பதிவு: புதன்கிழமை, நவம்பர் 05, 2025, ஐப்பசி 19, விசுவாவசு வருடம் 06-20: AM
சென்னை,
முதல்முறையாக கணக்குப்பதிவியல் தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி - 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் நேற்று வெளியிட்டார்.
அப்போது பிளஸ் –2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் பாடத்துக்கு முதல்முறையாக தேர்வு அறைக்குள் கால்குலேட்டர் அனுமதிப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மாணவர்கள் பொதுத் தேர்வை அச்சமின்றி எழுத வேண்டும். இது மாணவர்களுக்கான தேர்வல்ல, ஆசிரியர்களுக்கான தேர்வும்கூட. மகிழ்ச்சியாக தேர்வுக்கு தயார் ஆகுங்கள்.
இம்முறை அதிக மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2026ம் ஆண்டு மார்ச் 11–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே 20–ந்தேதி வெளியாகும்.
அதேபோல பிளஸ்–2 (12ம் வகுப்பு) மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2–ந்தேதி முதல் மார்ச் 26ம் வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 9–ந்தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும். இவர்களின் தேர்வு முடிவுகள் மே 8–ந்தேதி வெளியாகும்.
11ம் வகுப்பு தோற்ற மாணவர்களுக்கு தேர்வு
கடந்த ஆண்டு நடத்த 11–ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும் (அரியர்) பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
இவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 3–ந்தேதி துவங்கி 27–ந்தேதி வரை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும், பிளஸ் – 2 பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்.
ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் தேர்வுக்கு முதன்முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு பொதுத் தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்கள் கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அது இந்தாண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் செய்தி கணக்குப்பதிவியல் பாடத்தை எடுத்து பயின்று வரும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது.
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:–
மார்ச் 11–ந்தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
16–ந்தேதி – ஆங்கிலம்
25–ந்தேதி – கணிதம்
30–ந்தேதி – அறிவியல்
ஏப்ரல் 2–ந்தேதி – சமூக அறிவியல்
6–ந்தேதி – விருப்ப மொழிகள்
12–ம் வகுப்பு தேர்வு அட்டவணை:–
மார்ச் 2–ந்தேதி – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
5–ந்தேதி – ஆங்கிலம்
9–ந்தேதி – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
13–ந்தேதி – இயற்பியல், பொருளாதாரம்
17–ந்தேதி – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் அண்ட் டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங்.
23–ந்தேதி – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், அடிப்படை சிவில் என்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் என்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலாளர் பணி
26–ந்தேதி – நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்.

No comments:
Post a Comment