Thursday, November 27, 2025

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன் - தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 11-00: AM

சென்னை,

எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிறகு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதற்கிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போது அவர், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். எனவே செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக செங்கோட்டையன் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல் பரவியது. இது தொடர்பான கேள்விக்கும் செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை. அதேபோல் த.வெ.க. தரப்பில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்கப்பட்டபோதும் அவரும் பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். இதனால் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானது.

அதனை உறுதிபடுத்தும் வகையில் செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்காக அவர் நேற்று காலை 11 மணியளவில் தலைமைச்செயலகம் வந்தார். அவர், நேராக சபாநாயகர் அறைக்கு சென்றார். அங்கு தான் கையோடு கொண்டு வந்திருந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட்டு, அதனை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார்.

பின்னர் வெளியே வந்த அவரை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க சூழ்ந்தனர். ஆனால் செங்கோட்டையன், ‘‘ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அதனைத்தொடர்ந்து, செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு அவரை தி.மு.க.வுக்கு இழுக்கும் முயற்சி நடக்கிறதோ என்ற கேள்வியை எழ செய்தது. பின்னர் செங்கோட்டையன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். காரில் இருந்து அ.தி.மு.க. கொடியையும் அகற்றினார்.

இதற்கிடையே த.வெ.க. தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டுக்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுடன் ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க.வா?, த.வெ.க.வா? என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று மாலை 4.36 மணிக்கு செங்கோட்டையன் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டுக்கு திடீரென்று சென்றார். அவரை ஆதவ் அர்ஜுனா தனது காரில் அழைத்துச் சென்றார். அங்கு சுமார் 2 மணி நேரம் விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் இருவரும் மனம் விட்டு பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர்.

இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார். ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தனது 50 -க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முறைப்படி த.வெ.க.வில் இணைந்தார்.

நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி

இந்நிலையில் செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4 மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன், அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் 49-வது பிறந்தநாள் - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் துணை முதல்-அமைச்சர் மரியாதை

 


 

 
 
பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 10-30: AM

சென்னை,

தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது 49-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

“ஆதிக்கவாதிகளிடம் குவிந்திருந்த அதிகாரத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் நமது பிறந்த நாளில் மரியாதை செலுத்தினேன். பேரறிஞர் அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம்! மாநில உரிமைகளையும் - சமூக நீதியையும் நிலைநாட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி. வாழ்த்து:-

‘தமிழ்நாடு துணை முதல்-அமைச்சரும், கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மக்கள் பணி சிறந்திட வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் எம்.பி. வாழ்த்து:-

‘தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க. பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க’ என்று தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 10-00: AM

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தங்கத்தகடுகளை தாமிர தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உள்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஆனால் கேரளாவில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9 மற்றும் 11-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அதற்கு முன்னதாக துவார பாலகர் சிலைகள் மற்றும் சபரிமலை கோவில் கதவு நிலைகளை தனது வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த நடிகர் ஜெயராமை கைது செய்து விசாரிக்க, விசாரணை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.


இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் தேவஸ்தான தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மகுமார் கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்மகுமாரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவுக்கு கோர்ட்டு நேற்று அனுமதி வழங்கியது. தங்கம் அபகரிப்பு விவகாரம் தொடர்பாக சபரிமலை அய்யப்பன் கோவிலின் மூத்த தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு மோகனரு ஆகியோர் சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

சென்னையை நோக்கி நகரும் புதிய புயல்.! - இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது ‘சென்யார்’ புயல்

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

29-ந்தேதி முதல் வட தமிழகத்துக்கு மிக கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

புதிய புயல்

மலாக்கா ஜலசந்தி பகுதியில் ‘சென்யார்' புயல் உருவானது. இது இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்து, அதன் ஆற்றல் மட்டும் தென் சீனக் கடல் பகுதிக்கு சென்றது. இந்த புயலினால் எந்த மழை வாய்ப்பும் நமக்கு இல்லை.

இதுதவிர, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தெற்கு இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் வலுப்பெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலைக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அன்றைய தினம் நள்ளிரவு வட இலங்கையையொட்டிய கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

சென்னைக்கு நோக்கி நகர்ந்து...

இதைத்தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை தமிழ்நாட்டின் டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும் என்றும், டெல்டா பகுதிகளில் புயலின் முன் பகுதி நுழையும் அதாவது நிலப்பகுதிகளில் ஊடுருவும் என்றும், பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்து, 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலைக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் நாளையில் இருந்து 30-ந்தேதி காலை வரையிலும், வருகிற 29-ந்தேதி காலையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவே ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

வட தமிழக மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மேற்சொன்ன 4 நாட்கள் பரவலாக கன முதல் மிக கனமழையும், புயலின் நகர்வை பொறுத்து பல இடங்களில் அதி கனமழை வரையும் பெய்வதற்கான சூழல் இருப்பதாகவே தற்போது கணிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பகுதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

புயல் கரைக்கு அருகே வந்து உருவாவதாலும், நிலப்பரப்பில் ஊடுருவல் இருப்பதாலும் காற்று பாதிப்பு இருக்காது. ஆனால் அதேநேரத்தில் மழைக்கான சூழல் அதிகம் இந்த நிகழ்வில் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவம்பர் 27) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 29-ம் தேதி வரை சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

30-ம் தேதி வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 8 செமீ, ராமேஸ்வரத்தில் 6 செமீ, மண்டபத்தில் 5 செமீ, தங்கச்சிமடத்தில் 4 செமீ, வாலிநோக்கத்தில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, November 26, 2025

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் - அடுத்த கட்ட நகர்வு என்ன..? த.வெ.க.வா?, தி.மு.க.வா?

 

பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 26, 2025, கார்த்திகை 10,  விசுவாவசு வருடம் 05-00: PM

சென்னை,

9 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் - எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன் - சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார் - நாளை த.வெ.க.வில் இணைகிறார்?

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். விஜய் முன்னிலையில் நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, போக்குவரத்து துறை, வேளாண்மை துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக அவர் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன், அதற்கு கட்சி தலைமைக்கு காலக்கெடு விதித்தார். இதனால் அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

த.வெ.க.வில் இணைகிறார்

இந்த நிலையில், அமைதி காத்து வந்த கே.ஏ.செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகம் செல்லும் அவர், விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், இன்று காலை 11.45 மணிக்கு சென்னை தலைமைச்செயலகம் வந்த கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து தனது கோபி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடித்ததை வழங்கினார். அதனை சபாநாயகர் அப்பாவு பெற்றுக் கொண்டார். அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ''இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்,'' என்று கூறினார்.

ஏற்கனவே, ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க.வில் இணைந்த நிலையில், தற்போது கே.ஏ.செங்கோட்டையனும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையன் – சேகர் பாபு சந்திப்பு

இந்த நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்துக்கு வருவதை கேள்விப்பட்ட அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அவரை சபாநாயகர் அப்பாவுவின் அறைக்கே சென்று சந்தித்து பேசினார். சுமார் 5 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. ஏற்கனவே, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த பி.கே.சேகர்பாபு, தற்போது கே.ஏ.செங்கோட்டையனையும் தி.மு.க.வுக்கு இழுக்க பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

 

பேச்சு வார்த்தைக்குப்பிறகு வெளியே வந்த கே.ஏ.செங்கோட்டையனை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறுகேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் யாருடைய கேள்விக்கும் பதிலளிக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

த.வெ.க.வா?, தி.மு.க.வா? என்பது கே.ஏ.செங்கோட்டையன் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. செங்கோட்டையன் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதும், அவரது அடுத்த கட்ட நகர்வு என்ன..? என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஐம்பது ஆண்டுகால உழைப்பிற்கு அதிமுகவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி பரிசு கொடுத்துள்ளனர்” என வருத்தம் தெரிவித்திருந்தார்.

‘தி.மு.க. அரசின் சட்டங்கள் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 

பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 26, 2025, கார்த்திகை 10,  விசுவாவசு வருடம் 04-00: PM

ஈரோடு, 

மொடக்குறிச்சியில் மாவீரன் பொல்லான் உருவச்சிலை, அரங்கம் திறப்பு விழா - ‘தி.மு.க. அரசின் சட்டங்கள் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’:ஸ்டாலின் பெருமிதம் - ‘லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியது தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கம்’

‘தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’ என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியது தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைத்து பேசியதாவது:–

பூலித்தேவன் - வீரபாண்டிய கட்டபொம்மன் - தீரன் சின்னமலை - மருதிருவர் - வீரமங்கை வேலு நாச்சியார் - மாவீரன் பொல்லான் என்று, நம் தமிழ் மண் ஈன்றெடுத்த மாவீரர்கள் அத்தனை பேரும் நம்முடைய மண் - மொழி - மானம் ஆகியவற்றை காத்திருக்கக்கூடியவர்கள். இடைவிடாமல் அதற்காக போராடிக் கொண்டிருக்கவேண்டும் என்று இன்றைக்கு நமக்கெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள்.

சொன்னால், சொன்னதை செய்பவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – அதற்கு சாட்சியாக சொல்லவேண்டும் என்று சொன்னால், இந்தமாவீரன் பொல்லான் சிலைதான் அதற்கு சாட்சி!

2019-ல் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில், மகுடஞ்சாவடியில் நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளி விழா – அதை முன்னின்று நடத்தியவர் நம்முடைய அதியமான். அதில் பங்கேற்று, சிறப்பித்து பெருமை சேர்த்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஈஸ்வரன்.

மாவீரன் பொல்லானுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்போம் என்று அந்த நிகழ்ச்சியில் நான்உறுதியளித்தேன். இன்றைக்கு அதை உங்கள் முன்னால் திறந்து வைத்திருக்கிறேன். இன்று திரையில் பொல்லானின் வாழ்க்கை வரலாற்றை சிறு குறிப்பாக எடுத்து வெளியிட்ட நேரத்தில் அதை சுட்டிக்காட்டினார்கள்.

பவானிப்போர் - ஓடாநிலைப் போர் - அரச்சலூர் போர் என்று அந்நியரான ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் மாவீரன் பொல்லான்!

நினைவுச் சின்னம் கோரிக்கை நிறைவேறியது...

பொல்லானின் வீரத்தை கண்டு, சினம் கொண்ட ஆங்கிலேயப் படை தளபதி கர்னல் ஹாரிஸ் தலைமையிலான படையால், மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய தியாகத்தைப் போற்ற அவருடைய வீரத்தை காலத்துக்கும் எடுத்துச் சொல்ல, இப்படியொரு நினைவுச் சின்னம் வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக இருந்த வந்த கோரிக்கை, இப்போது திராவிட மாடல் அரசின் மூலமாக அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது!

இந்த பெருமையான தருணத்தில், ஒரு முக்கியமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஏன் உங்களின் பலருக்குக் கூட அது நினைவிருக்கும் என்று கருதுகிறேன். கடந்த ஜூன் மாதம் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில், ஒரு செய்தி வந்திருந்தது. அதை படித்ததுமே, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தச் செய்தி என்னவென்றால் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம், அந்த மக்களுக்கு எத்தகைய ஒளிவிளக்காக திகழ்கிறது என்பதைப் பற்றி தி இந்து பத்திரிகையில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களைப் பெற்று, ஆதாரத்துடன் இந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள்.

அந்தச் செய்தியில், 2009-ல் 193 அருந்ததியினர் மாணவர்கள் பொறியியல் படித்துக் கொண்டிருந்த நிலைமாறி, இந்த ஆண்டு 3 ஆயிரத்து 944 மாணவர்கள் பொறியியல் படிக்கிறார்கள் என்றும்,

2023-–24-ஆம் ஆண்டில், 193 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்!

இதில் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பெருமை என்னவென்றால், உங்களில் பலருக்கும் தெரியும். இந்த உள் ஒதுக்கீடு சட்டத்தை கலைஞர் நிறைவேற்ற முடிவு செய்தார் – முடிவு செய்து, அது சட்டமன்றத்தில் சட்ட மசோதவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் – ஆனால், திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதனால் அவரால் எழுந்து நடமாட முடியாத நிலை அன்றைக்கு ஏற்பட்டது. அன்றைக்கு காலையில் “உடனே புறப்பட்டு மருத்துவமனைக்கு வா” என்று எனக்கு தொலைபேசியிலிருந்து அழைப்பு வருகிறது. வந்தவுடன் என்னை அழைத்து சொன்னார், நான் ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் இன்றைக்கு நிறைவேற்றவேண்டும் – அறிமுகப்படுத்த வேண்டும் – என்னை மருத்துவர்கள் செல்வதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அதனால், நீ சென்று என்னுடைய சார்பில் அந்த மசோதாவை அறிமுகப்படுத்து என்று எனக்கு உத்தரவிட்டார். அந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்கின்ற வாய்ப்பு இந்த அடியேன் ஸ்டாலினுக்கு கிடைத்தது என்று இன்றைக்கு நான் பெருமைப்படுகிறேன்!

சமூகநீதிப் பாதையை கட்டமைப்பதில்...

ஒரு சமூகத்தையே முன்னேற்று வதற்கான அந்த சமூகநீதிப் பாதையை கட்டமைப்பதில் என்னுடைய பங்கும் இருந்திருக்கிறது என்பதை எண்ணி இன்றைக்கும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுதான் எனக்குக் கிடைத்த பெருமை!

அதுமட்டுமல்ல, அந்தச் செய்தியில், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் தி இந்து பத்திரிகையில்எழுதியிருந்தார்கள். அது என்னவென்றால், “தி.மு.க. அரசு எந்தவொரு சட்டத்தை நிறைவேற்றும் போதும், அதற்குரிய காரணங்களை முறையாக ஆராய்ந்து, தரவுகளை எல்லாம் தொகுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு குழு அமைத்து, அவர்களுடைய பரிந்துரைகளை எல்லாம் பெற்று, சாமானிய மக்களுக்கு உரிய பயன்களை உண்மையிலேயே அளித்து வருவதால், தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியைப் பெற்று வருவது தான் வரலாறு!” என்று பாராட்டியிருந்தார்கள்!

லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியதால் இந்தப் பாராட்டுதான், தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய அடையாளம்!

எல்லார்க்கும் எல்லாம் என்ற நம்முடைய இலட்சியத்தை அடைய வேண்டும். பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சமூக நிலையையும் உயர்த்த வேண்டும் என்று திராவிட மாடல் அரசின் சார்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அது அத்தனையும் இங்கே பட்டியிலிட முடியாது – நேரமில்லை – அடுத்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்றாக வேண்டும். அதை பட்டியலிட்டால், இன்றைக்கு முழுவதும் போதாது. எனவே, அருந்ததியர் இன மக்களுக்காக செய்யப்பட்டுள்ள சிலவற்றை மட்டும் தான் அதுவும் தலைப்புச் செய்திகளாக உங்களிடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, தேனி மற்றும் கரூர் மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 182 கோடி ரூபாயில் 26 விடுதிகள், - 74 கோடி ரூபாயில், 107 பள்ளிக் கட்டடங்கள், 20 கோடி ரூபாயில், 26 சமுதாயக் கூடங்கள், - 134 கோடி ரூபாயில், 131 கிராம அறிவுசார் மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில், 29 மாணவர்களுக்கு 10 கோடியே 30 லட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கியிருக்கிறோம்!

முழுநேர முனைவர் ஆராய்ச்சி படிப்பிற்காக 329 மாணவர்களுக்கு 3 கோடியே 29 இலட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கியிருக்கிறோம்! - போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை 3 இலட்சத்து 69 ஆயிரத்து 550 பேருக்கும், - ஃப்ரி-மெட்ரிக் கல்வி உதவித்தொகையை 5 இலட்சத்து 42 ஆயிரத்தி 396 மாணவர்களுக்கும் வழங்கியிருக்கிறோம்!

தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரியத்தை திருத்தி அமைத்திருக்கிறோம்!

2021-ல், 18 ஆயிரத்து 225 பேர் மட்டுமே இருந்த இந்த வாரியத்தில், நம்முடைய அரசு சிறப்பாக செயல்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், மூன்று லட்சம் பேர் உறுப்பினர்களாக வாரியத்தில் சேர்ந்திருக்கிறார்கள்! இவர்களுக்கு எல்லாம் 11 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது!

அதுமட்டுமல்ல, அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியிருக்கிறோம். சுகாதார அங்காடிகள் அமைத்திருக்கிறோம். இந்த வாரியத்துக்கு ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறோம்.

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் நாள் ஆறு முக்கிய சிறப்புத் திட்டங்களை அறிவித்திருக்கிறோம். இப்படி என்னால் தொடர்ந்து பட்டியலிட்டுக் கொண்டிருக்க முடியும்!

உண்மையான வளர்ச்சி

இதையெல்லாம் செய்வது, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்! எல்லோரும் சமமாக வாழுகின்ற சமூகம் உருவாக வேண்டும்! அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி என்பதற்காகத்தான்! இந்த லட்சியத்தோடு நடைபோடும் திராவிட மாடல் அரசுக்கு அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும், நீங்கள் எல்லோரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க மாவீரன் பொல்லான்! வாழ்க அவரது புகழ்!

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், மதிவேந்தன், கயல்விழிசெல்வராஜ், நாடாளுமன்றஉறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், மாதேஸ்வரன், சட்டமன்றஉறுப்பினர்கள் ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வெங்கடாசலம், சந்திரகுமார், வாரியத்தின் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, துணைத் தலைவர் கனிமொழி, மாவட்ட கலெக்டர் கந்தசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Rajini Gaang Movie Team Press Meet at Coimbatore | all set to release on...

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...