Wednesday, November 26, 2025

‘தி.மு.க. அரசின் சட்டங்கள் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 

பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 26, 2025, கார்த்திகை 10,  விசுவாவசு வருடம் 04-00: PM

ஈரோடு, 

மொடக்குறிச்சியில் மாவீரன் பொல்லான் உருவச்சிலை, அரங்கம் திறப்பு விழா - ‘தி.மு.க. அரசின் சட்டங்கள் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’:ஸ்டாலின் பெருமிதம் - ‘லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியது தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கம்’

‘தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’ என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியது தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைத்து பேசியதாவது:–

பூலித்தேவன் - வீரபாண்டிய கட்டபொம்மன் - தீரன் சின்னமலை - மருதிருவர் - வீரமங்கை வேலு நாச்சியார் - மாவீரன் பொல்லான் என்று, நம் தமிழ் மண் ஈன்றெடுத்த மாவீரர்கள் அத்தனை பேரும் நம்முடைய மண் - மொழி - மானம் ஆகியவற்றை காத்திருக்கக்கூடியவர்கள். இடைவிடாமல் அதற்காக போராடிக் கொண்டிருக்கவேண்டும் என்று இன்றைக்கு நமக்கெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள்.

சொன்னால், சொன்னதை செய்பவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – அதற்கு சாட்சியாக சொல்லவேண்டும் என்று சொன்னால், இந்தமாவீரன் பொல்லான் சிலைதான் அதற்கு சாட்சி!

2019-ல் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில், மகுடஞ்சாவடியில் நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளி விழா – அதை முன்னின்று நடத்தியவர் நம்முடைய அதியமான். அதில் பங்கேற்று, சிறப்பித்து பெருமை சேர்த்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஈஸ்வரன்.

மாவீரன் பொல்லானுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்போம் என்று அந்த நிகழ்ச்சியில் நான்உறுதியளித்தேன். இன்றைக்கு அதை உங்கள் முன்னால் திறந்து வைத்திருக்கிறேன். இன்று திரையில் பொல்லானின் வாழ்க்கை வரலாற்றை சிறு குறிப்பாக எடுத்து வெளியிட்ட நேரத்தில் அதை சுட்டிக்காட்டினார்கள்.

பவானிப்போர் - ஓடாநிலைப் போர் - அரச்சலூர் போர் என்று அந்நியரான ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் மாவீரன் பொல்லான்!

நினைவுச் சின்னம் கோரிக்கை நிறைவேறியது...

பொல்லானின் வீரத்தை கண்டு, சினம் கொண்ட ஆங்கிலேயப் படை தளபதி கர்னல் ஹாரிஸ் தலைமையிலான படையால், மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய தியாகத்தைப் போற்ற அவருடைய வீரத்தை காலத்துக்கும் எடுத்துச் சொல்ல, இப்படியொரு நினைவுச் சின்னம் வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக இருந்த வந்த கோரிக்கை, இப்போது திராவிட மாடல் அரசின் மூலமாக அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது!

இந்த பெருமையான தருணத்தில், ஒரு முக்கியமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஏன் உங்களின் பலருக்குக் கூட அது நினைவிருக்கும் என்று கருதுகிறேன். கடந்த ஜூன் மாதம் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில், ஒரு செய்தி வந்திருந்தது. அதை படித்ததுமே, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தச் செய்தி என்னவென்றால் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம், அந்த மக்களுக்கு எத்தகைய ஒளிவிளக்காக திகழ்கிறது என்பதைப் பற்றி தி இந்து பத்திரிகையில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களைப் பெற்று, ஆதாரத்துடன் இந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள்.

அந்தச் செய்தியில், 2009-ல் 193 அருந்ததியினர் மாணவர்கள் பொறியியல் படித்துக் கொண்டிருந்த நிலைமாறி, இந்த ஆண்டு 3 ஆயிரத்து 944 மாணவர்கள் பொறியியல் படிக்கிறார்கள் என்றும்,

2023-–24-ஆம் ஆண்டில், 193 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்!

இதில் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பெருமை என்னவென்றால், உங்களில் பலருக்கும் தெரியும். இந்த உள் ஒதுக்கீடு சட்டத்தை கலைஞர் நிறைவேற்ற முடிவு செய்தார் – முடிவு செய்து, அது சட்டமன்றத்தில் சட்ட மசோதவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் – ஆனால், திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதனால் அவரால் எழுந்து நடமாட முடியாத நிலை அன்றைக்கு ஏற்பட்டது. அன்றைக்கு காலையில் “உடனே புறப்பட்டு மருத்துவமனைக்கு வா” என்று எனக்கு தொலைபேசியிலிருந்து அழைப்பு வருகிறது. வந்தவுடன் என்னை அழைத்து சொன்னார், நான் ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் இன்றைக்கு நிறைவேற்றவேண்டும் – அறிமுகப்படுத்த வேண்டும் – என்னை மருத்துவர்கள் செல்வதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அதனால், நீ சென்று என்னுடைய சார்பில் அந்த மசோதாவை அறிமுகப்படுத்து என்று எனக்கு உத்தரவிட்டார். அந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்கின்ற வாய்ப்பு இந்த அடியேன் ஸ்டாலினுக்கு கிடைத்தது என்று இன்றைக்கு நான் பெருமைப்படுகிறேன்!

சமூகநீதிப் பாதையை கட்டமைப்பதில்...

ஒரு சமூகத்தையே முன்னேற்று வதற்கான அந்த சமூகநீதிப் பாதையை கட்டமைப்பதில் என்னுடைய பங்கும் இருந்திருக்கிறது என்பதை எண்ணி இன்றைக்கும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுதான் எனக்குக் கிடைத்த பெருமை!

அதுமட்டுமல்ல, அந்தச் செய்தியில், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் தி இந்து பத்திரிகையில்எழுதியிருந்தார்கள். அது என்னவென்றால், “தி.மு.க. அரசு எந்தவொரு சட்டத்தை நிறைவேற்றும் போதும், அதற்குரிய காரணங்களை முறையாக ஆராய்ந்து, தரவுகளை எல்லாம் தொகுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு குழு அமைத்து, அவர்களுடைய பரிந்துரைகளை எல்லாம் பெற்று, சாமானிய மக்களுக்கு உரிய பயன்களை உண்மையிலேயே அளித்து வருவதால், தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியைப் பெற்று வருவது தான் வரலாறு!” என்று பாராட்டியிருந்தார்கள்!

லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியதால் இந்தப் பாராட்டுதான், தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய அடையாளம்!

எல்லார்க்கும் எல்லாம் என்ற நம்முடைய இலட்சியத்தை அடைய வேண்டும். பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சமூக நிலையையும் உயர்த்த வேண்டும் என்று திராவிட மாடல் அரசின் சார்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அது அத்தனையும் இங்கே பட்டியிலிட முடியாது – நேரமில்லை – அடுத்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்றாக வேண்டும். அதை பட்டியலிட்டால், இன்றைக்கு முழுவதும் போதாது. எனவே, அருந்ததியர் இன மக்களுக்காக செய்யப்பட்டுள்ள சிலவற்றை மட்டும் தான் அதுவும் தலைப்புச் செய்திகளாக உங்களிடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, தேனி மற்றும் கரூர் மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 182 கோடி ரூபாயில் 26 விடுதிகள், - 74 கோடி ரூபாயில், 107 பள்ளிக் கட்டடங்கள், 20 கோடி ரூபாயில், 26 சமுதாயக் கூடங்கள், - 134 கோடி ரூபாயில், 131 கிராம அறிவுசார் மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில், 29 மாணவர்களுக்கு 10 கோடியே 30 லட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கியிருக்கிறோம்!

முழுநேர முனைவர் ஆராய்ச்சி படிப்பிற்காக 329 மாணவர்களுக்கு 3 கோடியே 29 இலட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கியிருக்கிறோம்! - போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை 3 இலட்சத்து 69 ஆயிரத்து 550 பேருக்கும், - ஃப்ரி-மெட்ரிக் கல்வி உதவித்தொகையை 5 இலட்சத்து 42 ஆயிரத்தி 396 மாணவர்களுக்கும் வழங்கியிருக்கிறோம்!

தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரியத்தை திருத்தி அமைத்திருக்கிறோம்!

2021-ல், 18 ஆயிரத்து 225 பேர் மட்டுமே இருந்த இந்த வாரியத்தில், நம்முடைய அரசு சிறப்பாக செயல்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், மூன்று லட்சம் பேர் உறுப்பினர்களாக வாரியத்தில் சேர்ந்திருக்கிறார்கள்! இவர்களுக்கு எல்லாம் 11 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது!

அதுமட்டுமல்ல, அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியிருக்கிறோம். சுகாதார அங்காடிகள் அமைத்திருக்கிறோம். இந்த வாரியத்துக்கு ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறோம்.

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் நாள் ஆறு முக்கிய சிறப்புத் திட்டங்களை அறிவித்திருக்கிறோம். இப்படி என்னால் தொடர்ந்து பட்டியலிட்டுக் கொண்டிருக்க முடியும்!

உண்மையான வளர்ச்சி

இதையெல்லாம் செய்வது, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்! எல்லோரும் சமமாக வாழுகின்ற சமூகம் உருவாக வேண்டும்! அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி என்பதற்காகத்தான்! இந்த லட்சியத்தோடு நடைபோடும் திராவிட மாடல் அரசுக்கு அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும், நீங்கள் எல்லோரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க மாவீரன் பொல்லான்! வாழ்க அவரது புகழ்!

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், மதிவேந்தன், கயல்விழிசெல்வராஜ், நாடாளுமன்றஉறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், மாதேஸ்வரன், சட்டமன்றஉறுப்பினர்கள் ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வெங்கடாசலம், சந்திரகுமார், வாரியத்தின் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, துணைத் தலைவர் கனிமொழி, மாவட்ட கலெக்டர் கந்தசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Rajini Gaang Movie Team Press Meet at Coimbatore | all set to release on...

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழகத்தில் எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு?

 

பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 26, 2025, கார்த்திகை 10,  விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், இன்று ( நவம்பர் 26) இலங்கை அருகேயும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நிகோபார் தீவுகளில் இருந்து தென்கிழக்கே 870 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் – இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தெற்கு இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மாறுநாள் (நவம்பர் 27) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக  இன்றும் (நவம்பர் 26), நாளையும் (நவம்பர்27) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28-ம் தேதி கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் ஓரிரு இடங்களிலும், 29-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 30-ம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், டிச.1-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழகத்தில் இன்று (நவம்பர் 26) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 27-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

29-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

30-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கா்க்ராயில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கில் தலா 17 செமீ, காக்காச்சியில் 14 செமீ, மாஞ்சோலையில் 13 செமீ, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 8 செமீ, திருவாரூரில் 7 செமீ, கடலூர் மாவட்டம் புவனகிரி, புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலத்தில் தலா 6 செமீ, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். 27 முதல் 29-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tuesday, November 25, 2025

கோவையில் ரூ.208 கோடியில் செம்மொழி பூங்கா - மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 08-00: AM

கோவை,

கோவையில் தொழில்முனைவோர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடுகிறார்.

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 2021-ம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செம்மொழி பூங்கா திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.

முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208½ கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்த பணிகளை கடந்த 2023-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இதைத்தொடர்ந்து கோவை மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார். இதற்காக அவர் இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு 11.15 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வருகிறார்.

கோவை விமான நிலையத்துக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் 11.45 மணிக்கு காந்திபுரம் வருகிறார். பின்னர் செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள செம்மொழி வனம், மூலிகை தோட்டம், புதிர்தோட்டம், ஆரோக்கிய வனம், நீர்வனம், பாறை வனம், பூஞ்சோலை, மலைக்குன்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிடுகிறார். பின்னர் அங்கு உள்ள நீர்வீழ்ச்சி அரங்கில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளையும் கண்டுரசிக்கிறார்.

பின்னர் செம்மொழி பூங்காவில் உள்ள ஆடிட்டோரியத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் என முக்கிய பிரமுகர்கள் 150 பேருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். 

இதனை முடித்துவிட்டு அவர், காரில் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் அங்கு தமிழ்நாடு தொழில்துறை சார்பில் டி.என்.ரைசிங் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 

அப்போது அவரது முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்-அமைச்சர் கோவை வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அயோத்தி ராமர் கோவிலில் இன்று காவிக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 07-30: AM

அயோத்தி,

ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் காவிக்கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு செல்கிறார். அங்கு ராமர் கோவில் கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றி வைக்கிறார். ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் காவிக்கொடி ஏற்றி உரையாற்றுகிறார்.

10 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்ட முக்கோண வடிவ கொடியில், ராமரின் வீரத்தையும், அறிவுக்கூர்மையையும் சித்தரிக்கும்வகையில் சூரியன் படமும், ஓம் என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

அயோத்தியில் தங்கி இருக்கும்போது, வால்மீகி, விசுவாத்திரர் உள்ளிட்டோருக்கு சன்னதி அமைந்துள்ள சப்த மந்திர் மற்றும் சேஷாவதார் மந்திருக்கு சென்று பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார். மாதா அன்னபூர்ணா கோவிலுக்கும் செல்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்திக்கு சென்று விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், 

“பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 25ம் தேதி (இன்று) உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோவிலுக்குச் செல்கிறார். காலை 10 மணியளவில், அங்கு மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள ஏழு கோவில்களுக்கு சென்று பிரதமர் தரிசனம் செய்கிறார்.

இதைத் தொடர்ந்து, அவர் சேஷாவதார் கோவிலுக்கு செல்கிறார்.

காலை 11 மணியளவில், பிரதமர் அன்னை அன்னபூர்ணா தேவி கோவிலுக்குச் செல்கிறார். இதனையடுத்து, அவர் ராம் தர்பார் கர்ப்பக் கிரஹத்தில் தரிசனம் செய்து, பூஜையில் ஈடுபடுகிறார். அதனைத் தொடர்ந்து, குழந்தை ராமர் கர்ப்பக் கிரஹத்தில் அவர் தரிசனம் செய்கிறார்.

நண்பகல் 12 மணியளவில், அயோத்தியில் உள்ள புனிதமான ஸ்ரீ ராம ஜன்மபூமி கோவிலின் சிகரத்தில் பிரதமர் மோடி, சம்பிரதாய ரீதியாக காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார். இது கோயிலின் கட்டுமானம் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதையும் குறிப்பதாக அமையும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில் பிரதமர் அங்கு கூடியிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் எம்எல்ஏ, சுதர்சனம் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு - பவாரியா கொள்ளையர் மூவருக்கு ஆயுள் தண்டனை

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 07-00: AM

சென்னை,

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சுதர்சனம் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளையர் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கே.சுதர்சனம். இவர், பெரியபாளையம் அருகே உள்ள தானாகுளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஆயுதங்களால் தாக்குதல் கடந்த 2005 ஜனவரி 9ல், தன் குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வடமாநிலத்தை சே ர்ந்த ஆறு பேர் கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, சுதர்சனத்தின் மகன்களான விஜயகுமார் மற்றும் சதீஷ்குமாரை ஆயுதங்களால் தாக்கியது.

வீட்டின் மாடியில் துாங்கிக் கொண்டிருந்த சுதர்சனம், சத்தம் கேட்டு கீழே வந்தார். அப்போது, அந்த கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டதில், சுதர்சனம் உயிரிழந்தார்.

பின், அந்த கும்பல் சுதர்சனம் வீட்டில் இருந்த 62 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச்செல்ல முயன்றது. அதற்குள் அங்கு கூடிய அப்பகுதி மக்கள், கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால், பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி அந்த கும்பல் தப்பியோடியது.

கொள்ளையர்களை பிடிக்க, அப்போதைய ஐ.ஜி., ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் மற்றும் ராகேஷ், ராஜஸ்தானை சேர்ந்த அசோக், பஞ்சாபை சேர்ந்த ஜெயில்தர் சிங் மற்றும் மூன்று பெண்கள் உள்பட 32 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்; அவர்களில், ஒன்பது பேரை கைது செய்தனர்.

இவர்களில் சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் உள்பட இருவர் இறந்தனர். ஜாமினில் வெளியே வந்த மூன்று பெண்கள் தலைமறைவாகினர். அந்த பெண்கள் உள்பட, 10க்கும் மேற்பட்டோர் தற்போது வரை தலைமறைவாகவே உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

20 ஆண்டு வழக்கு இந்த வழக்கில், 50-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்தனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கில், போலீசார் தரப்பில் கூ டுதல் அரசு வழக்கறிஞர் ஜி.சீனிவா சன் ஆஜரானார்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, வழக்கறிஞர் சிவாஜி ஆகியோர் வாதாடினர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளி என, நீதி பதி எல்.ஆபிரகாம் லிங்கன் கடந்த 21ல் அறிவித்தார்.

இதையடுத்து, நேற்று மாலை அவர்களுக்கான தண்டனை விபரங்களை, நீதிபதி அறிவித்தார்.

கூட்டுக்கொள்ளை, கொலை மற்றும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியது, குற்றத்திற்கு துாண்டியது போன்ற குற்றச் சாட்டுகளின் கீழ், குற்றவாளிகள் ஜெகதீஷ், அசோக் ஆகியோருக்கு, த லா நான்கு ஆயுள் தண்டனையும், தலா, 40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மற்றொரு குற்றவாளியான ராகேஷுக்கு, கூட்டுக்கொள்ளை, கொலை மற்றும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியது, ஆயுத சட்டம் போன்ற குற்றச்சாட்டின் கீழ், ஐந்து ஆயுள் தண்டனையும், 50,000 ரூ பாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயில்தர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டின் கீழும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, ஒன்றன் பின் ஒன்றாக, குற்றவாளிகள் மூவரும் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

எஸ்ஐஆர் - வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால்..? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 06-40: AM

சென்னை,

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால், அதற்கான காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதிக்கு பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்ற வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 68,470 பிஎல்ஓக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட 83,256 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் சார்பில் பிஎல்ஏக்கள் 2,45,340 பேர் நியமிக்கப்பட்டு, எஸ்ஐஆர் பணிக்கு உதவி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இவ்வளவு பிஎல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 33,000 தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர்.

இதுவரை 6.16 கோடி படிவங்கள் (96 சதவீதம்) வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீத படிவங்கள், பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன. அதில் 2.59 கோடி படிவங்கள் (40%) கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன.

327 பிஎல்ஓக்கள் தங்கள் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்துள்ளனர். சென்னையில் 96 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டு, 50 சதவீத படிவங்கள் திரும்ப பெற்று, 30 சதவீத வடிவங்கள் கணினியில் ஏற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

வாக்காளர்கள் தங்களால் முடிந்த விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். மீதம் உள்ளவற்றை பூர்த்தி செய்ய பிஎல்ஓக்கள், தன்னார்வலர்கள் உதவுவார்கள். பிஎல்ஓக்களுக்கு அதற்கான செயலிகள் வழங்கப்பட்டுள்ளன.

உரிய விவரங்கள் இல்லை என படிவத்தை கொடுக்காமல் இருந்து விடக்கூடாது. உரிய காரணமின்றி தகுதியான வாக்காளர்கள் ஒருவரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டால், அதற்கான சரியான காரணம், அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஒட்டப்படும். தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இறப்பு, வீடுகளில் இல்லாதவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியவர்கள், இரட்டை வாக்குரிமை வைத்திருப்பவர்கள், படிவத்தை பெற்றுச் செல்லாதவர்கள் அல்லது பூர்த்தி செய்து திருப்பி தராதவர்கள் ஆகிய 5 காரணங்களில் ஏதேனும் ஒரு காரணம் இருந்தால் மட்டுமே பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தெளிவான அறிவுறுத்தல்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4-ம் தேதி வரை மட்டுமே பூர்த்தி செய்த படிவங்களை பெற அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது.

ஒரே தொகுதிக்குள் இருந்தால் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். வேறு தொகுதியில் குடியேறி இருந்தால், அவர்கள் முகவரி மாற்றுவதற்காக படிவம் 8-ஐ தான் கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...