Thursday, April 9, 2026

“உண்மையான காங்கிரஸார் தவெகவில் உள்ளனர்” - திருநெல்வேலியில் தவெக தலை​வர் விஜய்​ பேச்சு

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 09, 2026, பங்குனி 26, விசுவாவசு வருடம் 03:30 AM

திருநெல்வேலி,

“பல கோடிகளை கொடுத்து காங்கிரஸை தங்கள் பையில் போட்டுக் கொண்டனர். ஆனால், உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் உள்ளனர்” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசினார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்ற தவெக பிரச்சார பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியது:

“திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது முட்டுக்கட்டை போட்டு நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்திருப்பார்கள். தற்போது அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இதனால், இங்கு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த முடிந்துள்ளது.

திமுக அரசு நமக்கு எதிராக பிரச்சினைகள், அவதூறுகள் பரப்பினார்கள். திமுக, பாஜக கூட்டணி வெளியே தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் இரண்டு பேரும் ஒன்றுதான். இருவரின் நோக்கமும் ஒன்றுதான். விஜய் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கமே. நான் வந்ததால் ஊழல் செய்ய முடியாதபடி செய்துவிடுவேன் என்பதால் என் மீது அவர்களுக்கு கடும் ஆத்திரம்.

அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை மக்கள் உருவாக்கிவிட்டனர். அவர்களின் கூட்டணி கணக்கு எடுபடவில்லை. அவர்களின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. அதை ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறார்.

கூட்டணி கட்சியினரே ஒருவருக்கு ஒருவர் ஓட்டு போட மாட்டர்கள் போலிருக்கிறது. திமுகவின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம் மீது கடும் ஆத்திரம். அவர்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம். அதனால் இன்னும் ஆத்திரம்.

சில பல கோடிகளை கொடுத்து தனது பையில் காங்கிரஸை திமுக போட்டுக் கொண்டது. ஆனால், உண்மையான காங்கிரஸார் நம்மிடம் உள்ளனர். அவர்களது சிறுபான்மை பாசம் என்ற சாயம் வெளுத்துப் போய்விட்டது.

நான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் போனதற்குப் பின்னரே கட்சியை ஆரம்பித்துள்ளேன். இது அரசியலை தாண்டிய உறவு. அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு இது புரியாது. மற்றவர்களுக்கு இது எலெக்‌ஷன். எனக்கு ஒரு எமோஷன். எனக்கு ஒன்று என்றாலும், மக்களுக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கும், எனக்கும் கண் கலங்கும்.

கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். இதனால், ஜனநாயகன் படத்தை முடக்கினர். அதை யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்கு தெரயும். அதுவும் எடுபடவில்லை.

நான் வெளியே வரக் கூடாது என்று கண்டிஷன் போட்டனர். அதுவும் எடுபடவில்லை. பின்னர் நம்மை சுற்றியிருக்கிறவர்களை வைத்து அவதூறு பரப்பினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.                              
எத்தனை சோதனைகள், வேதனைகளை கடந்து வந்துள்ளேன். திமுக, பாஜவினரால் என்னை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது. ஒவ்வொரு வீட்டியிலும் விஜய்யும், விஜியும் இருக்கும் வரைக்கும் என்னை மக்கள் மத்தியிலிருந்து பிரிக்க முடியாது.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் விஜய்தான் நிற்கிறேன். வேட்பாளர்தான் விஜய், விஜய்தான் வேட்பாளர். இத்தனை ஆண்டுகளாக யார் யாருக்கெல்லாம் ஓட்டு போட்டீர்கள். இந்த முறை உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு ஓட்டுப் போடுங்கள். அந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவது நமக்கு நாமே ஓட்டு போடுவது மாதிரி. அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் நீங்கள் வெற்றிபெற்றது போன்றதாகும்.

இந்த தேர்தல் 50 ஆண்டு நடக்கும் அதிசய தேர்தல். உங்களுக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சி., அழகுமுத்துகோன், கட்டபொம்மன், குரூஸ் பர்னாந்து போன்ற தலைவர்கள் மாதிரி தவெக உழைக்கும்.

தவெக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், உழைப்பாளிகள் எல்லாரும் நன்றாக இருப்பார்கள். நமது சந்ததிகள் நன்றாக இருக்கும். எனவே வேறு யாருக்கும் ஓட்டு போட்டு ஓட்டை வீணாக்கிவிடாதீர்கள்.

மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொடமாட்டேன். தற்போது ஆளுகிறவர்களும், இதற்குமுன் ஆண்டவர்களும் இதை சொல்ல முடியுமா? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருக்குமா? பெண்களுக்கு பாதுப்பு கிடைக்காமல் இருந்திருக்குமா? இதற்கெல்லாம் பதில் சொல்ல தகுதி இருக்கிறதா?

இரண்டரை வயது குழந்தையை திமுகவை சேர்ந்தவர் கொலை செய்தார். விளாத்திகுளம் பகுதியில் பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்டதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

போலீஸாரை பொம்மையாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்குநேரி சம்பவத்தை ஏன் தடுக்கவில்லை? சட்டவிரோதமாக மணலை, கனிம வளங்களை திருடுகிறார்கள். குடும்பமாக கொள்ளை அடிக்கிறார்கள். ஆட்சி முழுக்க ஊழல் என்று நாறிக் கிடக்கிறது. இந்நிலையில் எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்பீர்கள்?

உங்கள் பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. இது மாற்றத்துக்கான தேர்தல், மாற்றத்தை கொண்டுவரப்போகும் தேர்தல். இதை உங்களாலேயோ மற்றும் பலராலேயோ தடுக்க முடியாது.

வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு, அத்தனை வலிகளையும் தாங்கி வந்துளளேன். தமிழகத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி. இது விசில் புரட்சி தேர்தலாக இருக்கும்” என்று விஜய் பேசினார். ‘நான் தன்னந்தனி ஆளு’ என்ற கட்சியின் தேர்தல் பரப்புரை பாடலை பாடி முடித்தார் விஜய்.

“தலைமைச் செயலர் மாற்றம் அத்துமீறிய அரசியல் நடவடிக்கை” - தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 09, 2026, பங்குனி 26, விசுவாவசு வருடம் 01:30 AM

சென்னை,

தேர்தல் ஆணையம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்ய களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜக ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பாஜகவுக்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பாஜக ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பிஹார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பாஜகவின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக, அதிமுகவுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம். நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனித்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் ‘தலைமைச் செயலாளர்’, ‘டிஜிபி’ ஆகியோரை மாற்ற பாஜக தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன.

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அதிமுக - பா.ஜ.க. அடங்கிய என்டிஏ கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி மாற்றம் - புதிய தலைமைச் செயலராக சாய்குமார் ஐஏஎஸ் நியமனம்

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 09, 2026, பங்குனி 26, விசுவாவசு வருடம் 00:55 AM

சென்னை,

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதிய தலைமைச் செயலராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு செய்திக் காகித நிறுவனத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தமிழக தலைமைச் செயலர் தவிர ஆயுதப்படை, லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமனம் செய்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியில் இணைந்தது தொடர்பாக மாலை 6 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னர் அதிகாரிகள் மாற்றம் என்பது வழக்கமாக நடைபெறுவதுதான் என்றாலும்கூட, தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலரையே அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

Wednesday, April 8, 2026

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், பழனி​சாமி, சீமான், மனு ஏற்பு - வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு - எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் போட்டியில்லை

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 08, 2026, பங்குனி 25, விசுவாவசு வருடம் 03:45 AM

சென்னை,

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் இறு​திப்​பட்​டியல் நாளை வெளி​யாகும் நிலை​யில், மு.க.ஸ்​டா​லின், பழனி​சாமி, விஜய், சீமான் ஆகியோரின் வேட்பு மனுக்​கள் ஏற்​கப்​பட்​டுள்​ளன. எடப்​பாடி​யில் தவெக வேட்​பாளரின் மனு நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களுக்​கும் ஒரே கட்​ட​மாக நடை​பெறவுள்ள தேர்​தலுக்​கு, வேட்பு மனுத் தாக்​கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளி​லேயே முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தவெக தலை​வர் விஜய், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்​டோர் வேட்பு மனுத் தாக்​கல் செய்​தனர்.

சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கடந்த 4-ம் தேதி வேட்பு மனுத் தாக்​கல் செய்​தார். ஏப்​ரல் 6-ம் தேதி நேற்று முன்​தினம் வேட்பு மனுத் தாக்​கல் செய்ய கடைசி நாள் என்​ப​தால், அனைத்து தொகு​தி​களி​லும் வேட்பு மனுத் தாக்​கல் செய்ய அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள், சுயேச்சை வேட்​பாளர்​கள் குவிந்​தனர்.

எடப்​பாடி தொகு​தி​யில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி (இபிஎஸ்), சாத்​தூரில் பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், விருத்​தா​சலத்​தில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், ஸ்ரீபெரும்​புதூரில் தமிழகக் காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தரு​மபுரி​யில் பாமக தலை​வர் அன்​புமணி​யின் மனைவி சவுமியா அன்​புமணி, அவி​நாசி​யில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், மயி​லாப்​பூரில் தமிழகப் பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், கோவை வடக்கு தொகு​தி​யில் பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனி​வாசன் உள்​ளிட்​டோர் வேட்பு மனுத் தாக்​கல் செய்​தனர்.

சென்​னை​யில் 628 உட்பட 234 தொகு​தி​களி​லும் மொத்​தம் 7,599 வேட்பு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. ஏராள​மானோர் கூடு​தல் மனுக்​களைத் தாக்​கல் செய்​தனர். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 4 மனுக்​களை​யும், தவெக தலை​வர் 3 மனுக்​களை​யும் தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், நேற்று பகல் 11 மணிக்கு தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் தலை​மை​யில் வேட்பு மனுக்​கள் பரிசீலனை தொடங்​கியது. இதில் வேட்​பாளர்​கள், வேட்​பாளர்​களின் முகவர்​கள் பங்​கேற்​றனர். 

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், பழனி​சாமி, சீமான், நயி​னார் நாகேந்​திரன், செல்​வப்​பெருந்​தகை, சவுமியா அன்​புமணி, பிரேமலதா விஜய​காந்த் உள்​ளிட்​டோரின் வேட்பு மனுக்​கள் ஏற்றுக் கொள்​ளப்​பட்​டன.

ஆட்​சேபனை

பெரம்​பூர் தொகு​தி​யில் தவெக தலை​வர் விஜய்​யின் வேட்பு மனு​வில், சான்​றொப்​பம் காலாவ​தி​யான நோட்​டரி வழக்​கறிஞரிடம் இருந்து பெறப்​பட்​ட​தாக பாமக​வினர் ஆட்​சேபனை தெரி​வித்​த​தால் பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்​டது. இதையடுத்து அதற்​குரிய ஆவணங்​களைச் சமர்​பித்த பின்​னர், விஜய்​யின் மனு ஏற்​கப்​பட்​டது.

அதே​போல், திருச்சி கிழக்​குத் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தவெக தலை​வர் விஜய்​யின் மனு ஏற்​கப்​பட்​டது. வில்​லி​வாக்​கத்​தில் ஆதவ் அர்​ஜுனா சொத்து விவரங்​களை மறைத்​த​தாக சுயேச்சை வேட்​பாளர்​கள் குற்​றம் சாட்​டிய​தால், பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்​டது. இறு​தி​யில் அவரது மனு​வும் ஏற்​கப்​பட்​டது.

கோபிச்​செட்​டிப்​பாளை​யம் தொகு​தி​யில் வரு​மான வரித் தாக்​கல் செய்​ய​வில்லை எனக் கூறி, தவெக வேட்​பாளர் செங்​கோட்​டையனின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்​டு, நீண்ட நேரம் கழித்து ஏற்​கப்​பட்​டது. அவருக்கு அதி​முக​வினர் எதிர்ப்பு தெரி​வித்​திருந்​தனர். சென்னை ஆர்​.கே.நகரில் தவெக வேட்​பாளர் மரிய வில்​சன் முறை​யாக மனுவை பூர்த்தி செய்​யாத​தால் பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்டு கடைசி​யில் ஏற்​கப்​பட்​டது.

எடப்​பாடி தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் அருண்​கு​மார் மற்​றும் அவருக்கு மாற்று வேட்​பாள​ராக அவரது மனைவி நித்யா மனுத்​தாக்​கல் செய்​திருந்​தனர். அங்​கீகரிக்​கப்​ப​டாத அரசி​யல் கட்​சிகளின் வேட்​பாளரை அதே தொகு​தியை சேர்ந்த 10 பேர் முன்​மொழிய வேண்​டும் என்று விதி​முறை உள்​ளது.

ஆனால், அருண்​கு​மாரின் மனு​வில் 8 பேர் மட்​டுமே முன்​மொழிந்​துள்​ளனர். உரிய விதி​முறை​களைப் பின்​பற்​றாத​தால் அருண்​கு​மாரின் மனுவை தள்​ளு​படி செய்​து, தேர்​தல் நடத்​தும் அலு​வலர் நடராஜன் உத்​தர​விட்​டார். இதே காரணத்​துக்​காக, மாற்று வேட்​பாளர் நித்​யா​வின் மனு​வும் தள்​ளு​படி செய்​யப்​பட்​டது. இதனால், எடப்​பாடி தொகு​தி​யில் தவெக போட்​டி​யிட முடி​யாத சூழல் ஏற்​பட்​டுள்​ளது.

சிதம்​பரம் தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் பாரி​யின் வேட்பு மனு​வில் எழுத்​துப் பிழை மற்​றும் முறை​யாகப் பூர்த்தி செய்​யப்​ப​டாத காரணங்​களுக்​காக நிராகரிக்​கப்​பட்​டது. அதனால், மாற்று வேட்​பாள​ராக வேட்பு மனுத் தாக்​கல் செய்​திருந்த அவரது தந்தை நெடுஞ்​செழியனின் மனு ஏற்​கப்​பட்​டது.

பரிசீலனை முடி​வில் சென்​னை​யில் 462 உட்பட 234 தொகு​தி​களி​லும் 4,738 வேட்பு மனுக்​கள் ஏற்​றுக் கொள்​ளப்​பட்​டன. நாளை பிற்​பகல் 3 மணி வரை வேட்பு மனுக்​களை திரும்​பப் பெறு​வதற்கு கால அவகாசம் உள்​ளது. அதன்​பிறகு இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யாக​வுள்​ளது.

விஜய் பெயரில் 4 பேர்: தவெக தலை​வர் விஜய் போட்​டி​யிடும் பெரம்​பூர் தொகு​தி​யில் 66 வேட்பு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இதில், விஜய்​யின் மனு உட்பட 48 பேரின் வேட்பு மனுக்​கள் ஏற்​கப்​பட்​டன. மற்ற மனுக்​கள் நிராகரிக்​கப்​பட்​டன. பொது​வாகவே நட்​சத்​திர வேட்​பாளரை வீழ்த்த, அவர் பெயரிலேயே மற்ற கட்​சிகள் அதி​க​மான சுயேச்சை வேட்​பாளர்​களை வேட்பு மனுத் தாக்​கல் செய்ய வைப்​பது வாடிக்​கை​யாக இருக்​கிறது.

அந்த வகை​யில் பெரம்​பூர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தவெக தலை​வர் விஜய், அவரது முழுப்​பெய​ரான ஜோசப் விஜய் என்ற பெயரில் வேட்பு மனுத் தாக்​கல் செய்​துள்​ளார். அவருக்கு எதி​ராக எம்​.ஜோசப், எஸ்​.ஜோசப், கே.​விஜய், ஜி.​விஜய் ஆகியோர் களம் இறக்​கப்​பட்​டுள்​ளனர். இந்நிலையில், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. அந்த மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Sunday, April 5, 2026

48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM

வாஷிங்டன்,

‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள்.

இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கேற்ப, அமெரிக்க வீரர்களும் தாக்குதலுக்கு தயாராகி வருவதால் மேற்கு ஆசியாவில் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவுகிறது

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

ட்ரம்ப் 15 அம்ச திட்டம்

ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டத்தை கடந்த 25-ம் தேதி வெளியிட்டார். ‘ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் வழங்க வேண்டும். தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்தார். ஆனால், ஈரான் ராணுவம் இதை ஏற்கவில்லை.

இந்த சூழலில், கடந்த மாதம் அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஈரானின் மின் நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்தப்படாது’ என்று தெரிவித்தார்.

கடந்த மாத இறுதியில் ட்ரம்ப் கூறும் போது, “ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்கிறது. எனவே அடுத்த 10 நாட்களுக்கு ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது’’ என்று தெரிவித்தார்.

தீவிரமடையும் போர்: எனினும் கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவின் 2 போர் விமானங்களை ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தியது. மேலும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர தாக்குதல்களை நடத்தின. எனினும், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள். இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும். இவ்வாறு ட்ரம்ப் அதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: 

அதிபர் ட்ரம்ப் விதித்த 10 நாள் கெடு ஏப்ரல் 6-ம் தேதி இரவு 8 மணியுடன் (இந்திய நேரப்படி 7-ம் தேதி அதிகாலை) நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஈரான் ஆட்சியாளர்கள், அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஈரான் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

போர்க் கப்பல்கள் முகாம்

அமெரிக்க கடற்படையின் 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதியில் முகாமிட்டு உள்ளன. குறிப்பாக ட்ரிபொலி போர்க்கப்பலை சேர்ந்த வீரர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிதீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தரைவழி தாக்குதல்களுக்கு தயாராக உள்ளனர்.

அமெரிக்காவின் பி-2 ஸ்பிரிட், எப்-35, எப்-22, எப்-15இ, ஏ-10 உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அதிதீவிர தாக்குதல்களுக்கு தயாராக உள்ளன. பிஆர்எஸ்எம், டோமாஹாக், பேட்ரியாட், தாட், ஹிமார்ஸ், ஜிஎம்எல்ஆர்எஸ் உள்ளிட்ட அதிநவீன ஏவுகணைகள் மற்றும் எம்கியூ-9 ரக ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் 48 மணி நேர இறுதி கெடுவை விதித்துள்ளார். இந்த கெடு முடிந்த பிறகு அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தும். ஈரான் நரகமாக மாறும் வரை தாக்குதல்கள் தொடரும். இவ்வாறு அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்ல மறுப்பா? - ஈரான் வெளியுறவு அமைச்சர் விளக்கம்

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதியை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சியில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ‘‘இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை’’ என்று ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு

ஈரானின் நிலைப்பாட்டை அமெரிக்க ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்கின்றன. பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு எனது நன்றி. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் செல்ல நாங்கள் ஒருபோதும் மறுத்தது இல்லை. எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோதப் போருக்கு ஒரு உறுதியான மற்றும் நிரந்தரமான முடிவைக் கொண்டு வருவதற்கான விதிமுறைகளையே நாங்கள் முக்கியமாக கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஈரான் பதில் அளிக்காததால் அமைதிப் பேச்சுவார்த்தை மந்தம் அடைந்துள்ளதாக அமெரிக்காவின் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', பாகிஸ்தானின் 'டான்' ஆகிய இதழ்கள் செய்தி வெளியிட்டன. இந்த செய்திகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபியும் மறுத்துள்ளார். இத்தகைய செய்திகள் அடிப்படையற்றவை, கற்பனையானவை என்று அவர் கூறியுள்ளார்.

Saturday, April 4, 2026

தமிழக சட்டசபை தேர்தல் - பாஜக வேட்பாளர் பட்டியல் - அமர்பிரசாத் ரெட்டி, வினோஜ்.பி.செல்வம், எஸ்.ஜி.சூர்யா.. சீட் இல்லை

சனிக்கிழமை, ஏப்ரல் 04, 2026, பங்குனி 21, விசுவாவசு வருடம் 04:50 AM

சென்னை,

வரும் சட்டசபை தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது பாஜகவில் அவரது ஆதரவாளர்களை அப்செட் ஆக்கியுள்ளது. அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரது தீவிர ஆதரவாளர்களான பலருக்கும் சீட் வழங்கப்படவில்லை. இதனால், அண்ணாமலையின் கை சறுக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளை பெற்ற பாஜக, இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டின்போதே பாஜகவுக்கு, அதிமுக வெற்றி வாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதன் காரணமாக, அதிமுகவிடம் சில தொகுதிகளை மாற்றி வாங்க பாஜக முயற்சித்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு உடனடியாக வேட்பாளர்களையும் அறிவித்து ஒரு வாரமாக தொடர்ந்து பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. இது பாஜகவில் சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது. பாஜகவில் வேட்பாளர் தேர்வில் சிக்கல்கள் நிலவி வந்தன. சில முக்கிய தலைவர்கள் ஒரே தொகுதியை குறிவைத்து கேட்டதும், வேட்பாளர் அறிவிப்பு தாமதமானதற்கு காரணமாக சொல்லப்பட்டது. 

வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில், இன்றுதான் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. கடந்த முறை நெல்லை தொகுதியில் வென்ற நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூரிலும், கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் வென்ற வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கிலும் போட்டியிடுகின்றனர். 

நாகர்கோவில் தொகுதி மீண்டும் எம்.ஆர்.காந்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சியில் கடந்தமுறை வென்ற சி.சரஸ்வதிக்கு பதிலாக அவரது மருமகளான கிருத்திகா சிவக்குமாருக்கு இம்முறை சீட் வழங்கப்பட்டுள்ளது. அவிநாசி (தனி) தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் களமிறங்குகிறார். 

மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், மதுரை தெற்கு தொகுதியில் பேராசிரியர் ராம சீனிவாசனும், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தமும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். காங்கிரஸில் இருந்து எல்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்திருந்த விஜயதாரணிக்கு இந்த முறை விளவங்கோட்டில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5 பெண்கள் இம்முறை பாஜக சார்பில் சீட் பெற்றுள்ளனர்.

பாஜக வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய ஷாக், அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது தான். இந்த முறை தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலைக்கு சாதகமான தொகுதிகளை அதிமுகவில் கேட்டுப் பெறாமல் இருந்துவிட்டனர் என்று அவரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுவதாக கூறப்படுகிறது. 

கடந்த முறை அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, இந்த முறை கோவையின் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளை கேட்டு வந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் மொடக்குறிச்சியில் அண்ணாமலையை போட்டியிட சொல்லி தலைமை கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், தனக்கு சாதகமான தொகுதி எதுவும் இல்லாததால் இம்முறை போட்டியிடுவதில்லை என்று அண்ணாமலை உறுதியாக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. 

சீட் அதிருப்தி காரணமாக சென்னையில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்திலும் அண்ணமலை பங்கேற்கவில்லை. அண்மையில் பிரதமர் மோடி கோவை வந்தபோது அவரை வரவேற்கவும் அண்ணாமலை செல்லவில்லை. 

2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் மூன்றாவது அணியமைத்து களம் கண்ட பாஜக, பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. பாஜகவின் எழுச்சிக்கு காரணமாக அக்கட்சியின் இளைய தலைமுறையால் கொண்டாடப்பட்ட அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது, அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 

அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களான அமர்பிரசாத் ரெட்டி, அஸ்வத்தாமன், எஸ்.ஜி.சூர்யா, வினோஜ்.பி.செல்வம், ஏபி முருகானந்தம் ஆகியோருக்கும் இந்த முறை சீட் கிடைக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு சீட் கிடைக்காத வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

வேளச்சேரி தொகுதியில் நீண்ட நாட்களாக போட்டியிட தீவிரம் காட்டி வந்தார் பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர். அண்ணாமலை இவருக்கு பரிந்துரை செய்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

எஸ்.ஜி.சூர்யா போட்டியிட விரும்பிய வேளச்சேரி தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு அசோக் என்பவர் போட்டியிடுகிறார். பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வந்தார். 

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்தார். 

வினோஜ் பி செல்வம் தனக்கு இந்த முறை துறைமுகம் தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்தத் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. அங்கு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார்.

அதேபோல, பாஜகவின் மாநில பொறுப்பாளராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, தளி தொகுதியில் போட்டியிட விரும்பி, சீட் பெற முயற்சித்து வந்தார். அவருக்கும் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஏபி முருகானந்தம், அஸ்வத்தாமன் ஆகியோரும் சீட் பெற முயற்சித்தனர். அவர்களுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது மட்டுமல்ல, அவரது ஆதரவாளர்களும் மொத்தமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

ஒருகாலத்தில் தமிழக பாஜகவின் முகமாக பார்க்கப்பட்ட அண்ணாமலை தற்போது முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Friday, April 3, 2026

அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை போர் தொடரும் - ஈரான் திட்டவட்டம் - அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு பதிலடி

பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 03, 2026, பங்குனி 20, விசுவாவசு வருடம் 03:00 AM

தெஹ்ரான்,

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்த கருத்துகளுக்கு, ஈரான் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை தற்போதைய போர் நீடிக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் அரசு ஊடகமான பிரஸ் டிவியில் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் ராணுவ ஆற்றல் மற்றும் எங்கள் ஆயுதங்கள் குறித்த அமெரிக்காவின் உளவுத் தகவல் முழுமையற்றது.

எங்களின் உண்மையான ஆற்றலைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களின் முக்கியமான ஏவுகணை உற்பத்தித் தளங்கள், நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்கள், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணுப் போர் மற்றும் சிறப்பு ஆயுதங்களை நீங்கள் அழித்துவிட்டதாக எண்ண வேண்டாம்.

அத்தகைய அனுமானங்கள் நீங்கள் சிக்கியுள்ள சகதியை மேலும் ஆழமாக்கும். நீங்கள் தாக்கியதாக நினைக்கும் எங்கள் தளங்கள் முக்கியமற்றவை; எங்களின் முக்கிய ராணுவ உற்பத்தி, உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்களால் ஒருபோதும் அடைய முடியாத இடங்களில் நடைபெறுகிறது.

எங்களின் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ஆயுத தளங்களை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்; நீங்கள் தவறாகவே அதனை கணிப்பீர்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியாது.

எங்கள் கண்ணியமிக்க, அன்புக்குரிய, முஸ்லிம் தேசத்துக்கு எதிராக நீங்கள் தொடங்கிய போருக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டும். நீங்கள் நிரந்தர அவமானத்தையும், வருத்தத்தையும், சரணடைதலையும் சந்திக்கும் வரை இந்தப் போர் தொடரும்.

நீங்கள் ஏற்கெனவே பெற்ற கடுமையான அடிகளின் தொடர்ச்சியாக, எங்களிடமிருந்து மேலும் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதம் அல்-அன்பியா தலைமையகம் என்பது ஈரானின் கட்டளையிடும் மிக முக்கிய அமைப்பாகும். இது ஈரான் ராணுவம் மற்றும் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) ஆகியவற்றுக்கு இடையேயான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.

முன்னதாக நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் ஆற்றிய உரையில், “ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் தீர்க்கமான தாக்குதல்களை நடத்தியது. இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்போது ஈரானின் கடல்சார் மற்றும் வான்வழித் திறன்கள் முறையாகச் சிதைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பரந்த அளவிலான ராணுவக் கட்டமைப்பும் கடுமையாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் பெரும்பாலான தலைவர்கள் தற்போது கொல்லப்பட்டுவிட்டனர்.

இந்த தாக்குதலில் ஈரானின் ஆயுதத் தொழிற்சாலைகளும், ராக்கெட் ஏவுதளங்களும் துண்டு துண்டாகச் சிதறடிக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் மிகச் சிலவே எஞ்சியுள்ளன. அமெரிக்கா முன்னெப்போதையும் விடப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Featured post

“உண்மையான காங்கிரஸார் தவெகவில் உள்ளனர்” - திருநெல்வேலியில் தவெக தலை​வர் விஜய்​ பேச்சு

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 09, 2026, பங்குனி 26, விசுவாவசு வருடம் 03:30 AM திருநெல்வேலி, “பல கோடிகளை கொடுத்து காங்கிரஸை தங்கள் பையில் போட்ட...