Monday, February 9, 2026

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச காங்கிரஸ் குழு 36 நாட்களாக காத்திருக்கிறது - எம்.பி மாணிக்கம் தாகூர்

 பதிவு: திங்கட்கிழமை,  பிப்ரவரி 09, 2026, தை 26, விசுவாவசு வருடம் 04:40 AM

மதுரை,

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச குழு அமைத்து 36 நாட்களாக காத்திருக்கிறோம் என,  விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறினார்.

மதுரை திருநகரிலுள்ள முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

நாடளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச, பாஜக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது.  ராகுல் காந்தி மட்டுமின்றி மொத்த எதிர்கட்சி உறுப்பினர்களையும் பேச அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் போராடினோம்.

இதற்காக  நான், மதுரை எம்.பி சு. வெங்கடேசன் உட்பட  8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டோம். எங்களது போராட்டம் அவைக்கு வெளியில் தொடர்கிறது. இது போன்ற செயலை மத்திய அரசு கைவிடவேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு உரிமை தரவேண்டும். எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்க ஆளும்கட்சி பதிலளிக்க வேண்டும்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக 5 பேர் கொண்டு காங்கிரஸ் குழு டிச.3-ல் அமைக்கப்பட்டது. திமுகவுக்காக 36 நாட்களாக காத்திருக்கிறோம். திமுக குழு அமைத்து அழைக்கும்போது பேசத் தயாராக உள்ளோம்.  நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். தோழமையை மதித்து காத்திருக்கிறோம். திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது.  கூட்டணி வலுவாக இருக்கும் என, நம்புகிறோம். எங்களுக்கு உரிய மரியாதை தரவேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை  39 முக்கிய தலைவர்களை அழைத்து தனித்தனி கருத்துக் கேட்டது. இதில்  காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை மிக அவசியம் என்பதை தெளிவுபடுத்தினோம். இது குறித்து தகவல் உரியவர்களுக்கு  தெரிவிக்கப்பட்டு இருக்கும். கட்சி தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம்.

மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கூட்டணி சீமானுடன் போட்டி போடுகிறது. அதிமுக  3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் மோடியும் உள்ளார்.

ஏற்கெனவே ‘எப்ஸ்டீன்’ கோப்புகளுக்காக முதல் இரண்டு நாள்  நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். இந்த கோப்புகளைப் பொறுத்தவரையில் அனில் அம்பானி, மத்திய பெட்ரோல் துறை அமைச்சர் - பிரதமர் மோடிக்கான தொடர்பு இருக்கிறது.

இந்திய விவசாயிகளை அமெரிக்காவிடம்  மோடி  அடகு வைத்துவிட்டார். 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க பொருட்கள் இந்தியாவில் வந்து குவியப் போகின்றன.

நாளை அவை தொடங்கியதும் பட்ஜெட் விவாதம் தொடர வேண்டும். மோடி நாடாளுமன்ற அவைக்கு வரவே பயப்படுகிறார். மக்களவைக்கு அவர்  வந்து பேசுவதற்கும் பயப்படுகிறார். தனது கட்சிக்காரர்களை வைத்து மட்டுமே பேசுகிறார்.  எப்ஸ்டீன் பைல் விவகாரத்தில் அனில் அம்பானி, மோடிக்குமான தொடர்புகள் இருப்பது ஊரறிந்த விஷம். இதில் பல்வேறு  தகவல்கள் வெளியே வந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை தொடர்ந்து கண்காணிகிறோம்.  கட்டிடம் முழுமையாக முடியாத நிலை உள்ளது. மதுரை எய்ம்ஸ் என்பது ராமநாதபுரத்தில் நடக்கக்கூடாது. மதுரையில் செயல்படவேண்டும். முழு கட்டுமானப் பணிகளும் முடிந்து திறக்க வேண்டும்.  மதுரை எய்ம்ஸை எப்போது திறக்க போக்கிறார் என, மோடி தமிழகம் வந்து சொல்லவேண்டும்.

தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. மதுரை- தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை சொல்ல மறுக்கின்றனர். மதுரை மெட்ரோ ரயில்  உள்ளிட்ட  தமிழகத்திற்கான திட்டங்களை  எப்போது முடித்து கொடுக்க போகிறோம் என்பதை மாதம் தேதியை  குறிப்பிட்டு  மத்திய அரசு சொல்லவேண்டும்.

பிற மாநிலங்களை முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தமிழகம்,  குறிப்பாக மதுரையை வஞ்சிக்கிறது. மத்திய அரசு.  கடந்த 2 ஆண்டுக்கு முன்பே எய்ம்ஸ் கட்டுமான பணி  80 சதவீதம் முடிந்தது என, அமைச்சர் ஜேபி.நட்டா சொல்லிவிட்டு சென்றார். என்ன ஆனது. இன்னும் முடிக்காத கட்டிடங்களை வைத்து கொண்டு மத்திய அரசு கதை சொல்கிறது.

அரசு வேலைக்கான போட்டி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது கண்டித்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, February 7, 2026

மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை - மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி

 

பதிவு: சனிக்கிழமை,  பிப்ரவரி 07, 2026, தை 24, விசுவாவசு வருடம் 06:00 AM

மதுரை,

மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றுள்ளது.

கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

செந்தில் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்து உண்மைக்கு மாறானது.

3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொலை தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

செந்தில் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Friday, February 6, 2026

நிகிதாவை கைது செய்ய வேண்டும் - அஜித் குமாரின் தாயார் மாலதி பேட்டி

பதிவு: வெள்ளிக்கிழமை,  பிப்ரவரி 06, 2026, தை 23, விசுவாவசு வருடம் 06:00 AM

சென்னை,

நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார். நிகிதாவை கைது செய்ய வேண்டும். யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது; தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். மடப்புரத்தில் அஜித் குமாரின் தாயார் மாலதி பேட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படைக் காவலர்களால் கடந்த ஜூன் 28ம் தேதி விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் இது குறித்தான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அஜித் குமாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்தில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ், மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தில் 6 காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு காது செய்யப்பட்டனர். மேலும்  துணை கண்காணிப்பாளர்  தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் புகார் அளித்த நிகிதா, திருப்புவனம் காவல்துறையினர், இந்து அறநிலைத்துறை அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அஜித்குமாரின் தாய் சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று மதுரை உயர் நீதிமன்றத்தில் சிறையில் உள்ள காவலர்கள் பிணை கேட்டும் போது, சிபிஐ வழங்கிய பதில் மனுவில், தங்க நகை திருடியதாக நீக்கிதா கொடுத்த புகாரில் உண்மைத்தன்மை இல்லை என்றும், தனிப்படை காவலர்கள் முன்விரோதம் இன்றி, தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தாக அஜித்குமார் தெரிவித்தனர். மேலும், இது அஜித்குமார் கொடுரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தற்கு தனது கண்டனத்தை நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மடப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார் என்று தெரிய வேண்டும் நிகிதாவை கைது செய்ய வேண்டும் யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது என்றவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறும் போது இவ்வுலகில் காயமடைந்தவர்களுக்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் இவ்வழக்கில் தொடர்புடைய பிரவீன்குமார் அழகு பொண்ணு அஜித்குமார் ஆகியோர்களின் செல்போன்களை மீட்டெடுத்து அதில் உள்ள ஆதாரங்களை வெளிகொனர வேண்டும் என தெரிவித்தார்.

Sunday, January 25, 2026

உள்துறை மந்திரி அமித்ஷா வரும் ஜனவரி 28ம் தேதி தமிழகம் வருகை

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 25, 2026, தை 11, விசுவாவசு வருடம் 05:40 AM

சென்னை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன

அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, கடந்த 23ம் தேதி மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வர உள்ளார். அவர் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

3வது T20: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 25, 2026, தை 11, விசுவாவசு வருடம் 05:00 AM

கவுகாத்தி,

டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 23ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியிலும் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, டி20 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய நியூசிலாந்தும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா

அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் அல்லது ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

நியூசிலாந்து

டிவான் கான்வே, டிம் செய்பெர்ட், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), ஜாக் போல்க்ஸ் அல்லது கைல் ஜாமிசன், மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.

Saturday, January 24, 2026

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி - யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 24, 2026, தை 10, விசுவாவசு வருடம் 05:00 PM

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள, இடம்பெறப்போகும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (25 தொகுதிகளில் போட்டியிட்டது), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), ம.தி.மு.க. (6), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (6), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), மனிதநேய மக்கள் கட்சி (2), தமிழக வாழ்வுரிமைக்கட்சி (1) உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

கூட்டணிக்கு தலைமை வகித்த தி.மு.க. 177 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ம.தி.மு.க., கொ.ம.க., ம.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதும் அடங்கும்.

இறுதி வடிவம் பெற்ற கூட்டணி

கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இந்த முறையும் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் கைகோர்த்துள்ளது. பா.ம.க. ராமதாஸ் அணியையும், தே.மு.தி.க.வையும் கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எல்லாம், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறிவருகின்றன. ஆனால், வெளிப்படையாக இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்படாத நிலையில், தி.மு.க. கூட்டணி இறுதி வடிவம் பெற்றுவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது.

ராமதாஸ் அணி, தே.மு.தி.க.

பா.ம.க. ராமதாஸ் அணியும், தே.மு.தி.க.வும் தி.மு.க. கூட்டணியில் தான் கைகோர்க்கப்போவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள, இடம்பெறப்போகும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு அப்போதைய எண்ணிக்கையிலான தொகுதிகளே மீண்டும் ஒதுக்கப்படுவதாக தெரிகிறது. புதிதாக இணைந்த மற்றும் இணையும் கட்சிகளுக்கே தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கின்றன.

இறுதி வடிவம் பெற்றுள்ளதாக கூறப்படும் தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தொகுதிகளின் விவரம் வருமாறு:-

யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

தி.மு.க. - 164, காங்கிரஸ் - 25, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6, ம.தி.மு.க. - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 6, இந்திய கம்யூனிஸ்டு - 6, தே.மு.தி.க. - 6 (ஒரு ராஜ்யசபா சீட்), பா.ம.க. (ராமதாஸ் அணி) - 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -3, மக்கள் நீதி மய்யம் - 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2

இதுபோக, தனியரசு, வேல்முருகன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார் போன்ற தலைவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

‘‘தமிழக இளைஞர்களை போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைத்து விட்டது திமுக அரசு’’ - பிரதமர் மோடி

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 24, 2026, தை 10, விசுவாவசு வருடம் 05:00 AM

மதுராந்தகம்,

‘‘தமிழக இளைஞர்களை போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது திமுக அரசு. தங்கள் கண் முன்னால் தங்கள் குழந்தைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து தாய், தந்தையரெல்லாம் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். போதைப் பொருள் அபாயத்தில் இருந்து நமது இளைஞர்களை நாம் மீட்டே ஆக வேண்டும்’’ என்று பிரதமர் மோடி பேசினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘2026-ம் ஆண்டிலே தமிழ்நாட்டுக்கு எனது முதல் பயணம் இது. தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு சிறப்பானதொரு ஆனந்தம் நிறைந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் தமிழகத்தின் வளர்ச்சி நாயகர் எம்ஜிஆரின் பிறந்த நாளை நாம் கொண்டாடினோம். இந்த மேடையில் இருந்து மதுராந்தகத்தின் ஏரி காத்த ராமரை நான் வணங்குகிறேன். அனைவரின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் நான் வேண்டிக் கொள்கிறேன்.

இன்று நேதாஜியின் பிறந்த நாள். தேசம், இந்த நாளை பராக்கிரம திருநாள் என கொண்டாடி வருகிறது. தமிழகத்தின் பராக்கிரமம் நிறைந்த தலைவர்கள் பலர், நேதாஜியோடு தோள் சேர்ந்து சுதந்திரப் போரில் பங்கெடுத்தார்கள். வீரம் மற்றும் நாட்டுப் பற்று தமிழக மக்களின் நாடி நரம்புகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த புனித மண்ணில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு என் நினைவஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

மக்கள் அலைகடனெ இங்கே திரண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தேசத்துக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கிறது. அது, தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என்பதுதான். திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தமிழ்நாடு இப்போது பாஜக - என்டிஏ அரசை விரும்புகிறது.

இந்த மேடையைப் பாருங்கள். என்டிஏ குடும்பத்தின் நமது மூத்த தலைவர்கள், தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க குழுமியிருக்கிறார்கள். இந்த நண்பர்கள் அனைவரும ஒரே முடிவோடு, ஒரே உறுதிப்பாட்டோடு இங்கே இணைந்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே அந்த உறுதிப்பாடு.

நாம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக அரசின் முடிவுக் காலம் (கவுன்டவுன்) தொடங்கிவிட்டது. இதை என்னால், தெளிவாகக் காண முடிகிறது.

ஆட்சி செய்ய நீங்கள் திமுகவுக்கு இரண்டு முறை வாய்ப்பளித்தீர்கள். ஆனால், அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது திமுக. ஆனால், ஆற்றியது என்னமோ பூஜ்ஜியம்தான்.

திமுக அரசை மக்கள் CMC அரசு என அழைக்கிறார்கள். சிஎம்சி என்றால், corruption (ஊழல்), mafia (மாபியா), Crime (க்ரைம்) ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாங்கம். தமிழக மக்கள் திமுக மற்றும் சிஎம்சி இரண்டையும் வேரோடு அகற்ற முடிவெத்துவிட்டார்கள். இங்கு பாஜக - என்டிஏ-வின் இரட்டை எஞ்சின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது.

தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட அரசு இருக்கிறது என்றால், இங்கு ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை. திமுக அரசாங்கம் ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்குகிறது. நீங்கள் திமுகவில் முன்னேற வேண்டும் என்றால், அந்த குடும்பத்துக்கு ஆமாம் சாமி போட்டாக வேண்டும். இங்கு 3-4 பாதைகள் மட்டுமே இருக்கின்றன. வம்சாவளி, ஊழல், பெண்களை வசைபாடுவது, நமது கலாச்சாரத்தை வசைபாடுவது ஆகியவையே அவை.

இந்த காரணத்தால்தான் திமுகவில் இருப்பவர்களால் கட்சியில் முன்னேற முடிகிறது. இதன் பாதிப்பை தமிழ்நாடு சுமக்க வேண்டி இருக்கிறது. இங்கே ஊழல் எவ்வாறு மலிந்திருக்கிறது, அந்த ஊழல் பணம் யாருடைய பைகளுக்குச் செல்கிறது என்பதை சிறு குழந்தைகூட நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது.

தமிழ்நாடு எப்படிப்பட்ட பூமி என்றால், இதுதான் பாரதத்தின் பண்பாட்டை வளம் நிறைந்ததாக ஆக்கியது. சங்க கால இலக்கியங்கள், விஞ்ஞானம், ஆலயங்கள், தொழில்நுட்பம், பாரத நாட்டின் கவுரவத்தை உயர்த்தின.

வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டை திமுகவின் கொடூர கரங்களில் இருந்து நாம் விடுவித்தாக வேண்டும். எந்த அளவுக்கு தமிழ்நாடு வேகமாக முன்னேறுகிறதோ, அந்த அளவு தேசமும் முன்னேற்றம் அடையும்.

கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள என்டிஏ அரசாங்கம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை ஆற்றி இருக்கிறது. 2014-க்கு முன்பு, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது அப்போது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப் பகிர்வு வாயிலாக மட்டும் என்டிஏ அரசு கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்கிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தோடு ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

இதுமட்டுமல்ல, கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக மத்திய அரசு 11 லட்சம கோடி ரூபாய் உதவிகளை அளித்திருக்கிறது. ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டாட்சியின்போது ஏழைகள், பட்டியல் சமூக மக்கள், பழங்குடி மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நலன்கள் வழங்குகிறோம் என்ற பெயரில் மோசடி மட்டும்தான் அரங்கேறின.

திமுக - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில் பட்ஜெட்டுக்கு அளித்த நிதியைவிட என்டிஏ அரசு ஏழு மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டுக்கு அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் 80 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் போன்ற நவீனமான, விரைவாகச் செல்லக்கூடிய, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயில்களை என்டிஏ அரசுதான் அளித்திருக்கிறது.

தமிழநாட்டின் மிகப் பெரிய பலம், நமது விவசாயிகள், நமது மீனவர்கள்தான். என்டிஏ அரசின் கொள்கைகள் காரணமாக தேசத்தின் விவசாயம் மற்றும் மீன்வளத் துறையில் சாதனைப் படைக்கும் உற்பத்தி எட்டப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு ஒவ்வொரு நிலையிலும் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் ஆதரவாக இருந்து வருவதுதான் இதற்குக் காரணம்.

முன்பு குறைவான விவசாயிகளிடம் மட்டுமே வங்கிக் கணக்குகள் இருந்தன. என்டிஏ அரசாங்கம் வங்கிக் கணக்குகளை திறந்து கொடுத்தது. அதோடு, விவசாயிகளுக்கான பிரதமரின் கவுரவக் கொடை திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.

என்டிஏ அரசாங்கம் பிரதமரின் மீன் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் மீனவர்களுக்கு 50 ஆயிரம் கடன் அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது.

வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆனால், இங்கே இருப்பதோ திமுக அரசு. இவர்கள் நமது இளைஞர்களை போதைப் பொருள் குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

தாய், தந்தையெரல்லாம் தங்கள் கண்களுக்கு முன்பாக, தங்கள் குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு நாசமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் நமது இளைஞர்களை போதைப் பொருள் அபாயத்தில் இருந்து மீட்டே ஆக வேண்டும். என்டிஏவுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், தமிழ்நாட்டை போதைப் பொருட்களில் இருந்து மீட்டெடுக்க உதவும் வாக்காக இருக்கும்.

திமுக அரசாங்கத்தில் போதைப் பொருள் பெருங்குற்றவாளிகளும் மதுபான பெருங்குற்றவாளிகளும் செழிப்பாக இருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியோ மக்களின் உடல் நலத்தில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது’’ என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Featured post

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச காங்கிரஸ் குழு 36 நாட்களாக காத்திருக்கிறது - எம்.பி மாணிக்கம் தாகூர்

  பதிவு: திங்கட்கிழமை,  பிப்ரவரி 09, 2026, தை 26, விசுவாவசு வருடம் 04:40 AM மதுரை, திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச குழு அமைத்து 36 ந...