Thursday, November 6, 2025

2026 தேர்தலில் தவெகவிற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் - சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு

 


பதிவு: வியாழக்கிழமை, நவம்பர் 06, 2025, ஐப்பசி 20, விசுவாவசு வருடம் 05-30: AM

சென்னை, 

2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய் என்று நேற்று நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி குறித்து முடிவு எடுக்க பொதுக்குழுவில் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விவசாயிகள் விரோத அரசாக தி.மு.க. அரசு செயல்படுகிறது.

‘ஊழல் – அவதூறு – அராஜகம்’ என்ற அடிப்படையிலேயே தி.மு.க. செயல்படுகிறது என்று தி.மு.க.வுக்கு பொதுக்குழு கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார். த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.இதுதவிர விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை கடைப்பிடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுப்பதற்காக 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் பயிற்சி அளித்தனர்.

கடுமையான சோதனை

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது.

நுழைவு வாயிலில் காலை 9 மணியில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அழைப்பு கடிதம், கார் பாஸ் மற்றும் கட்சி அடையாள அட்டை, காண்பித்து முதல் கட்ட சோதனையாக, கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு சென்றனர். பின்னர் அடையாள அட்டையில் உள்ளவர் பெயரை உறுதி செய்ய 2-ம் கட்ட சோதனையாக ஆதார் போன்ற அரசு அடையாள அட்டைகளை காண்பிக்க கூறி வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். 3-ம் கட்ட இறுதி சோதனையாக அவர்களது தொகுதி, மாவட்டம், பொறுப்பு உள்ளிட்ட விபரங்களை எழுதி வாங்கி பின்னர் பதிவேட்டில் கையெழுத்து போட்டதும் பொதுக்குழுக் கூட்ட அரங்கத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.

முதலாவதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

முதல் தீர்மானமாக செப்டம்பர் 27–ந் தேதி மூன்றாவது கட்டமாக நாமக்கல் மக்கள் சந்திப்பை முடித்து, கரூரில் நடைபெற்ற நம் வெற்றித் தலைவரின் மக்கள் சந்திப்பில், திட்டமிட்டு, கற்பனைக்கும் எட்டாத வகையில், பாதுகாப்புக் குறைபாடு மற்றும் இன்னபிற செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டனவோ என்று எண்ணத்தக்க வகையில் அசம்பாவிதம் நிகழ்ந்தது. அதில், நம் குடும்ப உறவுகளான 41 உயிர்கள் பலியாகினர். தமிழக அரசியல் வரலாற்றில், மாற்றத்தை விரும்பும் மக்களரசியலை மையமாகக் கொண்ட நம் இலட்சியப் பயணத்தில் பங்கெடுத்துக்கொள்ள வந்து உயிர்நீத்த நம் சொந்தங்களான அந்தத் தியாகிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை இந்தப் பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையே நம் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அதற்குள் கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என்ற செய்தி தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

தொடர்ந்து இதுபோன்ற கொடுமைகள் நடந்தவண்ணம் இருப்பதால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து துன்பம் நேர்கிறதே, காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் தூக்கம் களைந்து எப்போது எழுவார்? என்றும் தெரியவில்லை. இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடே தலைகுனிந்து நிற்கிறது என்பதைக் கூறுவதோடு, சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத தி.மு.க. அரசுக்கு வன்மையான கண்டனங்களை இச்சிறப்புப் பொதுக்குழு பதிவு செய்கிறது.

35 மீனவர்கள் கைதுக்கு கண்டனம்

நம் மீனவச் சகோதரர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலும் கைது நடவடிக்கையும் ஈவு இரக்கமின்றி, தொடர்ந்து நீடித்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்தது. அத்தோடு, அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளையும் ஒரு நாட்டுப் படகையும் பறிமுதல் செய்தது.

கடிதம் எழுதிவிட்டு தூங்குவதா?

இலங்கைக் கடற்படையின் இந்த அராஜகச் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஓர வஞ்சனையுடன் கண்டும் காணாமல் கண்மூடிக் கொண்டிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதே போல, நம் மீனவச் சகோதரர்கள் விஷயத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு, கண்மூடித் துயில் கொள்வதே வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் வாடிக்கையாகிவிட்டது.

கைது செய்யப்பட்ட நம் மீனவச் சகோதரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். இதற்கான நடவடிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல் உண்மையாகத் தர வேண்டும். மேலும், நம் மீனவச் சகோதரர்களின் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நிரந்தரத் தீர்வை நோக்கி ஒன்றிய அரசு நகர வேண்டும் என்று பொதுக்குழு வலியுறுத்துகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்...

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்பது, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அச்சுறுத்தும் ஒரு செயலாகவே இருக்கிறது. சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற பெயரில், பீகாரில் ஏற்கெனவே லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதே அதற்குச் சான்று. ஆறு கோடி வாக்காளர்களுக்கும் மேல் இருக்கும் தமிழ்நாட்டில் அத்தனைப் பெயர்களையும் சரிபார்க்க ஒரு மாத காலம் எப்படிப் போதுமானதாக இருக்கும்? அவசர கதியில் நடைபெறும் இப்பணிகளால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை பாதிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நியாயமான, எந்தவித அரசியல் குறுக்கீடுமற்ற, சுதந்திரமான தேர்தல் நடைபெற, சிறப்புத் தீவிரத் திருத்தம் எனும் இந்தக் குழப்பமான நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே இருக்கும் பழைய நடைமுறையைத் தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

விவசாயிகள் விரோத தி.மு.க. அரசு

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் உரிய நேரத்தில், கொள்முதல் செய்யாமல் நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து, மூட்டையிலேயே முளைத்து வீணாகும் நிலைக்குக் காரணமான, விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், மழைநீர் வடிகால்களைச் சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட ராம்சர் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்டத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கழகத் தலைவருக்கும் அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.

“ஊழல் – அவதூறு – அராஜகம்”

அரசாங்கத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை நேர்மையாக – உண்மையாக – ஆதாரங்களோடு சுட்டிக் காட்டும் எதிர்க்கட்சியினரையும், சமூக ஆர்வலர்களையும் வழக்கு – கைதுகளால் மிரட்டும் தி.மு.க. அரசு, அவதூறு பரப்பும் ஆளும் கட்சியின் ஊதுகுழல்களை மறைமுகமாக உற்சாகப்படுத்தி வருகிறது. அதனால், எந்த விதமான நியாய தர்மமும் இன்றி, ஆளும் கட்சியின் அவதூறுக் குழுக்கள் அராஜகமாகச் செயல்பட்டு வருகின்றன.

அண்ணா சொன்ன, “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு” என்ற கோட்பாட்டைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, “ஊழல் – அவதூறு – அராஜகம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படும் ஆளும் கட்சியின் கூலிப் படையை பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழகத் தொழில் துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள், அவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தி.மு.க. அரசின் அராஜக சர்வாதிகாரப் போக்கு

தமிழ்நாட்டில் ஜனநாயக அடிப்படையில் பொதுப் பிரச்சனைகளில் கருத்துத் தெரிவிப்பவர்களைக் கைது செய்து, அவர்களின் கருத்துரிமையைச் சிதைக்கும் வெற்று விளம்பர மாடல் அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு விலைபோகாத ஊடகங்களையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் எதிர்க்கட்சிகளையும் வழக்கு, விசாரணை, கைது என்பனவற்றைப் பயன்படுத்தி அச்சுறுத்துகிறது.

இது தமிழக அரசியல் சூழலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பேராபத்து என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, சர்வாதிகார மாடல் தி.மு.க. அரசின் அராஜக – சர்வாதிகாரப் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

முதல்வர் வேட்பாளர் விஜய்

தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவருக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

 'தி.மு.க., ஆட்சியில் தமிழகம் தலை குனிந்து நிற்கிறது' த.வெ.க., சிறப்பு பொதுக்குழு தீர்மானங்கள் 

அண்ணா பல்கலையை தொடர்ந்து, கோவையில் கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இது போன்ற கொடுமைகள் நடந்தபடி இருக்கின்றன. சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாததால், தி.மு.க., ஆட்சியில் தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.

 தமிழகத்தில் வாக்காளர்களின் ஜனநாயக கடமையான ஓட்டுரிமையை பறிக்கும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில், விவசாயிகளிடம் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகின. இதற்கு, விவசாயிகள் விரோத தி.மு.க., ஆட்சி தான் காரணம்.

பாதுகாக்கப்பட்ட ராம்சார் மண்டலத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டடம் கட்ட தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஒத்துழைப்புடன் இது நடந்துள்ளது. அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்

மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் த.வெ.க., தலைவர் விஜய்க்கும், அவரை காண வரும் பொது மக்களுக்கும், பாரபட்சமின்றி தமிழக அரசு முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும் .

தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக, தொழில் துறை அமைச்சர் அறிவித்ததை அந்நிறுவனம் மறுத்துள்ளது. எனவே, தமிழகத்தில் தொழில் துறைக்கு வந்துள்ள முதலீடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் ஜனநாயக முறையில், பொது பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களின் கருத்துரிமையை சிதைக்கும் சர்வாதிகார செயலை, அரசு நிறுத்த வேண்டும்.

முதல்வர் வேட்பாளராக த.வெ.க., தலைவர் விஜய் தலைமையில், 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும். கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, November 5, 2025

தவெக சிறப்பு பொதுக்குழு இன்று கூடுகிறது - முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்க வாய்ப்பு

 


பதிவு: புதன்கிழமை, நவம்பர் 05, 2025, ஐப்பசி 19, விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை, 

விஜய்யின் பேச்சை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்காக, அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார்.

எனவே அந்த சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார். 

அவருடைய அனல் தெறிக்கும் பேச்சு நிறைவடைந்ததும், அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட இருக்கிறது. விஜய்யின் பேச்சை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்காக, அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அழைப்பு கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

காலை 9.15 மணிக்குள் பொதுக்குழு அரங்கிற்குள் வந்துவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கட்சி தலைமை பிறப்பித்துள்ளது.

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

 


பதிவு: புதன்கிழமை, நவம்பர் 05, 2025, ஐப்பசி 19, விசுவாவசு வருடம் 06-20: AM

சென்னை, 

முதல்முறையாக கணக்குப்பதிவியல் தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி - 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் நேற்று வெளியிட்டார்.

அப்போது பிளஸ் –2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் பாடத்துக்கு முதல்முறையாக தேர்வு அறைக்குள் கால்குலேட்டர் அனுமதிப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மாணவர்கள் பொதுத் தேர்வை அச்சமின்றி எழுத வேண்டும். இது மாணவர்களுக்கான தேர்வல்ல, ஆசிரியர்களுக்கான தேர்வும்கூட. மகிழ்ச்சியாக தேர்வுக்கு தயார் ஆகுங்கள்.

இம்முறை அதிக மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2026ம் ஆண்டு மார்ச் 11–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே 20–ந்தேதி வெளியாகும்.

அதேபோல பிளஸ்–2 (12ம் வகுப்பு) மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2–ந்தேதி முதல் மார்ச் 26ம் வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 9–ந்தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும். இவர்களின் தேர்வு முடிவுகள் மே 8–ந்தேதி வெளியாகும்.

11ம் வகுப்பு தோற்ற மாணவர்களுக்கு தேர்வு

கடந்த ஆண்டு நடத்த 11–ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும் (அரியர்) பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

இவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 3–ந்தேதி துவங்கி 27–ந்தேதி வரை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும், பிளஸ் – 2 பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்.

ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் தேர்வுக்கு முதன்முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு பொதுத் தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்கள் கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அது இந்தாண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் செய்தி கணக்குப்பதிவியல் பாடத்தை எடுத்து பயின்று வரும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது.

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:–

மார்ச் 11–ந்தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்

16–ந்தேதி – ஆங்கிலம்

25–ந்தேதி – கணிதம்

30–ந்தேதி – அறிவியல்

ஏப்ரல் 2–ந்தேதி – சமூக அறிவியல்

6–ந்தேதி – விருப்ப மொழிகள்

12–ம் வகுப்பு தேர்வு அட்டவணை:–

மார்ச் 2–ந்தேதி – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்

5–ந்தேதி – ஆங்கிலம்

9–ந்தேதி – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

13–ந்தேதி – இயற்பியல், பொருளாதாரம்

17–ந்தேதி – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் அண்ட் டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங்.

23–ந்தேதி – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், அடிப்படை சிவில் என்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் என்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலாளர் பணி

26–ந்தேதி – நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவரையும் பிடித்தது எப்படி? - காவல் ஆணையர் விளக்கம்

 


பதிவு: புதன்கிழமை, நவம்பர் 05, 2025, ஐப்பசி 19, விசுவாவசு வருடம் 06-00: AM

கோவை,

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவி நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரித்து மூவரை கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாணவி வன்கொடுமை வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி, இவரது சகோதரர் கார்த்திக் (எ) காளீஸ்வரன் (21), இவர்களது தூரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா (எ) தவசி (20) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு முன்பு மூன்று பேரும் பிணையில் வந்துள்ளனர்.

இவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. க.க.சாவடி, துடியலூர் காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளன. இவர்கள் மரம் வெட்டுதல், லேத் ஒர்க் போன்ற கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர்.

இவர்கள் கோவில்பாளையம் பகுதியில் சாவியுடன் நின்றிருந்த மொபட்டை திருடி பயன்படுத்தி வந்தனர். சம்பவ நாளில் இருகூர் வீட்டில் மது அருந்திவிட்டு, சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காரில் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை அரிவாளால் தாக்கி, பெண்ணை இருட்டான பகுதிக்கு 3 பேரும் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். காயமடைந்த வாலிபர் இரவு 11.20 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். 10 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் தீவிரமாகத் தேடினர். அங்கு மிகவும் இருட்டாக இருந்ததால் 100 போலீஸார் தேடுதலுக்குப் பின் அதிகாலை நாலு மணி அளவில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் மாணவி மீட்கப்பட்டார்.

ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதி உட்பட பல இடங்களில் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டி குற்றவாளிகளை தேடியதில், மூவரும் துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் மறைந்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் மூவரையும் பிடிக்க முயன்றபோது அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் காவலர்களை தாக்கினர். அரிவாளால் வெட்டியதில் தலைமைக் காவலர் சந்திரசேகருக்கு (47) இடது கையில் வெட்டு விழுந்தது. போலீஸார் சுட்டதில் மூன்று பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது 296 (b), 118, 140, 309, 80 ஆகிய சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் மோதிரம் மற்றும் ஒரு மொபைல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற ஆபத்தான காலத்தில் போலீஸாரை தொடர்பு கொள்ள காவல் உதவி ஆப் செயல்பட்டு வருகிறது. இந்த ஆப்பில் sos பட்டனை அழுத்தினாலோ அல்லது 3 முறை அசைத்தாலோ காவல்துறைக்கு புகார் செல்லும். லொகேஷனை கண்டறிந்து யாரேனும் ஆபத்தில் சிக்கி இருந்தால் மீட்க முடியும். சம்பவ இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டாஸ்மாக் பார் மூடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த பகுதியில் தினமும் 5 பீட் ஆபிசர், இரண்டு ரோந்து வாகனங்கள் தினமும் ரோந்து சுற்றி வருகின்றனர். சம்பவத்துக்கு சற்று முன்பு பிருந்தாவன் நகர் மெயின் ரோட்டில் போலீஸார் ரோந்து சென்றுள்ளனர். மாணவிகளின் பாதுகாப்புக்கு ‘போலீஸ் அக்க’, மாணவர்களின் பாதுகாப்புக்கு ‘போலீஸ் புரோ’ திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன”.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, November 4, 2025

கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம் - 3 பேரையும் சுட்டுப்பிடித்த போலீசார்

 


பதிவு: செவ்வாய்க்கிழமை, நவம்பர் 04, 2025, ஐப்பசி 18, விசுவாவசு வருடம் 06-00: AM

கோவை,

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு வந்த 3 பேர் காரில் காதலர்கள் இருப்பதை அறிந்தனர். காரின் கதவை தட்டி திறக்குமாறு கூறி மிரட்டினர். இதனால் காரில் இருந்த காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பயத்தில் அவர்கள் கதவை திறக்கவில்லை.இதையடுத்து அந்த 3 பேரும் அரிவாளால் காரின் கண்ணாடியை உடைத்து, காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை வெளியே இழுத்தனர்.. அவரை விடாமல் காதலன் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் காதலனின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.இதையடுத்து, தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.

குணா தவசி , சதீஸ் , கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்னர் .

Monday, November 3, 2025

Anbil Mahesh Poyyamozhi Press Meet at Madurai | Karur Stampede: Emotiona...

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை வாக்காளர் பட்டியல் திருத்தம் துவக்கம்

 


பதிவு: திங்கள்கிழமை, நவம்பர் 03, 2025, ஐப்பசி 17, விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

மாநிலம் முழுதும், 234 சட்டசபை தொகுதி களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி நாளை துவங்கவுள்ளது.

இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்கள், தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வருகின்றன. பல வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ளன.

எனவே, தகுதியான வாக்காளர்களை மட்டுமே பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும்; போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள, இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து உள்ளது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை, வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகளுடன் இணைந்து, அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில், எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஒத்தி வைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலருடன் 12 ஏஜென்ட்கள் தமிழகத்தில் 70,000த்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 

இவற்றை, 1,200 வாக்காளர்களுக்கு ஒன்று என்ற அளவில் விரிவுபடுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

இதற்கான பணிகளும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் போது மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒவ்வொரு கட்சிக்கும் பூத் ஏஜென்ட்கள் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு, இப்பணியில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், 12 பூத் ஏஜென்ட்களும் வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லவுள்ளனர். கடந்த காலங்களில் ஒவ்வொரு பூத் ஏஜென்டும், 10 பேர் வரை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் வாயிலாக, 15 முதல் 20 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், தங்கள் வாயிலாகவே புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்; முகவரி மாற்றம் செய்தவர்களை இடம் பெற செய்ய வேண்டும் என, ஒவ்வொரு கட்சியின் பூத் ஏஜென்ட்களும் வலியுறுத்துவர் என்பதால், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடையே மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால், வாக்காளர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:

தமிழகத்தில் 2002 மற்றும் 2005ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் கணக்கெடுப்பு பணி நாளை துவங்கவுள்ளது. இந்த பட்டியல்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் உள்ளன.

இந்த பட்டியல்களுடன், அனைத்து வீடுகளுக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லப்போவது இல்லை. எந்தெந்த வீடுகளில் 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதோ, அந்த வீடுகளுக்கு மட்டுமே செல்வர்.

அந்த வீடுகளில் யாராவது இருந்தால், அவர்களின் விபரத்தை கேட்டு, வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவர். அந்த வீட்டில், 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால், அதற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தையும் வழங்குவர்.அவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தர வேண்டும் என்று அவசியம் இல்லை. அடுத்த முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும் போது, ஆவணங்களுடன் அவற்றை சமர்ப்பித்தால் போதும். இதற்காக, ஒரு வீட்டிற்கு மூன்று முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்வர். கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால், அதை தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களை காட்டி, டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம்.

முகவரி மாற்றம் எதுவும் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது. முகவரி மாறியவர்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும், அதற்கான ஆவணங்களை டிசம்பர் 9ம் தேதி முதல், ஜனவரி மாதம் 8ம் தேதிக்குள் சமர்ப்பித்து, தங்களது பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...