Wednesday, April 1, 2026

“ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 03:40 AM

சிவகாசி,

“இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். அந்த அளவுக்கு ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது” என சிவகாசியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சிவகாசி பேருந்து நிலையம் அருகே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “விருதுநகர் மாவட்டத்தில் 5 தொகுதியில் அதிமுக வேட்பாளர்களும், 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். சிவகாசி பட்டாசு உலகளவில் புகழ்பெற்றது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்த போது 20 எம்.பி-க்கள் தம்பிதுரை தலைமையில், துறை அமைச்சரை சந்தித்து பட்டாசு விற்பனைக்கு தடை கூடாது என்று கோரிக்கை வைத்தோம். பட்டாசு தொழிலை காப்பாற்ற நீதிமன்றத்தில் வாதாடியது அதிமுக அரசு. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் பாதுகாக்கப்படும்.

காவிரி - குண்டாறு திட்டம் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் வெட்டி கொண்டு வருவது சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கு உதவும். இத்திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நான் அடிக்கல் நட்டு வைத்தேன். ஆனால், இத்திட்டத்தை திமுக திட்டமிட்டு முடக்கிவைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் விருதுநகர் மாவட்டம் பசுமையாக மாறும். திமுக விவசாயிகள் விரோத அரசு என்பது இந்த திட்டத்தை முடக்கியதில் இருந்தே தெரிகிறது.

ரூ.400 கோடியில் நாம் கொண்டு வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சியில் ஒன்று கூட வரவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத பொம்மை முதல்வர் தான் தமிழகத்தை ஆள்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும் டிஜிபி-யை நியமிக்கவில்லை.

எங்கே பார்த்தாலும் கஞ்சா, போதை மாத்திரை. பல ரூபத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. போதை ஆசாமிகளால் காவல் துறையை சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பில்லை. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. டிஜிபி ஒருவர் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என ‘ஓ’ போட்டுக்கொண்டே ஓய்வு பெற்றுவிட்டார். ஏனெனில், கஞ்சா விற்பதே ஆளுங்கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான். அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தமிழகத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.

நான் இங்கு வரும்போது பெண் குழந்தைகள், ‘மீண்டும் அதிமுக ஆட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பு, திமுக இனி எப்போதும் எங்களுக்கு வேண்டாம்’ என்று எழுதிய டி-சர்ட்டை என்னிடம் கொடுத்தார்கள். உங்கள் ஆட்சி மலரும், நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள், என்று கொடுத்தனர். குழந்தைகள் மனதில் கூட பிரச்சினை எப்படி ஆழமாக பதிந்துள்ளது என்பதை எண்ணிப் பார்த்து அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். கடந்த முறை திமுக ஆட்சியில் 525 அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்ற வில்லை. 2026 தேர்தல் வருவதால் மீண்டும் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

மின் கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்தியும், ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்த்தி மொத்தம் 67 சதவீதம் உயர்த்தி விட்டதால் அச்சகம் உள்ளிட்ட சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு, குப்பை வரி விதித்த இந்த ஆட்சி மக்களுக்கு தேவையா?

நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் முதல்வர் மகனும், மருமகனும் இரு ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக பேசியது குறித்து முதல்வர் இதுவரை பதில் அளிக்கவில்லை.

அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம்.

இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம் என்கிறார் முதல்வர். ஊழல் செய்வதில் இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி திமுக அரசு. ஊழலுக்கு கலைக்கப்பட்ட ஓர் அரசு திமுக அரசு. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. திமுகவையும், ஊழலையும் பிரிக்க முடியாது.

73 ஆண்டுகள் பல கட்சிகளின் ஆட்சியில் ரூ.4.85 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டார். ஆனால் ஸ்டாலின் மத்திய அரசு நிதி வழங்க வில்லை என்கிறார்.

கரோனா காலத்தில் வருவாய் இல்லாத போதிலும் மக்களை பாதுகாத்த அரசு அதிமுக. கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்த போதும் நிதி நிலைமையை சரியாக வைத்துக் கொண்டோம். அந்த காலத்தில் பொங்கல் பரிசு, ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கினோம். ரூ.1.36 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாய் வந்த போதும் அதிக கடன் வாங்கி மக்களின் பணத்தை சுரண்டும் திமுக ஆட்சி தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து தான் மகளிர் ஊக்கத்தொகை அளித்தனர். அதை அதிமுக தான் போராடி வாங்கி கொடுத்தது. அதிமுக ஆட்சி அமைந்ததும் மாதம் ரூ.2 ஆயிரம், குளிர்சாதன பெட்டி, 5 லட்சம் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். ஆண்கள் நகர பேருந்தில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். தீபாவளிக்கு பட்டு சேலை, ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக. மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பல்வேறு பணிகள் செய்து கொடுத்து உள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்று தர வேண்டும். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. பை-பை ஸ்டாலின்” என்று அவர் பேசினார்.

இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி (சிவகாசி), வி.ஜி.கணேசன் (விருதுநகர்), சந்திரபிரபா( ஸ்ரீவில்லிபுத்தூர்), சோலை சேதுபதி (அருப்புக்கோட்டை), ராஜவர்மன் (திருச்சுழி), தாமரை சின்னத்திற்கு பிரிசில்லா பாண்டியன் (ராஜபாளையம்), சாத்தூர் தொகுதிக்கும் வாக்கு அவர் சேகரித்தார்.

“முந்தைய சாதனைகளை முறியடிக்கும் ஆட்சியை வழங்குவோம்” - திருவாரூரில் ஸ்டாலின் உற்சாகம் - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 02:40 AM

திருவாரூர்,

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், டிஆர்.பி.ராஜா, மாரிமுத்து, முகமது முபாரக் உள்ளிட்டோர்.

‘‘​தி​ரா​விட மாடல் 2.0 ஆட்​சி​யில் எங்​கள் சாதனை​களை நாங்​களே முறியடிக்​கும் அளவு சிறப்​பான ஆட்​சியை வழங்​கு​வோம்’’ என்று திரு​வாரூரில் நேற்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார்.

திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து தமிழக முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின், திரு​வாரூரில் நேற்று பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். திரு​வாரூர் தெற்கு வீதி​யில் நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் திமுக வேட்​பாளர்​கள் திரு​வாரூர் பூண்டி கலை​வாணன், மன்​னார்​குடி டிஆர்​பி.​ராஜா, திருத்​துறைப்​பூண்டி இந்​திய கம்​யூனிஸ்ட் வேட்​பாளர் மாரி​முத்​து, உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிடும் நன்​னிலம் எஸ்​டிபிஐ வேட்​பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: இந்த 2026 தேர்​தலின் சூப்​பர் ஸ்டார் தேர்​தல் அறிக்​கையை நேற்று முன்​தினம் வெளி​யிட்​டேன். நேற்று கொளத்​தூர் தொகு​தி​யில் வேட்பு மனு தாக்​கல் செய்​தேன். இன்று தலை​வர் கருணாநி​தியை வளர்த்​தெடுத்த திரு​வாரூர் மண்​ணிலிருந்து திமுக தலை​மை​யில் அமைந்​துள்ள மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யின் வெற்றி பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கிறேன். திரு​வாரூர் என்​றால் அது திமுக ஊர். அதனால் இங்​கிருந்து தொடங்​கு​கிறேன்.

திரு​வாரூர் பெயர் அழகு. அதை​விட திரு​வாரூர் தேர் பேரழகு. நேற்று முன்​தினம் தான் திரு​வாரூர் தேரோட்​டம் கம்​பீர​மாக நடந்து முடிந்​துள்​ளது. கடந்த 1948-க்​குப் பிறகு 22 ஆண்​டு​கள் ஓடா​மல் இருந்த திரு​வாரூர் ஆழித்​தேரை ஓட வைத்​தவர் கருணாநி​தி. திமுக ஆட்​சி​யில் இருக்​கும் போதெல்​லாம் திரு​வாரூருக்கு நிறைய செய்​துள்​ளோம்.

திரு​வாரூர் மாவட்​டத்தை உரு​வாக்​கியது, ஆட்​சி​யர், நீதி​மன்​றம், மாவட்ட காவல் அலு​வல​கங்​கள், நகராட்சி கட்​டிடம், புதிய பேருந்து நிலை​யம், மத்​திய பல்​கலைக்​கழகம், மருத்​து​வக் கல்​லூரி, மன்​னார்​குடி அரசு கல்​லூரி, பாமணி உரத் தொழிற்​சாலை, மாவட்​டம் முழு​வதும் குடிநீர் வசதி, டி.ஆர்​.​பாலு முயற்​சி​யால் செம்​மொழி உட்பட 5 புதிய ரயில்​கள் என ஏராள​மான வளர்ச்சி திட்​டங்​களை செய்​துள்​ளோம். நெல் ஜெய​ராமனுக்கு நினை​வுச் சின்​னம் அமைத்து வரு​கிறோம்.

கடந்த 2021-ல் எங்​கள் மீது நீங்​கள் நம்​பிக்கை வைத்து ஆட்சி பொறுப்பை ஒப்​படைத்​தீர்​கள். முதல்​வ​ராக பொறுப்​பேற்ற முதல் நாளி​லிருந்து பெண்​கள் விடியல் பயணம், 1.31 கோடி பெண்​களுக்கு உரிமைத் தொகை, மாணவர்​களுக்கு காலை உணவு, நான் முதல்​வன், புது​மைப் பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டம் என ஏராள​மான திட்​டங்​கள் கொண்டு வந்​தேன். பொங்​கல் தொகுப்பு ரூ.3,000 வழங்​கினோம்.

தமிழகத்தை பார்த்து பல மாநிலங்​கள் மகளிர் உரிமைத் தொகை திட்​டத்தை தொடங்கி உள்​ளனர். தேர்​தலைக் காட்டி அதை நிறுத்த மத்​திய பாஜக அரசு திட்​ட​மிட்​டது. நாங்​கள் விழித்​துக் கொண்​டோம். ஏழைகளின் சுருக்​குப்​பை​யில் இருந்து காசை உரு​வ திட்​டம் போடும் பாஜக​வுக்​கு, திரா​விட மாடல் நலத்​திட்​டம் மூலம் மக்​களுக்கு நேரடி பணம் பலன் கிடைப்​பது எரி​யத்​தான் செய்​யும். யார் வயிறு எரிந்​தால் என்ன? மக்​களின் மனசு நிறையணும் என்​பது​தான் என் லட்​சி​யம். அதனால்​தான் 3 மாத உரிமைத் தொகை, கோடை கால சிறப்பு நிதி என ரூ.5,000 வழங்​கினோம்.

எல்​லாத் திட்​டத்​தி​லும் தமிழகம் டாப்​பில் இருப்​பது​தான் பாஜக தலை​மை​யில் செயல்​படும் அதி​முக உள்​ளிட்ட அடிமைக் கட்​சிகளுக்கு எரிச்​சலை உண்​டாக்கி உள்​ளது. தமிழகத்தை எப்​படி​யா​வது கலவர பூமி​யாக்​கி​விடலாம் என திட்​ட​மிட்டு ஏராள​மான போலி செய்​தி​களைப் பரப்​பிப் பார்த்​தனர். கலவர வெறியோடு திரிந்​தவர்​களுக்கு ஏமாற்​றம்​தான் மிஞ்​சி​யது. அவர்​கள் பரப்​பியது அனைத்​தும் அவதூறு என உண்மை வெளிப்​பட்டு மக்​கள் முன் அசிங்​கப்​பட்டு நிற்​கின்​றனர்.

கடந்த 2011-21 வரை தமிழகத்​தைப் பாழாக்கி தலைகுனிய வைத்த அதி​முக, 2014-லிருந்து இந்​தி​யாவை மோச​மான நிலைக்கு அழைத்​துச் சென்​றுள்ள பாஜக​வுடன் சரணாக​தி​யடைந்து கூட்​டணி அமைத்​துள்​ளது. அவர் நம் தேர்​தல் அறிக்​கை​யைப் பார்த்து காப்பி அடித்து விட்​டு, நாம் அவரைப் பார்த்து காப்பி அடித்​தோம் என புலம்​பு​கிறார்.

அவருக்கு எதைப் பற்​றி​யும் புரிதல் கிடை​யாது. தொலை நோக்கு பார்​வை​யும் இல்​லை. அவரது உளறல்​களில் ‘ஹை லைட்’ எது தெரி​யு​மா? எப்​படி உங்​கள் திட்​டங்​களை நிறைவேற்​று​வீர்​கள் எனக் கேட்​டால் வரியை உயர்த்தி நிறைவேற்​று​வேன் என்​கிறார். அதனால் தான் பழனி​சாமியை எளி​தாக மிரட்டி அடிமைக் கூட்​ட​ணி​யில் பாஜக வைத்​துள்​ளது. தமிழகத்​தின் வளர்ச்​சியை தடுப்​பது, திரா​விட மாடல் ஏற்​படுத்​திய வளர்ச்​சியை அழிப்​பது​தான் என்​டிஏ கூட்​ட​ணி​யின் நோக்​கம்.

தமிழகத்​தில் திமுகவை எதிர்க்க தங்​களுக்கு வலிமை​யில்லை என்​ப​தால் அதி​முகவை பாஜக விலைக்கு வாங்கி உள்​ளது. பொது​வாக பாஜக மக்​களுக்கு நல்​லது செய்​யாது. தேர்​தல் வந்​தால் பட்​ஜெட்​டில் கண்​துடைப்​புக்​காக சில அறி​விப்​பு​களைப் கொடுப்​பார்​கள். ஆனால், தமிழகத்​தில் அதைக்​கூட செய்ய மனமில்​லாத வஞ்சக எண்​ணத்​தோடு இருக்​கும் உரு​வம்​தான் என்​டிஏ.

பாஜக மத்​தி​யில் ஆட்​சிக்கு வந்த பிறகு தமிழகத்​துக்கு எந்த நன்​மை​யும் செய்​ய​வில்​லை. எந்த சிறப்பு திட்​டத்​தை​யும் செய்​ய​வில்​லை. இத்​தனை​யும் சமாளித்து பல்​வேறு சாதனை​களை செய்​துள்​ளோம். திறமை​யான நிர்​வாகத்​தால் நம்​பர் ஒன் மாநில​மாக உள்​ளோம்.இந்தி திணிப்பை ஏற்​க​வில்லை என்​ப​தால் நம் வீட்டு குழந்​தைகளுக்​கான கல்வி நிதி​யைக் கூட தரவில்​லை. இப்​படி வஞ்சக எண்​ணம் கொண்ட கூட்​டத்​திடம் தமிழகத்​தின் எதிர்​காலத்தை ஒப்​படைக்க முடி​யு​மா? எனவே, என்​டிஏவை புறக்​கணிக்க வேண்​டும். அப்​போது தான் தமிழகத்​தின் எதிர்​காலம் காப்​பாற்​றப்​படும்.

இந்​தத் தேர்​தல் என்​பது தமிழ்​நாடு அணி வெர்​சஸ் டெல்லி அணி. தமிழகத்தை காக்க திமுக​தான் மீண்​டும் ஆட்​சிக்கு வரவேண்​டும். தமிழகம் கலவர பூமி​யாக மாறாமல் இருக்க பாஜக- அதி​முக கூட்​ட​ணியை வேரோடு வீழ்த்த வேண்​டும். நாம் போராடு​வது திமுக கூட்​ட​ணிக்​கான வெற்றி அல்ல, இது தமிழகத்​துக்​கான வெற்​றி. எனவே, அரசி​யல் விருப்பு வெறுப்​பு​களுக்கு அப்​பாற்​பட்​டு,தமிழகத்​தைக் காக்க மக்​கள் அனை​வரும் தி​முக தலை​மையி​லான மதச்​சார்ப்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யை ஆதரிக்​க வேண்​டும்​. அடுத்​து அமைய​வுள்​ள தி​ரா​விட மாடல்​ 2.0 ஆட்​சி​யில்​ எங்​கள்​ சாதனை​களை நாங்​களே முறியடிக்​கும்​ அளவு சிறப்​பான ஆட்​சியை வழங்​குவோம்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Tuesday, March 31, 2026

நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு - நாளை முதல் துவங்குகிறது!

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM

சென்னை,

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவங்குகிறது. ஆன்லைனிலும், நேரடியாகவும் இரு கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில், ஜூலை 17 முதல் சுய விபரங்களை ஆன்லைனில் பதிவிடலாம்.

நாட்டில், 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். கடந்த, 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சுதந்திரத்திற்கு பின் எட்டாவது முறையாக நாளை மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குகிறது.

இது குறித்து, தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் மிருத்யுஞ்ஜய் குமார் நாராயணன் நேற்று கூறியதாவது:

நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவங்குகிறது. இந்த முறை பொதுமக்கள் தங்களை பற்றிய விபரங்களை, இணையதளம் வாயிலாக அவர்களாகவே பதிவு செய்யும், 'சுய விபரம்' என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ், அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது உட்பட, 16 மொழிகளில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் சுய விபரங்களை பதிவு செய்வோருக்கு, 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பாளர், வீட்டிற்கு நேரில் வரும்போது, இந்த 16 இலக்க எண்ணை அவர்களிடம் வழங்கினால் போதும். 

ஆதார், வாக்காளர் அடையாள அட்டை என, வேறு எந்த ஆவணங்களையும் கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்கள் அனைத்தும் மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பாளர்களால் பதிவு செய்யப்படும். 

இந்த பிரமாண்ட பணி இரு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இருக்கும். இதில் தான் ஜாதி, மதம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு பணியில், 31 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். இதற்காக, 33 கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்திற்கான கேள்விகள், பின் அறிவிக்கப்படும். 

பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், பிரிவு 15ன் படி, நீதிமன்ற ஆதாரமாகவோ அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகவோ கேட்டு பெற முடியாது. சைபர் பாதுகாப்பு முகமைகளின் உதவியுடன், பொதுமக்களின் தரவுகள் அனைத்தும், 'என்கிரிப்ட்' செய்யப்பட்டு சர்வரில் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

நாடு முழுதும் இந்த முறை டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால், மாநிலம் வாரியாக, சுய விபர பதிவு மற்றும் கணக்கெடுப்பாளர் வீடு தேடி வரும் தேதிகள் மாறுபடுகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் பொதுமக்கள் தங்களது சுய விபரங்களை, ஜூலை 17 - 31 வரை பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்யலாம். வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பு, ஆகஸ்டு 1 - 30 வரை நடக்கிறது. புதுச்சேரியில், சுய விபர பதிவு, மே 17 - 31 வரையிலும், வீடு தேடி வரும் கணக்கெடுப்பு, ஜூன் 1 - 30 வரையிலும் நடக்கிறது. 

நேரடி கணக்கெடுப்பு

தலைநகர் டில்லியில், மாநகராட்சி ஒரு பகுதியாகவும், புதுடில்லி மற்றொரு பகுதியாகவும் இரண்டாக பிரிக்கப்பட்டு இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. அந்த வகையில், டில்லி மாநகராட்சி பகுதிகளில் சுய விபர பதிவு ஏப்ரல் 1 - 15 வரையிலும், நேரடி கணக்கெடுப்பு ஏப்ரல் 16 - மே 15 வரையிலும் நடக்கிறது. டில்லியின் பிற பகுதிகளில் சுய விபர பதிவு, மே 1 - 15 வரை நடக்கிறது. வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பு, மே 16 - ஜூன் 14 வரை நடக்கிறது.

கேள்விகள்!

கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீட்டிற்கு வரும்போது, 33 கேள்விகளை கேட்பர்.  அதில் இடம் பெற்ற சில முக்கியமான கேள்விகள்: வீட்டு விலாசம், மாடி வீடா - கூரை வீடா, வீட்டின் தற்போதைய நிலை, எத்தனை பேர் வசிக்கின்றனர், வீடு யார் பெயரில் இருக்கிறது, குடும்பத் தலைவர் ஆணா, பெண்ணா, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவரா, பிற சமூகத்தை சேர்ந்தவரா என்ற கேள்விகள் அடங்கும். 

வீட்டில் உள்ள மொத்த அறைகள், திருமணமானவர்கள் எத்தனை பேர் வசிக்கின்றனர். குடிநீருக்கான முக்கிய ஆதாரம், கழிப்பறை, குளியலறை வசதிகள், டிவி, இணையதளம், கணினி வசதிகள், தரைவழி தொலைபேசி, மொபைல் போன், சைக்கிள், ஸ்கூட்டர், பைக், மொபட், கார், ஜீப், வேன் போன்ற வாகன வசதிகள் குறித்தும் கேள்விகள் இடம் பெற்றுள்ளன. தொடர்புக்காக மொபைல் எண் கேட்கப்படும்.

இனி இவங்களும் தம்பதி தான்!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில், பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை விளக்கும் வகையில், 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' பகுதி இடம் பெற்றுள்ளன. இதில் தற்கால சமூக மாற்றங்களை கருதி, அதற்கேற்ப சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

குறிப்பாக, திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில், 'லிவ் - இன்' முறையில் இணைந்து வாழும் தம்பதியரின் உறவு நிலை, அவர்களை திருமணம் முடித்த தம்பதியராகவே கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படும். இது தவிர, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, உணவு முறை, பழக்க வழக்கம், சொந்த வீடு எனில், அதற்காக பயன்படுத்திய கட்டுமான பொருட்கள் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

‘விஜய்க்கு அசையும் சொத்து ரூ.404.58 கோடி உள்ளது’ - வேட்பு மனுவில் தகவல்

 
 
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 04:40 AM

சென்னை,

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அந்த வேட்பாளரின் சொத்து விவரங்கள், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், நேற்று பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

விஜய்யின் மனைவி சங்கீதா பெயரில் ரூ.15.51 கோடி அசையும் சொத்து இருப்பதாக விஜய் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். விஜய்யின் மனைவி வசம் ரூ.4.07 கோடியில் 3,132 கிராம் தங்கம், ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய்யின் மகன், மகள் வங்கி கணக்கில் ரூ.4 லட்சம் உள்ளது. விஜய்யின் பூர்வீக சொத்தின் மதிப்பு ரூ.21.83 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் வங்கி கணக்கில் ரூ.220 கோடி உள்ளதாகவும், அவரது மனைவி சங்கீதாவின் வங்கி கணக்கில் ரூ.10.43 கோடி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கையில் ரூ.2 லட்சம் ரொக்கம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

2024-25ல் மட்டும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரூ.184 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு ரூ.7.45 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

விஜய்யிடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி, ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளது. விஜய் மனைவியிடம் 2 கிலோ வெள்ளி, ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் விஜய்யின் மொத்த வருமானம் ரூ.734.45 கோடி என்றும், பல்வேறு தனி நபர்கள், நிறுவனங்களுக்கு விஜய் சுமார் ரூ.76 கோடி கடன் வழங்கியுள்ளார் என்றும் அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலினிடம் சொந்தமாக வாகனங்கள் இல்லை - வேட்பு மனுவில் தகவல்

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 04:00 AM

சென்னை,

மு.க.ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அந்த வேட்பாளரின் சொத்து விவரங்கள், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்ட சொத்து விவரங்கள் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மு.க.ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.4.34 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும், 720 கிராம் தங்கம் உள்ளதாகவும், கையிருப்பில் ரூ.40 ஆயிரம் உள்ளதாகவும் தனது வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தன்னிடம் சொந்தமாக வாகனங்கள், தங்க நகைகள் எதுவும் இல்லை என மு.க.ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினிடம் ரூ.10 ஆயிரம் கையிருப்பு பணம் உள்ளதாகவும், அவரின் வருவாய்க்கான ஆதாரம் எம்.எல்.ஏ. ஊதியம், வங்கி வைப்பு நிதி வட்டி என்றும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மு.க.ஸ்டாலின் பெயரில் குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவிக்கு எந்த கடன்களும் இல்லை என்றும், மு.க.ஸ்டாலின் பெயரில் தஞ்சை அகரத்திருநல்லூரில் 2.86 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், திருவாரூரில் ரூ.1.12 கோடி மதிப்பில் நிலம் உள்ளதாகவும் அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, March 30, 2026

“எப்படியாவது உதயநிதியை முதல்வராக்கவே ஸ்டாலின் பாடுபடுகிறார்” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 30, 2026, பங்குனி 16, விசுவாவசு வருடம் 02:00 AM

நாகர்கோவில்,

“எப்படியாவது உதயநிதியை முதல்வராக்குவதற்குத் தான் ஸ்டாலின் பாடுபடுகிறார். இம்முறை அப்படியே திமுக வென்றாலும் ஸ்டாலின் முதல்வர் கிடையாது. அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இனி தமிழகத்தை சாதாரண மக்களில் ஒருவர்தான் ஆள வேண்டும். மக்கள் மனதை புரிந்தவர் தான் வரவேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆரல்வாய்மொழியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “இந்த மாவட்டத்தில் வேளாண்மை, மீன்பிடித்தொழில், ரப்பர் தோட்டம் ஆகியவையே மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்தோம். நானும் விவசாயி தான். நாட்டுக்கு உணவு அளிப்பவர் விவசாயி. அடுத்து மீன்பிடித் தொழில். அது சாதாரண தொழில் அல்ல, வீடு திரும்பினால் தான் நிச்சயம். ஆபத்தான தொழில். அவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம், பல திட்டங்கள் சொல்லியிருக்கிறோம்.

இங்கு ரப்பர் தொழிலும் சிறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2017ல் இந்த மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கியது. உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தோம், கப்பல் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணிகளில் ஈடுபட்டோம். 31 ஆயிரம் மீனவர்களுக்கு வாழ்வாதார நிதி 2,500 ரூபாய் வழங்கினோம். சேதமடைந்த வீடுகள் விவசாயப் பயிர்களுக்கும் நிவாரணம் அளித்தோம். 16 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம் அடைந்தது, அவற்றையும் சரிசெய்தோம்.

திமுக ஆட்சியில் மத்தியில் காங்கிரஸ் இருக்கும்போதுதான் கச்சத்தீவை தாரை வார்த்தனர், மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்த, ஓய்வெடுக்க கச்சத்தீவை பயன்படுத்தி வந்தனர், அதனை மீண்டும் மீட்க அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும். அதிமுக சார்பில் கன்னியாகுமரி தொகுதிக்கு தளவாய் சுந்தரம் நிறுத்தப்பட்டுள்ளார் அவருக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களியுங்கள். கிள்ளியூர் தொகுதியின் தமாகா வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன், நாகர்கோவில் குளச்சல் பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதியில் போட்டியிடும் பாஜகவினருக்கு தாமரை சின்னத்திலும் வாக்களியுங்கள்.

இந்த மாவட்டத்தில் உயர்கல்வி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ளது. அதிமுக ஆட்சியில் இங்கு இரண்டு இடங்களில் கல்லூரி கொடுத்தோம், நாகர்கோவில் மற்றும் பால்குளம் இரண்டு இடத்தில் அரசு கல்லூரி கொடுத்தோம். கல்விக்கு முன்னுரிமை கொடுத்தோம். பல துறைகள் இருந்தாலும் நாட்டின் வளர்ச்சி என்பது கல்வியை மையமாக வைத்துத்தான் இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் முன்னுரிமை கொடுத்து அதிக நிதியுதவி செய்தோம்.

2011-2021 அதிமுக ஆட்சி 10 ஆண்டுகளில் 68 கலை, அறிவியல் கல்லூரிகள் கொடுத்தோம். 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என பல கல்லூரிகளைத் திறந்தோம். 248 தொடக்கப்பள்ளிகள், 117 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 1079 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 604 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டன. ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம்.

ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர கூட திராணியற்றது திமுக அரசு. மிகப்பெரிய கால்நடை பூங்கா, ஆயிரம் கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்கா தலைவாசலில் உருவாக்கினோம் அதைக்கூட முழுமையாக திறக்கவில்லை. அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டு கலப்பின பசுக்களை உருவாக்கி பால் வளத்தைப் பெருக்குவோம்.

ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் தான் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. திமுக அதை நிறுத்திவிட்டது.

அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் எடுத்துக் கூறினோம். நான்கரை ஆண்டுகள் கழித்து இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு ஆட்சியின் கடைசி நேரத்தில் அவசரமாக கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கொடுத்துள்ளனர். அது தரமற்ற லேப்டாப்பாக உள்ளதாக கேள்விபட்டேன். அதிமுக அரசு அமைந்தபிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, இதில் ஊழல் நடந்திருந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள், தாங்கள் இருக்கும் ஊர்களிலும், அருகாமையிலும் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டன. அதையும் நிறுத்திவிட்டனர், மீண்டும் அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படும். அம்மா மினி கிளினிக்கில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தப்பட்டு, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அம்மா கிளினிக் மூடிய இடங்களில் மட்டுமல்ல, மக்கள் கோரும் இடங்களில் எல்லாம் திறக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 254 ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவந்தோம். மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தியாவிலே அதிகமான தேசிய விருது பெற்ற ஒரே அரசு அதிமுக அரசு. நூற்றுக்கணக்கான தேசிய விருதுகள் பெற்றது. உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளும், போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வித்துறை என பல துறைகளிலும் விருதுகளை அள்ளியிருக்கிறது அதிமுக அரசு.

அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின்போதுதான். மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருதினைப் பெற்றது அதிமுக அரசு. இதெல்லாம் அதிமுக சிறந்த ஆட்சி என்பதற்கான உதாரணம்.

கொரோனா காலத்தில் ஓராண்டு மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட காலத்தில் கூட ஒரு வருடம் ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தைப்பொங்கல் அன்று 2500 ரூபாய் கொடுத்தோம். அம்மா உணவகம் மூலம் மூன்று வேளை உணவு கொடுத்தோம். உயிர்களைக் காப்பாற்றினோம். ஓராண்டு வரி வருவாய் அரசுக்கு இல்லை. அப்போதும் கூட சிறப்பான ஆட்சி கொடுத்தோம்.

இந்த ஆட்சியில் புயல், வெள்ளம், கொரோனா வந்ததா? ஒன்றுமில்லை. ஆனால், ஊழல் மட்டும் நிறைந்திருக்கிறது. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் மூன்றும் தான் ஐந்தாண்டு சாதனை. எப்படியாவது உதயநிதியை முதல்வராக்குவதற்குத் தான் ஸ்டாலின் பாடுபடுகிறார். வெற்றி பெறமாட்டார்கள், அப்படியே வென்றாலும் ஸ்டாலின் முதல்வர் கிடையாது. உங்கள் கனவு பலிக்காது. அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இனி தமிழகத்தை சாதாரண மக்களில் ஒருவர்தான் ஆள வேண்டும். மக்கள் மனதை புரிந்தவர் தான் வரவேண்டும். அந்த வகையில் கீழே இருந்து தான் நான் வந்துள்ளேன். ஸ்டாலின் போல வரவில்லை.

எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு சிறப்பான ஆட்சி செய்தேன். வறட்சி, புயலின்போதும் சிறப்பாக செயல்பட்டோம். கொரோனாவிலும் விலைவாசி உயரவில்லை, அப்படியொரு திறமையான ஆட்சி கொடுத்தோம். இந்த ஆட்சியில் சொத்துவரி, வீட்டு வரி, கடை வரி எல்லாம் 100% முதல் 150% உயர்ந்துவிட்டது. குப்பையைக் கூட விட்டுவைக்கவில்லை. மின்கட்டணம் 67% உயர்வு. இந்த அரசு மீண்டும் தொடர வேண்டுமா?.

மேலாக, இந்த ஆட்சியில் வருமானம் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. ஆனாலும் கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்கியும் புதிய திட்டம் எதுவும் வரவில்லை. இந்த பணம் எல்லாம் போக வேண்டிய இடத்துக்கு போய்விட்டது. 5 லட்சம் கோடி கடன். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடிதான், ஆனால் அதைவிட திமுகவின் ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன்.

கடன் வாங்கி என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்..? ஒருபக்கம் வருவாய் அதிகரிப்பு, ஒரு பக்கம் கடன் வாங்குகிறார்கள். ஆனால், அதிமுக கொரோனாவில் ஒரு வருடம் வருவாய் இல்லாமல் 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம். ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு தலை தொங்கிப் போயிருக்கிறது. இந்த கடன் எல்லாம் மக்கள் தலையில் தான் விழும். நான் பேசுவது சரியா, தவறா என்று சிந்தியுங்கள், சரியாக இருந்தால் ஆதரியுங்கள். எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை பொருட்கள் பல வடிவத்தில் வந்துவிட்டது, போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடரவேண்டுமா?

கன்னியாகுமரியில் அரசு கலைக் கல்லூரி, 110 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம், சுற்றுலாவுக்கு இரண்டு அதிநவீன கப்பல் வாங்கி கொடுத்தோம், மேலமணக்குடி கீழ மணக்குடி மேம்பாலம் கட்டப்பட்டது. மணக்குடி உயர்மட்டப் பாலத்துக்கு லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவர் பெயர் சூட்டப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தோவாளையில் தென்னை மதிப்புக் கூட்டு மையம் அமைக்கப்பட்டது. 250 கோடியில் குடிநீர்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது, அதனை திமுக கிடப்பில் போட்டது, இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலர் உற்பத்தி சாகுபடி விவசாயிகளுக்கு எம்ஜிஆர் மலர் வணிக வளாகம் தோவாளையில் அமைத்துக் கொடுத்தோம். தென்னை மதிப்புக் கூட்டு வாரியத்துக்கு 16 கோடியில் கட்டிடம் அமைக்கப்பட்டது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மூடிவிட்டனர்.

மீனவர் மக்கள் கோரிக்கையை ஏற்று மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை 12 ஆயிரமாக உயர்த்தி கொடுத்திருக்கிறோம். மீனவர் இறந்தால் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் வழங்கப்படும், மீனவர்களுக்கு இன்சூரன்ஸ் செய்துகொடுக்கப்படும். பிரீமியத்தை அரசே செலுத்தும். மீனவர் மீட்புக்குழு, இழுவைப்படகு வசதி செய்துகொடுக்கப்படும்,. கடற்கரை மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். தூண்டில் வளைவு, கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்படும். மீனவர் மானிய டீசல் 500 லிட்டராக உயர்த்தப்படும். மீனவர் பொருளாதாரம் மேம்படுத்த மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். நவீன படகுகள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கப்படும். தொலைதொடர்பு மையம் ஏற்படுத்தப்படும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் வழங்கப்படும். மக்களின் துன்பத்தை களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். விலையில்லா பருப்பு எண்ணெய் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடு கட்டுக்கொடுக்கும். பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் 5 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நடைபாதை ஓரமாக புதிய கடை வைப்பவர்களுக்கு 2 லட்ச ரூபாய் கடனுதவி வழங்கப்படும். கட்டிடத் தொழிலாளர்கள் உயிர் இழந்தால் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அவர்கள் காப்பீட்டில் சேர்க்கப்பட்டு பிரீமியம் தொகையை அரசே செலுத்தும்.

திமுக ஆட்சியில் நீட் ரத்து செய்வேன் என்று சொன்னார்கள். ஆனால், நீட் கொண்டுவந்ததே திமுக தான். 2010 டிசம்பர் 21ம் தேதி திமுகவை சேர்ந்த காந்திசெல்வன் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் நீட் சட்டம் கொண்டுவரப்பட்டது. கொண்டுவந்ததும் திமுக, காங்கிரஸ். எதிர்ப்பதும் அவர்கள் தான். இரட்டை வேடம் போடுகிறார்கள். நீட் ரகசியம் இருக்கிறது என்றார் உதயநிதி. நீட்டுக்கு விதிவிலக்கு பெற முடியாது என்று சட்டமன்றத்தில் ரகசியத்தை சொல்லிவிட்டார் ஸ்டாலின். மக்களை ஏமாற்றி திமுக அந்தர் பல்டி அடித்துவிட்டது. இதைத்தான் நாங்களும் சொன்னோம்.

வருகின்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம், ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.

இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் - திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் - முழு விபரம்

பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 30, 2026, பங்குனி 16, விசுவாவசு வருடம் 01:00 AM

சென்னை,

சென்னையில் திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். உடன் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி திமுக தேர்​தல் அறிக்​கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளி​யிட்​டார். வரு​மான வரி செலுத்​தாத குடும்​பத்தை சேர்ந்த இல்​லத்​தரசிகளுக்கு வாஷிங் மெஷின், டிவி, பிரிட்​ஜ், மிக்​சி, மைக்​ரோவேவ் அவன், மின் அடுப்​பு​கள் போன்ற வீட்டு உபயோக பொருட்​கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்​பில் கூப்​பன் வழங்​கும் 'இல்​லத்​தரசி' திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று அவர் அறி​வித்​துள்​ளார்.

சட்​டப்​பேரவை தேர்​தலை முன்னிட்டு, திமுக தேர்​தல் அறிக்​கையை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று வெளியிட்டார். அவர் பேசி​ய​தாவது: கடந்த 5 ஆண்டுகால ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மகளிர் உரிமைத்​தொகை உள்​ளிட்ட ஏராள​மான திட்​டங்​களைச் செயல்​படுத்தி தமிழகத்தை அனைத்து துறை​யிலும் வளர்த்​தோம்.

தொலைநோக்​குத் திட்​டங்​கள் மூல​மாக தமிழகம் முழு​மை​யான வளர்ச்​சி​யைப் பெற்​றுள்​ளது. தமிழகத்​தில் கல்​வியை, கட்​டமைப்​பை, சமூகநீ​தி​யை, இது​வரை நாம் அடைந்த முன்​னேற்​றத்தை பாது​காக்க வேண்​டு​மா​னால் திமுக ஆட்​சி தொடர வேண்​டும். திரா​விட மாடல் 2.0 அமைய வேண்​டும்.

அதற்கு அடித்​தள​மாக, உங்​களின் கனவு​களை நிறைவேற்ற ‘ஸ்டா​லின் ஸ்டேட்​மென்ட்டை (Stalin Statement)’ வழங்​கி​யிருக்​கிறேன். அதன் விரி​வாக்​கம்​தான் திமுக​வின் தேர்​தல் அறிக்​கை. வரு​மான வரி செலுத்​தாத குடும்​பங்​களைச் சேர்ந்த இல்​லத்​தரசிகள், ரூ.8 ஆயிரம் மதிப்​பிலான கூப்​பனை பயன்​படுத்தி வாஷிங் மெஷின், டிவி. பிரிட்ஜ், மிக்​சி, மைக்​ரோவேவ் அவன், மின் அடுப்​பு​கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்​களை புதி​தாக வாங்​கிக்​கொள்ள அல்​லது ஏற்​கெனவே பயன்​படுத்தி வரும் பழைய பொருட்​களுக்கு மாற்​றாக​ பெற்​றுக்​கொள்ள ‘இல்​லத்​தரசி' திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

முதல்​வரின் காலை உணவு திட்​டம் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்​தப்​படும். 1.31 கோடி சகோதரி​கள் பெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை ​ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். இலவச மின்​சா​ரம் பெறும் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகளுக்கு நவீன மின் பம்ப்செட் வழங்​கப்​படும்.

அடுத்த 5 ஆண்டு​களில் 10 லட்​சம் புதிய வீடு​கள் கட்​டித்​தரப்​படும். முதல்​வரின் மருத்​துவக் காப்​பீடு திட்​டத்​தில் சேர்க்​கப்​படு​வதற்​கான வரு​மான வரம்பு ரூ.5 லட்​ச​மாக​வும், காப்​பீட்​டுத்​தொகை ரூ.10 லட்​ச​மாக​வும் உயர்த்​தப்​படும். நெல் கொள்​முதல் விலை குவின்​டாலுக்கு ரூ.3500, கரும்பு கொள்​முதல் விலை டன்னுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். பால் கொள்​முதல் விலை லிட்​டருக்கு ரூ.5 உயர்த்தி வழங்​கப்​படும். முதி​யோர் உதவித்​தொகை ரூ.1,200-ல் இருந்து ரூ.2 ஆயிர​மாக​வும், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான உதவித்​தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்​தப்​படும்.

மீன்​பிடி தடைக்​கால சிறப்பு நிவாரணத் ​தொகை ரூ.8 ஆயிரத்​தில் இருந்து ரூ.12 ஆயிர​மாக​வும், மீன்​பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத்​தொகை ரூ.6 ஆயிரத்​தில் இருந்து ரூ.9 ஆயிர​மாக​வும் உயர்த்​தப்​படும். சுயஉதவிக் ​குழு உறுப்பின​ராக இருக்​கும் பெண்​களை, தொழில் ​முனை​வோ​ராக முன்​னேற்ற பிணையின்றி ரூ.5 லட்சம் வரை மானி​யத்​துடன் கடன் வழங்​கப்​படும்.

பேரிடர் கால இழப்​பீடு​கள் ஹெக்​டேர் ஒன்​றுக்​கு, இறவைப் பாசன பயிர்​கள் மற்​றும் நெற்​ப​யிர்​களுக்கு ரூ.25 ஆயிரம், நீண்​ட​கால பயிர்​களுக்கு ரூ.27 ஆயிரம், மானாவரி பயிருக்கு ரூ.12 ஆயிர​மாக உயர்த்தி வழங்​கப்​படும். அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​காக அறிவிக்​கப்​பட்ட தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டம் சிறப்​பாக செயல்​படுத்​தப்​படும். 8-வது ஊதி​யக்​குழு அறிக்​கையை மத்​திய அரசு செயல்​படுத்​தி​யதும், மாநில அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கும் செயல்​படுத்​தப்​படும். 1.50 லட்​சம் அரசு காலி ​பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும்.

உயர்​கல்வி பயிலும் 35 லட்​சம் மாணவர்​களுக்கு 5 ஆண்​டு​களில் மடிக்​கணினி வழங்​கப்​படும். தகவல் தொழில்​நுட்ப ஏற்​றுமதி ரூ.2.50 லட்​சம் கோடியில்​இருந்து ரூ.5 லட்​சம் கோடி​யாக உயர்த்​தப்​படும். ஆயிரம் கிராம தெய்வ கோயில்​கள் மறுசீரமைக்​கப்​படும். 5 ஆயிரம் கோயில்​களுக்கு குட​முழுக்கு நடத்தப்​படும்.

சிறு​பான்​மை​யினர் தொழில் தொடங்க டாம்கோ (TAMCO) மூலம் கடன் பெறும் உச்​சவரம்பு ரூ.30 லட்​ச​மாக உயர்த்​தப்​படும். முதல்​வரின் கிராம சாலை திட்​டத்​தின் கீழ் 15 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் ரூ.10 ஆயிரம் கோடி​யில் சீரமைக்​கப்​படும். அனைத்து மாநக​ராட்​சிகள், முக்​கிய நகராட்​சிகளில் 50 புதிய செம்​மொழி பூங்​காக்​கள் அமைக்​கப்​படும். திருச்​சி, மதுரை, கோவை, சேலம் மாநக​ராட்​சிகளின் அரு​கில் நவீன உலகத்தர வசதி​களு​டன் புதிய நகரங்​கள் அமைக்​கப்​படும். தமிழகத்​தில் 10 கைத்​தறி பூங்​காக்​கள் அமைக்​கப்​படும்.

தமிழகத்​தில் திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. இப்​போது இது சூப்​பர் ஸ்டா​ராக களமிறங்​கி​யுள்​ளது. இதில் இடம்​பெற்​றுள்ள அனைத்து வாக்​குறு​தி​களும் சட்​டங்​கள், மாபெரும் திட்​டங்​களாக​வும் மாறும். இவ்​வாறு அவர் பேசினார்.

தேர்தல் அறிக்கையில் 50 தலைப்புகளில் 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துள்ளார்.தேர்​தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலை​வர் கனி​மொழி, உறுப்

​பினர்​கள் டிகேஎஸ்​. இளங்​கோவன், கோவி.செழியன், பிடிஆர்​.பழனிவேல் தி​யாக​ராஜன்,டிஆர்​பி. ​ராஜா உள்​ளிட்​டோரை முதல்​வர்​ கவுர​வித்​தார்​. கட்​சி​யின்​ பொதுச் ​செய​லா​ளர்​ துரை​முரு​கன்​, பொருளாளர்​ டி.ஆர்​.​பாலு உள்​ளிட்​டோர்​ பங்கேற்றனர்​. கனிமொழி எம்.பி. கூறும்போது, ‘‘திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இதில் உண்மையை பேசக்கூடியதேர்தல் அறிக்கை எதுவோ,யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்களோ, அந்த தேர்தல் அறிக்கைக்குதான் மரியாதையும் செல்வாக்கும் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

Featured post

“ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 03:40 AM சிவகாசி, “இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி த...