பதிவு: செவ்வாய்க்கிழமை, நவம்பர் 04, 2025, ஐப்பசி 18, விசுவாவசு வருடம் 06-00: AM
கோவை,
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு வந்த 3 பேர் காரில் காதலர்கள் இருப்பதை அறிந்தனர். காரின் கதவை தட்டி திறக்குமாறு கூறி மிரட்டினர். இதனால் காரில் இருந்த காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பயத்தில் அவர்கள் கதவை திறக்கவில்லை.இதையடுத்து அந்த 3 பேரும் அரிவாளால் காரின் கண்ணாடியை உடைத்து, காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை வெளியே இழுத்தனர்.. அவரை விடாமல் காதலன் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் காதலனின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.
பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.இதையடுத்து, தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.
குணா தவசி , சதீஸ் , கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்னர் .
