Saturday, January 3, 2026

Arudra Darshan 2026 | Karur Kalyana Pasupatheeswarar Temple at Karur

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு - பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா..?

 

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 03, 2026, மார்கழி 19, விசுவாவசு வருடம் 03:40 AM

சென்னை,

பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன.

இந்த சூழலில் வருகிற ஜனவரி 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன.

இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்தது. அதன்படி, நேற்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலுவுடன், அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார்.

ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்புகளையும் தனித்தனியாக அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டமைப்புகளின் தலைமை நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது:-

அமிர்தகுமார் (போட்டா ஜியோ)

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்படி 23 ஆண்டுகளாக போராடி வந்தோம். இந்த பேச்சுவார்த்தையில் ஓய்வூதிய திட்டத்தை முதன்மையாக வைத்து பேசினோம்.

முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 3-ந் தேதி (இன்று) ஓய்வூதியம் குறித்த நல்ல புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அது என்னவிதமான ஓய்வூதியம்? என்பதை முதல்-அமைச்சர்தான் தெரிவிப்பார். அதன் பிறகு அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி ஆலோசித்து முடிவு செய்துவிட்டு, பின்னர் எங்களின் அறிவிப்புகளை வெளியிடுவோம்.

வெங்கடேசன், வின்செண்ட் பால்ராஜ், தியாகராஜன் (ஜாக்டோ ஜியோ)

அனைவரும் மகிழும் வகையில் முதல்-அமைச்சர் நல்ல செய்தியை வெளியிடுவதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர். முதல்-அமைச்சரின் அறிவிப்பையடுத்து எங்கள் கூட்டமைப்பு கூடி எங்கள் போராட்டம் குறித்த அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கும்.

அதுமட்டுமல்லாமல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றுள்ள 48 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை முதல்-அமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையே அறிவிப்பார் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். போராட்டம் நடத்தும்வரை காத்திருக்காமல் அழைத்து பேசியிருக்கின்றனர். 2017-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தொடங்கி, 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு திருத்தங்களை முதல்-அமைச்சரிடம் கூறியிருப்பதாகவும், நாங்கள் எதிர்பார்க்கும் ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

6.50 லட்சம் ஊழியர்கள் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எங்களை அழைத்துக்கூட பேசவில்லை. ஈரோட்டில் ஒருமுறை மட்டும் அப்போதைய முதல்-அமைச்சரை அதிகாரப்பூர்வமாக இல்லாமல் சந்தித்து பேசினோம். ஆனால் இந்த ஆட்சியில் பலமுறை அழைத்து பேசியுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஏடிஏஎப்) மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரகுமார் கூறுகையில், “பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்பது இந்த பேச்சுவார்த்தையில் 99 சதவீதம் தெரிய வந்தது" என்று அவர் தெரிவித்தார்.

Friday, January 2, 2026

Dharmendra Pradhan visits Meenakshi Amman Temple | Education Minister | ...

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விவகாரம் - தலைமைச் செயலகத்தில் போராட்ட கூட்டமைப்புகளுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை

 

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 02, 2026, மார்கழி 18, விசுவாவசு வருடம் 02:00 AM

சென்னை,

ஜனவரி 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று (வெள்ளி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது முழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறையின்செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு, ஜாக்டோ-ஜியோ, தலைமைச் செயலக சங்கம், ஆசிரியர்கள் சங்கம் உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கடந்த அக்டோபரில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ, போட்டோ ஜியோ உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை டிச.22-ம் தேதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் அழைத்துப் பேசினர்.

ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என சங்கங்கள் அறிவித்தன. பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் குழுசரிவர நடத்தவில்லை எனவும் சங்கங்கள் குற்றம்சாட்டின. இந்தச் சூழலில் ககன்தீப் சிங்பேடி குழு தனது இறுதி அறிக்கையை டிச.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கை தொடர்பாகஅமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், அமைச்சர்கள் குழு, ஜாக்டோ-ஜியோ,போட்டோ-ஜியோ நிர்வாகிகளு டன் தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்காக அந்த சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக போட்டோ-ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவருமான டி.அமிர்தகுமார் கூறும்போது, ‘‘வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளையும், காலை 11.30 மணிக்கு எங்கள்கூட்டமைப்பின் நிர்வாகிகளையும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது. 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என்பதில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உறுதியாக உள்ளனர். எங்களை போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளாமல் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.

திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் உறுதி அளித்துள்ளன. தற்போது ஓய்வூதியம் குறித்து தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதால், அதை போராட்டம் அறிவித்துள்ள கூட்டமைப்புகளுக்கு தெரிவிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்த கூட்டமைப்புகளுக்கு பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு தரப்பில் இருந்து போன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும். அதை ஏற்றுக்கொள்வதா? அல்லது மறுப்பதா? என்பது குறித்து கூட்டமைப்புகள் முடிவெடுத்து அறிவிக்கும். 6-ந் தேதி நடத்துவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்பது அதன் பின்னர் தெரிய வரும்.

Thursday, January 1, 2026

பிறந்தது 2026 - நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்! - Happy New Year 2026

 

பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 1, 2026, மார்கழி 17, விசுவாவசு வருடம் 02:00 AM

சென்னை,

புத்தாண்டையொட்டி சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புதிய ஆண்டை கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. முன்னதாக 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வந்தநிலையில், நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். முன்னதாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்திருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் மெரினா காமராஜர் சாலை, அண்ணாசாலை, வடபழனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.

சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

சென்​னை​யில் மட்​டும் 19,000 போலீ​ஸார் மற்​றும் 1,500 ஊர்க்​காவல் படை​யினர் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். மயி​லாப்​பூர், கீழ்ப்​பாக்​கம், திரு​வல்​லிக்​கேணி, தியாக​ராயநகர் உட்பட சென்​னை​யில் உள்ள 12 காவல் மாவட்​டங்​களி​லும் 425 இடங்​களில் வாகன தணிக்கை நடை​பெற்​றது.

மாநிலத்​தின் அனைத்​துப் பகு​தி​களி​லும் இருசக்கர வாக​னப் பந்​த​யங்​களைத் தடுக்க கண்​காணிப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. முக்​கிய கோயில்​கள், தேவால​யங்​கள், இதர வழி​பாட்​டுத் தலங்​களில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. அதே​போல, தமிழகம் முழு​வதும் உள்ள கடற்​கரைப் பகு​தி​களி​லும் போலீ​ஸார் ரோந்​துப் பணி​களில் ஈடு​பட்​டனர். கடலில் இறங்​க​வும், குளிக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. முக்​கிய இடங்​கள் ட்ரோன் கேம​ராக்​கள் மூலம் கண்​காணிக்​கப்​பட்​டன.

புத்​தாண்டை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர், ஆளுநர், முதல்​வர் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். 'சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டதையொட்டி மாலை முதலே இந்த பகுதியில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. புத்தாண்டை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர்.

இந்நிலையில் சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகமாக குரல் எழுப்பியபடியும், கைகளை குலுக்கியும் புத்தாண்டை வரவேற்றனர். வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். இதேபோல, விதவிதமான வகைகளில் கேக்குகளை கொண்டுவந்து அதை வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர், அருகில் இருந்தவர்களுக்கும் கேக்குகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனால், மெரினா காமராஜர் சாலையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இதேபோல, மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் மெரினா காமராஜர் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம், சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே லேசான சாரல் மழை பொழிந்து, மக்களின் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டது. சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, புதுச்சேரி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி உள்ளது.

Wednesday, December 31, 2025

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

 




பதிவு: புதன்கிழமை, டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம் 11:40 AM


சென்னை,

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!

புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு திராவிடப் பொங்கல் களைகட்டட்டும்!

உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு ‘மறுப்பது’ ஏன்?

 

பதிவு: புதன்கிழமை, டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம் 02:40 AM

சென்னை,

2026, ஜனவரி 20-ம் தேதி, ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கூடுகிறது. இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், சட்டம் - ஒழுங்கு விவகாரம் என்று தமிழக அரசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன பிரச்சினைகள்.

“தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சியை கவனிப்பதா? ஆட்சிக்கு ‘செக்’ வைக்கும் போராட்டங்களில் தலையிடுவதா என திண்டாடும் திமுக, மனசாட்சியோடு கவனிக்க வேண்டிய ஒன்று, கடைநிலை ஊழியர்களான தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம்” என்று பொதுவெளியில் கூட பரவலான பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன.

அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணிகளை நிர்வகிப்பது தனியார்மயம் ஆக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தால் அந்தப் பணிகள் நிரந்தரம் செய்யப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

வாக்குறுதி எண் 285

‘தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வுதியம் சம்பந்தமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்’ என வாக்குறுதி எண் 285-ல் திமுக தெரிவித்திருந்தது. அதனால் தான் ”சொன்னது என்னாச்சு?” என்று அரசுக்கு கேள்வி கேட்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக அரசியல் செய்யும் தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை குரல் கொடுக்கின்றனர்.

ஆகஸ்டில் அதிரவைத்த போராட்டம்

கடந்த ஆகஸ்ட் மாதம் ‘தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு 10 நாட்களுக்கும் மேலாக நடத்திய போராட்டம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 11 மண்டலங்களுக்கான திடக்கழிவு மேலாண்மை சார்ந்த பணிகள் கடந்த அதிமுக காலத்திலேயே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய இரண்டு மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ‘சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் லிமிடெட்’ என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்குத் தேவைப்படும் 3,809 தூய்மைப் பணியாளர்களில் ஏற்கெனவே தற்காலிகப் பணியாளர்களாக இருக்கும் 2,034 பேருக்கு முன்னுரிமை அளித்து எடுத்துக்கொள்வதாக அந்நிறுவனம் கூறியது.

எனினும், இந்தத் தொழிலாளர்கள் பெற்ற ஊதியமான ஏறக்குறைய ரூ.23,000 என்பது இனி ரூ.16,000 ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 12 நாள் தற்செயல் விடுப்பு, 12 நாள் ஈட்டிய விடுப்பு, தேசிய விடுமுறையின்போது வேலை செய்தால் இரண்டு மடங்கு ஊதியம், ரூ.11.52 லட்சம் மதிப்பில் விபத்துக் காப்பீடு போன்றவை அவர்களுக்கு முன்வைக்கப்பட்டாலும், ஊதியக் குறைப்பு என்பதை தூய்மைப் பணியாளர்கள் கடுமையாக எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஆனால், அவர்களை நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது செய்தது காவல் துறை. நீதிமன்ற வழக்குகள் மூலம் அவர்களுக்கு ஊதியம் குறைக்கப்படக் கூடாது என்ற தீர்ப்பு வெளியாகி சிறு ஆறுதலாக அமைந்தது.

கேட்டது என்ன? கொடுக்கப்பட்டது என்ன? - ஆனாலும் கூட அரசு பணி நிரந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மாறாக, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு, தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால், நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவி, தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தினர் சுய தொழில் தொடங்கும்போது அத்தொழில் திட்ட மதிப்பீட்டில் 35% தொகை அதிகபட்சமாக ரூ.3,50,000 மானியம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக புதிய உயர்கல்வி உதவித் தொகை, தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் என 6 அறிவிப்புகளை வெளியிட்டது.

இவற்றில் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நவ.15-ம் தேதி தொடங்கி வைத்தார். டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

ஏற்கெனவே தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் பல மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு எதிர்ப்புக் குரல் வலுக்கவே, அத்தகைய நடவடிக்கை இப்போதைக்கு இல்லை என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும் கூட, பிப்ரவரியில் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட டெண்டரை புதுப்பித்து வெளியிடலாம் என்ற தகவல்களும் இருக்கின்றன.

கேள்விக்குள்ளாகும் அரசின் வாதம்

அரசுத் தரப்பில் இந்த தனியார்மயமாக்கலுக்கு கூறப்படும் காரணம் விவாதப் பொருளாகியுள்ளது. சென்னையில் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்தான், தனியார் நிறுவனங்களின் கீழும் அதே பணியை மேற்கொள்ளப் போகிறார்கள்.

அவ்வாறு இருக்கும்போது, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால்தான் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றால், அது தூய்மைப் பணியாளர்களின் தவறு இல்லை; மாறாக மாநகராட்சியின் நிர்வாகத் திறமையின்மைதான் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

எகிறும் விலைவாசி உயர்வுக்கு இடையே, நாம் குப்பைத் தொட்டியைக் கடக்கவே மூக்கை மூடிக் கொண்டு செல்லும் சூழலில் அதிலேயே உழன்று உழைக்கும் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தில் கைவைத்து, தனியார் நிறுவனங்களை சுரண்ட அனுமதிப்பது என்ன நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் வினவுகின்றனர்.

மீண்டும் எழும் குரல்

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இன்றைக்கு மட்டும் கருணாநிதி நினைவிடம், சென்னை அண்ணாசாலையில் உள்ள கருணாநிதி சிலை, தலைமைச் செயலகம் என 3 மூன்று இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராடி கைதாகியுள்ளனர்.

அண்மையில் செவிலியர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஒரு தற்காலிக தீர்வு கிடைத்தது. பொங்கல் பண்டிகைக்குள் 700+ செவிலியர்களுக்கு பணி நிலைப்புக் கடிதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. எல்லா போராட்டங்களுக்கும் ஏதேனும் ஒரு அடுத்த நகர்வு இருக்க, நம் கோரிக்கைகள் மட்டும் கிடப்பிலேயே இருக்கின்றதே என்று மீண்டும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர் தூய்மைப் பணியாளர்கள்.

இதற்கிடையில், உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் வழக்கறிஞர் K.பாரதி, அளித்த பேட்டியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், கோரிக்கைகள், அரசின் நிலைப்பாடு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதன் விவரம்:

“தூய்மைப் பணியாளர்கள் கடைநிலை ஊழியர்கள், சாமானியர்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் சொற்பம். பெரும்பாலும் பெண்கள் இப்பணியில் இருக்கிறார்கள். இவர்களில் பலர் கணவரால் கைவிடப்பட்டவர்கள், குடி நோயால் உயிரிழந்தவர்களின் மனைவி என்றுள்ளனர். அவர்களுக்கு இந்த 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் மிகவும் முக்கியம்.

ஏற்கெனவே தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் அது நினைத்தால் எந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்யலாம் என்ற அதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ளது. அப்படியிருக்க மாநகராட்சி ஊழியராக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்துவிட்டு, தூய்மைப் பணியை தனியாருக்கு அரசு தாரை வார்த்ததால் பணி நிலைப்பும் இல்லாமல், உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள் பணி செய்ய வேண்டும். அதுவும் புதிய பணியாளரைப் போல் பணி செய்ய வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்கள் அவர்கள் ப்ராஜக்ட் உள்ள எந்த இடத்துக்கும் வேண்டுமானால் இந்த தொழிலாளர்களை பணியிட மாற்றம் செய்ய முடியும். மேலும், ஊதியத்தையும் குறைக்க முடியும். இது எல்லாம் ஒரு கடைநிலை ஊழியருக்கு நேருமென்றால், அதை அரசு வேடிக்கை பார்க்கும் என்றால் அது அநியாயம் இல்லையா?

அரசாங்கம், சென்னையில் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு தூய்மைப் பணியை மேற்கொள்ளும் பட்சத்தில் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடும் பெருந்தொகையை விட சொற்பமான செலவே ஆகும். ஆனால் புயல், மழை, வெள்ளம், கரோனா என பல பேரிடர்களிலும் திறம்பட வேலை செய்து பணியாளர்களை தூக்கி எறியும் வகையில் தனியாருக்கு மாநகராட்சி மண்டலங்களை தாரை வார்க்கிறது.

எங்களுடைய பிரதான கோரிக்கை... 

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் மாநகராட்சியில் பணி வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பிய தூய்மைப் பணியாளர்களைத் தாண்டியும் பணியில்லாமல் 1500-க்கும் அதிகமானோர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வழங்கும் அளவுக்கு சென்னை மாநகராட்சியில் காலிப் பணியிடங்களும் இருக்கின்றன. அது மட்டுமல்லாது தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும் கூட, அரசாங்கம் நினைத்தால் பணி நிலைப்பு செய்யலாம். இதை முந்தைய காலக்கட்டங்களில் எதிர்க்கட்சியிலிருந்த இப்போதைய முதல்வரே சொல்லியிருக்கிறார்.

செவிலியர்கள் போராடினால் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் ஆனால் தூய்மைப் பணியாளர்களை அழைத்து ஏன் இந்த அரசு பேச மறுக்கிறது? இவர்களைத்தான் பணிநீக்கம் செய்து தூக்கி எறிந்துவிட்டோமே; இனி எதற்கு ஆவார்கள் என்ற மனப்பான்மையா? இவர்களால், தேர்தல் நேரத்தில் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற ஏளனமா என்று தெரியவில்லை.

தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தம் செய்யப்படும் என்று கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்த இந்த அரசு, இந்தத் தேர்தலில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறது?!. தூய்மைப் பணியாளர்கள் பற்றி எதுவுமே பேசாமல் புறக்கணிக்கப் போகிறார்களா?

சென்னையில் நடக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும். இதை அரசும் உணர்ந்திருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்பட அரசே விரும்பினாலும் கூட யாரோ சில அமைச்சர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சினைகள் இருக்குமோ என்றளவுக்குக் கூட யோசிக்கத் தூண்டுகிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றை தன் பொறுப்புக்குள் வைத்திருக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும் இடையேயான ஈகோவும் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை இழுபறியாக இருக்கக் காரணம் என்று யோசிக்கத் தோன்றுகிறதி.

நான் கடந்த டிச.18 அன்று அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை மனுவை அளித்தேன். அவர் டிச.21-க்குப் பிறகு மீண்டும் சந்திப்பதாக சொன்னார். அதன் பின்னர் ஒரு வாரம் ஆகியும் கூட இதுவரை எந்தவித அசைவும் அந்தப் பக்கம் இருந்து இல்லை. இந்தச் சூழலில் நாங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளோம். ஒருவேளை ஈகோ பிரச்சினைதான் இழுபறிக்குக் காரணம் என்றால் இதை முதல்வரும், துணை முதல்வரும் தலையிட்டுத் தீர்க்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் தொடர்ச்சியாக 150-க்கும் மேற்பட்ட நாட்கள் போராட்டம் நடந்துள்ளது என்றால் அது தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தான். எங்களுக்கு அரசை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணமில்லை, நாங்கள் அரசு விரோதிகள் இல்லை. தூய்மைப் பணியாளர்கள் பரம ஏழைகள், பெரும்பாலும் பட்டியலின மக்களாக உள்ளனர். சமூகப், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு நாங்கள் நீதி கேட்கிறோம்” என்று அவர் கூறினார்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...