்ள அரங்குகளை பார்த்தேன். ஒருவர் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு விவசாயத்துக்கு வந்திருக்கிறார். ஒருவர் இஸ்ரோவை விட்டுவிட்டு வேளாண் தொழிலுக்கு வந்துள்ளார். இந்த வேளையில் தமிழ்நாட்டின் வேளாண் பெருமக்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களை உங்களது துணிச்சலுக்காக காணிக்கையாக்குகிறேன்.

      


நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.18 ஆயிரம் கோடி இங்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கூட பல லட்சம் விவசாயிகளின் வங்கிகணக்கில் பிரதம மந்திரியின் விவசாய கவுரவ நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் ரூ.4 லட்சம் கோடி விவசாயிகளுக்கு நேரடியாக சேர்ந்துள்ளது. இந்த தொகை விவசாயத்துடன் தொடர்புடைய பல்வேறு பணிகளை செய்ய உதவியாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 37 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் இயற்கை வேளாண்மை நடைபெற்று வருகிறது. இயற்கை வேளாண்மை நமது நாட்டின் சுதேசி கருத்து. தென்னிந்திய விவசாயிகள் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் உள்ளிட்டவற்றை உள்வாங்கி உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இயற்கை வேளாண்மையுடன் சிறுதானியங்களையும் பயிர் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் முருக பெருமானுக்கு தேனும், திணையும் படைக்கிறோம்.

தமிழ்நாட்டில் கம்பும், சாமையும், கேரளாவில் ராகி, ஆந்திராவில் சஜ்ஜா ஆகியவை பல தலைமுறைகளாக நமது உணவு பழக்கத்துடன் ஒன்று கலந்தது. இந்த சிறந்த உணவானது உலகின் சந்தைகளில் சென்று சேர வேண்டும்.

கேரளா, கர்நாடகாவில் மலைப்பாங்கான பகுதிகளில் ஒரே வயலில் பாக்கு, தென்னை, பழ மரங்கள் இருக்கும். இவற்றுக்கு இடையில் ஊடு பயிராக, மசாலா பொருட்கள், மிளகு போன்றவை பயிரிடப்படுகின்றன. விவசாயத்தில் இந்த மாதிரியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தென்னிந்தியா விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் உலகின் பழமையான நீர்ப்பாசன முறை உள்ளது.

இதற்கு 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டை முன்னுதாரணமாக கூறலாம். மண்ணின் பராமரிப்பு முறை, குளங்கள், நீர்ப்பாசன திட்டங்கள் வழிகாட்டும் வகையில் அமைந்தன.இயற்கை வேளாண்மையை பாட திட்டத்தில் முக்கிய பங்காக கொண்டு வர வேண்டும்.

கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் வயல்களை உங்களின் பரிசோதனை கூடமாக மாற்ற வேண்டும். இயற்கை விவசாயத்தின் இந்த இயக்கத்தில் மாநில அரசு, விவசாயிகள், உற்பத்தியாளர்களின் பங்களிப்பு அவசியம். நமது விவசாயிகளின் பாரம்பரியமான ஞானம், அறிவியலின் பயன், அரசுகளின் அதரவு ஆகியவை இணையும் போது பலம் பெறுவார்கள். நமது பூமி தாயும் ஆரோக்கியமாக இருப்பாள்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, மாநாட்டில் விவசாயிகள் சார்பில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் இடம் பெற்ற கண்காட்சியில் 17 அரங்குகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இயற்கை விவசாயிகள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கு.ராமசாமி, பி.ஆர்.பாண்டியன், வாழை கருப்பையா, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பல்லா யிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


கோவையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

 


பதிவு: வியாழக்கிழமை,   நவம்பர் 20, 2025, கார்த்திகை 04,  விசுவாவசு வருடம் 06-00: AM

கோவை,

தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்களும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

  

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா அரங்கில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க  நேற்று மதியம் கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து விமான நிலையம் முதல் கொடிசியா கண்காட்சி அரங்கம் வரை சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்களை நோக்கி கையசைத்தபடியே பிரதமர் காரில் சென்றார்.

பின்னர், கொடிசியா வளாகத்தில் இயற்கை விவசாயிகள் மாாடு 2025-ஐ பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களை பார்வையிட்ட பிரதமர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.


Wednesday, November 19, 2025

1,008 sangabhishekam performed at Arulmigu Immaiyilum Nanmai Tharuvar Te...

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...