Saturday, January 24, 2026

‘‘தமிழக இளைஞர்களை போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைத்து விட்டது திமுக அரசு’’ - பிரதமர் மோடி

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 24, 2026, தை 10, விசுவாவசு வருடம் 05:00 AM

மதுராந்தகம்,

‘‘தமிழக இளைஞர்களை போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது திமுக அரசு. தங்கள் கண் முன்னால் தங்கள் குழந்தைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து தாய், தந்தையரெல்லாம் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். போதைப் பொருள் அபாயத்தில் இருந்து நமது இளைஞர்களை நாம் மீட்டே ஆக வேண்டும்’’ என்று பிரதமர் மோடி பேசினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘2026-ம் ஆண்டிலே தமிழ்நாட்டுக்கு எனது முதல் பயணம் இது. தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு சிறப்பானதொரு ஆனந்தம் நிறைந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் தமிழகத்தின் வளர்ச்சி நாயகர் எம்ஜிஆரின் பிறந்த நாளை நாம் கொண்டாடினோம். இந்த மேடையில் இருந்து மதுராந்தகத்தின் ஏரி காத்த ராமரை நான் வணங்குகிறேன். அனைவரின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் நான் வேண்டிக் கொள்கிறேன்.

இன்று நேதாஜியின் பிறந்த நாள். தேசம், இந்த நாளை பராக்கிரம திருநாள் என கொண்டாடி வருகிறது. தமிழகத்தின் பராக்கிரமம் நிறைந்த தலைவர்கள் பலர், நேதாஜியோடு தோள் சேர்ந்து சுதந்திரப் போரில் பங்கெடுத்தார்கள். வீரம் மற்றும் நாட்டுப் பற்று தமிழக மக்களின் நாடி நரம்புகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த புனித மண்ணில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு என் நினைவஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

மக்கள் அலைகடனெ இங்கே திரண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தேசத்துக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கிறது. அது, தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என்பதுதான். திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தமிழ்நாடு இப்போது பாஜக - என்டிஏ அரசை விரும்புகிறது.

இந்த மேடையைப் பாருங்கள். என்டிஏ குடும்பத்தின் நமது மூத்த தலைவர்கள், தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க குழுமியிருக்கிறார்கள். இந்த நண்பர்கள் அனைவரும ஒரே முடிவோடு, ஒரே உறுதிப்பாட்டோடு இங்கே இணைந்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே அந்த உறுதிப்பாடு.

நாம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக அரசின் முடிவுக் காலம் (கவுன்டவுன்) தொடங்கிவிட்டது. இதை என்னால், தெளிவாகக் காண முடிகிறது.

ஆட்சி செய்ய நீங்கள் திமுகவுக்கு இரண்டு முறை வாய்ப்பளித்தீர்கள். ஆனால், அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது திமுக. ஆனால், ஆற்றியது என்னமோ பூஜ்ஜியம்தான்.

திமுக அரசை மக்கள் CMC அரசு என அழைக்கிறார்கள். சிஎம்சி என்றால், corruption (ஊழல்), mafia (மாபியா), Crime (க்ரைம்) ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாங்கம். தமிழக மக்கள் திமுக மற்றும் சிஎம்சி இரண்டையும் வேரோடு அகற்ற முடிவெத்துவிட்டார்கள். இங்கு பாஜக - என்டிஏ-வின் இரட்டை எஞ்சின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது.

தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட அரசு இருக்கிறது என்றால், இங்கு ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை. திமுக அரசாங்கம் ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்குகிறது. நீங்கள் திமுகவில் முன்னேற வேண்டும் என்றால், அந்த குடும்பத்துக்கு ஆமாம் சாமி போட்டாக வேண்டும். இங்கு 3-4 பாதைகள் மட்டுமே இருக்கின்றன. வம்சாவளி, ஊழல், பெண்களை வசைபாடுவது, நமது கலாச்சாரத்தை வசைபாடுவது ஆகியவையே அவை.

இந்த காரணத்தால்தான் திமுகவில் இருப்பவர்களால் கட்சியில் முன்னேற முடிகிறது. இதன் பாதிப்பை தமிழ்நாடு சுமக்க வேண்டி இருக்கிறது. இங்கே ஊழல் எவ்வாறு மலிந்திருக்கிறது, அந்த ஊழல் பணம் யாருடைய பைகளுக்குச் செல்கிறது என்பதை சிறு குழந்தைகூட நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது.

தமிழ்நாடு எப்படிப்பட்ட பூமி என்றால், இதுதான் பாரதத்தின் பண்பாட்டை வளம் நிறைந்ததாக ஆக்கியது. சங்க கால இலக்கியங்கள், விஞ்ஞானம், ஆலயங்கள், தொழில்நுட்பம், பாரத நாட்டின் கவுரவத்தை உயர்த்தின.

வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டை திமுகவின் கொடூர கரங்களில் இருந்து நாம் விடுவித்தாக வேண்டும். எந்த அளவுக்கு தமிழ்நாடு வேகமாக முன்னேறுகிறதோ, அந்த அளவு தேசமும் முன்னேற்றம் அடையும்.

கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள என்டிஏ அரசாங்கம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை ஆற்றி இருக்கிறது. 2014-க்கு முன்பு, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது அப்போது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப் பகிர்வு வாயிலாக மட்டும் என்டிஏ அரசு கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்கிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தோடு ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

இதுமட்டுமல்ல, கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக மத்திய அரசு 11 லட்சம கோடி ரூபாய் உதவிகளை அளித்திருக்கிறது. ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டாட்சியின்போது ஏழைகள், பட்டியல் சமூக மக்கள், பழங்குடி மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நலன்கள் வழங்குகிறோம் என்ற பெயரில் மோசடி மட்டும்தான் அரங்கேறின.

திமுக - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில் பட்ஜெட்டுக்கு அளித்த நிதியைவிட என்டிஏ அரசு ஏழு மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டுக்கு அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் 80 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் போன்ற நவீனமான, விரைவாகச் செல்லக்கூடிய, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயில்களை என்டிஏ அரசுதான் அளித்திருக்கிறது.

தமிழநாட்டின் மிகப் பெரிய பலம், நமது விவசாயிகள், நமது மீனவர்கள்தான். என்டிஏ அரசின் கொள்கைகள் காரணமாக தேசத்தின் விவசாயம் மற்றும் மீன்வளத் துறையில் சாதனைப் படைக்கும் உற்பத்தி எட்டப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு ஒவ்வொரு நிலையிலும் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் ஆதரவாக இருந்து வருவதுதான் இதற்குக் காரணம்.

முன்பு குறைவான விவசாயிகளிடம் மட்டுமே வங்கிக் கணக்குகள் இருந்தன. என்டிஏ அரசாங்கம் வங்கிக் கணக்குகளை திறந்து கொடுத்தது. அதோடு, விவசாயிகளுக்கான பிரதமரின் கவுரவக் கொடை திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.

என்டிஏ அரசாங்கம் பிரதமரின் மீன் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் மீனவர்களுக்கு 50 ஆயிரம் கடன் அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது.

வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆனால், இங்கே இருப்பதோ திமுக அரசு. இவர்கள் நமது இளைஞர்களை போதைப் பொருள் குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

தாய், தந்தையெரல்லாம் தங்கள் கண்களுக்கு முன்பாக, தங்கள் குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு நாசமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் நமது இளைஞர்களை போதைப் பொருள் அபாயத்தில் இருந்து மீட்டே ஆக வேண்டும். என்டிஏவுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், தமிழ்நாட்டை போதைப் பொருட்களில் இருந்து மீட்டெடுக்க உதவும் வாக்காக இருக்கும்.

திமுக அரசாங்கத்தில் போதைப் பொருள் பெருங்குற்றவாளிகளும் மதுபான பெருங்குற்றவாளிகளும் செழிப்பாக இருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியோ மக்களின் உடல் நலத்தில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது’’ என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Friday, January 23, 2026

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


 பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 23, 2026, தை 09, விசுவாவசு வருடம் 08:00 AM

நெல்லை,

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் வரும் 1-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதியில் உள்ள பிள்ளையார் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.




அதைத்தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெறுகிறது.

வரும் 26-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு சுவாமி சன்னதியில் ‘நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், பின்னர் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது. 

இதனைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், அதை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

2-ந்தேதி காலை 10 மணிக்கு கீழரதவீதி சவுந்தர சபை மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சியும், பின்னர் சந்தி விநாயகர் கோவில் அருகே திருக்காட்சி வைபவமும் நடைபெறுகிறது. 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சொக்கப்பனை முக்கு அருகே உள்ள சந்திர புஷ்கரணி எனப்படும் வெளி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை - தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்...!

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 23, 2026, தை 09, விசுவாவசு வருடம் 05:40 AM

சென்னை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன

அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். அவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். கேரளாவில் இருந்து மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார்.

பின்னர், பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். மாலை 3.10 மணிக்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி உரையை நிறைவு செய்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Thursday, January 22, 2026

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவிப்பாரா? சட்டசபை தேர்தலில் கூட்டணியா?.. தனித்து போட்டியா?..

பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 22, 2026, தை 08, விசுவாவசு வருடம் 09:30 AM

சென்னை,

மாமல்லபுரத்தில் வருகிற 25-ந்தேதி நடக்கும் த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளும் கட்சிக்கு முன்னரே முந்தி கொண்ட பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரசார தேரை ஓட்ட தொடங்கி விட்டார்.

அதே சமயத்தில், மகளிருக்காக செயல்படுத்திய திட்டங்கள் உள்பட தாங்கள் கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால், ஆளும் கட்சியான தி.மு.க. நிச்சயம் வருகிற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. இருந்தாலும், ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

அதேசமயம் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க.வும் தீவிரமாக இறங்கியுள்ளது. நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கிறது. நடிகர் விஜய் நடத்தி வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆளுங்கட்சியான தி.மு.க.வும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யோ, சாத்தியமான திட்டங்களை மட்டுமே மக்களுக்காக நிறைவேற்றுவோம் என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரசார குழு கூட்டங்கள் நடந்தன. அதேநேரத்தில், கடந்த டிசம்பர் 18-ந்தேதி ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்புக்கு பிறகு விஜய் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.

ஜனநாயகன் பட விவகாரம், சி.பி.ஐ. விசாரணை என்று தன்னை சுற்றிய விஷயங்களில் விஜய் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இந்தநிலையில், வருகிற 25-ந்தேதி விஜய் நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார். 25-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, த.வெ.க. தேர்தல் பிரசார ஆலோசனை குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்.

இந்த கூட்டத்தில், தேர்தல் பிரசார வியூகம், பிரசார மேற்கொள்ள வேண்டிய இடங்கள், மக்கள் சந்திப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி பிரசார பயண திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “த.வெ.க. சார்பில் வருகிற 26-ந்தேதி சென்னையில் இருந்து எங்கள் பிரசார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளுடன் பணிகளை மேற்கொள்வோம். ஒவ்வொரு இடத்திலும் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்க இருக்கிறோம். கூட்டணியா?.. தனித்து போட்டியா? என்பது குறித்து விஜய் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.


 

Wednesday, January 21, 2026

T.T.V. Dhinakaran’s AMMK returns to NDA in Tamil Nadu ahead of Assembly ...

Tuesday, January 20, 2026

கவர்னர் ஆர்.என்.ரவி 4-வது ஆண்டாக தமிழக சட்டசபை உரையை புறக்கணித்து வெளியேறினார்

பதிவு: திங்கட்கிழமை,  ஜனவரி 19, 2026, தை 04, விசுவாவசு வருடம் 11:00 AM

சென்னை,

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து சென்றனர்.

சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு சென்றார். அங்கு நின்றபடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள், அனைத்து உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அவருக்கு வலதுபுறம் போடப்பட்டிருந்த இருக்கையில் சபாநாயகர் மு.அப்பாவுவும், இடது புறம் போடப்பட்டிருந்த இருக்கையில் கவர்னரின் செயலாளர் ஆர்.கிர்லோஷ் குமாரும் அமர்ந்தனர்.

சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்கினார். பொதுவாக, கவர்னர் உரை நேரலையாக வழங்கப்படும். ஆனால், இன்று நேரலை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், சட்டசபையில் பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து, 4-வது ஆண்டாக அவர் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி, 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2022-ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார். அதன் பிறகு, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை.

2023-ம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், கவர்னர் பாதியிலேயே வெளியேறினார்.

2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

கடந்த ஆண்டு (2025) ஜனவரி 6-ந் தேதி கூடிய தமிழக சட்டசபை முதல் கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இந்த நிலையில், இந்த ஆண்டும் அவர் உரையை புறக்கணித்து வெளியேறி இருக்கிறார்.

Monday, January 19, 2026

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது - கவர்னர் உரை நிகழ்த்துவாரா?


 பதிவு: திங்கட்கிழமை,  ஜனவரி 19, 2026, தை 04, விசுவாவசு வருடம் 06:30 PM

சென்னை,

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை நாளை கூடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. இதில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.

கவர்னர் உரை

அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து செல்கிறார். சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு செல்வார். அவருடைய வலதுபுறம் சபாநாயகரும், இடது புறம் கவர்னரின் செயலாளரும் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டு இருக்கும். 

சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்குவார். அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும்.

முறையாக நிகழ்த்துவாரா?


கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடையும். தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். அனேகமாக, வரும் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. 

அதே நேரத்தில், நாளைய கூட்டத்தில் கவர்னர் தனது உரையை முறையாக நிகழ்த்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

உறவில் விரிசல்

அவர் 2022-ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார். அதன் பிறகு, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை. 

2023-ம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், கவர்னர் பாதியிலேயே வெளியேறினார்.

கேள்விக்குறி

2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

கடந்த ஆண்டு (2025) ஜனவரி 6-ந் தேதி கூடிய தமிழக சட்டசபை முதல் கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 

இப்படி கவர்னர் உரையை தொடர்ந்து புறக்கணித்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி, நாளைய சட்டசபை கூட்டத்தில் முறையாக வாசிப்பாரா? என்பது கேள்விக்குறிதான்.

Featured post

சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ் - எதிர் வாரம் முழு விவரம் வரும் இதழில்

எதிர் வாரம்  முழு விவரம் வரும் இதழில்  பதிவு: செவ்வாய்கிழமை,  பிப்ரவரி 17, 2026, மாசி 05, விசுவாவசு வருடம் 05:40 PM    சென்னை,