பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 13, 2026, மாசி 29, விசுவாவசு வருடம் 05:30 AM
புதுடெல்லி/டெஹ்ரான்,
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் போர்ப் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் நேற்று 13-வது நாளை எட்டியது. எனினும், இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.
இதற்கிடையில் ஈரான் கடல் பகுதியை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடப்பதால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அதன்படி சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்தியது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார். அத்துடன், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஈரான் அமைச்சரிடம் 3 முறை ஜெய்சங்கர் பேசியுள்ளார். இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து செல்ல இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் நேற்று அனுமதி வழங்கியது.
ஈரான் மட்டுமின்றி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான்-நோயல் பரோட் ஆகியோருடனும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னணியில்தான், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த தாய்லாந்து கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்ம ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்தது. அதில் பயணம் செய்த 20 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர்.
வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்கள் மீது ஈரான், ஹவுதி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பல எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளிப்பதற்கு முன்பே, லைபீரியா நாட்டு ஆயில் டேங்கர் கப்பல் ‘சென்லாங் சூயிஸ்மேக்ஸ்’ சவுதி அரேபியாவின் ராஸ் டானுரா துறைமுகத்தில் இருந்து கடந்த 4-ம் தேதி ஒரு லட்சத்து 35,335 டன் கச்சா எண்ணெய் நிரப்பிக் கொண்டு புறப்பட்டது. இது கடந்த 8-ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை வந்தடைந்ததாக கடல்சார் கண்காணிப்பு தரவு காட்டியது. அதன்பின் அந்த கப்பல் பற்றி சிக்னல் கிடைக்கவில்லை.
ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் கப்பல்களின் சிக்னல்களை கண்காணித்து ஏவுகணை தாக்குதல் நடப்படுவதால், சென்லாங் சூயிஸ்மேக்ஸ் கப்பலின் தானியங்கி அடையாள கருவியை, அதன் இந்திய கேப்டன் ஆஃப் செய்துள்ளார்.
இதனால் கப்பல் எந்த இடத்தில் வருகிறது, எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை யாரும் அறிய முடியாது. இதற்கு கடல்சார் துறையில் ‘டார்க் மோட்’ அல்லது ‘கோயிங் டார்க்’ என பெயர். இதன் மூலம் ஏவுகணைகளால் கப்பல் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் குறைவு.
இவ்வாறு சென்லாங் சூயிஸ்மேக்ஸ் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து நேற்று முன்தினம் மாலை மும்பை ஜவஹர் தீப் துறைமுகம் வந்தடைந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த பின் மார்ச் 9-ம் தேதிதான்
இந்த கப்பலின் தானியங்கி அடையாள கருவி ஆன் செய்யப்பட்டது. இதனால் ஏவுகணை தாக்குதலில் இருந்து இந்த கப்பல் தப்பியது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துவிட்டதால், இனிமேல் பயமில்லாமல் கச்சா எண்ணெயை கொண்டு வர முடியும். இது மத்திய அரசின் தூதரக வெற்றியாக கூறப்படுகிறது.
Friday, March 13, 2026
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணிக்க இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி - எரிவாயு நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு தீவிரம்
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு - மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 14, 2026, மாசி 30, விசுவாவசு வருடம் 05:30 AM புதுடெல்லி, எல்பிஜி சிலிண்டர்கள் உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...
