Monday, November 3, 2025

Anbil Mahesh Poyyamozhi Press Meet at Madurai | Karur Stampede: Emotiona...

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை வாக்காளர் பட்டியல் திருத்தம் துவக்கம்

 


பதிவு: திங்கள்கிழமை, நவம்பர் 03, 2025, ஐப்பசி 17, விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

மாநிலம் முழுதும், 234 சட்டசபை தொகுதி களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி நாளை துவங்கவுள்ளது.

இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்கள், தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வருகின்றன. பல வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ளன.

எனவே, தகுதியான வாக்காளர்களை மட்டுமே பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும்; போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள, இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து உள்ளது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை, வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகளுடன் இணைந்து, அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில், எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஒத்தி வைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலருடன் 12 ஏஜென்ட்கள் தமிழகத்தில் 70,000த்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 

இவற்றை, 1,200 வாக்காளர்களுக்கு ஒன்று என்ற அளவில் விரிவுபடுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

இதற்கான பணிகளும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் போது மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒவ்வொரு கட்சிக்கும் பூத் ஏஜென்ட்கள் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு, இப்பணியில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், 12 பூத் ஏஜென்ட்களும் வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லவுள்ளனர். கடந்த காலங்களில் ஒவ்வொரு பூத் ஏஜென்டும், 10 பேர் வரை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் வாயிலாக, 15 முதல் 20 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், தங்கள் வாயிலாகவே புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்; முகவரி மாற்றம் செய்தவர்களை இடம் பெற செய்ய வேண்டும் என, ஒவ்வொரு கட்சியின் பூத் ஏஜென்ட்களும் வலியுறுத்துவர் என்பதால், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடையே மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால், வாக்காளர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:

தமிழகத்தில் 2002 மற்றும் 2005ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் கணக்கெடுப்பு பணி நாளை துவங்கவுள்ளது. இந்த பட்டியல்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் உள்ளன.

இந்த பட்டியல்களுடன், அனைத்து வீடுகளுக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லப்போவது இல்லை. எந்தெந்த வீடுகளில் 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதோ, அந்த வீடுகளுக்கு மட்டுமே செல்வர்.

அந்த வீடுகளில் யாராவது இருந்தால், அவர்களின் விபரத்தை கேட்டு, வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவர். அந்த வீட்டில், 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால், அதற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தையும் வழங்குவர்.அவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தர வேண்டும் என்று அவசியம் இல்லை. அடுத்த முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும் போது, ஆவணங்களுடன் அவற்றை சமர்ப்பித்தால் போதும். இதற்காக, ஒரு வீட்டிற்கு மூன்று முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்வர். கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால், அதை தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களை காட்டி, டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம்.

முகவரி மாற்றம் எதுவும் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது. முகவரி மாறியவர்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும், அதற்கான ஆவணங்களை டிசம்பர் 9ம் தேதி முதல், ஜனவரி மாதம் 8ம் தேதிக்குள் சமர்ப்பித்து, தங்களது பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, November 2, 2025

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ‘எல்.வி.எம்.- எம்5’ ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

 


பதிவு: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 02, 2025, ஐப்பசி 16, விசுவாவசு வருடம் 04-30: AM

சென்னை,

செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் கொண்டு சேர்ப்பதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5.26 மணிக்கு தொடங்கியது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘பாகுபலி' என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம். - எம்5’ ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

இதில், 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்' என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03' என்ற கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புகளை வழங்கும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் கொண்டு சேர்ப்பதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5.26 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

24 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று மாலை ராக்கெட் விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Saturday, November 1, 2025

வெப் சீரிஸ் இயக்குனர் ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொன்றது ஏன்? மும்பை போலீஸ் கமிஷனர் விளக்கம்

 


பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 01, 2025, ஐப்பசி 15, விசுவாவசு வருடம் 04-30: AM

மும்பை,

இயக்குனரை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் ஏன் வந்தது என்பதற்கு மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

17 சிறுவர்களை சிறைப்பிடித்த இணைய தொடர் இயக்குனர் ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் ஏன் வந்தது என்பதற்கு மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை பவாய் பகுதியில் உள்ள ஏ.ஆர். ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இணைய தொடர் (வெப் சீரிஸ்) இயக்குனரான ரோகித் ஆர்யா (வயது 50) சிறுவர்- சிறுமிகள் 17 பேர் உள்பட 19 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இணைய தொடரின் குழந்தை நட்சத்திர தேர்வுக்காக அவர்களை அழைத்து இந்த துணிகர சம்பவத்தை அரங்கேற்றினார்.

இதனால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் ஸ்டூடியோவுக்குள் அதிரடியாக நுழைந்து ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொன்று, சிறுவர்- சிறுமிகள் உள்பட 19 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

பிரதமர் மோடியின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ், மராட்டிய கல்வித்துறையில் ‘எனது பள்ளி, அழகான பள்ளி’ என்ற திட்டத்தை செயல்படுத்தி, அதை கண்காணிக்கும் பணியில் ரோகித் ஆர்யா ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக அவருக்கு கல்வித்துறை பண பாக்கி கொடுக்க வேண்டி இருந்ததாகவும், இதற்காக பல முறை போராடி பலன் கிடைக்காததால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர், செய்வது அறியாமல் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

எம்.பி.ஏ. படித்துள்ள அவர் சமூக சிந்தனை உடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பல ஆவண படங்களை எடுத்துள்ளார். பிரேம் சோப்ரா உள்ளிட்ட நடிகர்களிடம் விழிப்புணர்வு வீடியோ எடுத்துள்ளார். இந்த நிலையில் ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் என்ன? என்ற கேள்வியும் எழுந்தது.



இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி கூறியதாவது:- ரோகித் ஆர்யாவிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். எதற்காக சிறுவர்களை சிறைபிடித்து வைத்திருந்தார் என்பதை அவர் தெளிவுப்படுத்தவில்லை. அவர் பிடித்து வைத்திருந்த குழந்தைகள் பதற்றத்தில் இருந்தனர். 

ஒரு குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு குழந்தைகளை விடுவிக்க முன்வரவிலலை. அவரின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், குழந்தைகளின் உயிருடன் விளையாட அனுமதிக்க முடியாது. ஏர்கன் துப்பாக்கியால் அவர் தான் போலீசாரை நோக்கி முதலில் சுட்டார். எனவே தற்காப்புகாக போலீசார் அவரை சுட்டனர். அந்த தருணத்தில் எங்களுக்கு வேறு வழியில்லை. குழந்தைகளை பாதுகாப்பாக மீட்க வேண்டியதும் எங்களது கடமை. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து கல்வித்துறைக்காக ரோகித் ஆர்யா செய்த பணி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு மந்திரி ததா புசே உத்தரவிட்டுள்ளார்.

Friday, October 31, 2025

அசோக் நகரில் நடந்த அரசு காண்டிராக்டர் கொலை வழக்கில் கள்ளக்காதலி - தோழி அதிரடி கைது...

 


பதிவு: வெள்ளிகிழமை, அக்டோபர் 31, 2025, ஐப்பசி 14, விசுவாவசு வருடம் 10-00: AM

சென்னை,

தப்பியோடிய கள்ளக்காதலி மற்றும் அவரது தோழியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அசோக் நகரில் நடந்த அரசு காண்டிராக்டர் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலி மற்றும் தோழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுச்சேரி முதலியார்பேட்டை பாப்பன்சாவடியை சேர்ந்தவர் பிரகாஷ் (38 வயது). இவர் புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இதற்காக தனியாக நிறுவனம் ஒன்றையும் நடத்தினார். புதுச்சேரியில் கழிவுநீரகற்றும் பணியிலும் ஈடுபட்டார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

குடும்பத்தகராறில் இவரது மனைவி 2 குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்த சுகன்யா (37 வயது) என்ற பெண்ணுடன் பிரகாசுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. சுகன்யா, பிரகாசின் காண்டிராக்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சுகன்யாவும் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார்.

இதனால் பிரகாசும், சுகன்யாவும் தங்களது திருமண பந்தங்கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை மீறி தனியாக உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தனர். பிரகாஷ் எங்கு சென்றாலும் சுகன்யாவை தன்னுடன் அழைத்து செல்வார். நேற்று முன்தினம் கழிவுநீரை அகற்றும் பணிக்காக வாடகைக்கு வாகனங்களை ஏற்பாடு செய்ய பிரகாஷ் தனது காரில் சென்னை வந்தார். அவருடன் சுகன்யாவும் வந்தார்.

சுகன்யாவின் கணவர் தனஞ்செழியன் சென்னை ஜாபர்கான்பேட்டையில் தனியாக வாழ்ந்தார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சுகன்யாவின் நெருங்கிய தோழியும், உறவுப்பெண்ணுமான குணசுந்தரி (27) ஜாபர்கான்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார்.

பிரிந்து வாழ்ந்தாலும் மனைவி சுகன்யாவை மறக்க முடியாமல் தனஞ்செழியன் தவித்து வந்தார். தனது மனைவி குறித்த தகவல்களை அவரது தோழியான குணசுந்தரியிடம் அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்வார். நேற்று முன்தினம் சுகன்யா தனது கள்ளக்காதலன் பிரகாசுடன் சென்னை வருவதை தனஞ்செழியனுக்கு குணசுந்தரி தெரிவித்தார்.

மேலும் சுகன்யாவுடன் தொடர்பு கொண்ட குணசுந்தரி நாம் ஒன்றாக ஓட்டலில் சாப்பிடலாம் என்று அழைத்தார். அதன்பேரில் சுகன்யா சென்னை வந்தவுடன் குணசுந்தரிக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சென்னை அசோக்நகர் 4-வது அவென்யூவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் சாப்பிட்டனர். இந்த தகவலை குணசுந்தரி, தனஞ்செழியனுக்கு தெரிவித்தார்.

மனைவியை மறக்க முடியாமல் தவித்த தனஞ்செழியன் குறிப்பிட்ட ஓட்டலுக்கு பைக்கில் வந்தார். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். பிரகாஷ், சுகன்யா, குணசுந்தரி ஆகியோர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். பிரகாசும், சுகன்யாவும் காரில் ஏறினார்கள். அப்போது கையில் கத்தியுடன் வந்த தனஞ்செழியன் திடீரென்று காரில் உட்கார்ந்திருந்த பிரகாசை தாக்கினார்.

‘சீட் பெல்ட்' அணிந்திருந்ததால் பிரகாசால் தப்பியோட முடியவில்லை. இந்த நிலையில் பிரகாசை சரமாரியாக கத்தியால் குத்திய தனஞ்செழியன் மனைவி சுகன்யாவையும் மிரட்டினார். சுகன்யாவையும் தீர்த்துக்கட்ட தனஞ்செழியன் முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் மனம்மாறி தனது பைக்கில் ஏற சொல்லி அழைத்து சென்றுவிட்டார்.

குணசுந்தரியும் மொபட்டில் தப்பி சென்றுவிட்டார். கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு போராடிய பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் அசோக்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தப்பிச்சென்ற தனஞ்செழியனை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில் அசோக்நகர் உதவி கமிஷனர் ஆல்ட்ரீன் தலைமையிலான தனிப்படை போலீசார் தனஞ்செழியனை தேடிவந்தனர். அவர் நேற்று முன்தினம் இரவோடு, இரவாக கைது செய்யப்பட்டார்.

தனஞ்செழியனின் மனைவி சுகன்யாவையும், அவரது தோழி குணசுந்தரியையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் பிரகாஷ் கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக போலீசார் கருதினார்கள். பிரகாசை தனஞ்செழியன் கத்தியால் குத்தியபோது அவரை காப்பாற்ற இருவரும் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக சுகன்யா தனது கணவரோடு பைக்கில் ஏறி சென்றுவிட்டார்.

குணசுந்தரி தனியாக தனது மொபட்டில் தப்பி சென்றுவிட்டார். பிரகாசை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்தது. அதை செய்யாமல் போலீசுக்கும் இந்த சம்பவம் பற்றி தகவல் கொடுக்காமல் தப்பிச்சென்றதால் சுகன்யாவையும், குணசுந்தரியையும் இந்த வழக்கில் போலீசார் குற்றவாளிகளாக சேர்த்தனர்.

அதையொட்டி அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். கைதான தனஞ்செழியன், சுகன்யா, குணசுந்தரி ஆகிய 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Wednesday, October 29, 2025

110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்தது ‘மோந்தா' புயல்

 


பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 29, 2025, ஐப்பசி 12, விசுவாவசு வருடம் 07-00: AM

அமராவதி,

புயல் காரணமாக மசூலிப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய கடலோர பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன.

வங்கக்கடலில் உருவான ‘மோந்தா' புயல், ஆந்திராவை நோக்கி நேற்று முன்தினத்தில் இருந்து பயணித்து, நேற்று இரவு கரையை கடக்கத் தொடங்கியது. 

மணிக்கு 17 கி.மீ வேகத்தில் காக்கிநாடா, மசூலிப்பட்டினம் அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மேலும் அங்கு விடிய, விடிய இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவின் காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, அம்பேத்கர் கோனசீமா, அல்லூரி சீதாராம ராஜூ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் தங்கியிருந்த 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் அந்த 7 மாவட்டங்களுக்கும் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிவரை அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புத்துறையினர், போலீசார் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் கடலோர பகுதியில் புயல் கரையை கடக்கும் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமராவதியில் உள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்தவாறு புயல் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முடுக்கிவிட்டார்.

இந்தநிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் காக்கிநாடாவின் தெற்கே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ‘மோந்தா’ புயல் கரையை கடந்தது. புயல் காரணமாக மசூலிப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய கடலோர பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. மேலும் இடி, மின்னலுடன் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

புயல் காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

புயல் காரணமாக ஆந்திராவில் 3,778 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும் மோந்தா புயல் காரணமாக 1.76 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அழிந்ததாக அவர் தெரிவித்தார். இந்த புயல் காரணமாக கபுலுபடாவில் 12.5 செ.மீ., விசாகப்பட்டினத்தில் 12 செ.மி மற்றும் ஆனந்தபுரத்தில் 11.7 செ.மீ அளவில் மழை பதிவானது.

‘மோந்தா’ புயல் காரணமாக ஒடிசாவிலும் கனமழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள மல்கன்கிரி, கோரபூட், ராயகடா, கஜபதி, கஞ்சம், நபரனங்கபூர் உள்பட 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பேரிடர் மீட்புத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் என 5 ஆயிரம் பேர் களம் இறக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

Tuesday, October 28, 2025

திமுக ஆட்சியாளர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி - தவெக தலைவர் விஜய்

 

பதிவு: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 28, 2025, ஐப்பசி 11, விசுவாவசு வருடம் 03-15: PM

சென்னை,

விவசாயிகளின் வேதனைகளுக்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!

தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?

டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்துக் கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் காரணம் என்ன?

பருவமழை என்பது ஒவ்வோர் ஆண்டும் பெய்யக் கூடியது. இந்தப் பருவமழையை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படியிருக்க, அந்தப் பருவமழையினால் விவசாயப் பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அதிக மழைப் பொழிவு இருந்தாலும் விவசாய நிலத்தில் பயிர்கள் மூழ்காதபடி போதுமான தண்ணீரைத் தவிர்த்து, அதிகப்படியான தண்ணீர் விவசாய நிலங்களில் இருந்து தானாகவே வெளியேறி, சேமித்து வைக்கப்பட வேண்டிய நீர்நிலைகளைச் சென்றடைய, போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா?

விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல், நல்லமுறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

ஒவ்வோர் ஆண்டும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றனவே. அதைப் பார்த்தாவது, அடுத்த ஆண்டாவது நெல்மணிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணம் வரவில்லையா? இல்லையெனில் நெல் உள்ளிட்ட தானியங்கள் வீணாகட்டும். விவசாயிகளின் வாழ்வு பாதிக்கப்படட்டும். அதனால் நமக்கென்ன? என்று தெரிந்தே ஒவ்வோர் ஆண்டும் கடந்து போகிறதா இந்த அரசு?

கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நெல்மணிகள் நனைந்து வீணாகியதற்கும். அதை விளைவித்த விவசாயிகளின் வேதனைகளுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள் இந்த வெற்று விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. அதைப் போல், தமிழ் நாட்டு மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி. வெகுஜன மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!

வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளது. எனவே இனியேனும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, இனி வரும் மழையினால் நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும். அத்தோடு பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பர செயல்பாடுகளாக இன்றி போர்க்கால அடிப்படையில் உண்மையாகவே மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...