Monday, December 8, 2025

நடிகை பாலியல் பலாத்கார வழக்கு - மலையாள நடிகர் திலீப் விடுதலை

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 03-40: PM

திருவனந்தபுரம்,

ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்த கேரள நடிகை பலாத்கார வழக்கில் முன்னணி நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உள்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் சுனில் என்ற நபர் நடிகையைப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்டது.

மேலும், இதை வீடியோவாக எடுத்து பிளாக்மெயில் செய்யவும் பல்சர் சுனில் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. காரில் கடத்தப்பட்ட அந்த நடிகை, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டார். அன்றைய தினமே அந்த நடிகை போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். இந்த சம்பவம் மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்தது.

நடிகர் திலீப் கைது

அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்தது. வழக்கில் திடீர் திருப்பமாக அந்த நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனில் தானாகவே முன்வந்து சரணடைந்து முக்கியக் குற்றவாளியானார். செல்போன் பதிவுகள் அடிப்படையில் நடந்த விசாரணையில் மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் அவர் 8வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

1600 ஆவணங்கள், 280 சாட்சிகள்

இந்த வழக்கு தொடர்பாக 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், ஜாமீனில் வெளியே வந்தார். எனினும், சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நீதிபதி ஹனி வர்கீஸ்-ஐ வழக்கின் தனி நீதிபதியாக நியமித்து கேரள அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கைதான விஷ்ணு உள்ளிட்ட இருவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறி வாக்குமூலம் அளித்தனர்.

வழக்கின் விசாரணை 2018ம் ஆண்டு தொடங்கிய நிலையில், அதன் பிறகு கொரோனா காரணமாக இரு ஆண்டுகள் வழக்கு விசாரணை முடங்கியது. அதன் பிறகும் கூட பல்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை தாமதமாகிக் கொண்டே வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை 1600 ஆவணங்கள், 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம் வர்கீஸ், நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில் நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

8 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திலீப் உள்ளிட்ட 10 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் இறுதி தீர்ப்பை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹனி வர்கீஸ் இன்று வெளியிட்டார். இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், குற்றம் நிரூபிக்கப்படாததாலும் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திலீப்பின் நண்பர் சரத் மீதும் போதிய ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டார். ஏ1 முதல் ஏ 6 வரையிலான குற்றவாளிகளான சுனில் மற்றும் மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீ, பிரதீப் ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 12-ந்தேதி அறிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் கோர்ட் அளித்த தீர்ப்பையடுத்து, நடிகர் திலீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கை வைத்து எனது தொழில் வாழ்க்கையை அழிக்க சதி நடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி என்று கூறினார்.

Sellur K.Raju Says, "Hindus and Muslims live as brothers and sisters"

R.B.Udhaya Kumar Talk about Tiruparankundram Deepathoon Row | G.R.Swamin...

Tiruparankundram Deepathoon row:Puthiya Tamilagam Dr.K.Krishnasamy Press...

வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு நிறைவு - மத்திய அரசு தகவல்

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 06-40: AM

புதுடெல்லி,

வக்பு சொத்து விவரங்களை உமீத் தளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் (டிசம்பர்  6) நிறைவடைந்து விட்டதாக மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறுபான்மையினர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் வக்பு சொத்து விவரங்களைப் பதிவு செய்து நிர்வகிப்பதற்காக உமீத் என்ற தளம் 2025 ஜூன் 6 அன்று தொடங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்களின்படி 6 மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.

நேற்றுடன் (டிசம்பர் 6, 2025) பதிவு செய்வதற்கான கெடு நிறைவடைந்தது.

காலக்கெடு நிறைவடையும் இறுதி நாட்களில் பதிவுகள் கணிசமாக அதிகரித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட மறுஆய்வுக் கூட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள், உயர் மட்ட தலையீடுகள் காரணமாக இதன் செயல்பாடு புதிய வேகத்துடன் இருந்தது. இதனால் கடைசி மணி நேரங்களில் பதிவேற்றம் அதிகரித்தது.

இந்த தளத்தில் 5,17,040 வக்ஃப் சொத்துக்கள் பதிவேற்றப்பட்டன. 2,16,905 சொத்துக்கள், அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டன. 2,13,941 சொத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சரிபார்ப்பின் போது 10,869 சொத்துக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த மிகப்பெரிய தேசிய அளவிலான முயற்சிக்காக, சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச வக்பு வாரியங்களுடனும் சிறுபான்மையினர் நலத் துறைகளுடனும் தொடர்ச்சியான பயிலரங்குகளையும் பயிற்சி அமர்வுகளையும் நடத்தியது.

நாடு தழுவிய அளவில் 7 மண்டலக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பதிவேற்றங்களின் போது எழும் சிக்கல்களைத் தொழில்நுட்ப ரீதியாக விரைவாகத் தீர்க்க, அமைச்சக அலுவலகத்தில் ஒரு பிரத்யேக உதவி மையம் அமைக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடல் விவாதம் - மக்களவையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 06-30: AM

புதுடெல்லி,

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதத்தை பிரதமர் மோடி மக்களவையில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை தூண்டும் விதத்தில் வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை இயற்றினார். 1870-களில் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு ஜாது நாத் பட்டாச்சார்யா இசை அமைத்தார்.

இது 1905-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக ஆனதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி தேசிய பாடலாக இது அங்கீகரிக்கப்பட்டது.

இந்த பாடலின் 150-வது ஆண்டு விழா கடந்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, வந்தே மாதரம் பற்றிய சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு பேசினார். அவரது உரையில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு இருந்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதம் நடைபெற இருக்கிறது.

"தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதம்" என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்டு இருக்கும் இந்த விவாதத்தை பிரதமர் மோடி இன்று மக்களவையில் தொடங்கி வைக்கிறார்.

பிரதமரை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தில் உரையாற்றுகிறார். அதன்பிறகு பிற கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். மக்களவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுபோல இந்த விவாதம் மாநிலங்களவையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா இதனை தொடங்கி வைக்கிறார். அங்கு சுகாதாரத்துறை மந்திரியும், அவை முன்னவருமான ஜே.பி.நட்டா 2- வது பேச்சாளராக பங்கேற்கிறார்.

இந்த விவாதத்தில் வந்தே மாதரம் பாடல் பற்றி இதுவரை அறிந்திராத பல விஷயங்கள் முன்வைக்கப்படும் என்றும், இளைஞர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு முக்கிய தகவல்களை ஆளுங்கட்சியினர் தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இந்த பாடலின் சில வரிகளை 1937-ம் ஆண்டு நீக்கி காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்துக்கு வித்திட்டதாக கூறியிருந்தார். இது அப்போது எதிர்க்கட்சியினரிடம் கடும் விமர்சனங்களை பெற்றது.

இந்தநிலையில் 2 அவைகளிலும் அது குறித்த விவாதம் நடைபெற இருக்கிறது. இதனால் அவையில் அனல் பறக்கும். இந்த விவாதத்துக்கான காலம் 10 மணி நேரம் என ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இந்த விவாதத்தை தொடர்ந்து, நாளை தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அடங்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இந்த விவாதம் நாளையும், நாளை, மறுநாளும் நடைபெறும். இதுபோல மாநிலங்களவையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் 10 மற்றும் 11 -ந் தேதிகளில் நடக்கிறது.

இந்த 2 விவாதங்களும் ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே மிகப்பெரிய கருத்துப்போராக இருக்கும் என்பதால் அவைகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, December 7, 2025

மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு - ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு இன்று ஒப்பந்தம்

 


 
 
பதிவு: ஞாயிறுக்கிழமை,  டிசம்பர் 07, 2025, கார்த்திகை 21,  விசுவாவசு வருடம் 06-30: AM


சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.37 ஆயிரம் கோடி முதலீடுகளுடன் 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (அதாவது இன்று) மாமதுரை திருநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனையொட்டி, மதுரை மாநகர் மாபெரும் அளவில் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு வளர்கிறது' எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றின் வாயிலாக ரூ.36,660.35 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளில் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்படுகிறது. அத்துடன், மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021-ல் ஆட்சிப்பொறுப்பேற்றபின் மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18,795 கோடியில், 18 ஆயிரத்து 881 வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளார். மேலும், ரூ.8,668 கோடியில் 96 லட்சத்து 55 ஆயிரத்து 916 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றை தொடர்ந்து, நாளை நடைபெறும் விழாவில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் ரூ.3 ஆயிரத்து 65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.150.28 கோடி செலவில் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார். திராவிட மாடல் அரசின் சார்பில், 2021-க்கு பின் மதுரை மாவட்டத்திற்கு அனைத்து வகையிலும் பெருமை சேர்த்து வருகிறார்.

இவைகளை எல்லாம் நினைவில் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளபடி, இன்று மதுரைக்கு தேவைப்படுவது வளர்ச்சி மட்டும்தான் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...