Wednesday, November 26, 2025

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழகத்தில் எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு?

 

பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 26, 2025, கார்த்திகை 10,  விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், இன்று ( நவம்பர் 26) இலங்கை அருகேயும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நிகோபார் தீவுகளில் இருந்து தென்கிழக்கே 870 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் – இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தெற்கு இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மாறுநாள் (நவம்பர் 27) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக  இன்றும் (நவம்பர் 26), நாளையும் (நவம்பர்27) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28-ம் தேதி கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் ஓரிரு இடங்களிலும், 29-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 30-ம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், டிச.1-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழகத்தில் இன்று (நவம்பர் 26) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 27-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

29-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

30-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கா்க்ராயில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கில் தலா 17 செமீ, காக்காச்சியில் 14 செமீ, மாஞ்சோலையில் 13 செமீ, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 8 செமீ, திருவாரூரில் 7 செமீ, கடலூர் மாவட்டம் புவனகிரி, புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலத்தில் தலா 6 செமீ, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். 27 முதல் 29-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...