Wednesday, December 3, 2025

ரஷிய அதிபர் புதின் நாளை இந்தியா வருகை - டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு - ரஷ்யா - இந்தியா இணைந்து எஸ் 500 ஏவுகணை தயாரிக்க திட்டம்

 

பதிவு: புதன்கிழமை,  டிசம்பர் 03, 2025, கார்த்திகை 17,  விசுவாவசு வருடம் 04-30: AM

புதுடெல்லி,

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக நீண்ட காலமாக உள்ளது. உலகின் உச்ச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா வந்தார்.

இதனிடையே உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக, புதின் மீது சர்வதேச கோர்ட்டு பிடிவாராண்டு பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்தது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள கடந்த ஆகஸ்டு மாதம் புதின், அலாஸ்கா சென்றார்.

இந்தநிலையில் டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா-ரஷியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷியா அதிபர் புதின், நாளை (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார். 2 நாள் பயணமாக டெல்லி வரும் புதின், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின்னர் பாரம்பரிய விருந்தில் கலந்து கொள்கிறார்.

ரஷிய-இந்திய மாநாட்டின்போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வணிகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த முக்கிய ஆலோசனைகளும் நடைபெற உள்ளன. புதினின் வருகையையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவரது பயணத்​தின் போது ரஷ்​யா​வும் இந்​தி​யா​வும் இணைந்து அதிநவீன எஸ் 500 ஏவு​கணை​களை தயாரிப்​பது குறித்து முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தப்பட உள்​ளது.

இந்​திய - ரஷ்ய 23-வது வரு​டாந்​திர உச்சி மாநாடு டிசம்​பர் 4, 5-ம் தேதி​களில் டெல்​லி​யில் நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை டெல்​லிக்கு வரு​கிறார். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் புதினும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளனர். குறிப்​பாக பாது​காப்​பு, எரிசக்​தி, வர்த்​தகம், விண்​வெளி, அணுசக்​தி, தொழில்​நுட்​பம் குறித்து தலை​வர்​கள் இரு​வரும் விரி​வான ஆலோ​சனை நடத்த உள்​ளனர்.

ரஷ்​யா​விடம் இருந்து 5 எஸ் 400 ஏவு​கணை​களை வாங்க கடந்த 2018-ம் ஆண்​டில் மத்​திய அரசு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டது. இது​வரை 3 எஸ் 400 ஏவு​கணை​களை ரஷ்யா வழங்​கி​யிருக்​கிறது. மீத​முள்ள 2 தொகுப்​பு​கள் அடுத்த ஆண்​டில் ஒப்​படைக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த மே மாதம் இந்​தியா - பாகிஸ்​தான் இடையே 4 நாட்​கள் அதிதீ​விர போர் நடை​பெற்​றது. அப்​போது, இந்​தி​யா​வின் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது எஸ்​-400 ஏவு​கணை​கள் மிக முக்​கிய பங்கு வகித்​தன. குறிப்​பாக இந்​திய எல்​லை​யில் இருந்து 300 கி.மீ. தொலை​வில் பாகிஸ்​தான் வான்​பரப்​பில் பறந்த அந்த நாட்​டின் அதிநவீன உளவு விமானம் எஸ் 400 ஏவு​கணை மூலம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து ரஷ்​யா​விடம் இருந்து கூடு​தலாக எஸ் 400 ஏவு​கணை​களை வாங்க மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. இதுதொடர்​பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் டெல்​லி​யில் நேற்று கூறும்​போது, “இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்​திப்​பின் போது பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும். இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யின்​போது எஸ் 400 ஏவு​கணை முக்​கிய இடம்​பிடிக்​கும்” என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்ய கூடாது என்று அமெரிக்கா நிர்​பந்​தம் செய்து வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு இந்​தியா அடிபணி​யாது. ரஷ்​யா​விடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்​ணெய் கொள்​முதல் செய்யப்படும். ரஷ்​யா​வின் எஸ் 400 ஏவு​கணை மூலம் சுமார் 400 கி.மீ. தொலைவு வரையி​லான இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும். அதிபர் புதினின் வரு​கை​யின் போது இந்த ஏவு​கணை​களை ரஷ்​யா​விடம் இருந்து கூடு​தலாக வாங்​கு​வது குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும்.

அடுத்​தகட்​ட​மாக ரஷ்​யா​வின் எஸ் 500 ஏவு​கணை​களை இந்​திய விமானப் படை​யில் சேர்க்​க​வும் திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது. இதற்​காக ரஷ்​யா​வும் இந்​தி​யா​வும் இணைந்து எஸ் 500 ஏவு​கணை​களை தயாரிப்​பது குறித்து அதிபர் புதினுடன் பிரதமர் மோடி விரி​வான ஆலோ​சனை நடத்த உள்​ளார். இந்த ஏவு​கணை மூலம் 600 கி.மீ. தொலைவு வரையி​லான தரை, வான் இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும்.

ரஷ்​யா​விடம் இருந்து எஸ்​யு-57 ரக போர் விமானங்​களை வாங்​கு​வது தொடர்​பாக​வும் இரு தரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​தப்பட உள்​ளது. இந்த போர் விமானங்​களுக்​கான தொழில்​நுட்​பத்தை இந்​தி​யா​வுக்கு வழங்க ரஷ்யா முன்​வந்​திருக்​கிறது. இதன்​படி எஸ்யு - 57 போர் விமானங்​கள் இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​படும்.

மேலும் ரஷ்​யா​வுக்கு சுற்​றுலா செல்​லும் இந்​தி​யர்​கள் விசா இல்​லாமல் அந்த நாட்​டுக்கு செல்​வது குறித்​தும் அதிபர் புதினும் பிரதமர் மோடி​யும் பேச்​சு​வார்த்​தை நடத்​த உள்​ளனர்​. இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

Tuesday, December 2, 2025

Madurai Malli, Jasmine price soars to over Rs.4500 per kg in Tamil Nadu

R.B.Udayakumar makes serious allegations, "Each polling station has more...

Former CM of Puducherry V.Narayanasamy Says, Congratulations on Sengotta...

Thirumavalavan Speech About SIR | Bar Association State Conference at Ma...

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் நாளை மகாதீபம் - குவியும் பக்தர்கள்

 

பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 02, 2025, கார்த்திகை 16,  விசுவாவசு வருடம் 07-30: AM

மகா தீபத்தன்று சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

இங்கு பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளையே கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பெயர் சூட்டி அழைக்கப்படும் 2,668 அடி உயரமுள்ள மலையையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அதனை போற்றும் வகையில் காா்த்திகை தீபத்தன்று இந்த மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவை முன்னிட்டு தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. நாளை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.

தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள்.

மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மலையில் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகள் போடமாட்டார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீட்டின் முன்பும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். அந்தநேரம் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும்.

மகாதீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் அகல்விளக்குகள் ஏற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தன்று சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக தீபத்தன்று அல்லது தீபத்திற்கு மறுநாள் பவுர்ணமி தொடங்கும். அதன்படி இந்த ஆண்டு 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.18 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.37மணிக்கு நிறைவடைகிறது. அதனால் நாளை முதல் 5-ந் தேதி வரையில் 3 நாட்கள் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதனால் இன்று முதல் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். திருவண்ணாமலை நகரை சுற்றி இணைக்கும் புறவழிச்சாலைகள் உள்பட 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 130 இடங்களில் கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஒரு பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ் நிலையத்திற்கு செல்ல ஆட்டோ வசதி, இலவச பஸ் வசதி போன்றவை செய்யப்பட்டு உள்ளது. கோவில், கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ்நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட 231 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதால் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர். விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

எஸ்ஐஆர் விவகாரத்தைக் கிளப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

 

பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 02, 2025, கார்த்திகை 16,  விசுவாவசு வருடம் 06-50: AM

புதுடெல்லி,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் கபடி அணி ஆகியவற்றுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அமைதி காக்குமாறு அவைத்தலைவர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியபோது, மணிப்பூர் ஜிஎஸ்டி சீர்திருத்த மசோதா, புகையிலைப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா ஆகியவற்றை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்படி, புகையிலைப் பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. சிகரெட் மீதான கலால் வரி 2 மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது.

மசோதாக்களை அமைச்சர் தாக்கல் செய்து பேசியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோது, மணிப்பூர் ஜிஎஸ்டி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போதும் எஸ்ஐஆர் பணியைக் கண்டித்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் வெளிநடப்பு

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறையாக நேற்று மாநிலங்களவையை வழிநடத்தினார். இதையொட்டி, அவையின் சார்பில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்திப் பேசினர்.

பிறகு, பிற்பகலில் மாநிலங்களவை கூடியபோது, எஸ்ஐஆர் பணி குறித்து அவையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

‘எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், உடனடியாக விவாதம் நடத்துமாறு நிர்ப்பந்தம் செய்யக் கூடாது’ என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பிரதமர் மோடி அறிவுரை

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் பேசியதாவது: குளிர்கால கூட்டத்தொடர் வெறும் சடங்காக மாறிவிடக் கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் சிறப்பு கூட்டத்தொடராக அமைய வேண்டும்.

                                         
சமீபத்தில் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்தையும், அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியையும் பார்த்து உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.

பெரும்பாலும் தேர்தல்களுக்கான களமாகவோ அல்லது தேர்தல் தோல்விக்குப் பிறகு விரக்தியை வெளிப்படுத்தும் இடமாகவோ நாடாளுமன்றம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறையை மக்கள் ஏற்பது இல்லை. தேர்தல் தோல்வி விரக்தியால் நாடாளுமன்றத்தை முடக்கக் கூடாது. அதேநேரம், தேர்தல் வெற்றியின் ஆணவமும் இருக்கவே கூடாது. குளிர்கால கூட்டத்தொடர் சமநிலையுடன் இருக்க வேண்டும். அவையின் மாண்பை அனைத்து உறுப்பினர்களும் காப்பாற்ற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நாடகம் நடத்தக்கூடாது. வெற்று கோஷம் எழுப்பக்கூடாது. எதிர்ப்பு, எதிர்மறை என்பதெல்லாம் அரசியலுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும்போது நேர்மறை சிந்தனைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர வேண்டும். நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும். முக்கியமான, அர்த்தமுள்ள பிரச்சினைகளை மட்டுமே அவையில் எழுப்ப வேண்டும்.

எதிர்க்கட்சிகள் தங்கள் அணுகுமுறை, உத்தியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிறப்பாக செயல்படுவது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளேன்.

முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்.பி.க்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகள், நாட்டின் வளர்ச்சி குறித்து பேச அனைத்து கட்சிகளும் உரிய வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் கூறினார்.

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புகழாரம்

நாட்டின் 15-வது குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மாநிலங்களவைக்கு அவர் முதல்முறையாக தலைமை தாங்கினார். அவருக்கு வாழ்த்து தெரி வித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:

மாநிலங்களவைக்கு முதல்முறையாக தலைமை தாங்கும் தங்களுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது உங்கள் பயணத்தின் ஒரு பகுதிதான். இளைஞராக இருந்தது முதல் தற்போது வரை சமூக சேவைதான் தங்களது முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. மிக எளிமையான வாழ்க்கையில் இருந்து நீங்கள் உயர் பதவிக்கு வந்திருப்பது நமது ஜனநாயகத்தின் வலிமையை காட்டுகிறது. உங்களது பணிவான தோற்றமானது சேவை, அர்ப்பணிப்பு, பொறுமையைப் பிரதிபலிக்கிறது.

குழந்தைப் பருவத்தில் நீங்கள் எதிர்பாராதவிதமாக அவிநாசி கோயில் குளத்தில் மூழ்கினீர்கள். ‘நான் மூழ்கியது மர்மமாகவே இருந்தது. என்னை யார் காப்பாற்றினார்கள்? எப்படி காப்பாற்றப்பட்டேன்? எதுவுமே எனக்கு தெரியாது. ஆனால் உயிர் பிழைத்தேன்’ என்று கூறியுள்ளீர்கள். அதேபோல, கோவையில் அத்வானி ரதயாத்திரையின்போது நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 60-70 பேர் கொல்லப்பட்ட நேரத்தில், நீங்கள் நூலிழையில் உயிர் தப்பினீர்கள். இந்த இரு சம்பவங்களிலும் இறைவன் அருள் இருப்பது தெளிவாக தெரிகிறது.

முதல்முறையாக காசிக்கு சென்று கங்கை அன்னையின் ஆசியை பெற்ற போது, ​​இனி அசைவம் சாப்பிட மாட்டேன் என்று சபதம் ஏற்றீர்கள். வாராணசி எம்.பி. என்ற வகையில் இந்த சம்பவம் எப்போதும் எனது நினைவில் இருக்கும்.

எந்த பொறுப்பை வழங்கினாலும், திறம்படச் செய்யக்கூடியவர். உங்களது பயணம் ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஊக்கம் தருகிறது. அவையின் பாரம்பரியத்தையும், தலைவரின் கவுரவத்துக்கும் அனைத்து உறுப்பினர்களும் மதிப்பளிப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...