Tuesday, December 30, 2025

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் - டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 9 மணி நேரம் விசாரணை - ஆனந்த், ஆதவ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் ஆஜர்

பதிவு: செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம் 02:20 AM


சென்னை,


 டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராக வந்த தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார்.


கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களிடம் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த, வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

பின்னர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ வழக்கு பதிவு செய்து, கரூரில் ஆய்வு செய்து தகவல்களை திரட்டியது. வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தவெக நிர்வாகிகளிடமும் நவ.24, 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது.

சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் டிச. 2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தவெக மாநில நிர்வாகிகளிடமும் சிபிஐ விசாரித்தது. இதற்கிடையே, உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

மேலும், அடுத்தகட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நேற்று ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதிய

ழகன் மற்றும் ஆட்சியர், எஸ்.பி.உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அனைவரும் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, விஜய் பிரச்சாரக் கூட்டத்துக்கு செய்திருந்த ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்த செயல்படுத்திய திட்டங்கள் குறித்த ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கினர்.

அதை படித்துப் பார்த்த அதிகாரிகள், ‘‘எத்தனை பேர் வருவதாக கூறி அனுமதி பெற்றீர்கள், எத்தனை பேர் வந்தனர், நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக பேரை திரட்டினீர்களா அல்லது அவர்களாகவே வந்தனரா, நெரிசல் ஏற்பட்ட உடனே மீட்பு பணிகளில் கவனம் செலுத்தினீர்களா?’’ என்பது உட்பட 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டுள்ளனர். சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளித்தவர்கள் ஒருசில கேள்விகளுக்கு சிறிது நேரம் அவகாசம் எடுத்து பதில் அளித்துள்ளனர். அனைத்தையும் எழுத்து மூலமாக பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

ஆட்சியர், எஸ்.பி.யும் ஆஜர்கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி.ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். அவர்களிடமும் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 9 மணி நேரம் நீடித்து,இரவு 7.30 மணி அளவில் முடிந்தது. விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் இன்றும் ஆஜராக உள்ளனர்.

விஜய்யிடம் விசாரிக்க திட்டம்

தேவைப்பட்டால் விஜய் உட்பட மேலும் சிலரிடமும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விசாரணை முடிந்து இரவு வெளியே வந்த நிர்மல் குமார், செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘சம்மன் பேரில், தவெகவை சேர்ந்த 4 பேரும் ஆஜரானோம். சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளோம். கரூரில் என்ன நடந்தது என்பது உலகத்துக்கே தெரியும். சிபிஐ அதிகாரிகளுக்கு தேவையான விளக்கத்தையும், முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளோம்’’ என்றார்.

Monday, December 29, 2025

சம வேலைக்கு சம ஊதியம் கோரி 3-வது நாளாக போராட்டம் - சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கைது

 

பதிவு: திங்கள்க்கிழமை, டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம் 05:30 AM

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டிபிஐ வளாகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட் டனர்.

அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலர் ப.சந்திரமோகன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் அமர்ந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராடிய ஆசிரியர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வாகனங்களில் ஏற்றி வெளியேகொண்டு சென்றனர். நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைதான நிலையில் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அனுப்பி வைத்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Sunday, December 28, 2025

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்தது: டிசம்பர் 30-ல் மீண்டும் நடைதிறப்பு

  

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 28, 2025 மார்கழி 13, விசுவாவசு வருடம் 03-45: AM

குமுளி, 

சபரிமலை​யில் 41 நாள் தொடர் வழி​பாட்​டுக்​குப் பிறகு நேற்று மண்டல பூஜை நடை​பெற்​றது. முன்னதாக, ஆரன்​முலா பார்த்​த​சா​ரதி கோயி​லில் இருந்து கொண்​டு​வரப்​பட்ட தங்க அங்​கியை தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு, மேல்​சாந்தி ஆகியோர் ஐயப்​பனுக்கு நேற்று முன்தினம் அணி​வித்​தனர்.

உச்ச நிகழ்​வாக நேற்று நடைபெற்ற மண்டல பூஜையை யொட்​டி அதி​காலை 3 மணிக்கு நடை திறக்​கப்​பட்டு நிர்​மால்ய பூஜை, நெய் அபிஷேகம் உள்​ளிட்ட வழி​பாடு​கள் நடை​பெற்​றன. காலை 10.30 மணிக்கு ஐயப்​பனுக்கு தங்​கக் கவசம் அணிவிக்​கப்​பட்டு மகா தீபா​ராதனை நடை​பெற்​றது. தொடர்ந்​து, பக்​தர்​கள் சுவாமியை வழிபட்​டனர்.

மீண்டும் 30-ம் தேதி... இரவு 10.45 மணி வரை பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​பட்​டனர். பின்​னர் கோயில் நடை சாத்​தப்​பட்​டது. ஜன. 14-ம்

தேதி மகரபூஜை நடை​பெற உள்​ளது. இந்த வழி​பாட்​டுக்​காக வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்​டும் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது. வரு​வாய் அதி​கரிப்பு திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு தலை​வர் கே.ஜெயக்​கு​மார் கூறும்​போது, “இந்த மண்டல காலத்​தில் கோயிலுக்கு ரூ.332.77 கோடி வரு​மானம் கிடைத்துள்ளது. கடந்த சீசனை​விட இம்​முறை வரு​வாய் அதி​கம். மகர​விளக்​குக்கு நடை​திறக்​கும் போது 12 லட்​சம் டின் அரவணை இருப்பு வைக்​கப்​படும்.

ஜன. 20-க்​குப் பிறகு தபால் மூலம் அரவணை​யைப் பெற்​றுக்​கொள்ள ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. பக்​தர்​களுக்கு கூடு​தல் வசதி செய்​வது தொடர்​பாக வரும் 29-ம் தேதி திரு​வனந்​த​புரத்​தில் ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தப்​படும். புல்​மேடு வனப்​பாதை​யில் உள்ள பிரச்​சினை​கள் தீர்க்​கப்​படும்” என்​றார்.

Saturday, December 27, 2025

சபரிமலையில் இன்று மண்டல பூஜை.. அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை

 

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 27, 2025 மார்கழி 12, விசுவாவசு வருடம் 05-45: AM

சபரிமலை,

தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ந்தேதி) முதல் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்து வருகிறது.

மண்டல சீசனின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. பொதுவாக மண்டல பூஜையையொட்டி, திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தங்க அங்கி, பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மண்டல பூஜைக்காக கடந்த 23-ந்தேதி இந்த கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.

இந்த தங்க அங்கி நேற்று மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேர்ந்தது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வந்தனர். மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்த தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தங்க அங்கியை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து 18-ம் படி வழியாக எடுத்து செல்லப்பட்டு மாலை 6.15 மணிக்கு அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அலங்கார தீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜையை தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் தங்க அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் அய்யப்பனுக்கு காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரை மண்டல சிறப்பு பூஜை நடைபெறுகிறது

Thursday, December 25, 2025

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை

 

பதிவு:  புதன்கிழமை,  டிசம்பர் 25, 2025, மார்கழி 10, விசுவாவசு வருடம்,  04-10: PM

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அங்கு மாட்டு கொட்டகையில், கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில் குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். அரசியல் தலைவர்கள் பலரும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் மக்களுடன் கலந்து கொண்டார். பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கான பிரார்த்தனை நடைபெற்றது. அதன் பிறகு பாதிரியார்களிடம் கலந்துரை யாடினார். மேலும் அங்குள்ள அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லியில் உள்ள பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்துகொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணை என காலத்தால் அழியாத செய்திகளை இந்த கூட்டம் பிரதிபலித்தது. கிறிஸ்துமசின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்கு விக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை - தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

 

பதிவு:  புதன்கிழமை,  டிசம்பர் 25, 2025, மார்கழி 10, விசுவாவசு வருடம்,  04-00: PM

சென்னை,

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. ஸ்டார்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றதால் அதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கரைபுரண்டது. மக்கள் ஒருவொருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு முழுக்க கூடுதல் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட உள்ளனர்.

சென்னை சாந்தோமில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க புனித தோமையார் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கனக்கான கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்று உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.மேலும், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் குறிப்பாக சென்னை சாந்தோம் புனித தோமையார் தேசிய தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 25 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது.

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பகிர்ந்தளிக்கப்பட்டது .சமய வேறுபாடுகளைக் கடந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தெரிவித்தார்

இதே போல் சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பேராலயத்தில் அருட்தந்தை தீபக் அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

வேளாங்கண்ணி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று விடியற்காலை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வேளாங்கண்ணி விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார். அதனைத்தொடர்ந்து பங்கு தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்கு தந்தைகள் திருபூஜகளை நடத்தினர். அந்த திருப்பலிகள் நிறைவில் ஏசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை ஏசு சொரூபத்தை பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு, குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.

இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Tuesday, December 23, 2025

பாகுபலி ராக்கெட்டுக்கான 24 மணிநேர கவுண்ட்டவுன் - இன்று தொடங்குகிறது

 

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 23, 2025, மார்கழி 8, விசுவாவசு வருடம்,  06-00: AM

சென்னை,

ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் , ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் ஏவுகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட‘புளூபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்குகிறது.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...