Wednesday, December 3, 2025

சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை - தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு - அன்புமணி ராமதாஸ் தாக்கு

 

பதிவு: புதன்கிழமை,  டிசம்பர் 03, 2025, கார்த்திகை 17,  விசுவாவசு வருடம் 11-30: AM

சென்னை,

தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“நவீன இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தில் 65 சதவீதம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

5 ஜனாதிபதிகளை இந்தியாவுக்கு வழங்கிய சென்னை பல்கலைக்கழகத்தில் இப்போது பாடம் நடத்துவதற்கு கூட ஆளில்லாத நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அருண்குமார் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெற்றுள்ள தரவுகளை சுட்டிக்காட்டி ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 515 ஆசிரியர் பணியிடங்களில் 180, அதாவது 35% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன; மீதமுள்ள 335, அதாவது 65% பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

94 பேராசிரியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 63 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களிலும் கணிசமானவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளனர். 127 இணைப் பேராசிரியர்களில் வெறும் 20 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 85% பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், 294 உதவி பேராசிரியர் பணியிடங்களில் 197 இடங்கள், அதாவது 67% பணியிடங்கள் இன்றைய நிலையில் காலியாக கிடக்கின்றன.

துறைவாரியாகப் பார்த்தால் சென்னை பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 71 துறைகளில் 16 துறைகளில் தலா ஒரே ஒரு ஆசிரியரும், 22 துறைகளில் தலா இரு ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர். எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதன் நிர்வாகப் பணிகளை கவனிக்க ஓர் ஆசிரியர் தேவை. அதன்படி பார்த்தால் 16 துறைகளில் பாடம் நடத்த ஆசிரியர்களே இருக்க மாட்டார்கள்; 22 துறைகளில் தலா ஒரே ஒரு ஆசிரியர் தான் இருப்பார்.

இவ்வளவு குறைவான ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாது. அதனால், ஒரு நாளைக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் 6 முதல் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலை மாறி, தினமும் 3 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அதற்கும் கூட போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், தினமும் குறைந்தது ஒன்று அல்லது இரு பாடவேளைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1857 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதன்பின் 168 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் வகுப்புகள் ரத்து செய்யப்படும் நிலை சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டதில்லை. ரூ.30,000 ஊதியத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களாக தான் தினமும் ஓரிரு வகுப்புகளாவது நடைபெறுகின்றன.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், அப்துல்கலாம், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவரெட்டி ஆகிய 5 ஜனாதிபதிகள், நோபல் பரிசு வென்ற சர். சி.வி ராமன், கணிதமேதை ராமானுஜன் உள்ளிட்டோரை உருவாக்கிய சென்னைப் பல்கலை. பாடம் நடத்துவதற்குக் கூட ஆளில்லாமல் முடங்கிப் போகும் என்று அதை உருவாக்கியவர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அவல நிலைக்குக் காரணம் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக துணை வேந்தர்கள் நியமிக்கப்படாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்கும் அளவுக்கு பல்கலைக்கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாததும்தான். சென்னை பல்கலைக்கழகத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் கூறப்படும் காரணம், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்தில் நிதி இல்லை என்பதுதான். இந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும் அதுதான் உண்மை ஆகும்.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கவும் மாணவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த நிதி பல்கலைக்கழகத்தின் பிற செலவுகளுக்கு திருப்பி விடப்படுவதால், மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களையும், தற்காலிகப் பட்டச் சான்றுகளையும் அச்சடிப்பதற்கு கூட நிதி இல்லை. அதனால் நடப்பாண்டில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

இன்னொருபுறம், பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்களை வழங்க நிதி இல்லை. இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்ததையடுத்து, பல்கலைக்கழகத்தின் இரு கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.45.6 கோடி வைப்புத்தொகையை திரும்பப் பெற்றும், அரசிடமிருந்து ரூ.50 கோடியை பெற்றும், 465 ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.95.44 கோடி நிலுவைத் தொகையில் முதல் கட்டமாக ரூ.57.12 கோடியை நிர்வாகம் வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.38.31 கோடியை வழங்க மற்ற வைப்புத் தொகைகள் முதிர்ச்சியடையும் காலத்திற்காக பல்கலைக்கழக நிர்வாகம் காத்திருக்கிறது. இத்தகைய சூழலில் புதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்று கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு உபரி நிதி இருந்து வந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தின் வருவாய் குறைந்து, செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், ஊதியம் வழங்குவதற்கே வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த உபரி நிதிதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போதே ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்திடம் நிதி இல்லாத நிலையில், வைப்பு நிதிகளும் வேகமாக குறைந்து வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட எந்த பல்கலைக்கழகத்தையும் நடத்த முடியாத நிலை உருவாகி விடும்.

கடந்த பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததுதான். பல்கலைக்கழகங்களை மீட்டெடுக்கப்போவதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த தி.மு.க.வின் ஆட்சியில்தான் பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடியும், சீரழிவுகளும் அதிகரித்தன. அந்த வகையில் தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களை சீரழித்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிற பல்கலைக்கழகங்களின் நிதி நிலையை சீரமைக்க சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். அதை செய்யத் தவறினால் வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஷிய அதிபர் புதின் நாளை இந்தியா வருகை - டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு - ரஷ்யா - இந்தியா இணைந்து எஸ் 500 ஏவுகணை தயாரிக்க திட்டம்

 

பதிவு: புதன்கிழமை,  டிசம்பர் 03, 2025, கார்த்திகை 17,  விசுவாவசு வருடம் 04-30: AM

புதுடெல்லி,

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக நீண்ட காலமாக உள்ளது. உலகின் உச்ச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா வந்தார்.

இதனிடையே உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக, புதின் மீது சர்வதேச கோர்ட்டு பிடிவாராண்டு பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்தது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள கடந்த ஆகஸ்டு மாதம் புதின், அலாஸ்கா சென்றார்.

இந்தநிலையில் டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா-ரஷியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷியா அதிபர் புதின், நாளை (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார். 2 நாள் பயணமாக டெல்லி வரும் புதின், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின்னர் பாரம்பரிய விருந்தில் கலந்து கொள்கிறார்.

ரஷிய-இந்திய மாநாட்டின்போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வணிகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த முக்கிய ஆலோசனைகளும் நடைபெற உள்ளன. புதினின் வருகையையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவரது பயணத்​தின் போது ரஷ்​யா​வும் இந்​தி​யா​வும் இணைந்து அதிநவீன எஸ் 500 ஏவு​கணை​களை தயாரிப்​பது குறித்து முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தப்பட உள்​ளது.

இந்​திய - ரஷ்ய 23-வது வரு​டாந்​திர உச்சி மாநாடு டிசம்​பர் 4, 5-ம் தேதி​களில் டெல்​லி​யில் நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை டெல்​லிக்கு வரு​கிறார். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் புதினும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளனர். குறிப்​பாக பாது​காப்​பு, எரிசக்​தி, வர்த்​தகம், விண்​வெளி, அணுசக்​தி, தொழில்​நுட்​பம் குறித்து தலை​வர்​கள் இரு​வரும் விரி​வான ஆலோ​சனை நடத்த உள்​ளனர்.

ரஷ்​யா​விடம் இருந்து 5 எஸ் 400 ஏவு​கணை​களை வாங்க கடந்த 2018-ம் ஆண்​டில் மத்​திய அரசு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டது. இது​வரை 3 எஸ் 400 ஏவு​கணை​களை ரஷ்யா வழங்​கி​யிருக்​கிறது. மீத​முள்ள 2 தொகுப்​பு​கள் அடுத்த ஆண்​டில் ஒப்​படைக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த மே மாதம் இந்​தியா - பாகிஸ்​தான் இடையே 4 நாட்​கள் அதிதீ​விர போர் நடை​பெற்​றது. அப்​போது, இந்​தி​யா​வின் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது எஸ்​-400 ஏவு​கணை​கள் மிக முக்​கிய பங்கு வகித்​தன. குறிப்​பாக இந்​திய எல்​லை​யில் இருந்து 300 கி.மீ. தொலை​வில் பாகிஸ்​தான் வான்​பரப்​பில் பறந்த அந்த நாட்​டின் அதிநவீன உளவு விமானம் எஸ் 400 ஏவு​கணை மூலம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து ரஷ்​யா​விடம் இருந்து கூடு​தலாக எஸ் 400 ஏவு​கணை​களை வாங்க மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. இதுதொடர்​பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் டெல்​லி​யில் நேற்று கூறும்​போது, “இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்​திப்​பின் போது பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும். இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யின்​போது எஸ் 400 ஏவு​கணை முக்​கிய இடம்​பிடிக்​கும்” என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்ய கூடாது என்று அமெரிக்கா நிர்​பந்​தம் செய்து வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு இந்​தியா அடிபணி​யாது. ரஷ்​யா​விடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்​ணெய் கொள்​முதல் செய்யப்படும். ரஷ்​யா​வின் எஸ் 400 ஏவு​கணை மூலம் சுமார் 400 கி.மீ. தொலைவு வரையி​லான இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும். அதிபர் புதினின் வரு​கை​யின் போது இந்த ஏவு​கணை​களை ரஷ்​யா​விடம் இருந்து கூடு​தலாக வாங்​கு​வது குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும்.

அடுத்​தகட்​ட​மாக ரஷ்​யா​வின் எஸ் 500 ஏவு​கணை​களை இந்​திய விமானப் படை​யில் சேர்க்​க​வும் திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது. இதற்​காக ரஷ்​யா​வும் இந்​தி​யா​வும் இணைந்து எஸ் 500 ஏவு​கணை​களை தயாரிப்​பது குறித்து அதிபர் புதினுடன் பிரதமர் மோடி விரி​வான ஆலோ​சனை நடத்த உள்​ளார். இந்த ஏவு​கணை மூலம் 600 கி.மீ. தொலைவு வரையி​லான தரை, வான் இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும்.

ரஷ்​யா​விடம் இருந்து எஸ்​யு-57 ரக போர் விமானங்​களை வாங்​கு​வது தொடர்​பாக​வும் இரு தரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​தப்பட உள்​ளது. இந்த போர் விமானங்​களுக்​கான தொழில்​நுட்​பத்தை இந்​தி​யா​வுக்கு வழங்க ரஷ்யா முன்​வந்​திருக்​கிறது. இதன்​படி எஸ்யு - 57 போர் விமானங்​கள் இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​படும்.

மேலும் ரஷ்​யா​வுக்கு சுற்​றுலா செல்​லும் இந்​தி​யர்​கள் விசா இல்​லாமல் அந்த நாட்​டுக்கு செல்​வது குறித்​தும் அதிபர் புதினும் பிரதமர் மோடி​யும் பேச்​சு​வார்த்​தை நடத்​த உள்​ளனர்​. இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.