Thursday, December 11, 2025

திமுகவில் இணைந்தது ஏன்? - பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி

 

பதிவு: புதன்கிழமை,  டிசம்பர் 11, 2025, கார்த்திகை 25,  விசுவாவசு வருடம் 02-00: PM

சென்னை,

நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என்று பி.டி.செல்வகுமார் கூறினார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பி.டி.செல்வக்குமார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

அதன்பின்னர் பி.டி.செல்வக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விஜய் மக்கள் இயக்கத்துக்கு தூணாக செயல்பட்டேன்; விஜயின் கட்சிக்கு புதிதாக வந்தவர்களால் எங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தவெகவில் விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு முக்கியத்துவம் இல்லை. திமுகவின் கட்டமைப்பு என்னை ஈர்த்ததால் அக்கட்சியில் சேர்ந்தேன்; நான் உருவாக்கிய கலப்பை மக்கள் இயக்கத்தை திமுகவில் இணைத்துவிட்டேன்.

நிலவு ஒருநாள் அமாவாசையாகும்... நட்சத்திரம் 15 நாட்களுக்குள் இல்லாமல் போகும்.. அதுபோல அவரும் ஒரு நாள்... எனக்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார். நிர்மல் குமார், ஆனந்த், ஆதவ் எல்லாம் எப்போது ரசிகர் மன்றத்தில் இருந்தார்கள்.

மக்களையும், ரசிகர்களையும் விஜய் சரியாக வழிநடத்த வேண்டும். மக்களுக்கு முறையாக விஜய் சேவை செய்வாரா என தெரியவில்லை. ஆனால் எனக்கு மக்கள் பணி செய்யவேண்டும். என் உயிர் உள்ளவரை மக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவில் இணைந்த கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் விவரம்:-

கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் தோப்பூர் வி.அனிதா, மாவட்ட பொருளாளர் விஸ்வை கே.சந்திரன், கலப்பை மக்கள் இயக்க கௌரவ ஆலோசகர் விஜயன், மாநில துணைத் தலைவர் நந்தகுமார், மாநிலச் செயலாளர் எம்.ராஜ்குமார், மாநில இளைஞர் அணிச் யெலாளர் ஜே.ரவிமுருகன், மாநிலப் பொறுப்பாளர் நாகர்கோவில் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணித் த்லைவர் ஜி.சுபின்ஆனந்த், மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் வி.செல்வன்.

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஏசுதாசன், ஒன்றியச் செயலாளர் டி.ஜெகன், மாவட்ட ஐடி விங் பொறுப்பாளர் ஜி.செந்தில், மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர் கௌதம், சமூக சேவகர் சொர்ணப்பன், திரைப்படத் தயாரிப்பாளர் - இயக்குநர் விஷ்ணுஹாசன், நடிகர் விஜயபாலாஜி, மகளிர் அணி பொறுப்பாளர் லெட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

DMK 100 times more powerful than Amit Shah DMK will remain in power with...

Wednesday, December 10, 2025

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: இந்திய அணி அபார வெற்றி

 

பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 10, 2025, கார்த்திகை 24,  விசுவாவசு வருடம் 06-00: AM

கட்டாக் ,

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும் (28 பந்துகள்), ஜிதேஷ் சர்மா 10 ரன்களுடனும் (5 பந்துகள்) களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், லுதோ சிபாம்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரது 2-வது ஓவரில் ஸ்டப்ஸ் 14 ரன்களில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரம் (14 ரன்) சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் போல்டானார். தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் கைப்பற்றி கடும் நெருக்கடி கொடுத்தனர். பின்னர் வந்த டேவிட் மில்லர் (1 ரன்), டோனோவன் பெரீரா (5 ரன்கள்), மார்கோ ஜான்சன் (12 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் 74 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அசத்தலாக பந்துவீசிய இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக், துபே மற்றும் அக்சர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Tuesday, December 9, 2025

“திமுகவை நம்பாதீர்கள் - அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்” - புதுச்சேரியில் விஜய் பேச்சு

 

 


பதிவு: செவ்வாய்க்கிழமை,  டிசம்பர் 09, 2025, கார்த்திகை 23,  விசுவாவசு வருடம் 01-00: PM 

 புதுச்சேரி,

விஜய் வருகை தந்த நிலையில் கூட்டம் இல்லாததால், பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பிரசார வாகனத்தில் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானதற்கு பிறகு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழகம் போல் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில், புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் வாகனத்தில் நின்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க. இந்த ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி மாநிலம், புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என்று இருப்பார்கள். நாம் வேறு வேறு கிடையாது. நாம் ஒன்றுதான். எல்லோரும் சொந்தம்தான். நாம் பார்க்கும்போது பாச உணர்வு, அதுமட்டும் இருந்தால் போதும். உலகில் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் நம் உயிர்தான். பாரதியார் இருந்த மண். பாரதிதாசன் பிறந்த மண்.

1977-ல் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சி அமைத்தார். 1974-ல் புதுச்சேரியில் அவரது ஆட்சி அமைந்தது. அவர்கள்தான் அலெட் செய்தனர். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க முடியுமா?.

புதுச்சேரி மக்கள் 30 ஆண்டுகளாக தாங்கி பிடிக்கிறீர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன்.

அது எனது கடமையும்கூட.

புதுச்சேரி அரசாங்கம் தமிழகத்தில் உள்ள திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியாக வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு நடந்து கொள்கிறது. புதுச்சேரி முதல்வருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள். வரப் போகின்ற தேர்தலில் அவர்கள் 100% கற்றுக் கொள்வார்கள். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

புதுவை அரசு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எந்த விஷயத்திலும் கண்டு கொள்ளவில்லை என்பது மக்களுக்கே தெரியும். மாநில அரசு கோரிக்கை மட்டுமா அவர்கள் கண்டு கொள்ளவில்லை? இங்கு வளர்ச்சி ஏற்பட அவர்கள் துணை நிற்கவில்லை என கேள்விப்படுகிறோம். புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பலமுறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள், பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அவர்கள் எதையுமே செய்யவில்லை. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது. இது குறித்து யார் பேசினாலும் அவர்களின் காதுகளில் விழவே இல்லை. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடாது. இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத இடம் புதுச்சேரிதான். ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்.

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டில் ஒரு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் 200 நாட்களாகியும் இன்னும் அந்த பதவிக்கு யாரும் அமர்த்தப்படவில்லை. இந்த செயல் சிறுபான்மை மக்களை அவமதிப்பதாக அம்மக்களே சொல்கிறார்கள்.

புதுச்சேரியின் முக்கிய அங்கமாக உள்ள காரைக்கால், ஏனாம் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என அப்பகுதி மக்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். காரைக்கால் பகுதிகள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி கிடையாது. இவை அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி-கடலூர் மார்க்கத்தில் ரயில் திட்டத்தை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால் புதுச்சேரி, மத்திய நிதி குழுவில் இடம் பெறவில்லை, அதனால் மாநிலங்களுக்கான நிதி பகிர்கள் அடிப்படையிலும், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி பகிர்வு அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு தோராயமாக மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. இந்த நிதியும் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய தொகை உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்கே சென்று விடுகிறது.

மற்ற தேவைகளுக்கு வெளி சந்தையில் கடன் பத்திரங்களை கடன் வாங்குகிறது புதுச்சேரி. இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும். புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாத காரணத்தினால் வெளியே கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. புதுச்சேரியின் கடனை குறைத்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது, தொழில் வளர்ச்சியும் தேவை. புதுச்சேரியை தென்னிந்தியாவின் முன்னணி இண்டஸ்ட்ரியல் ஹப்பாக மாற்ற எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

மீன் பிடிக்க செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்கிறது. அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது.

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் குரல் கொடுப்பான். வரவிருக்கும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்... வெற்றி நிச்சயம் ”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Monday, December 8, 2025

புதுச்சேரியில் விஜய் – மக்கள் சந்திப்பு - 5000 பேருக்கு மட்டுமே அனுமதி

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 06-10: PM

சென்னை,

பிளக்ஸ் பேனர், அலங்கார வளைவுகள் வைக்கக்கூடாது - புதுச்சேரியில் விஜய் – மக்கள் சந்திப்பு - 5000 பேருக்கு மட்டுமே அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் புஸ்சி ஆனந்த்

புதுச்சேரியில் நாளை (9–ந் தேதி) நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என கட்சித் தொண்டர்களைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. ‘தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைதி இல்லை, ஃபிக்ஸ் பேனர், அலங்கார வளைவுகள் வைக்க கூடாது என்று கண்டிப்புடன் தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளது.

தலைவரின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்து கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நாளை (9–ந்தேதி செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ‘புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி' நடைபெற உள்ளது. காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நம் வெற்றித் தலைவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவரின் இந்தப் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கட்சித் தலைவரின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

கர்ப்பிணிகள், முதியவர்கள்: கண்டிப்பாய் அனுமதி இல்லை

கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் தலைவரின் வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை.

வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள பாண்டி மெரினா பார்க்கிங், பழைய துறைமுகம் மற்றும் இந்திராகாந்தி ஸ்டேடியம் பின்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

கண்ணியத்துடன் நடக்க...

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

எளிதில் அடையாளம் காணும் வகையில் கட்சி நிர்வாகிகள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை, இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

காம்பவுண்ட் சுவர்களில் ஏறக்கூடாது

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக ‘வந்தே மாதரம்’ ஊக்குவிக்கும் - மக்களவையில் 10 மணிநேர சிறப்பு விவாதத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 04-10: PM

புதுடெல்லி,

‘‘வரும் 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் ஊக்குவிக்கும்’’ என்று மக்களவையில் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

‘‘வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் பெருமிதத்தோடு கூறினார்.

இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை தூண்டும் விதத்தில் வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை இயற்றினார். 1870களில் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு ஜாது நாத் பட்டாச்சார்யா இசை அமைத்தார். இது 1905ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக ஆனதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி தேசிய பாடலாக இது அங்கீகரிக்கப்பட்டது. இந்த பாடலின் 150-வது ஆண்டு விழா கடந்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, வந்தே மாதரம் பற்றிய சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு பேசினார்.

இந்த நிலையில் வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் வந்தே மாதரம் குறித்து இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் 10 மணி நேர சிறப்பு விவாதத்தை இன்று பகல் 12 மணிக்கு பிரதமர் மோடி தொடக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

‘‘வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பது அனைவருக்கும் பெருமை. 150 ஆண்டுகளுக்கு முன்பு வந்தே மாதரம் என்று கூறியவர்களை சிறையில் அடைத்தனர். வருங்கால சந்ததிகளுக்கும் வந்தே மாதரம் வழிகாட்டியாக அமைந்துள்ளது.சர்தார் வல்லபாய் படேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது ஆண்டு விழாவையும் நாம் கொண்டாடுகிறோம். வந்தே மாதம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இன்று விவாதம் நடைபெறுகிறது. தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாகத் திகழ்ந்தது வந்தே மாதரம்.

ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் இல்லை...

2047ம் ஆண்டில், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் நம்மை ஊக்குவக்கும். வந்தே மாதரம் வெறும் அரசியல் முழக்கம் மட்டுமல்ல, அது தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக உயிரையும் துச்சமாக மதித்து தூய்மையாகப் போராடியவர்களின் உணர்வு.

இங்கு ஆளுங்கட்சிகளோ எதிர்க்கட்சிகளோ என்று இல்லை. வந்தே மாதரத்தின் பெருமையை கூட்டாகப் பாராட்டவும் ஏற்றுக்கொள்ளவும்தான் நாம் இங்கு இருக்கிறோம். இந்தப் பாடலால்தான் நாம் அனைவரும் இங்கே ஒன்றாக இருக்கிறோம்.

சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம்...

வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்டத்திற்கான முழக்கம் அல்ல. சுதந்திர தாய்க்கான பாடல். அனைத்து இந்தியர்களின் நம்பிக்கை.

வந்தே மாதரம் பல கட்டங்களை கடந்து வந்துள்ளது. வந்தே மாதரத்தை பிரிட்டன் மகாராணி வாழ்க என்று பாட வைக்க ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பலம் வாய்ந்த பிரிட்டனை எதிர்க்க 1875ம் ஆண்டு பங்கிம் சாட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை கொடுத்தார்.

வந்தே மாதம் சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தது. வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது, நாடு அடிமைச்சங்கிலியில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வந்தே மாதரத்தின் பெருமையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள இது ஒரு புனிதமான சந்தர்ப்பம். இந்த பாடல்தான், வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் நாட்டை ஒன்றிணைத்தது. மீண்டும் ஒன்றிணைந்து அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டிய நேரம் மீண்டும் வந்துவிட்டது. இந்தப் பாடல் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற நம்மை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் வேண்டும்.

2047க்குள் நமது நாட்டை தன்னிறைவு பெற்ற, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

ராஜ்ய சபாவில் நாளை அமித்ஷா துவக்குகிறார்

மாநிலங்களவையில் நாளை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ‘வந்தே மாதரம்’ விவாதத்தை தொடங்கி வைக்கிறார்.

100 ஆண்டு நிறைவின்போது அவசரநிலை

வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ​​நாடு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது, அதே நேரத்தில் அதன் 100 வது ஆண்டு விழாவின்போதோ, நாடு அவசரநிலையின் கீழ் சிக்கியிருந்தது. அந்த நேரத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. நாட்டின் விடுதலைக்காக வாழ்ந்தவர்களும் உயிரை இழந்தவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். நமது நாட்டின் வரலாற்றில், அவசரநிலை என்பது ஒரு இருண்டப் பக்கம். ஆனால் இன்றோ வந்தே மாதரத்தின் புகழை பறைசாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நடிகை பாலியல் பலாத்கார வழக்கு - மலையாள நடிகர் திலீப் விடுதலை

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 08, 2025, கார்த்திகை 22,  விசுவாவசு வருடம் 03-40: PM

திருவனந்தபுரம்,

ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்த கேரள நடிகை பலாத்கார வழக்கில் முன்னணி நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உள்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் சுனில் என்ற நபர் நடிகையைப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்டது.

மேலும், இதை வீடியோவாக எடுத்து பிளாக்மெயில் செய்யவும் பல்சர் சுனில் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. காரில் கடத்தப்பட்ட அந்த நடிகை, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டார். அன்றைய தினமே அந்த நடிகை போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். இந்த சம்பவம் மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்தது.

நடிகர் திலீப் கைது

அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்தது. வழக்கில் திடீர் திருப்பமாக அந்த நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனில் தானாகவே முன்வந்து சரணடைந்து முக்கியக் குற்றவாளியானார். செல்போன் பதிவுகள் அடிப்படையில் நடந்த விசாரணையில் மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் அவர் 8வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

1600 ஆவணங்கள், 280 சாட்சிகள்

இந்த வழக்கு தொடர்பாக 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், ஜாமீனில் வெளியே வந்தார். எனினும், சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நீதிபதி ஹனி வர்கீஸ்-ஐ வழக்கின் தனி நீதிபதியாக நியமித்து கேரள அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கைதான விஷ்ணு உள்ளிட்ட இருவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறி வாக்குமூலம் அளித்தனர்.

வழக்கின் விசாரணை 2018ம் ஆண்டு தொடங்கிய நிலையில், அதன் பிறகு கொரோனா காரணமாக இரு ஆண்டுகள் வழக்கு விசாரணை முடங்கியது. அதன் பிறகும் கூட பல்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை தாமதமாகிக் கொண்டே வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை 1600 ஆவணங்கள், 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம் வர்கீஸ், நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில் நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

8 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திலீப் உள்ளிட்ட 10 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் இறுதி தீர்ப்பை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹனி வர்கீஸ் இன்று வெளியிட்டார். இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், குற்றம் நிரூபிக்கப்படாததாலும் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திலீப்பின் நண்பர் சரத் மீதும் போதிய ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டார். ஏ1 முதல் ஏ 6 வரையிலான குற்றவாளிகளான சுனில் மற்றும் மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீ, பிரதீப் ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 12-ந்தேதி அறிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் கோர்ட் அளித்த தீர்ப்பையடுத்து, நடிகர் திலீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கை வைத்து எனது தொழில் வாழ்க்கையை அழிக்க சதி நடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி என்று கூறினார்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...