Thursday, January 8, 2026

Vijayendra Bidari takes charge as new Inspector General of Police (South...

அண்ணா தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி - எடப்பாடி பழனிசாமி – அன்புமணி ராமதாஸ் கூட்டாக பேட்டி

 

பதிவு: வியாழக்கிழமை,  ஜனவரி 08, 2026, மார்கழி 24, விசுவாவசு வருடம் 02:00 AM

சென்னை,

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை சந்தித்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர். இதையடுத்து கூட்டணி தொடர்பாக அண்ணா தி.மு.க. – பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தசந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் சில கட்சிகள் வரும்

இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு எடப்பாடி மற்றும் அன்புமணி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:–

“வருகிற சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பா.ம.க. கூட்டணியில் இணைந்துள்ளது. விரைவில் மேலும் சில கட்சிகள் சேருவார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி.

அண்ணா தி.மு.க. தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில், வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கான திட்டங்களை கொடுக்க, 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். தேனீக்கள் போல செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டோம். மற்றதை பின்னர் அறிவிப்போம்.” என்று கூறினார்.

தி.மு.க. மீது மக்கள் ஆத்திரம்

இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைந்துள்ளது. எங்களுக்கு இது மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். இது வலுவான கூட்டணி.

எங்கள் நோக்கம் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சி, ஊழல் செய்கின்ற திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான தி.மு.க. ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான தி.மு.க. ஆட்சி, அரசு ஊழியர்கள், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அத்தனை உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கவிருக்கிறோம்.

காரணம், சமீபத்தில்கூட நான் 100 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டபோது மக்களைச் சந்தித்தேன். அப்போது, தி.மு.க. மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. கோபம் என்றுகூட சொல்ல முடியாது. மிகுந்த ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என்று அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அண்ணா தி.மு.க. ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து சென்றுள்ள நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ம.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அண்ணா தி.மு.க.வுடன் அன்புமணி கூட்டணி அமைத்ததால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் தொடர்கிறார். ராமதாஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. உள்ள நிலையில், கூட்டணிக்குள் தே.மு.தி.க.வை கொண்டு வர அண்ணா தி.மு.க. விரும்புகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின்போது பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட்டை அண்ணா தி.மு.க. ஒதுக்கியது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை அண்ணா தி.மு.க. ஒதுக்கியது. இதில் 5 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றது. 2021-ல் வடக்கு, வடமேற்கு மாவட்டங்களில் அண்ணா தி.மு.க. வெற்றிக்கு கணிசமாக உதவி இருந்தது குறிப்பிடத்தக்கது

தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல்அல்லது மே மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அண்ணா தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை என 4 முனைப் போட்டி நிலவுகிறது.


Tuesday, January 6, 2026

திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று தீர்ப்பு

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 06, 2026, மார்கழி 22, விசுவாவசு வருடம் 06:50 AM

மதுரை,

திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.


மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், சட்டம். ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்து தீபம் ஏற்றப்படவில்லை.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விரிவாக விசாரித்தனர்.

இதில் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் சார்பில் வக்கீல்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அங்கு ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை விலங்குகளை பலியிடுவதோ, அசைவ உணவுகளை பரிமாறுவதோ, இறைச்சியை மலைக்கு எடுத்துச் செல்வதோ கூடாது என்று தர்கா நிர்வாகத்திற்கு கடந்த 2-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று (அதாவது நேற்று) அவசர வழக்காக எடுத்து விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு தர்கா நிர்வாகம் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.

இதைக்கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை (அதாவது இன்று) வழங்கப்பட உள்ளது. அந்த தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி, தர்கா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர்.

எனவே சந்தனக்கூடு திருவிழாவில் அசைவ உணவு பரிமாறுவது கூடாது, கந்தூரி விழா நடத்தக்கூடாது என்று நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, January 3, 2026

Arudra Darshan 2026 | Karur Kalyana Pasupatheeswarar Temple at Karur

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு - பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா..?

 

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 03, 2026, மார்கழி 19, விசுவாவசு வருடம் 03:40 AM

சென்னை,

பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன.

இந்த சூழலில் வருகிற ஜனவரி 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன.

இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்தது. அதன்படி, நேற்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலுவுடன், அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார்.

ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்புகளையும் தனித்தனியாக அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டமைப்புகளின் தலைமை நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது:-

அமிர்தகுமார் (போட்டா ஜியோ)

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்படி 23 ஆண்டுகளாக போராடி வந்தோம். இந்த பேச்சுவார்த்தையில் ஓய்வூதிய திட்டத்தை முதன்மையாக வைத்து பேசினோம்.

முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 3-ந் தேதி (இன்று) ஓய்வூதியம் குறித்த நல்ல புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அது என்னவிதமான ஓய்வூதியம்? என்பதை முதல்-அமைச்சர்தான் தெரிவிப்பார். அதன் பிறகு அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி ஆலோசித்து முடிவு செய்துவிட்டு, பின்னர் எங்களின் அறிவிப்புகளை வெளியிடுவோம்.

வெங்கடேசன், வின்செண்ட் பால்ராஜ், தியாகராஜன் (ஜாக்டோ ஜியோ)

அனைவரும் மகிழும் வகையில் முதல்-அமைச்சர் நல்ல செய்தியை வெளியிடுவதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர். முதல்-அமைச்சரின் அறிவிப்பையடுத்து எங்கள் கூட்டமைப்பு கூடி எங்கள் போராட்டம் குறித்த அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கும்.

அதுமட்டுமல்லாமல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றுள்ள 48 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை முதல்-அமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையே அறிவிப்பார் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். போராட்டம் நடத்தும்வரை காத்திருக்காமல் அழைத்து பேசியிருக்கின்றனர். 2017-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தொடங்கி, 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு திருத்தங்களை முதல்-அமைச்சரிடம் கூறியிருப்பதாகவும், நாங்கள் எதிர்பார்க்கும் ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

6.50 லட்சம் ஊழியர்கள் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எங்களை அழைத்துக்கூட பேசவில்லை. ஈரோட்டில் ஒருமுறை மட்டும் அப்போதைய முதல்-அமைச்சரை அதிகாரப்பூர்வமாக இல்லாமல் சந்தித்து பேசினோம். ஆனால் இந்த ஆட்சியில் பலமுறை அழைத்து பேசியுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஏடிஏஎப்) மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரகுமார் கூறுகையில், “பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்பது இந்த பேச்சுவார்த்தையில் 99 சதவீதம் தெரிய வந்தது" என்று அவர் தெரிவித்தார்.

Friday, January 2, 2026

Dharmendra Pradhan visits Meenakshi Amman Temple | Education Minister | ...

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விவகாரம் - தலைமைச் செயலகத்தில் போராட்ட கூட்டமைப்புகளுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை

 

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 02, 2026, மார்கழி 18, விசுவாவசு வருடம் 02:00 AM

சென்னை,

ஜனவரி 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று (வெள்ளி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது முழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறையின்செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு, ஜாக்டோ-ஜியோ, தலைமைச் செயலக சங்கம், ஆசிரியர்கள் சங்கம் உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கடந்த அக்டோபரில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ, போட்டோ ஜியோ உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை டிச.22-ம் தேதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் அழைத்துப் பேசினர்.

ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என சங்கங்கள் அறிவித்தன. பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் குழுசரிவர நடத்தவில்லை எனவும் சங்கங்கள் குற்றம்சாட்டின. இந்தச் சூழலில் ககன்தீப் சிங்பேடி குழு தனது இறுதி அறிக்கையை டிச.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கை தொடர்பாகஅமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், அமைச்சர்கள் குழு, ஜாக்டோ-ஜியோ,போட்டோ-ஜியோ நிர்வாகிகளு டன் தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்காக அந்த சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக போட்டோ-ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவருமான டி.அமிர்தகுமார் கூறும்போது, ‘‘வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளையும், காலை 11.30 மணிக்கு எங்கள்கூட்டமைப்பின் நிர்வாகிகளையும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது. 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என்பதில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உறுதியாக உள்ளனர். எங்களை போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளாமல் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.

திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் உறுதி அளித்துள்ளன. தற்போது ஓய்வூதியம் குறித்து தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதால், அதை போராட்டம் அறிவித்துள்ள கூட்டமைப்புகளுக்கு தெரிவிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்த கூட்டமைப்புகளுக்கு பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு தரப்பில் இருந்து போன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும். அதை ஏற்றுக்கொள்வதா? அல்லது மறுப்பதா? என்பது குறித்து கூட்டமைப்புகள் முடிவெடுத்து அறிவிக்கும். 6-ந் தேதி நடத்துவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்பது அதன் பின்னர் தெரிய வரும்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...