Sunday, November 9, 2025

முகத்தை சிதைத்து கொடூரம் - காரைக்குடி பெண் கொலையில் டிரைவர் கைது

பதிவு: ஞாயிறுக்கிழமை, நவம்பர் 09, 2025, ஐப்பசி 23, விசுவாவசு வருடம் 07-00: AM

காரைக்குடி,

முகம் சிதைந்த நிலையில் காருக்குள் பெண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டிக்குமார். இவருடைய மனைவி மகேசுவரி (வயது 38). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மகேசுவரி நிலம் வாங்கி விற்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகவும், தனக்கு தெரிந்தவர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை ஆர்.எஸ்.பதி காட்டுப்பகுதியில் அவரது காருக்குள் மகேசுவரி கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மகேசுவரியின் காரை அவ்வப்போது, காரைக்குடி இலுப்பைக்குடி லட்சுமிநகரை சேர்ந்த சசிக்குமார் (33) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்றும் அவர்தான் மகேசுவரியை காரில் அழைத்துச்சென்றுள்ளார்.

தலைமறைவாக இருந்த அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மகேசுவரியை கொன்றது அவர்தான் என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்த மகேசுவரிக்கு பணத்தேவை இருந்ததால், அதுபற்றி தன் டிரைவர் சசிக்குமாரிடம் கூறி இருக்கிறார். அதற்கு அவர், தனக்கு தெரிந்த நபரிடம் பெரும் தொகையை வாங்கி மகேசுவரியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் அவர் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே பணம் கொடுத்தவர், அதை திரும்ப கேட்டு சசிக்குமாருக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் சசிகுமார், மகேசுவரியிடம் பணத்தை திருப்பி தருமாறு தெரிவித்து வந்துள்ளார். இந்தநிலையில் காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை காட்டுப்பகுதியில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி விற்பது தொடர்பாக, அந்த இடத்தை பார்ப்பதற்காக காரில் சசிக்குமாரும், மகேசுவரியும் சென்றுள்ளனர். அங்கு வைத்து சசிக்குமார், மகேசுவரியிடம் பணத்தை கேட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த சசிக்குமார், கல்லால் மகேசுவரியின் முகத்தில் அடித்து முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அணிந்து இருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரியவருகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சசிக்குமாரை போலீசார், கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் முதற்கட்டமாக மீட்டனர். மீதம் உள்ள நகையை ஒரு கடையில் அவர் அடகு வைத்தது தெரியவந்தது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக கூறி அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி மகேசுவரியின் உறவினர்கள் நேற்று மதியம் காரைக்குடி பகுதியில், திருச்சி-ராமேசுவரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது - உலகம் முழுவதும் உடனடி அமல்

 


பதிவு: ஞாயிறுக்கிழமை, நவம்பர் 09, 2025, ஐப்பசி 23, விசுவாவசு வருடம் 06-00: AM

வாஷிங்டன்,

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

மேலும், அமெரிக்க விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எச்1பி விசா கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொறியாளர்கள் சேருவதை தடுக்க மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சுற்றுலா விசா, மாணவர் விசா, வணிக விசாவைப் பெற்று அமெரிக்காவில் நுழையும் வெளிநாட்டினர் உடல்நிலையைக் காரணம் காட்டி அமெரிக்காவில் நீண்டகாலம் தங்குகின்றனர். அமெரிக்க அரசின் சுகாதார திட்டப் பலன்களை வெளிநாட்டினரும் பெறுகின்றனர். இதனால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணாகிறது.

இதை தடுக்க, தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து தூதரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், விசா விண்ணப்பதாரர்களின் வயது, நிதி நிலைமை குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன்படி, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் இனிமேல் விசா விண்ணப்பதாரர்களின் உடல்நலப் பாதிப்புகள் குறித்தும், தொற்று நோய் அபாயம் குறித்தும், நிதி நிலைமை குறித்தும் விரிவாக விசாரணை நடத்தும். அமெரிக்காவுக்கு சென்ற பிறகு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டால், அவர்களின் சொந்த செலவிலேயே மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு தரப்பில் எவ்வித உதவியும் வழங்கப்படாது என்பது தெளிவாக எடுத்துரைக்கப்படும். இது தொடர்பாக விசா விண்ணப்பதாரர்களிடம் உறுதிமொழியும் பெறப்படும்.

மருத்துவர்கள் நியமனம்

தற்போதைய சூழலில் பல்வேறு நாடுகளில் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை. எனவே, விசா அதிகாரிகளே, விண்ணப்பதாரர்களின் உடல்நலம் குறித்து விசாரணை நடத்துவார்கள். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அமெரிக்க தூதரகங்களில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

முந்தைய நடைமுறைகளின்படி விசா விண்ணப்பதாரர்களிடம் காச நோய், எச்ஐவி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. இனி அனைத்து நோய்கள் குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வாறு அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய விசா கட்டுப்பாடு குறித்து இந்திய வம்சாவளியினர் கூறியதாவது: அமெரிக்காவில் ஆண்டுதோறும் கிரீன் கார்டு கோரி ஒரு லட்சம் இந்தியர்கள் விண்ணப்பம் செய்கின்றனர். முந்தைய காலத்தில் பலருக்கு கிரீன் கார்டு கிடைத்தது. டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு கிரீன் கார்டு கனவு கலைந்துவிட்டது.

அமெரிக்க அரசின் எச்1பி விசா பெறுவோரில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள். இதை தடுக்க எச்1 பி விசா கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பாதிப்பு இருந்தால் விசா விண்ணப்பத்தை நிராகரிக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டு இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இனி நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள இந்திய மென்பொறியாளருக்கு எச்1 பி விசா கிடைக்காது.அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் மென்பொறியாளர்களில் 3 பேரில் ஒருவர் இந்தியராக உள்ளார். அவர்களை சந்திக்க இந்தியாவில் இருந்து பெற்றோர், மனைவி, பிள்ளைகள் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வந்து செல்வது வழக்கம். இனிமேல் அவர்களுக்கும் அமெரிக்க விசா கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும். அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு இந்திய வம்சாவளியினர் தெரிவித்துள்ளனர்.

வழக்குத் தொடர திட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசின் புதிய விசா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தன்னார்வ தொண்டு அமைப்புகள் திட்டமிட்டு உள்ளன.

Saturday, November 8, 2025

அமைச்சர் நேரு அமைதிக்கு காரணம் என்ன? அமலாக்கத் துறையா?

 


பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 08, 2025, ஐப்பசி 22, விசுவாவசு வருடம் 06-00: AM

தஞ்சாவூர்,

நகராட்சி நிர்வாக துறையில், அலுவலர் மட்ட பணி நியமனத்தில், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யுமாறும் தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

இதனால், அத்துறை அமைச்சரான நேருவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை இந்த விவகாரம் பூதாகரமாகி, பதவிக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காக, சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு சென்று அமைச்சர் நேரு வழிபட்டார்.

இந்நிலையில், தஞ்சாவூரில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், நேற்று நடந்த வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், “பா.ஜ., வெற்றி பெற முடியாது என்ற நிலையில், கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் ஓட்டு திருட்டு.

''அடிமைகளை கையில் வைத்துக் கொண்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் நம்மை வீழ்த்த நினைக்கின்றனர்.

''இந்தியாவில் பிரதமரையே எதிர்க்கும் துணிவு, வேறு எந்த மாநில முதல்வருக்கும் இல்லை.

வெற்றிக்கனி ''பல அரசியல் கட்சிகளும் பா.ஜ.,வுக்கு அடிபணிந்த நிலையில், 'மாநில உரிமையை கட்டிக் காப்போம்' என பிரதமரையே எதிர்த்து வெற்றிக்கனி பறிப்பவர், முதல்வர் ஸ்டாலின்,” என்றார்.

பா.ஜ., மோடி, அமித் ஷா என அமைச்சர் செழியன் வெளுத்து வாங்கிய நிலையில், பா.ஜ., மற்றும் மோடிக்கு எதிராக அமைச்சர் நேரு, எதுவும் பேசவில்லை.

நேரு பேசும்போது, “வாக்காளர் பட்டியலில், சிறுபான்மையினர் ஓட்டுகளை விடுபடாமல் சேர்க்க வேண்டும். சிறுபான்மையினர் ஓட்டு அனைத்தும், தி.மு.,க.,வுக்கான ஓட்டுகள்.

''ஆவணங்கள் இல்லாமல் பிற மாநில வாக்காளர்களை சேர்க்க அனுமதிக்கக்கூடாது. கட்சியினர், கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, தி.மு.க.,வை இரண்டாவது முறையாக வெற்றி பெற செய்ய வேண்டும்,” என்றார்.

'அமலாக்கத் துறையின் நெருக்கடியால், அமைச்சர் நேரு அமைதியாகி விட்டார்' என, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் கூறினர்.

டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு.... ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை

 

பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 08, 2025, ஐப்பசி 22, விசுவாவசு வருடம் 05-30: AM

சென்னை,

'ரவுடிகளை ஒழிக்க, கொலைகள் நடக்காமல் இருக்க, முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், பதவி உயர்வில் சிக்கல் நேரிடும்' என, டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு, ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாநில அளவில் நடக்கும் குற்றங்கள், அவற்றை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மண்டல வாரியாக ஐ.ஜி.,க்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி உள்ளனர். இது குறித்து, டி.எஸ்.பி.,க்கள் கூறியதாவது:

காவல் நிலைய பதிவுகளில், விசாரிக்கப்படாத சி.எஸ்.ஆர்., ரசீதுகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். போலீசார், ரவுடிகளின் வீட்டருகே சென்று, விசாரணை செய்ததற்கான, 'லைவ் லொகேஷன்' விபரத்தை, இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ரவுடிகள் குறித்து கிடைக்கும் தகவல்களை, 'பருந்து' செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

போலீஸ் நிலைய எல்லைகளில், பகுதி வாரியாக நடந்த குற்றங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோர், எளிதில் தப்பி செல்லாமல் இருக்க, தற்காலிகமாக 'செக் போஸ்ட்' அமைக்க வேண்டும்.

பகல், இரவு நேரங்களில், ரோந்து பணிகளில் கிடைத்த தகவல்களை, பதிவேடுகளில் குறித்து வைக்க வேண்டும்.

அமாவாசை நாளில் ரோந்து பணிக்கு, கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும். முன் விரோதம், பழிக்கு பழி வாங்க துடிக்கும் எதிரிகள் உள்ளிட்டோரை கண்காணித்து கொலைகளை தடுக்க வேண்டும். போலீஸ் நிலைய எல்லைகள் தோறும், குற்றங்களை குறைக்க வேண்டும்.

டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணித்திறன் குறித்து, எஸ்.பி.,க்கள் ஆய்வு செய்வர். அவர்கள் தரும் அறிக்கை அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பதவி உயர்வுக்கும் சிக்கல் ஏற்படலாம் என, ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை செய்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Friday, November 7, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி - வாக்குச்சாவடி அலுவலரை அறிந்துகொள்ள இணையதள முகவரி

 


பதிவு: வெள்ளிக்கிழமை, நவம்பர் 07, 2025, ஐப்பசி 21, விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை,

வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வீடு வீடாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் திரும்பப் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்களை கொடுத்து வருகின்றனர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அவர்கள் திரும்பப் பெற்றும் வருகின்றனர். இந்தநிலையில், மக்கள் தங்கள் தொகுதியில் உள்ள தங்கள் வாக்குச்சாவடியின் நிலை அலுவலர் யார்? என்பதை தெரிந்து கொள்வதற்கான இணையதள முகவரியை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

அதன்படி, https://erolls.tn.gov.in/blo/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் பகுதி வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

பிஹார் முதற்கட்டத் தேர்தல் - 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்ற தேர்தலில் 64% வாக்குப்பதிவு

 


பதிவு: வெள்ளிக்கிழமை, நவம்பர் 07, 2025, ஐப்பசி 21, விசுவாவசு வருடம் 05-40: AM

பாட்னா,

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பக்தியார்பூரில் வாக்களித்த பிஹார் முதல்வர் நிதிஷ். பாட்னா கால்நடை மருத்துவக் கல்லூரியில் வாக்களித்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 72, காங்கிரஸ் 24, விஐபி 6, கம்யூனிஸ்ட் கட்சிகள் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இரு அணிகளை தவிர்த்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. பிஹார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, மெகா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் 16 அமைச்சர்கள் விஐபி வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் மொத்தம் 3.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தலைநகர் பாட்னா அடுத்த பக்தியார்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் நிதிஷ் குமார் வாக்களித்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் தனது மனைவி ரப்ரி தேவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று பாட்னாவின் கால்நடை மருத்துவக் கல்லூரி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். ஆர்ஜேடி மூத்த தலைவரும், மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தனது மனைவி ராஜஸ்ரீ உடன் சென்று வாக்களித்தார்.

லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகிஜன் சக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். பாட்னாவில் வாக்களித்த அவர், ‘‘எனக்கு முதல்வர் பதவி கிடைத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்’’ என்றார். பிஹார் தேர்தலில் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்பும், இளைய மகன் தேஜஸ்வி யாதவும் எதிரும் புதிருமாக போட்டியிடுகின்றனர். ‘‘எனது இரு மகன்களும் தேர்தலில் வெற்றிவாகை சூடுவார்கள்" என்று லாலுவின் மனைவி ரப்ரி தேவி கூறினார்.

மத்திய அமைச்சரும், எல்ஜேபி (ஆர்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான், ககாரியா நகரில் வாக்களித்தார். ‘‘பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். மெகா கூட்டணி தோல்வியை தழுவும்’’ என்று அவர் கூறினார்.

புர்காவால் பதற்றம்

கோரியாகோட்டி தொகுதியில் பாஜக சார்பில் தேவேஸ்கந்த் சிங் போட்டியிடுகிறார். சிவான் நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு அவர் நேற்று சென்றார். அப்போது, முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து வாக்களிக்க சென்றனர். அவர்களது முக அடையாளத்தை உறுதி செய்வதற்காக, புர்காவை நீக்குமாறு தேவேஸ்கந்த் சிங் வலியுறுத்தினார்.

இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு தரப்பினர் வாக்குச்சாவடி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறிய போது, ‘‘விமான நிலையங்களில் முஸ்லிம் பெண்களின் புர்கா நீக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. இதேபோல வாக்குச்சாவடியிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதை எதிர்ப்பது சட்டவிரோதம்’’ என்றார்.

கல்வீச்சு தாக்குதல்

வைஷாலி பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், ஆர்ஜேடி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஆர்ஜேடி தொண்டர்கள் கற்களை வீசிதாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதேபோல போஜ்பூர் பகுதியில் ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர். மாஞ்சி தொகுதியின் ஜெய்ட்பூர் பகுதியில் ஆய்வு செய்த இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும், வேட்பாளருமான சத்யேந்திர குமாரின் கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர்.

பெரும்பாலான பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நீடித்தது. பதற்றமான 56வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு முடிந்தது. 400 வாக்குச்சாவடிகளில் இரவை கடந்தும் வாக்குப்பதிவு நீடித்தது. இரவு 8 மணி நிலவரப்படி, 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2020-ல் முதல் கட்ட தேர்தலின்போது 56.9 சதவீத வாக்குகள் பதிவாகின. அதைவிட தற்போது 7.56 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.நவ.11-ல் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 14-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கடந்த 2020 தேர்​தலில், 121 -ல் மகா கூட்​டணி 61 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி (என்​டிஏ) 59 மற்​றும் லோக் ஜன சக்தி ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றிருந்​தது. இந்த 121 தொகு​தி​களில் மெகா கூட்​ட​ணி​யின் தலை​மைக் கட்​சி​யான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மட்​டும் 42 தொகு​தி​களில் வென்​றிருந்​தது. இக்​கூட்​ட​ணி​யின் இதர உறுப்​பினர்​களான காங்​கிரஸ் 8 மற்​றும் இடது​சா​ரி​கள் 11 தொகு​தி​களைப் பெற்​றன. அதே​போல், பாஜக 32 மற்​றும் ஜேடியு 23 தொகு​தி​களில் 2020 தேர்தலில் வெற்றி பெற்​றன என்பது நினைவுகூரத்தக்கது.

Thursday, November 6, 2025

பீகாரில் இன்று முதல்கட்ட தேர்தல் - 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

 


பதிவு: வியாழக்கிழமை, நவம்பர் 06, 2025, ஐப்பசி 20, விசுவாவசு வருடம் 05-40: AM

பாட்னா,

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது

பீகார் சட்டசபை தேர்தல் 6-ந் தேதி (இன்று), 11-ந் தேதி என 2 கட்டங்களாக நடக்கிறது. 121 சட்டசபை தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. கடந்த சில நாட்களாக பரபரப்பாக நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர்.மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர்.

வேட்பாளர்களில் இந்தியா கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் (ரகோபூர் தொகுதி), அவருடைய அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ் (மஹுவா) மற்றும் துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி (தாராபூர்), விஜய்குமார் சின்ஹா (லக்கிசாரை) உள்பட 16 மந்திரிகள் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.மொத்தம் 45 ஆயிரத்து 341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ளன.

காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

முதல்கட்ட தேர்தலையொட்டி, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 1,650 கம்பெனி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய கட்டிடங்களிலும் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகள் மற்றும் அவற்றை சுற்றிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றப்பின்னணி கொண்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் டி.ஜி.பி. வினய்குமார் தெரிவித்தார். 348 பார்வையாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...