Monday, March 23, 2026

புதுச்சேரி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியல் வெளியானது

பதிவு:  திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 04:00 AM

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

இது குறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் லாஸ்பேட்டை தொகுதியில் வி. சாமிநாதனும், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யு. அசனாவும் களம் காண்கின்றனர். மேலும், உழவர்கரை தொகுதியில் எஸ். சசிபாலன், ராஜ்பவன் தொகுதியில் வி.ஜே. சந்திரன், மற்றும் முதலியார்பேட்டையில் என். மணிபாலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களில் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; மங்கலம் தொகுதியில் எம்.கே. சத்யாவும், கதிர்காமம் தொகுதியில் ஆர். ஜெயந்தியும் போட்டியிடுகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 30 வேட்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள விஜய், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, தவெக வேட்பாளர்கள் அனைவரும் 'விசில்' சின்னத்தில் போட்டியிடுவதாகவும், அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளுக்கு இடையே தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் நேரடியாகக் களம் காண்பதால், அங்கு தேர்தல் போட்டி மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. 

இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் தோழர்கள், குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். 

01. லாஸ்பேட்டை - V.சாமிநாதன்

02. காரைக்கால் தெற்கு - K.A.U.அசனா

03. நெட்டப்பாக்கம் (தனி) - L.பெரியசாமி

04. திருபுவனை (தனி) - AK. சாய் J. சரவணன் குமார்

05. முத்தியால்பேட்டை - J.பிரகாஷ் குமார்

06. பாகூர் - N.தனவேலு

07. ராஜ் பவன் - V.J.சந்திரன்

08. உப்பளம் - S.சிவா

09. உழவர்கரை - S.சசிபாலன்

10. அரியாங்குப்பம் - S.குமரவேலு

11. மணவெளி - B.ராமு

12. வில்லியனூர் - R.ரமேஷ்

13. முதலியார்பேட்டை - N.மணிபாலன்

14. மண்ணாடிப்பட்டு - K.பாரதிதாசன்

15. உருளையன்பேட்டை - S.மரிய பிரான்சிஸ்

16. மங்கலம் - M.K.சத்யா

17. காமராஜ் நகர் - Dr.R.சுமன்

18. நெல்லித்தோப்பு - S.விக்னேஷ்வரன்

19. காலாப்பட்டு - D.சசிக்குமார்

20. இந்திரா நகர் - S.முருகன்

21. கதிர்காமம் - R.ஜெயந்தி

22. ஊசுடு (தனி) - S.சரகணபவா

23. தட்டாஞ்சாவடி - M.பன்னீர்செல்வம்

24. ஏம்பலம் (தனி) - V.தமிழ்ச்செல்வன்

25. நெடுங்காடு (தனி) - U.காமராஜ்

26. திருநள்ளாறு - A.ராஜா முஹம்மது

27. காரைக்கால் வடக்கு - A.வெங்கடேஷ்

28. நிரவி -T.R. பட்டினம் - G.கணேஷ்

29. மாகே - M.பிரிஜேஷ்

30. ஏனாம் - A.தோட்டா ராஜூ

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழக வேட்பாளர்கள், நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் சிறப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு, கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள், உரம் விநியோகம் குறித்து பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

பதிவு:  திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 03:30 AM

புதுடெல்லி,

மேற்காசிய போர் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலியம், எரிவாயு, மின்சாரம், உரத் துறைகள் தொடர்பான நிலைமையை ஆராய்வதற்கான உயர்மட்ட கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர்.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் உரங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகளாவிய பொருளாதாரம், எரிசக்தி ஆதாரத்தில் ஸ்திரமின்மை நிலவினாலும், உள்நாட்டு நுகர்வோர் மற்றும் தொழில் துறையினரின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக பிரதமர் உறுதியளித்தார்.

கடல்வழிப் போக்குவரத்து குறித்த விளக்கத்தின் போது, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள 22 இந்தியக் கப்பல்களும், அவற்றில் பணியாற்றும் 611 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்கா தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக முன்கூட்டியே முன்பதிவு செய்வது குறைந்துள்ளதாகவும் இந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலிண்டர்களைப் பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது மாநில அரசுகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

வணிக மற்றும் வீட்டு உபயோகத்துக்காக புதிய பிஎன்ஜி (குழாய் வழி எரிவாயு) இணைப்புகளை வழங்க மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 70 சதவீதத்தை ஓமன், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துதான் கப்பல்கள் வரவேண்டும். போர் காரணமாக இந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி போன்ற முக்கிய உரங்கள் வழங்கப்படுகின்றன. போர் பதற்றத்தால் உலகளவில் உரத்தின் விலை அதிகரித்தாலும், இந்தியாவில் உரத்தின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. விவசாயிகளைப் பாதிக்காத வகையில் பழைய விலையிலேயே உரங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

8,931 நாட்கள் - புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி

பதிவு:  திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 03:20 AM

புதுடெல்லி,

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் தலைவராக அதிக நாட்கள் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். 

நேற்றுடன் (மார்ச் 22) தனது பதவிக்காலத்தில் 8,931 நாட்களை பிரதமர் மோடி பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம், இதற்கு முன் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் வசம் இருந்த 8,930 நாட்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

குஜராத் முதலமைச்சராக இருந்த காலம் தொடங்கி தற்போது பிரதமராக பதவி வகிக்கும் காலம் வரை இந்த சாதனையில் அடங்கும்.  2001-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மே 21, 2014 வரை சுமார் 13 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார். 

அதன்பின், 2014-ம் ஆண்டு மே 26 அன்று இந்தியாவின் 14-வது பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம், சுமார் 25 ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

பிரதமர் மோடியின் இந்த சாதனைக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துச் செய்தியில், "பிரதமர் மோடியின் வாழ்க்கை, தேசத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பயணம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கடின உழைப்பு மற்றும் தேசத்தின் மீது கொண்ட மாறாத அர்ப்பணிப்பால் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது" என்று பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி ஏற்கனவே இந்தியாவின் இரண்டாவது நீண்டகாலப் பிரதமர் என்ற பெருமையை இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து பெற்றுள்ளார். இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 16 ஆண்டுகள் 286 நாட்கள் (மொத்தம் 6130 நாட்கள்) என்ற சாதனையை முறியடிக்க அவர் இன்னும் சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஒரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் ஆகிய இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து 'அரசுத் தலைவராக' அதிக நாட்கள் பணியாற்றிய இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

Featured post

புதுச்சேரி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியல் வெளியானது

பதிவு:  திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 04:00 AM புதுச்சேரி, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்...