Saturday, March 7, 2026
தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் ஸ்டாலின் உறுதி
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 07, 2026, மாசி 23, விசுவாவசு வருடம் 05:30 AM
சென்னை,
தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் - சென்னையில் நேற்று நடைபெற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் 2030-ம் ஆண்டை இலக்காக கொண்டு பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தொழில் துறையில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட் வகுப்பறை’, விவசாய சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு என்பது உட்பட பல்வேறு திட்டங்கள் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
தமிழக அரசின் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக ‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அரசின் திட்டங்களால் பயனடையாத குடும்பங்களே தமிழகத்தில் இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு தரப்புக்கும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம்.
அரசியல் ரீதியாக எழுந்த சில நெருக்கடிகளை சமாளித்துதான் பல திட்டங்களை செயல்படுத்தினோம். இந்த ஆட்சியின் சாதனைகளை நம்பி உறுதியாக கூறுகிறேன். அடுத்தும் திமுக ஆட்சிதான். நமது சாதனைகளின் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என ஒரு ‘ப்ளூ பிரின்ட்’ தயாரிக்க திட்டமிட்டோம். அதற்காக, தமிழகத்தின் 1.80 கோடி குடும்பங்களிடம் நேரடியாகசென்று, அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தோம். அதில் முன்னுரிமை அடிப்படையில் ‘தமிழ்நாடு 2030’ எனும் 14 முக்கிய அம்சங்களை அறிவிக்கிறேன்.
2030-ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் 5 லட்சம் வீடுகள், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
‘நலமுடன் தமிழ்நாடு 2030’ திட்டத்தில் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்க வழிசெய்யப்படும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோயைக் கண்டறிய சிறப்பு முகாம்கள், மாவட்டம்தோறும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
விவசாய சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும். 43 லட்சம் உழவர்களுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு, இயற்கை விவசாயம் 17 ஆயிரம் ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மை ஒரு லட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும். நுண்ணீர்ப் பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்பட்டு, மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் 1,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். உணவு உற்பத்தி 1.25 கோடி டன்னாக உயர்த்தப்படும். 1.25 லட்சம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும்.
அனைத்து அரசு, அரசு உதவிப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ அமைக்கப்படும். ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ மூலம் 1,000 மாதிரிப் பள்ளிகள் விரிவுபடுத்தப்படும்.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 90 சதவீதத்தை எட்டும் வகையில் கட்டமைப்பு விரிவாக்கப்படும். ‘நான் முதல்வன் 2.0’ மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும். ஆராய்ச்சியை அதிகரிக்க தொழிற்கல்வி சிறப்பு மையங்கள் நிறுவப்படும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஏஐ ஆய்வகம் உருவாக்கப்படும்.
ஜவுளி, தோல் ஆடை, கைவினை, கணினி தொழிற்பயிற்சி உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
வீட்டு மனையற்ற ஆதிதிராவிட, பழங்குடியின குடும்பத்துக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
கிராம சந்தைகள், விளையாட்டு, நல்வாழ்வு கட்டமைப்புகள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்ட உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் அமல்படுத்தப்படும். முதல்கட்டமாக 10 ஊராட்சிகளில் இப்போதே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
தொழில் துறையில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்வு ஆகியவை எங்கள் இலக்கு. இதற்காக மாவட்டம்தோறும் நவீன தொழிற்பூங்கா அமைக்கப்படும். ஐடி ஏற்றுமதி ரூ.6 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு, அத்துறையில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளித் தொழில் நவீனமயமாக்கப்பட்டு, திருப்பூர், கரூரில் 35 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும்.
உள்நாட்டு மீன் உற்பத்தி 4.50 லட்சம் டன், பால் உற்பத்தி 4.50 கோடி லிட்டர், கால்நடை எண்ணிக்கை 3 கோடியாக உயர்த்தப்படும். ஒரு லட்சம் ஏக்கரில் தீவனப் பயிர் சாகுபடி செய்யப்படும்.
நகர்ப் பகுதிகளில் 20 சதவீத பசுமைப் பகுதிகள், பூங்காக்கள் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீரை முழுமையாக சேகரித்து, சுத்திகரித்து 30 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும்.
வெளிநாட்டு வர்த்தக கண்காட்சிகளில், நமது சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க வழிசெய்யப்படும்.
நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் பாலங்கள், சாலைகளின் ஆயுள்காலம் நீட்டிக்கப்பட்டு, விபத்துகள் குறைக்கப்படும்.
நெசவுத் தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து, உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற வேண்டும்.
நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் எனது மாபெரும் கனவு. நான் அறிவித்த திட்டங்கள் செயல்வடிவம் பெற மாவட்ட வாரியாக தனித்தனி செயல் திட்டங்கள் வகுக்கப்படும். இதையெல்லாம் நனவாக்கி, 2030-ல் தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
‘திராவிட மாடல் 2.0’-க்கு அடிக்கல்: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: மார்ச் 6 - அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள். 1967-ல் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழகத்தின் எழுச்சிக்கும், தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய நாள்.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான ‘ஸ்டாலின் ஸ்டேட்மென்ட்’- ஐ இந்த நாளில் அறிவிக்கிறேன். திராவிட ஆட்சி இந்த மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே ‘திராவிட மாடல் 2.0’-க்கு அடிக்கல் நாட்டுகிறேன்.. உங்கள் அனைவரின் ஆதரவோடும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் ஸ்டாலின் உறுதி
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 07, 2026, மாசி 23, விசுவாவசு வருடம் 05:30 AM சென்னை, தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் - செ...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...
