Thursday, March 5, 2026
28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக உட்பட தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் முஸ்லீம் லீக், மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் வரை ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதேபோல், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதர கட்சிகளுக்கான பங்கீடு ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், காங்கிரஸ் 40 தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினர் கேட்டதால், தொகு திப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த சூழலில் நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைமையிடமும் அவர் பேசி சூழலை சுமூகமாக்கியதாகவும், திமுக தரப்பில் கனிமொழியும் காங்கிரஸ் தலைவர்களிடம் பேசியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, திமுக - காங்கிரஸ் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த தொகுதி பங்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக நேற்று காலை தகவல்கள் வெளியாகின.
அதன்படி, கோவாவில் இருந்து விமானம் மூலம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னைக்கு நேற்று மாலை வந்தார். அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார்.
சிறிது நேரத்தில் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை ஆகியோர் தி.நகரில் உள்ள ஓட்டலுக்கு சென்றனர். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த தகவல் கிடைத்ததும், இருவரும் அறிவாலயத்துக்கு சென்றனர்.
அப்போது, திமுக வழங்கிய 28 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.
திமுக தரப்பில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, பூச்சி எஸ்.முருகன் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய செயலாளர் நிவேதித் ஆல்வா, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் எஸ்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி கட்சிகள்
இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடனும் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு நேற்று பேச்சு வார்த்தை நடத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்தப்பட்ட 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
கடந்த 2021 தேர்தலை போல் 6 இடங்கள் வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதாலும், புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள திமுக வலியுறுத்தியதாலும் முடிவு எட்டப்படவில்லை. மக்கள் நீதி மய்யம் 3 தொகுதி கேட்ட நிலையில், ஒரு இடம் மட்டும் வழங்கப்படும். அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று திமுக குழு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மியும் 2 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, March 4, 2026
விளிம்பு நிலையில் இருக்கும் 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி ரூ.2,000 - வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்த திருநங்கையர்கள் என 37.79 லட்சம் பயனாளிகளுக்கு சிறப்பு நிதியாக தலா ரூ.2,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது. தேர்தலுக்கான முழு ஏற்பாடுகளையும் தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழக அரசு ஏற்கெனவே 1.31 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வீதம் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. இந்த திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு 1.06 கோடி மகளிரை பயனாளிகளாக கொண்டு தொடங்கப்பட்டு, பல்வேறு முகாம்கள் மூலம் பயனாளிகள் எண்ணிக்கை 1.13 கோடியாக உயர்த்தப்பட்டது.
சமீபத்தில் இந்த எண் ணிக்கை 1.31 கோடியாக உயர்ந்தது. மாதந்தோறும் 15-ம் தேதி இந்தத் தொகை பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த பிப்.13-ம் தேதி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் கோடைகால தொகுப்பு ரூ.2,000 என ரூ.5,000 தொகை 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஒரே தவணையாக செலுத்தப்பட்டது.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இத்திட்டத்துக்கு இந்த நிதியாண்டின் இறுதி துணை பட்ஜெட்டில் ரூ.3,913.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்ப தாவது:
கோரிக்கை நிறைவேற்றம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெண்களுக்குக் கோடை கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதிய உதவித்தொகை பெற்று வரும் முதியோர்கள், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன. நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
நலிவு நிலையைப் போக்கும் சிறப்பு நிதியாக ரூ.2,000 மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம். பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர்கள், கைம்பெண்கள் என மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.3.200, 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3,500, பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 இன்று (நேற்று) காலை வழங்கி இருக்கிறோம்.
அது மட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்துக்கு மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.8,000 வீதம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.2 ஆதார விலை என ரூ.8.53 கோடி நிதி வழங்கப்படுகிறது.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒரு முறை சூளுரைக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது முதியோர்கள் மற்றும் கைம்பெண் களுக்கு மாதம் ரூ.1,200-ம், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500-ம், 75 சதவீதத்துக்கு மேல் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.2,000-ம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வரவேற்பு
முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் தோ.வில்சன்,‘‘மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ.2,000 சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேவேளையில், புதிய அரசு பதவியேற்றவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, March 3, 2026
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு - 5 பேர் குழுவை பூஜை செய்ய அனுமதிக்கலாமா?
பதிவு: திங்கள்க்கிழமை, மார்ச் 03, 2026, மாசி 19, விசுவாவசு வருடம் 06:40 AM
மதுரை,
‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் பூஜை செய்ய 5 பேருக்கு அனுமதி வழங்கினால், நீதிமன்ற அவமதிப்பு மனு முடிக்கப்படும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மார்ச் 4-ல் பதிலளிக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதான வழக்கின் மனுதாரர் ராமரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.
மற்றொரு மனுதாரரான அரசபாண்டி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இந்திய ஆட்சிப் பணி விதிகள் அடிப்படையில் துறைரீதியாகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதியை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கக்கோரி பரமசிவம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் ஆஜரானார். அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மதுரை ஒரு மத உணர்வுள்ள நகரம். சமீப காலங்களில் மதரீதியான வன்முறை நிகழ்ந்துள்ளது. மதுரையில் மதரீதியான வன்முறை வெடிக்கும் அச்சம் எப்போதும் உள்ளது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அங்கு ஒரே நேரத்தில் பல்வேறு குழுக்கள் திரண்டதாலும், அங்கு கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டும், வன்முறை அதிகரிப்பதை தடுக்கும் வகையிலும், பொது அமைதி மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதை தடுத்தல், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டியதானது.
கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து முன்னணி மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் இடையே ஏற்பட்ட பதட்டங்களை சுட்டிக்காட்டி மாநகர் காவல் ஆணையர் கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் அடிப்படையிலும், பிற காரணிகளை கருத்தில் கொண்டும் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு சரியான நேரத்தில் பிறப்பிக்கப்பட்டதால் பெரிய மதரீதியான மோதல் தடுக்கப்பட்டது.
சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் நோக்கத்தில் மட்டுமே தடையாணை பிறப்பிக்கப்பட்டது. வேறு எந்த காரணமும் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் எண்ணம் எனக்கு இல்லை. சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறேன். நீதிமன்ற உத்தரவுகள் சட்டத்தின் உத்தரவுகள் என்பதை அறிவேன். அதை மீறும் எண்ணம் இல்லை.
நீதிமன்றத்தின் உத்தரவு மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும் என்பதை உணர்ந்துள்ளேன். நீதிமன்றத்தின் அதிகாரம் அரசியலமைப்பு நிர்வாகத்தின் அடித்தளமாக உள்ளது. எந்த நிர்வாக அதிகாரமும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்பட முடியாது. செயல்படவும் கூடாது. நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். இதையேற்று நீதிமன்ற அவமதிப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
பின்னர் நீதிபதி, ‘நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஏற்கெனவே ஏற்றிய இடத்தில் தீபம் ஏற்ற கூறவில்லை. இந்துக்களுக்கு சொந்தமான பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் உத்தரவிடப்பட்டது’ என்றார்.
அரசு தரப்பில், ‘சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை. அதை கருத்தில் கொண்டு அரசு நிர்வாகம் செயல்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை வேண்டும் என்றே நிறைவேற்றாமல் இருக்க நினைக்கவில்லை. அடுத்த கார்த்திகை தீப தினத்துக்கு முன்பு உரிய முடிவெடுக்கப்படும்’ எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி, ‘நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் குழு கோயில் மலை உச்சிக்கு சென்று தீபத்தூண் அருகே 15 நிமிடங்கள் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் (மார்ச் 4) தெரிவிக்க வேண்டும். அடுத்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர் ஆஜராக வேண்டாம். மாநகர் காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டார்.
முன்னதாக, அமைச்சர் ரகுபதி கருத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நீதிபதி கருத்து கேட்டார். அதற்கு ஆட்சியர், அமைச்சரின் கருத்து தவறானது என்றார். இதைப் பதிவு செய்து கொண்டு, அமைச்சர் ரகுபதிக்கு எதிரான மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, March 1, 2026
“ஈரான் உச்ச தலைவர் கமேனி இறந்து விட்டார்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 01, 2026, மாசி 17, விசுவாவசு வருடம் 08:20 AM
டெஹ்ரான்,
ஈரானின் ஆன்மீக தலைவரான அயோதுல்லா அலி கமேனி , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் விமானங்கள் 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில் தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலில் கமேனியின் இருப்பிடம் முற்றிலும் தரைமட்டமானதாகவும், நவீனத் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவர் இருந்த இடத்தை உறுதி செய்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கமேனியின் மரணம் குறித்து ஈரான் அரசு ஊடகங்கள் இதுவரை அதிகார்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம், இது உளவியல் போர் என்று மட்டும் கூறி கமேனி உயிருடன் இருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்து வருகிறது.
ஆனால், இஸ்ரேலிய உளவு அமைப்புகள் கமேனியின் உடல் மீட்கப்பட்டதாகத் தகவல்களை வெளியிட்டுள்ளன. கமேனி உயிரிழந்த செய்தி பரவியதை அடுத்து, டெஹ்ரானின் சில பகுதிகளில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாகவும், அதே நேரத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனது ட்ரூத் சோஷியல் பதிவில் மேலும் தெரிவித்துள்ள ட்ரம்ப், “வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான கமேனி இன்று இறந்துவிட்டார். இது ஈரானிய மக்களுக்குக் கிடைத்த நீதி மட்டுமல்ல, கமேனியாலும் அவரது ரத்தவெறி பிடித்த குண்டர் கும்பலாலும் கொல்லப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும், சிறந்த அமெரிக்கர்களுக்கும் கிடைத்த நீதியாகும்.
எங்களுடைய உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. இஸ்ரேலுடன் இணைந்து நாங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் சேர்ந்து கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ தற்காத்துக் கொள்ள எதுவுமே செய்ய முடியவில்லை. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கான ஒற்றைப் பெரும் வாய்ப்பு இதுவாகும்.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பலர் இனிப் போரிட விரும்பவில்லை என்றும், எங்களிடமிருந்து பாதுகாப்பை எதிர்பார்ப்பதாகவும் எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. நான் ஏற்கெனவே சொன்னது போல, இப்போது சரணடைந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு, காலம் கடந்தால் அவர்களுக்கு மரணம் மட்டுமே மிஞ்சும்!
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் காவல்துறையும் அமைதியான முறையில் ஈரான் தேசப்பற்றாளர்களுடன் இணைந்து, இந்த நாடு தகுதியுள்ள அந்தப் பெருமையை மீண்டும் அடைய ஒரு பிரிவாகச் செயல்படும் என்று நம்புகிறேன். கமேனியின் மரணம் மட்டுமல்லாமல், ஒரே நாளில் அந்த நாடு பெருமளவில் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் விரைவில் தொடங்கும்.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் எங்களது இலக்கை அடையும் வரை, இந்தத் தீவிரமான மற்றும் துல்லியமான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இந்த வாரம் முழுவதும் தடையின்றித் தொடரும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, February 26, 2026
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிலவரம் என்ன?
பதிவு: வியாழக்கிழமை, பிப்ரவரி 26, 2026, மாசி 14, விசுவாவசு வருடம் 11:20 AM
சென்னை,
கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை 22-ம் தேதி தொடங்கி நடத்தி வருகிறது திமுக. முதல் நாளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து 2-வது நாளில் சென்னை அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மமக 5 தொகுதிகள் கேட்டதாகவும், திமுக தரப்பில் 2 ஒதுக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறும்போது, “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம் மற்றும் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். இந்த முறை 5 தொகுதிகள் வேண்டுமென கேட்டுள்ளோம். கூடுதலாக தொகுதிகளைக் கேட்டாலும் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட உள்ளோம். திமுக தரப்பில் முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளனர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து திமுக-வுடனும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது திமுக. இதில் மதிமுக சார்பில் அவைத் தலைவர் அர்ஜூனராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதிமுக 6 தொகுதிகள் கேட்டதாகவும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் 4 இடங்கள் வரை ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மதிமுக அவைத் தலைவர் அர்ஜூனராஜ் கூறும்போது, “கூடுதல் தொகுதிகள், தனிச் சின்னத்தில் போட்டி, மாநிலங்களவை இடம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எத்தனை இடங்கள் என்பதை பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் சொல்கிறோம். நாங்கள் போட்டியிடும் தொகுதிகளைக் குறைத்து கொள்ள வேண்டும் என எதுவும் திமுக தரப்பில் சொல்லவில்லை” என்றார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால், அது 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, வரும் 26-ல் மார்க்சிஸ்ட், 27-ல் இந்திய கம்யூனிஸ்ட், 28-ல் விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அனைத்துக் கட்சிகளுடனும் விரைவில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து, மார்ச் முதல்வாரத்தில் தொகுதிகள் பட்டியலை வெளியிட திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, February 25, 2026
‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை’ - அதிமுக 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி
பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 25, 2026, மாசி 25, விசுவாவசு வருடம் 03:40 AM
சென்னை,
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிமுக மூன்றாம் கட்டமாக வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 2 கட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று (பிப்.24) 3-ம் கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அந்த வாக்குறுதிகள் குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
1. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.
2. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.
3. மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
4. ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000 ரூபாய் வழங்கப்படும்.
5. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும்; விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
6. நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதியில் * முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ. 2,000-மாக உயர்வு
$ வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி
$ வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்
$ ஜல்லிக்கட்டில் உயிரிழந்தால் நிவாரணம்
$ சிறுபான்மையினருக்கான அறிவிப்புகளாக, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும், ஆகிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, February 24, 2026
8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!
சென்னை,
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த ஆண்டு (2025) டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தன. அதற்கு முன்னதாக, நவம்பர் 33-ந் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், 8-வது ஊதியக் குழுவுக்கு தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஊதியக் குழுவின் பரிந்துரை அமல்படுத்தும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. .
சம்பள உயர்வு எவ்வளவு?அதே நேரத்தில், கடந்த கால நடைமுறைகளை பின்பற்றினால், திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது.
8-வது ஊதியக் குழு அறிக்கை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதை செயல்படுத்த கூடுதல் நேரம் ஆகலாம். இருப்பினும், அரசாங்கம் பரிந்துரைகளை எப்போது அங்கீகரித்தாலும், 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் அரியர் தொகை கணக்கிட்டு வழங்கப்படும் என நம்பப்படுகிறது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயரும்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே, 6-வது சம்பளக் குழு சராசரியாக 40 சதவீத சம்பள உயர்வை வழங்கியது. அதே நேரத்தில், 7-வது சம்பளக் குழு 23 முதல் 25 சதவீதம் என்ற அளவிலேயே சம்பள உயர்வை வழங்கியது.
அதாவது, தற்போதைய பொருளாதார நிலை அடிப்படையிலேயே இது கணக்கிடப்படும் என்பதால் சற்று ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது..18 மாத கால அவகாசம்தற்போதைய நிலவரப்படி, 8-வது ஊதியக்குழு 20 முதல் 35 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வை பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால், கால அளவு இன்னும் 18 மாதங்கள் இருக்கும் நிலையில், பணவீக்கம், வரி உயர்வை பொறுத்து இதில் மாற்றம் ஏற்படக் கூடும். 8-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுவது உறுதியானாலும், அரியர் தொகையை எவ்வாறு கணக்கிடுவது? என்ற கேள்வி பலருக்கு எழலாம்..
அரியர் தொகையை எவ்வாறு கணக்கிடுவது?
அரியர் தொகையை கணக்கிடுவது மிகவும் எளிது. முதலில், ஊழியரின் பழைய அடிப்படை சம்பளத்திற்கும் புதிய முன்மொழியப்பட்ட அடிப்படை சம்பளத்திற்கும் இடையிலான வேறுபாட்டை கணக்கிடவேண்டும்.
பிறகு இந்த வேறுபாடு சம்பள உயர்வு நிலுவையில் உள்ள மாதங்களின் எண்ணிக்கையால் பெருக்க வேண்டும்.அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் அகவிலைப்படி (டி.ஏ) தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால், புதிய அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும்போது, அகவிலைப்படியில் உள்ள வித்தியாசமும் மொத்த நிலுவைத் தொகையுடன் சேர்க்கப்படுகிறது..
லட்சக்கணக்கில் அரியர் தொகைதற்போது, நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசிக்கு மத்தியில் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8-வது ஊதியக் குழு 2027-ம் ஆண்டு மத்தியில் அல்லது 2028-ம் ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டு கால நடைமுறைப்படி, இதன் அமலாக்க தேதி 2026 ஜனவரி 1-ந் தேதி என அரசு அறிவித்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் லட்சக்கணக்கில் அரியர் தொகை கிடைக்கும்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Featured post
28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து
பதிவு: வியாழக்கிழமை, மார்ச் 05, 2026, மாசி 21, விசுவாவசு வருடம் 07:00 AM சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...







